News.com.au இணையதளம் ஆரன் கில்மோர் மற்றும் கேன் கிளியர்வாட்டர் எனும் இளம்பருவத்தில் பலாதாரம் செய்யப்பட்ட இரு ஆண்களின் கதையை வெளியிட்டிருக்கிறார்கள். இரு வழக்குகளிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்ய மிகவும் தயங்கியது. ஒரு காவல் அதிகாரி தன்னிடம் “அப்பெண் உன்னை செக்ஸுக்கு உடன்பட வற்புறுத்தினால் அதில் எந்த குற்றமும் எனக்கு தெரியவில்லையே” எனக் கூறியிருக்கிறார். பின்னர் இருவரும் தொடர்ந்து போராடிய பின்னரே குற்றங்கள் விசாரிக்கப்பட்டு குற்றவாளியான பெண்கள் சிறைத் தண்டனை பெற்றனர்.
கிளியர்வாட்டர் ஒரு முக்கியமான விசயத்தை குறிப்பிடுகிறார். அவருக்கு 12 வயதிருக்கும் போது அவரது குடும்ப நண்பரான ஒரு பெண் அவரை தொடர்ந்து பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறார். அப்போது அச்சிறுவனுக்கு பயத்தில் விரைப்பு ஏற்படவில்லை எனில் “நீ ஒரு ஆணே அல்ல” என அப்பெண் சிரிப்பாராம். இது ஏற்படுத்திய குற்றவுணர்வு - தான் ஆண்மையற்றவன் எனும் அச்சம் - தன்னை வாழ்க்கை பூரா துரத்தியது என்கிறார் அவர்.
2010இல் அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில்
(https://www.tandfonline.com/doi/abs/10.1080/10538712.2015.978925) கண்டறியப்பட்டது என்னவெனில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கலில் ஐந்தில் ஒன்றை பெண்கள் செய்கிறார்கள். (இந்த குறைவான எண்ணிக்கை கூட சமூக அவமதிப்புணர்வினால் ஆண்கள் வெளிவர தயங்குவதனால் இருக்கலாம்.)
அது மட்டுமல்ல, பெண்களின் பாலியல் குற்றங்கள் என்பதை குழந்தையை முத்தமிடுவதோ பாலுறுப்பை தொடுவதோ மட்டுமல்ல. பெண்கள் சிறுவர்களின் உடலை சில பொருட்களைக் கொண்டு துளைப்பது, சிறுவர்களை மிருகங்களோடு உறவு கொள்ள பணிப்பது ஆகிய காரியங்களையும் செய்திருக்கிறார்கள். இது ஒன்றைக் காட்டுகிறது – பெண் பலாத்காரர்கள் ஆபத்தானர்கள் என பலரும் நம்புகிறோம். ஆனால் இது உண்மையல்ல. ஆண்கள் அளவுக்கு மோசமான காயங்களை பெண்களும் ஆண் குழந்தைகள் மீது ஏற்படுத்துகிறார்கள்.
இப்படி தாயால் பலாத்காரம் செய்யப்பட்ட ஆண் ஒருவர்
(https://onlinelibrary.wiley.com/doi/10.1002/9780470666715.ch2) இதனால் விளைந்த உளவியியல் பாதிப்பைப் பற்றி பேசுகையில் “என்னால் அம்மாவின் தொடு உணர்வை என் தோலில் இருந்து அகற்ற முடியவில்லை. எவ்வளவு தேய்த்துக் குளித்தாலும் அம்மாவின் விரல்களின் ஸ்பரிசம் இருந்து கொண்டே இருக்கிறது” என்கிறார்.
வெளியே சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் எனும் சூழல் (நம் பெண்ணியவாதிகளும் ஆணாதிக்க சமூகமும் சேர்ந்து உருவாக்கின “ஆண்கள் என்றால் குற்றம் செய்பவர்கள் மட்டுமே” எனும் பிம்பம்) காரணமாய் பல சிறுவர்கள் இந்த பலாத்காரத்தை தொடர்ந்து நிகழ அனுமதிக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள்.
