Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

துயரத்தின் ஊற்றுகள்

Image result for woman in bed paintings
இருப்பை அறிதல்


ஜானகிராமன் நேற்று எழுப்பிய மற்றொரு கேள்வி இது: “°மகிழ்ச்சியின் ஊற்று பெருக்குகள் எளிதில் வற்றிவிடுவதாகவும்,துயரத்தின் ஊற்றுகள் பெருகி வழிவாதகவும் இருக்கிறதா?”
இக்கேள்வி மிக மிக சிக்கலானது. ரமணரும் ஜித்து கிருஷ்ணமூர்த்தியும் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி இது. ஆகையால் இதற்கு ஒரு திருப்தியான பதிலை என்னால் அளிக்க இயலாது.
என் அனுபவம், நம்பிக்கை, மற்றும் வாசிப்பின் அடிப்படையில் எளிமையாக இதற்கு பதிலளிக்க முயல்கிறேன்.
ஒருவர் எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா இருந்தால் துயரம் அவரை சூழ்ந்து விடுமா? மகிழ்ச்சியை ஒருவர் கடுமையாய் உழைத்து போராடி அடைய வேண்டுமா?

இக்கேள்வி என் மனதில் முதலில் எழுப்பும் சித்திரம் அழும் குழந்தையுடையது. இதைப் பற்றி பேசும் பிரஞ்சு உளவியலாளர் லக்கான ஆசை, தேவை இரண்டுக்குமான வித்தியாசத்தை வரையறுக்கிறார்.
 குழந்தை தன் ஆசை நிறைவேறும் நோக்கில் அழவில்லை. அது தன் தேவையை அடையும் நோக்கில் மட்டும் (பசியை தீர்த்தல்) அழுகிறது. பால் கிடைத்த மறுநொடி அதன் அழுகை நின்று விடும். ஆனால் குழந்தை மெல்ல மெல்ல வளர்ந்து உலகை கண்டறிய துவங்கும் போது அதற்குள் ஆசைகளும் கனவுகளும் பிறக்கின்றன. குழந்தை தான் காணும் பொருட்கள், மனிதர்கள், தன்னிடம் அடுத்தவர் பேசும் மொழி, பருவச்சூழல் ஒவ்வொன்றுடனும் உறவாடத் துவங்குகிறது. இப்போது, குழந்தையின் திருப்தி சிக்கலான ஒன்றாகிறது.
 பால் குடித்ததும் அழுகை நிறுத்தும் குழந்தை அல்ல அது இனிமேல். உலகம் எனும் முலையில் எவ்வளவு தான் பாலை உறிஞ்சினாலும் பசி அதிகமாகுமே அன்றி அடங்காது என்கிறார் லக்கான். ஆசையின் ஒரு சுபாவம் அது பல்கி பெருகியபடியே இருக்கும் என்பது. ஆசை நிறைவேற்றம் என்பது சாத்தியமே இல்லை. எதை அடைந்தாலும் அது அல்ல நாம் அடைய நினைத்தது எனும் உணர்வு மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
இப்போது மகிழ்ச்சியோ துக்கமோ நம் வசம் இல்லை. அது எப்போதும் தற்காலிகமாக இருக்கிறது. ஒரே ஊற்று தான்: அது கசக்கலாம் அல்லது இனிக்கலாம். அது முழுக்க முழுக்க நாம் மேற்கொள்ளும், நம்முடன் உலகம் மேற்கொள்ளும் உறவாடலைப் பொறுத்தது.
இது ஒரு பதில். இது ஒரு பின்நவீனத்துவ பதில்.
அடுத்து, சற்றே தத்துவார்த்தமான ஒரு பதிலுக்கு வருகிறேன்.
மகிழ்ச்சி எப்போதும் தற்காலிகமாகவும் துயரம் நிரந்தரமாகவும் இருப்பது உண்மை தானே? நான் மேலே குறிப்பிட்டது போல் “நிரந்தர அதிருப்தியே வாழ்வின் அடிநாதம்” என நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் துயரத்தின் ஊற்று வற்றாதது என்பதையும் ஏற்க வேண்டும்.
ஆனால் மனித மனத்துக்கு மொழியின் தளைகளை உடைத்து விடுதலையாகவும் தெரியும். கவிதையிலும் நகைச்சுவையிலும் இது சாத்தியமாகிறது என்றார் மார்ட்டின் ஹைடெக்கர்.
