(எனது “தொண்ணூறுகளின் தமிழ் சினிமா” நூலை
ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி
இது.)
1) 16. மலையாள சினிமாவில்
எழுத்தாளர்களின் பங்கு அதிகம். அங்கு நிறைய நாவல்கள் திரைப்படங்களாக
வெளிவந்துள்ளன. அப்படியான சூழல் தமிழில் இல்லாதது குறித்து ஒரு எழுத்தாளராக
உங்களுக்கு வருத்தம் உண்டா?
ஆர். அபிலாஷ்: யாருக்குத் தான் மலையாள
பண்பாட்டுச் சூழலைக் கண்டு விசனம் இருக்காது?
அங்கு சுமாரான படைப்பாளிகளுக்குக் கூட பெரும் அங்கீகாரமும் கவனமும்
கிடைக்கிறது. சினிமாவில் திரைக்கதையாளனாய் மட்டுமே வசதியாய் புகழுடன் வாழ முடியும். நம்மால் பெருமூச்சு மட்டுமே
விட இயலும்.
17. தமிழின் மிகத் தீவிரமான எழுத்தாளர்கள் எல்லாம் சினிமாவில் வசனம் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் திரைப்படக் கலை மேன்மை அடைகிறதா? அல்லது எழுத்தாளர்கள் தங்கள் சாரத்தை இழந்துவிடுகிறார்களா?
17. தமிழின் மிகத் தீவிரமான எழுத்தாளர்கள் எல்லாம் சினிமாவில் வசனம் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் திரைப்படக் கலை மேன்மை அடைகிறதா? அல்லது எழுத்தாளர்கள் தங்கள் சாரத்தை இழந்துவிடுகிறார்களா?
ஆர். அபிலாஷ்: எழுத்தாளன் எப்போதுமே
சாரம் இழப்பதில்லை. அவன்
கொலை செய்து சிறை சென்றாலும் சோரம் போவதில்லை. பிறகு சினிமா எப்படி
அவனை மாற்று குறைக்கும்? இது தமிழில் நிலவும் ஒரு மூட நம்பிக்கை
மட்டுமே.
தமிழில் திரை எழுத்தாளர்களுக்கு
தனித்த இடம் என்றுமே இருந்ததில்லை.
மலையாளத்தில் பரதன் போன்ற இயக்குநர்கள் கூட திரைக்கதைப் பொறுப்பை திரை
எழுத்தாளர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். திரைக்கதையை தம் கற்பனையில்
காட்சிபூர்வமாய் உருவாக்குவதே இயக்குநரின் பணி. ஆனால் இங்கே நீண்ட
காலமாய் இயக்குநரே கதை, திரைக்கதை, இயக்கம்
என ஆதியும் அந்தமுமாய் இருப்பதே கௌரவம் எனும் நிலை நிலவுகிறது. அது மட்டுமல்ல நமது இயக்குநர்கள் நாயகனாக நடிக்கவும் ஆசைப்படுகிறார்கள்.
தமிழில் நாயகியின் இடத்தை மட்டுமே அவர்கள் எடுக்க மாட்டார்கள்.
மற்றபடி நாயகன், காமிடியன், தயாரிப்பாளர், உபநடிகன் என நம் இயக்குநர்கள் ஆல்ரவுண்டர்களாய்
இருந்து வருகிறார்கள். இதனால் இங்கு திரை எழுத்தாளனுக்கான ஒரு
இடம் உருவாகி அதற்காய் ஆட்கள் பயிற்சி பெற்று தயாராக வருவது நிகழவில்லை.
கலைஞானம், அனந்து போன்று திரைக்கதை ஆலோசகர்களே
இங்கு இருந்திருக்கிறார்கள். தமிழின் சிறந்த படைப்பாளிகளான எஸ்.ரா, ஜெ.மோ போன்றோர் திரைக்கதை எழுத
செல்லும் போது அவர்கள் கதை ஆலோசனையில் பங்கேற்பது, வசனங்களை எழுதுவது
போன்ற குறைந்தபட்ச பணிகளையே செய்கிறார்கள். மலையாளத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதும் போது அதில் அவரது தாக்கம்
தனித்து தெரியும். ஆனால் இங்கோ இயக்குநர் படத்தில் தன் ஆதிக்கமே
அதிகம் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். ஜெ.மோவின் “ஏழாம் உலகம்” பாலாவின்
இயக்கத்தில் படமான போது அது எப்படி முற்றிலும் உருமாறியது என்பதைப் பார்த்தோம்.
நம் எழுத்தாளர்களை
நான் குறைகூற மாட்டேன். அவர்களை
முழுக்க பயன்படுத்திக் கொள்ளும் சூழல் இன்னும் இங்கே உருவாகவில்லை.
இன்னொரு பக்கம், சினிமாவை காட்சிபூர்வமாய் கண்டு திரைக்கதையை
வடிக்கும் நுட்பத்தையும் நம் படைப்பாளிகள் கற்க வேண்டும்.
கருத்துகள்