அது மட்டுமல்ல, அரிதாகவே இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. சில அரிதான பெண்கள் மட்டுமே இதை செய்கிறார்கள் எனும் மனப்பிம்பமும் நம்மிடம் உள்ளது. இந்த ஆய்வு இதை மறுக்கிறது – பெண்கள் வழக்கமாகவே இதை செய்து வருகிறார்கள்; புகார் செய்யப்படாமல் அமுக்கப்படுவதால் வெளியே வருவதில்லை என்கிறது. (https://www.jaacap.org/article/S0890-8567(09)63404-3/fulltext)
அது மட்டுமல்ல பாலியல் குற்றங்களைப் பொறுத்தமட்டில், சிறுமிகளை விட சிறுவர்களே அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது 2014இல் Scientific American இதழ் வெளியிட்ட ஒரு ஆய்வு.
ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் கணிசமான குற்றவாளிகள் தாய்மார்களே என தெரிய வந்துள்ளது. ஆண்கள் உறவுக்கார குழந்தைகளை துன்புறுத்தினால், பெண்களோ சொந்த குழந்தைகளை உறவுக்கு வற்புறுத்தி இருக்கிறார்கள் (http://journals.sagepub.com/doi/abs/10.1177/0886260504269093).
இந்தியாவிலும் இதுவே நிலைமை என 2007இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதன்படி 52.94% ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறாரக்ள். இதற்கு ஒரு காரணம் சமூகம் ஆண் குழந்தைகளை பாதுகாக்க முயல்வதில்லை என்பது.
இதே இதழ் National
Crime Victimization Survey வெளியிட்ட நான்கு வருட கணக்கெடுப்பை ஆய்வு செய்ததில் 58% சிறுவர்களும் 41% சிறுமிகளும் பெண்களால் அடித்தும் உதைத்தும் பாலுறவுக்கு பெண்களால் வலியுறுத்தப்பட்டாதாய் தெரிய வருகிறது.
ஒரு வழக்கில் 5 வயது சிறுவன் அவனது பள்ளியில் இரண்டு முதிர்ந்த மாணவர்களால் பலாத்காரம் செய்யப்படுகிறான். பையனின் அப்பா பள்ளியை அணுகிய போது அவர்கள் இதை பொருட்படுத்த மறுக்கிறார்கள். காவல் துறையும் அச்சிறுவனை கைவிடுகிறது. “இதுவே ஒரு பெண் குழந்தை என்றால் மீடியா கவனத்தை அஞ்சி பள்ளி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்திருக்கும்” என்கிறார் அப்பா. ஏன் இந்த பாகுபாடு?
Psychiatrictimes இணையதளம் சிறுவர் / சிறுமிகள் மீது பெண் ஆசிரியர்கள் நிகழ்த்தும் பாலியல் குற்றங்கள் ஆண்கள் நிகழ்த்தும் குற்றங்களில் மாறுபட்டவை, பெண் ஆசிரியர்கள் உடலுறவை விட பாலியல் அருகாமையை, உணர்வுரீதியான திருப்தியை முக்கியமாய் நினைக்கிறார்கள். பெரும்பாலான விசாரணைகளில் அவர்கள் தாம் தப்பே செய்யவில்லை என சாதிக்கிறார்கள். இதனாலே அவர்களின் குற்றங்கள் பொதுவெளியில் தெரிவதில்லை.
ஆனால் குழந்தைகளுடன் உறவு கொள்ளும் பீடோபைல்கள் குறித்த சினிமா, இலக்கிய, மீடியா பதிவுகளில் ஏன் ஒருமுறை கூட பெண்கள் குற்றவாளிகளாய் காட்டப்பட்டதில்லை? பெண்ணென்றால் அவள் தாய், அவளால் யாரையும் காயப்படுத்த
முடியாது எனும் சமூக பிம்பமா இதற்குக் காரணம்?
