
யஷிகா தன்னை உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத இறுக்கமான
பெண்ணாக காட்டிக் கொண்டு வருகிறார். ஆனால் அவருக்கு உள்ள சமூகக் கூச்சமோ, தன்னை பிறர்
ஏற்க மாட்டார்கள் எனும் வருத்தம் தரும் விலகல் மனநிலையோ அல்ல. அவர் தெளிவானவர். பார்க்கிறவர்களிடம்
எல்லாம் கலகலத்து இளிக்க மாட்டாரே அன்றி தேவையான போது மிக தளுக்காக பேசி மக்களை தன்
வசம் இழுக்கவும் பயன்படுத்திக் கொள்ளவும் தெரிந்தவர்.
சமூகமாக்கலிலும் அவர் சுணங்கியவர் அல்ல. அவரால் தனக்கென ஒரு
அணியை உருவாக்கி அதனுள் மகிழ்ச்சியாய் தன்னிறைவாய் இருக்க முடியும். தனக்கு அவசியமில்லாதவர்களை
எந்த தயக்கமும் இன்றி பத்தடி தள்ளி வைக்கவும், தேவையான போது சேர்ந்து கொள்ளவும் தெரியும்.
இதனால் தான் டீனேஜ் பெண் என்றாலும் அவர் வயதை மீறிய முதிர்ச்சி பெற்றவர் என பிக்பாஸ்
வீட்டுக்குள் பலரும் அவரை அடையாளப்படுத்துகிறார்கள்.
தன் இறுக்கத்தையும் பேச்சுத்திறனையும் அளவாக சந்தர்ப்பத்துக்கு
ஏற்ப பயன்படுத்த தெரிந்தவர் யஷிகா. இதற்கு இரு உதாரணங்கள் தருகிறேன்.
மஹத்துடன் அவர் காதல் வயப்பட்டிருக்கிறார் எனும் கதை வழக்கமான
பிக்பாஸ் திரைக்கதையின் ஒரு பகுதியென்றே ஆரம்பத்தில் இருந்து நம்பிக் கொண்டிருந்தேன்.
இறுதி வரை இருவரும் உண்மையிலேயே நெருக்கமாய் இருக்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும்
தரப்படவில்லை. ஆனால் அவர்கள் பரஸ்பரம் காதலை வெளிப்படுத்தும்படி பிக்பாஸே ஒரு வாரத்தில்
தூண்டி விட்டார்.
இருவருக்கும் பேச வேண்டிய கட்டாயம். மஹத் மிக குழப்பமாய்
“நான் யஷீகாவை நோக்க ஈர்க்கப்பட்டது உண்மை தான்…. ஆனால் நான் அவரிடம் முழுக்க வயப்பட்டதாய்
சொல்ல முடியாது. அதாவது நான் வந்து” என்றெல்லாம் மென்று முழுங்கினார். இதற்கு ஒரு காரணம்,
அவருக்கு வெளியே நிஜமாகவே ஒரு காதலி உண்டு, அவர் பிக்பாஸ் விளையாட்டுக்காய் தன் காதலை
முறித்துக் கொள்ள தயாராக இல்லை. பிக்பாஸுடனான காதல் உடன்பாட்டை மீறவும் அவரால் முடியாது.
யஷீகாவுக்கு வெளியே காதலர் உண்டா என நாம் அறியோம். ஆனால் அவர் ஒரு அளவுக்கு மேல் இந்த
பாவனை பந்தத்தில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஆக, மஹத் தன் மதில் மேல் பூனை காதலை
வெளிப்படுத்தினதும், யஷிகா அதைப் பிடித்துக் கொண்டு “நான் அவரை ஒரு சமயம் விரும்பினேன்
தான். ஆனால் அவர் தான் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு இது மிகுந்த மன உளைச்சல்
ஏற்படுத்துக்கிறது” என எந்த உணர்ச்சியுமின்றி எந்திரத்தனமாய் முகத்தை வைத்துக் கொண்டு
சொன்னார். தனது எந்திரத்தனத்தை நியாயப்படுத்த “எனக்கு என் உணர்ச்சிகளை வெளிக்காட்ட
தெரியாது, அது என் பலவீனம்” எனக் கூறினார். ஆனால் இது உண்மை அல்ல.
தன் பெற்றோரை மேடையில், பிளாஸ்மா டிவியில், கண்ட போது யஷிகாவின்
கண்கள் குளமாகின. Freeze டாஸ்கின் போது பிற பங்கேற்பாளர்களின் பெற்றோர், குடும்பத்தினர்
மற்றும் நண்பர்கள் வந்த போது கூட்டமோடு கூட்டமாய் யஷீகா அழுது தேம்பினார். ஊருக்காக
அழ முடிந்தவரால் தன் காதலுக்காய் ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு இதயத்தின் வலியை காட்ட
முடியாதா, தேம்பியபடி தன் துயரத்தை முன்வைக்க முடியாதா? முடியும். அந்தளவு கல்லுரிமங்கைகளாய்
பெண்கள் இருப்பதில்லை.
ஆனால் இந்த இடத்தில் யஷிகா “உணர்ச்சியற்ற பெண்” எனும் பிம்பத்தை
தனக்கு சாதகமாய் பயன்படுத்தி, தான் மஹத்தை விரும்பினாலும் அதை ஏன் வெளியே சொல்ல விரும்பவில்லை
என்பதை நம்பும்படி சொல்லி விட்டார். அதே போல, முகத்தை மரமாக வைத்துக் கொண்டு தன் காதல்
வாக்குமூலம் சற்றே போலியானதோ எனும் தோற்றத்தையும் ஏற்படுத்தினார். மஹத்தால் இது முடியவில்லை.
அவரது குழப்பம் அப்பட்டமாய் தெரிந்தது. ஆனால் யஷிகாவோ இரு முனைகளிலும் ஸ்கோர் செய்தார்.
1) தான் காதலித்து கைவிடப்பட்டவள் எனும் இரக்கவுணர்வைத்
தூண்டும் பிம்பத்தை தோற்றுவித்தார்.
2) அதேவேளை, தான் வெளிப்படுத்தும் காதல் ஒருவேளை
முழுக்க உண்மையல்லவோ எனும் சித்திரத்தையும் ஏற்படுத்தினார்.
கருத்துகள்