முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாபியா நாட்டை ஆண்டால்…

Image result for karnataka election horse trading



கர்நாடகாவில் யாருக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு பாஜக அரங்கேற்றும் அதிகார அடவாடித்தனங்களை, குதிரை பேரத்தை பார்க்கையில் இது எந்தளவுக்கு மாபியாக்கள் நிழலுலகை ஆள்வதை ஒத்திருக்கிறது என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. ஹுஸைன் செய்தி Dongro to Dubai போன்ற நூல்களில் மாபியா சூழலை, எழுதப்படா விதிகளை, முரட்டு அதிகார பரவலாக்கலை விவரிக்கிறார்.

 ஒரு மாபியா டான் மும்பைக்கு துபாயில் இருந்து வந்து தன் கண்ணில் படுகிற இடங்களில் மனதைத் தொடுகிறவற்றை குறித்துக் கொள்கிறார். அடுத்து தன் உதவியாளர்களுக்கு ஆணை இடுகிறார். அவர்கள் நில உரிமையாளர்களின் விருப்பம், அந்த நகராட்சியின் விதிமுறைகள், நியாய அநியாயம் பற்றியெல்லாம் துளியும் அக்கறை கொள்ள மாட்டார்கள். யாரிடமும் கேட்டு பேரம் பேசி காலம் தாழ்த்த மாட்டார்கள். கொடு என்றால் அந்த இடத்தை விட்டு உரிமையாளர் ஓடி விட வேண்டும். அதிகாரிகள் மாபியா முன் கூழைக்கும்பிடு போடுவார்கள். ஒன்றிரண்டு மாதங்களில் அங்கு மாபியா டானின் அலுவலகங்கள், அவரது வணிக வளாகங்கள் நெடிதுயரும்; பட்டவர்த்தமாய் செயல்படும். பாஜக தனக்கு ஆதரவேயற்ற அல்லது முழு ஆதரவற்ற மாநிலங்களை கைப்பற்றும் செயல் இப்படித் தான் இருக்கிறது.
 காங்கிரஸ் குதிரைபேரம் செய்த்ததற்கும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு மாநில ஆட்சிகளை கட்டுக்குள் வைக்க முயன்றதற்கும் பாஜக அதை செய்வதற்குமான முக்கிய வித்தியாசம் இது. காங்கிரஸ் எப்போதும் சமரசத்துக்கு, பேரம் பேசுவதற்கு ஒரு கால அவகாசத்தை, வாய்ப்பை கொடுத்தது. ஆனால் பாஜக யானை ஒரு எறும்புப் புற்றை நசுக்குவது போல, ஒரு மாபியா டான் ஒரு நகரத்தை குறுகிய அவகாசத்தில் ஆக்கிரமிப்பது போல கண்மூடித்தனமாய் மாநில ஆட்சிகளை கைப்பற்றுகிறது. நாங்கள் எத்தனை இடங்கள் வென்றாலும் இழந்தாலும் இங்கு எங்கள் ஆட்சி தான் நடக்கும். அதற்காக எந்த எல்லைக்கும் போவோம் என்னும் ஒரு காட்டுத்தனமான அணுகுமுறை அவர்களுடையது. பாஜக முன்வைக்கும் தங்குதடையற்ற அநீதி ஒரு காட்டுத்தீயை போல் ஒரு வனத்தை தின்று தன் பசியை அடக்கும் சுபாவம் கொண்டது. அதன் முன் சக்தி குறைந்த, சிறிய அளவிலேனும் தார்மீக குணம் கொண்ட யாரும் தாக்குப்பிடிக்க முடியாது.
 தமிழகத்தில் பாஜக குழந்தைக் காலடிகளைக் கூட எடுத்து வைக்கவில்லை இன்னும். ஆனால் ஆட்சி அவர்கள் கையில். ஊடகங்கள் முழுக்க அவர்களிடம் ஊதியம் பெற்று காலில் விழுகின்றன. எம்.ஜி.ஆர் மரணித்த வேளையில் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் தமிழகத்தை இது போல் வலுக்கட்டாயமாய் கைப்பற்றவில்லை. ஆனால் ஜெயலலிதா மரணத்தின் போது பாஜக மொத்தமாய் தமிழகத்தை ஆக்கிரமித்து அதிமுகவை ஒரு நாய்க்குட்டியை போல் நடத்திய விதம் ஒரு ஜனநாயக படுகொலை மட்டுமல்ல மாபியா பாணியிலான அராஜக கைப்பற்றலும் தான்.
எல்லா இடத்திலும் தானே ஜெயிக்க வேண்டும், நிறைந்திருக்க வேண்டும், அதற்கு காத்திருக்க அவகாசம் இல்லை, பொறுமை இல்லை, எதிரே வருபவனை வெட்டி சாய்த்து முன்னேறு எனும் இந்த ஆவேசம், மூர்க்கம், வெறி இந்த தேசத்தை வேறெப்போதும் இல்லாத அளவுக்கு சீரழிக்கப் போகிறது.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தவறு. மோடி இல்லாமல் இருந்தால் சின்னம்மாதான் இப்போதைய முதல்வர். அதற்கும் பாஜகவைத்தான் குத்தம் சொல்வீங்க..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...