பெண்கள் சிறையில் பலாத்காரம் செய்யப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். Scientific
American சொல்லும் கணக்குப்படி அமெரிக்க சிறைகளில் ஆண்களை விட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையில் பெண்களை பெண்களே பலாத்காரம் செய்வது நடக்கிறது. (எல்லா பாலியல் குற்றங்களுக்கும் ஆணாதிக்க மனப்பான்மையே காரணம் எனும் பெண்ணியவாதிகள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?)
ஆண் குழந்தைகள் பெண்களால் பலாத்காரம் செய்யப்படுவது மறைக்கப்படுவதற்கும், ஆண்களால் அவர்கள் பாதிப்புள்ளாகும் போது காவல்துறை அதை பொருட்படுத்தாமல் இருப்பதற்கும் மற்றொரு காரணம் நம் சமூகத்தில் ஆண்நிலை குறித்துள்ள தவறான புரிதல் என்கிறது Indian Journal of Psychiatry இதழில் வெளியான ஒரு ஆய்வு. ஆணாதிக்கவாதத்தை நாம் ஆண்கள் என நேரடியாய் தட்டையாய் புரிந்து கொள்கிறோம். ஆணாதிக்கவாதம் என்பது சமூக கலாச்சார அமைப்புகளாய், அதிகார மேல்நிலையாக்கமாய் மாறி விட்டது. இன்று அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அமைப்புகள் மற்றும் தனிமனிதர்களை நாம் ஆண்வழி மரபுக்குள் கொணர வேண்டி உள்ளது. அதாவது உடல்ரீதியாய் மட்டுமே பால்நிலையை புரிந்து கொண்டால் ஆணாதிக்கம் நிகழ்த்துவோர் அனைவரும் பெண்கள் என நினைப்போம். ஆனால் பால்நிலை என்பது உடலைப் பொறுத்ததல்ல, ஒருவர் அதிகாரத்தை செலுத்துவதைப் பொறுத்தது எனப் பார்த்தால் ஒரு சிறுவனை ஒரு பெண் அடித்து துன்புறுத்தி உறவு கொள்ள வைப்பதும், இத்தகைய குற்றங்களை பொருட்படுத்த மறுப்பதும் கூட ஆணாதிக்க மனநிலையின் வேறு வடிவங்கள் தாம்; ஒரு மருமகளை மாமியார் கேஸ் ஸ்டவ் வெடிக்க வைத்து கொல்வதும் ஆணாதிக்கவாதம் தான்; ஆணாதிக்கவாதம் பெண்கள் வழியாகவும் செயல்படும்; ஆண்கள் மட்டுமே எப்போதும் குற்றவாளிகள் எனக் கோரும் தீவிர பெண்ணியவாதிகளும் ஒருவித ஆணாதிக்கவாதிகளே (ஆணே அதிகாரம் கொண்டவன், பெண்ணால் ஒன்றுமே முடியாது எனும் ஆணாதிக்க இருமையை முன்னெடுப்பதால்).
இது ஒரு சிக்கலான புரிதல். இதைப் படிக்கும் நண்பர்களுக்கு உடனடியாய் இதை ஏற்க சிரமம் இருக்கலாம். ஆனால் உண்மையை அறிய விரும்புவோர் கொஞ்சம் சிரம்மப்பட வேண்டும்; எளிய தட்டையான வாதங்களை புறக்கணிக்க வேண்டும்.
உலகம் கறுப்பு-வெள்ளையானது அல்ல. பெண்கள் எப்போதும் வெள்ளை (தேவதைகள்), ஆண்கள் எப்போதும் கறுப்பு (ராட்சஸர்கள்) என்பது உண்மை அல்ல நான் மீளமீள வலியுறுத்த விரும்பும் கருத்து.
கருத்துகள்