திருமண அமைப்பு பல ஆண்டுகளாய் ஆண்களுக்கு சாதகமாய் இருந்து
வருகிறது என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் இன்று நிலைமை பெருமளவு மாறி விட்டது. அபிராமியைப்
போன்று கொடூர குற்றங்களை இழைக்கும் பெண்கள், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்து
பெற்றும் ஆணை தெருவில் விடும் பெண்கள் இன்னொரு பக்கம். இந்த அமைப்பினால் இன்று பெருமளவு
வஞ்சிக்கபட்டவர்களாய் ஆண்களை மாற்றி உள்ளது. இன்று ஆண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்சி
ஓடும் நிலை மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகிறது. லிவ்-இன் மட்டுமே பாதுகாப்பானது என ஆண்கள்
நினைக்க துவங்கி உள்ளார்கள். ஏன் இந்த நிலை? பெண்களை விட சற்று குறைவாகவோ அல்லது அவர்களுக்கு
இணையாகவோ ஆண்களும் இன்று இந்த அமைப்பினால் கடுமையாய் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே
உண்மை. சில உதாரணங்கள் தருகிறேன்.
என்னுடன் பணிபுரியும் ஒரு பேராசிரியர் கேரளாவில் தன் உறவினருக்கு
நிகழ்ந்த ஒரு விசித்திர சம்பவத்தை குறிப்பிட்டார். ஒரு பெண்ணை அவரது பெற்றோர்கள் அவளது
விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைக்கிறார்கள். மணமான ஒரே மாதத்தில் அப்பெண் பெற்றோரிடம்
திரும்பி வந்து “இனிமேல அந்தாளுடன் வாழ முடியாது” என்கிறார். என்ன காரணம்?
“அவர் ஒருநாள் மூன்று முறை செக்ஸ் வைத்துக் கொள்ள கேட்கிறார்.
அவர் ஒரு செக்ஸ் மேனியாக்”
பெற்றோரும் இதை ஏற்றுக் கொண்டு அப்பெண்ணை பிரித்து அழைத்து
வந்து விட்டார்கள். இப்போது அப்பெண் படித்து வேலை பார்க்கிறார். அந்த ஆண் மற்றொரு திருமணம்
செய்து கொண்டு மூன்று குழந்தைகள் பெற்று திருப்தியாய் இருக்கிறார். ஆனால் முதல் திருமணம்
முறிந்த பின் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு, அவமானத்துக்கு ஆளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட
ஒரு வருடம் அவர் எந்த நிகழ்ச்சிக்கும், ஊர் திருவிழாக்களுக்கும் போக மாட்டாராம். அவர்
வக்கிரம் பிடித்தவர் எனும் பேச்சு பரவி பெண்கள் அவரைக் கண்டாலே ஒதுங்கி செல்வார்களாம்.
உறவினர், நண்பர்கள் என எங்கும் அவரைப் பற்றி கேலி, பரிகாசம். அதன் பிறகு உளவியல் ஆலோசனை
பெற்று தேறி மறுதிருமணம் செய்து கொண்டாராம். தான் ஒரு செக்ஸ் மேனியாக் இல்லை என அவர்
உறுதியாக அந்த பேராசிரியரிடம் கூறி இருக்கிறார்.
எனக்கு இதைக் கேட்ட போது ஒரு விசயம் மிகவும் வியப்பேற்படுத்தியது.
திருமணமான முதல் மாதத்தில் ஒருநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செக்ஸ் வைத்துக் கொள்வது
இயல்புதானே, அதாவது நான் அறிந்த வரையில். எனக்குத் தெரிந்த சிலர் தம் மனைவியர் தொடர்ந்து
ஐந்து முறை ஆர்கஸம் அடைவதாய் சொன்னார்கள். ஆனால் ஆரம்பத்தில் frequency அதிகமாய் இல்லையென்றாலே
கவலையடைய வேண்டும். மூன்று என்பது கொஞ்சம் அதிகம் தான் என நினைத்தால் ஒரு ஆலோகரிடமும்
அவரை அழைத்து சென்று பேச வைக்கலாமே! மனைவியிடம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது எப்படி
என பயிற்சி அளிக்கலாமே! ஆனால் எந்த வாய்ப்பையும் அளிக்காமல் இப்படி ஒரே மாதத்தில் ஒரு
பந்தத்தை முறிப்பது அநியாயம் அல்லவா?
என் ஊகம் இது: மூன்று முறை என்பது பிரச்சனை அல்ல. கணவரைப்
பிடிக்கவில்லை என்பதால் செக்ஸே அப்பெண்ணுக்கு ஒரு வதையாக மாறி இருக்கும். மூன்று முறை
என்பது தாங்கவொண்ணா கொடுமை. ஆனால் அதற்கு அந்த ஆண் என்ன செய்வான்? அவனை ஏன் பழிக்க
வேண்டும்?