தன்னிலையற்ற நிலையே நமது உண்மையான இருப்பு என்றார் ஹைடெக்கர். ஆனால் அது சுலபம் அல்ல. “நாம் இருக்கிறோம்” என தொடர்ந்து நிருபிக்கவே நாம் முயல்கிறோம். நீங்கள் இக்கடிதத்தையே “ஜானகிராமன்” எனும் பெயரைக் குறிப்பிட்டு தான் ஆரம்பிக்கிறீர்கள். நிறைய ஜானகிராமன்கள் இருப்பதால் விஷ்ணுபுரம் கூட்டத்தில் நான் சந்தித்த ஜானகிராமன் என குறிப்பாக உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள். ஆனால் நாளை நாம் நண்பர்களாகி நிறைய பேச ஆரம்பித்தால் நீங்கள் “நான் ஜானகிராமன் தான். ஆனால் அப்படியான ஜானகிராமன் அல்ல. வேறுவகையான ஜானகிராமன்” என தொடர்ந்து எனக்கு புரிய வைக்க முயல்வீர்கள். ஒரு கட்டத்தில் “நான் ஜானகிராமன் தான். ஆனால் குறிப்பாக ஜானகிராமன் மட்டும் அல்ல” என சொல்வீர்கள். ஒருவேளை நம்மிடையே உள்ளது ஒரு ஆண் பெண் உறவென்றால் இது இன்னும் உக்கிரமாக துலக்கமாய் நடைபெறும்.
இந்த சுயமுரணைப் பற்றி ஹைடெக்கர் பேசுகிறார். அதாவது நான் எப்போதும் “நான் இது, நான் இவன்” என வலியுறுத்தி மட்டுமே என்னைப் பற்றி உரையாட முடியும். அப்போது என் இருப்பை நான் வரையறுக்கிறேன். ஆனால் அது எனக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. அது என்னை அழுத்துகிறது. மெல்ல மெல்ல நானே வரையறுத்த என் இருப்பை நான் மறுக்க துவங்குகிறேன். இது வெளிப்படையாக அல்ல, மிக மிக நுணுக்கமாய் மறைமுகமாய் நடைபெறுகிறது. அப்படி நான் என்னை மறுத்து அழித்ததும் (என் இருப்பை நானே அழிக்கும் போது) நான் சுதந்திரமாய் மகிழ்ச்சியாய் உணர்கிறேன் (என் உண்மையான இருப்பை அறிகிறேன்).
 ஏனெனில் “நான் இவன்” எனும் வாக்கியம் பொய்யானது. அது என் இருப்பை மறுக்கிறது. “நான் இவன் அல்ல” என்பதே என் இருப்பை சரியாய் சுட்டுகிறது.
ஆகையால், எந்த ஒரு உரையாடலையும் நாம் இப்படித் தான் ஆரம்பிக்கிறோம்:
1)   முதலில் நம்மை ஞாபகப்படுத்துகிறோம். இதன் வழி நம்மை அடையாளப்படுத்துகிறோம். இது செயற்கையானது. இது பொய்யானது என நமக்கு தோன்றுகிறது. அவஸ்தைப்படுகிறோம்.
2)   அடுத்து உடனே மெல்ல மெல்ல நமது தன்னிலையை கடந்து போக முயல்கிறோம்.
3)    சட்டென ஒரு விடுதலை ஏற்படுகிறது. மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறக்கிறோம்.
4)    அடுத்து மீண்டும் தளைக்கப்படுகிறோம்
இதை செக்ஸுடன் ஒப்பிட்டு இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்:
(1)  ஆணும் பெண்ணும் படுக்கையில் தமது உடல்களுடன் வருகிறார்கள்
(2)  ஆடைகளை களைகிறார்கள். இது தம் அடையாளங்களை, தம் பொய்யான இருப்பை, தமது உடலின் பாரத்தை கழற்றி வைப்பதற்கான ஒரு குறியீடு.
(3)  தம்மை இழக்கிறார்கள். மகிழ்வில் திளைக்கிறார்கள்.’
(4)  மீண்டும் ஆடையணிகிறார்கள். தாம் ஆகிறார்கள். பாரம் சுமக்கிறார்கள்.
