
நான் என் இருபதாவது வயதில் கலை இலக்கிய பெருமன்ற கருத்திரங்கு
ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு சென்னைக்கு வந்தேன். அப்போது சந்தித்தவர்களில் ஒருவர்
யுகமாயினி சித்தன். தொண்ணூறுகளில் நான் எதிர்கொண்ட டிப்பிக்கல் சிறுபத்திரிகையாளர்களின்
வேகம், பித்து, உக்கிரம், மும்முரம் அனைத்துமே வடிவான மனிதர். நான் அவரிடம் சென்று
யுகமாயினி குறித்து சில சொற்கள் பகிர அவர் உற்சாகமானார்.
சென்னையில் அன்றாட
செலவுக்கு அம்மா தந்த பணத்தை கண்ணில் பார்க்கும் புத்தகங்கள், இதழ்களுக்கே செலவழித்து
கரைத்துக் கொண்டிருந்தேன். எந்த அளவுக்கு என்றால் கடைசி நாள் ஊருக்கு திரும்பி செல்ல
பேருந்துக்கே என்னிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அதைக் குறித்தெல்லாம் கவலை கொள்ளாத
வயது அப்போது. சித்தனிடம் சில நிமிடங்கள் பேசினதுமே “யுகமாயினி”க்கு சந்தா தொகையையையும்
என் முகவரியையும் அளித்தேன். அவர் மகிழ்ந்து என்னிடம் தன் பத்திரிகையின் சில இதழ்களை கையில் அளித்தார்.
சுமார் ஒரு இரண்டு வருடங்களின் இதழ்கள். அப்படித் தான் அவரைப் போன்ற மனிதர்கள் இருந்தார்கள்.
கராறான வணிக நோக்கோ, கையில் காசு வாயில் தோசை மனப்போக்கோ இல்லை. உங்களுக்கு இலக்கிய
விருப்பம் உண்டென அறிந்தால் மறுநொடி உங்களை ஒரு சகோதரராய் ஏற்றுக் கொண்டு மணிக்கணக்காய்,
நாட்கணக்காய், வாரக்கணக்காய் பேசிக் கொண்டு போவார்கள். உங்கள் ஊர், பின்னணி, சாதி,
மதம் பற்றியேதும் விசாரிக்கக் கூட மாட்டார்கள். சித்தனும் அப்படியான ஒரு மனிதர்.
நான் விடுதிக்கு திரும்பிய போது நட.சிவகுமார் அண்ணன் “என்னடா
சித்தனைப் பார்த்தியோ?” என்றார். “ஏண்ணே கேட்குறீங்க?”
“கையில் இவ்வளவு பழைய இதழ்கள் வச்சிருக்கியே?”, என்றார் ஒரு
எல்லாம்-அறிந்த நமுட்டுப் புன்னகையுடன்
அன்றைக்கு தொலை தொடர்பு வசதிகள் குறைவு. ஆகையால் நான் அவருடன்
தொடர்பில் இருக்க இயலவில்லை. ஆனால் இதழ்களை தொடர்ந்து வாசித்து வந்தேன். “யுகமாயினி”
இன்றைய இடைநிலை இதழ்களின் வடிவில் இருக்காது. பள்ளி மாணவர்களின் குறிப்புகளை தைத்து
தொகுத்தது போல அடுக்கடுக்காய் நெருக்கமாய் திணித்ததாய் படைப்புகள் வரும். தாள் ரொம்ப
மலிவானதாய் அச்சு மை கொஞ்சம் கலங்கலாய் இருக்கும். எனக்கு இந்த தொழில் நேர்த்தியின்மை
மிக கவர்ச்சியாய் இருந்தது. ஒரு பத்திரிகை நடத்த, படைப்பாளியாக பெரிய வசதியோ பின்னணியோ
தேவையில்லை, கனவு காணும் மனம் மட்டுமே போதும் எனும் ஒரு நம்பிக்கையை விதைத்தவர் சித்தனைப்
போன்றவர்கள்.
அது ஒரு காலம். அவர் அந்த காலத்தின் மனிதர். அந்த காலமே நான்
காலுதைத்து பழகிக் கொண்ட கருவறை. அதனாலே எனக்கு அந்த காலத்து ஆளுமைகள் மீது பெரிய பிரியமும்
மரியாதையும் உண்டு. சித்தனுக்கு அஞ்சலி!
கருத்துகள்