அடுத்த சம்பவம் தமிழகத்தில் நடந்தது. என் தோழி ஒருவர் குறிப்பிட்ட
விசயம் இது. தோழிக்கு தெரிந்த ஒரு பெண் அவர். அவர் தான் ஒரு லெஸ்பியன் என பெற்றோரிடம்
தெரிவித்து, தான் நேசிக்கும் பெண்ணுடனே வாழ விருப்பம் என்கிறார். பெற்றோர்களோ அப்பெண்ணை
அடித்து உதைத்து மிரட்டி விருப்பமற்ற ஒரு திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைக்கிறார்கள்.
ஒத்துக்கொள்ளும் போதே அப்பெண் சொல்லி இருக்கிறாள், “என்ன ஆனாலும் அவன் கூட மூன்று மாதம்
கூட இருக்க மாட்டேன் பார்”. அப்படியே அவள் மூன்று மாதங்களில் திரும்பி வந்து விடுகிறாள்.
பெற்றோரும் அவளை மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். இப்போது அவள் பிரிவுக்கு சொன்ன
காரணம் என்ன தெரியுமா? “அவன் ஆம்பிளையே இல்ல. அவன் என் கூட செக்ஸ் வச்சிக்கிறதே இல்ல
தெரியுமா?” தான் ஒரு லெஸ்பியன் எனக் கோரும் பெண் எப்படி ஆண் தன்னை செக்ஸில் திருப்திப்படுத்த
வேண்டும் என எதிர்பார்க்க முடியும்? எந்த ஆணாலும் அதை செய்ய முடியாது? இந்த பெண் லெஸ்பியன்
எனும் பழி தன் மீது வரக்கூடாது என்பதற்காக கணவர் ஆண்மையற்றவர் என பொய்க்குற்றச்சாட்டு
சுமத்தி வெளியேறி விட்டார். அவள் இப்போது தனியாக புல்லட் ஓட்டிக் கொண்டு தன் காதலியுடன்
நேரம் செலவிட்டுக் கொண்டு ஜாலியாக சுதந்திரமாக இருக்கிறார்.
இந்த இரு சம்பவங்களிலும் ஆண் இயல்பை மீறிய எதையும் செய்யவில்லை.
இரண்டு பெண்களையும் விருப்பமின்றி மணமுடித்துக் கொடுத்த பெற்றோர்களே முதல் குற்றவாளிகள்.
ஆனால் இரண்டு பிரச்சனைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டது ஆண்களே, பெண்கள் அல்ல. இரு பெண்களும்
தமக்கு விருப்பமில்லாத திருமணத்தில் இருந்து தப்பித்து சுதந்திரமாய் இருக்கிறார்கள்.
ஆனால் எந்த தவறும் செய்யாத ஆண்களோ ஒன்று செக்ஸ் மேனியாக் / ஆண்மையற்ற பேடி எனும் கெட்டப்
பெயர் வாங்கி அவமானப்பட்டு, கடும் உளைச்ச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இது போன்ற சம்பவங்களில் பெற்றோர்கள் நடந்து கொள்ளும் விதம்
தான் இன்னும் விசித்திரமானது. ஒரு திருமணம் நிலைக்காது என தெரிந்தும் வற்புறுத்தி செய்து
வைக்கிறார்கள். அதன் பிறகு ஒரு அற்ப விசயத்துக்கு பெண் கோபித்து வந்து விட்டால் “இனிமேல்
நீ அந்தாளு கூட வாழ வேணாம்மா” என அப்படியே பல்டி அடித்து தம் மகளை ஆதரிக்கிறார்கள்.
ஏன் இந்த ஆதரவை அப்பெண்ணுக்கு அவள் திருமணத்துக்கு முன் முரண்டு பிடித்த போதே தெரிவிக்க
வேண்டியது தானே. பெண்ணை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள முனைப்பு பெற்றோருக்கு
அப்பெண் தொடர்ந்து கணவனுடன் வாழ வேண்டும் என்பதில் இருப்பதில்லை. பெண் திருமணமாகாமல்
இருப்பது அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு சமூக இழிவு – யாராவது விசாரித்துக் கொண்டே இருப்பார்கள்
“இன்னும் பொண்ணுக்கு பண்ணி வைக்கலியா?” என. திருமணம் ஆவது தாமதமாக ஆக பெண் மீது கூடுதலாக
களங்கம் சுமத்துவார்கள். ஆனால் ஒரே மாதத்தில் கணவனை அவள் பிரிந்து வந்து விட்டாள்
“நாங்கள் எங்கள் கடமையை சரிவர நிறைவேற்றி விட்டோம். ஆனால் அவளை கட்டிக்கிட்ட ஆண் தான்
சரியில்ல. அவன் ஒரு பேடி / செக்ஸ் வெறியன். எங்கள் பெண்ணை கொடுமைப்படுத்தி விட்டான்”
எனச் சொல்லி எல்லா பழியில் இருந்தும் தப்பித்து விடுவார்கள்.