ஆக, மனிதன் வாழ்நாள் முழுக்க இந்த சுயமுரண்பாட்டுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த பார்வையின் படி, துயரமே ஆதி அடிப்படையான மனித நிலை. (பௌத்தம் இதை துக்கம் என்கிறது)
இந்த விவாதத்தில் நான் ஒரே ஒரு அவதானிப்பை சேர்த்துக் கொள்கிறேன்.
மனிதன் தன்னை மறுத்து தன் இருப்பை அறிய விழைகிறான் – அந்த போராட்டமும் சிக்கலுமே அவனது துயரத்தின் காரணம் – எனும் இந்த பார்வை தனிமனிதனை முன்னிறுத்துகிறது. இது உண்மை தான். ஆனால் இது மட்டும் உண்மை அல்ல.
மனிதன் தன் இருப்பை அறிய (அதன் வழி மகிழ்ச்சியாய் இருக்க) பல சமூகக் கட்டமைப்புகளும் அவசியம் ஆகின்றன. குடும்பம், நட்பு, வேலையிட உறவுகள், சமூக உறவாடல்கள், சாதி, மதம், இலக்கியம், கலை … இப்படி எண்ணற்ற கட்டமைப்புகள் வழி நாம் நம்மை எதிர்கொண்டு அழித்து மகிழ்கிறோம். தனியாக அல்ல. இந்த அமைப்புகளில் ஒன்று உங்களை கைவிடுமானால் நீங்கள் தனியாக நின்று மகிழ்ச்சியை அடைய முடியாது. (நீங்கள் தனியாக நிற்பதாய் நம்புகிற போதும் ஆயிரமாயிரம் தோள்களின் மீது தாம் நடந்து செல்கிறீர்கள்.)
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அல்லது கலை இலக்கிய பெருமன்றம் அல்லது ஒரு சிறுபத்திரிகையை வாசிக்கும் குழுமம் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை எழுத்தை வாசிக்கிறவன் அல்லது வாசகன். எப்படி சொன்னாலும் நீங்கள் ஒரு கட்டமைப்புக்குள் நின்றே பேசுகிறீர்கள். வாசகன் என்பது ஒற்றை ஆள் தான். ஆனால் அவன் ஒற்றை ஆள் அல்லனும் தான்.
 நீங்கள் கடைக்கு தனியாக சென்று காசு கொடுத்து ஒரு நூலை வாங்குகிறீர்கள். அப்போதே உங்களை அறியாது ஒரு கலாச்சார, பொருளாதார கட்டமைப்புக்குள் புகுந்து கொள்கிறீர்கள் அங்கு நின்றபடி இலக்கிய கொடுக்கல் வாங்கலை செய்கிறீர்கள்.
ஒருநாள் நீங்கள் அப்படி ஒரு புத்தகத்தை வாங்கப் போகிற போது கடைக்காரர் சொல்கிறார்கள்: “சார் அந்த புத்தகத்தை தடை செய்து விட்டார்கள். இனி அது யாருக்கும் கிடைக்காது.”
அந்த வாக்கியம் எவ்வளவு பெரிய அதிர்ச்சியை, குழப்பத்தை, தத்தளிப்பை உங்களுக்கு ஏற்படுத்தும் யோசியுங்கள். ஏனெனில் அந்த நூல் இப்போது சமூக கலாச்சார பொருளாதார கட்டமைப்புகளுக்கு வெளியே தள்ளப்படுகிறது.
பெருமாள் முருகன் “நான் ஒரு எழுத்தாளனாக செத்து விட்டேன்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். நினைவிருக்கிறதா? ஏன் அப்படிச் சொன்னார்? ஏன் என்றால் அந்த சர்ச்சையின் போது, அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, அவரது புத்தகத்தின் இருப்பு மறுக்கப்பட்டது. அது சமூக கட்டமைப்புகளில் இருந்து வெளித்தள்ளப்பட்டது. அவர் தெருவில் தள்ளப்பட்டார். அங்கே நின்று அவர் கண்ணீர் வடித்தார். நான் செத்து விட்டேன் என்றார். அது ஒரு ஆழமான வாக்கியம். உண்மையான அறிவிப்பு.
ஒரு புத்தகம் பார்க்க தனியாக இருந்தாலும் அது தனித்து இல்லை. ஒரு வாசகன் தனித்து வாசித்தாலும் அவன் தனியாக இல்லை.
இது நம் இருப்பை, மகிழ்ச்சிக்கான தேடலை மேலும் சிக்கலாக்குகிறது.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...