ஆனால் இவர்களின் சமூகக் கடமையை நிறைவேற்றுவதற்கு, பெண்ணுக்கு
அருகதையில்லாதவள் எனும் அவப்பெயர் வராமல் இருப்பதற்கு யார் பலிகடா ஆக வேண்டும்? அந்த
கணவன் தான்.
பெண்களுக்கு திருமண அமைப்பு மென்னியை நெரிக்கும் உணர்வை அளிக்கிறது;
எதற்குமே சுதந்திரம் இல்லையே என மருகுகிறார்கள். கணவன் கூடமாட உதவி, சமையல் செய்து,
அனுசரணையாய் இருந்தாலும் ஒரு கட்டத்தில் “சுதந்திரமின்மை” உணர்வை அவர்களை பெரும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது.
அற்ப காரணம் ஒன்றை சொல்லி விவாகரத்து கோரி வெளியேறி விடுகிறார்கள். அப்போதும் உண்மையை
சொல்ல மாட்டார்கள். ஆண் மீது மொத்த பழியையும் சுமத்தி விடுவார்கள்.
இந்த திருமண அமைப்பு ஆண் – பெண் இரு சாராரையும் நசுக்குகிறது
என்பதே உண்மை. பெண்கள் கூடுதலாய் நிச்சயம் பாதிக்கப்படுகிறார்கள். ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அதற்கு ஆண்களை பலிகடா ஆக்குவது நியாயமா? “என்னை திருமண செய்து கொள், செய்து கொள்”
என ஆண்களா ஊரூராய் அலறித் தவிக்கிறார்கள்? நீங்களாகவே தான் முன்வந்து (அல்லது பெற்றோர்கள்
வற்புறுத்தினார்கள் என்று) மாலை சூடிக் கொள்கிறீர்கள்? ஆனால் தாங்கவொண்ணாத உளவியல்
நெருக்கடி வரும் போது இந்த சமூகத்தின் மீது, உங்கள் பெற்றோர் மீது காட்ட வேண்டிய கோபத்தை
கணவன் மீது காட்டி விட்டு தப்பித்துப் போகிறீர்கள். இது என்ன விதமான நியாயம்?
இந்த விசயத்தில் அப்பெண்ணும் கடும் நெருக்கடியை சந்திக்கிறாள்
எனப் புரிகிறது. ஆனால் அதற்கு அவள் பெற்றோர்களையே கடிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்த
பெண்ணும் தன் பெற்றோரை கோபிக்கவோ காயப்படுத்த மாட்டார்கள். மாறாக ஒரு ஆணை, சம்மந்தமில்லாத
ஆணை காயப்படுத்தி விட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். பெற்றோரை திருப்திப் படுத்தியும்
ஆயிற்று, தம் சுதந்திரத்தை பெற்றும் ஆயிற்று என புன்னகைத்துக் கொள்கிறார்கள். நான்
இந்த பெண்களிடம் கேட்க விரும்புவது இரண்டே கேள்விகளைத் தான் – 1) உங்களுக்கும் உங்கள்
பெற்றோருக்கும் உள்ள ஒரு பிரச்சனைக்கு நடுவே ரோட்டில் சிவனே என்று போகிற ஒருவனை ஏன்
இழுத்து விடுகிறீர்கள்?
2) உங்கள் பெற்றோர் மேல் பழிசொல்ல துணிவின்றி, விருப்பமின்றி
“அவர்கள் என்னை மணமுடித்து வைத்ததால் இப்போது தவிக்கிறேன், துன்புறுகிறேன்” என உண்மையை
சொல்ல விருப்பமின்றி, ஏன் அந்த கணவன் மீது தீராப்பழியை சுமத்துகிறீர்கள்?
திருமணத்தைப் பொறுத்தமட்டில், சமூகமும் சரி, சட்டமும் சரி
பெண்களுக்கே பாதுகாப்பையும் ஆதரவையும் அளிக்கிறது என்பதே இன்றைய நடைமுறை. உ.தா., இன்று
உலகம் முழுக்க மிக அதிகமான எண்ணிக்கையில் விவாகரத்து கோருபவர்கள் பெண்களே, ஆண்கள் அல்ல. அதுவும் துரோகத்தினாலோ வன்முறையின் காரணாகவோ அல்ல. “பிடிக்கவில்லை”
என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டு பிரிந்து போய் விடுகிறார்கள்.
கருத்துகள்
for the reason that here every data is quality based information.