பிறந்த நாளின் போது அந்த வருடத்தில் எனக்கு நிகழ்ந்தவற்றை, அவ்வருடத்தின் பிரத்யேக அம்சத்தை பின்னோக்கி தொகுத்து எழுதுவது என் வழக்கம். அவ்வாறே, இன்று என் பிறந்த நாள்.
இன்று திரும்பி நோக்கும் போது இது என் வாழ்வின் மிக மிக நெருக்கடியான வருடம், இது என்னை மனச்சிதைவை நோக்கி கிட்டத்தட்ட இட்டுச்சென்ற வருடம், இதுவே என்னை அதிகமான தடவைகள் தற்கொலை குறித்து விலாவரியாய் திட்டமிடச் செய்த வருடம் எனத் தோன்றியது.
நான் எப்போதுமே கசப்பான கவலையான சுணக்கமான ஆளில்லை; நான் முசுடனாக சுயவெறுப்பாளனாக இருந்ததில்லை. எழுத்தில் இருந்து கவனம் பிசகி மோட்டுவளையை வெறித்தபடி இருந்ததில்லை. அதையெல்லாம் இவ்வருடம் செய்தேன் – காரணம் எனக்கு நெருக்கமான ஆதரவு தளத்தை, என் குடும்பத்தை நான் ஒரு சின்ன கண் சிமிட்டலில் முழுக்க இழந்தது.
எந்த இழப்பின் போதும், துயரத்தின் போதும் என்னால் சரளமாய் முழு ஈடுபாட்டுடன் எழுத முடியும் என நம்பியிருந்தேன். என் அப்பா காலமான போது நான் வீட்டுக்குக் கிளம்பிய நாளில் இருந்து துக்கம் அனுசரித்த காலம் வரை எழுதுவதை நிறுத்தவில்லை – அப்பாவின் சடலம் முன்னறையில் கிடக்க நீ உட்கார்ந்து அசராமல் எழுதுகிறாயே என சிலர் கண்டித்தார்கள். ”நான் அப்படித் தான்” என பதில் சொன்னேன். பின்னர், நான் கோமா நிலைக்கு சென்று ஆஸ்பத்திரியில் மயக்கமாய் இரு வாரங்கள் இருந்த பின் கண்விழித்த அன்றைய நாள் மாலையே ஆயிரம் வார்த்தைகள் சரளமாய் எழுதினேன். என்னுடைய இந்த சுதந்திரம், விலகல் மனப்பான்மை குறித்த பெருமைப்பட்டதுண்டு. ஆனால் இந்த அசராத உறுதிப்பாட்டுக்குப் பின்னிருந்த மற்றொரு ஆதரவுத் தளத்தை நான் அன்றெல்லாம் கவனிக்கவில்லை – என் குடும்பம். தன் மென்மையான பெரிய பாத்த்தில் ஒரு பெரிய ஆணியோ கண்ணாடிப் பாளமோ இறங்கியதும் யானை நிற்க முடியாமல் தளர்ந்து சரிவதைப் போல நான் என் குடும்பம் என்னில் இருந்து அகன்றதும் நொறுங்கி சரிந்தேன்.
என் வாழ்வில் முதல் முறையாய், இப்போது, நான் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு அதிக மனிதர்களிடம் உரையாடினேன். மனிதர்களுடன் வெறுமனே உரையாடியபடியே அவர்களது மொழியை, நடவடிக்கைகளை கவனித்து உள்வாங்குவதே என் வழக்கம். அதை விடுத்து சக மனிதர்களுடன் உணர்ச்சிகரமாய் ஒன்றிப் போய் உரையாடத் துவங்கினேன். சகமனிதனின் துயரத்தைக் கேட்டு கண்ணீர் விடப் பழகினேன். தர்க்க ஒழுங்குடன், பகுத்தறிவுடன் வாழ்வை அலசி புரிந்து கொண்டு வந்த நான் இப்போது அவற்றை விடுத்து அதர்க்கத்தை, உணர்ச்சிகரமான தளும்பலை, நீரொழுக்கு போன்ற மனநிலையை அதிகம் விரும்பத் தொடங்கினேன். ஒரே நேரம் எனக்குள் மகிழ்ச்சியும் கசப்பும் இருக்கும் – ஒரு விசயத்தைக் குறித்து திளைப்புடன் உவகையும் சிந்திக்கும் போதே என் இழப்புணர்வு என் வதைத்துப் பிழிந்தபடி இருக்கும்.
சதா எனக்குள் உணர்ந்த தடுமாற்றம் என்னை எப்போதும் கண்ணீர் தளும்பிய நிலையை இருக்கச் செய்தது. . இது என்னை எல்லாவற்றையும் மிகையாக காண வைத்தது; மிகையை ரசிக்கச் செய்தது. முன்பு ஜாலியாய், அறிவார்த்தமாய் பார்த்துக் கடந்த திரைப்படங்கள் சிலவற்றை மீள மீளப் பார்த்து அழுகிறவனாய் மாறினேன். நான் அதுவரையில் என் வாழ்க்கை ஒருமுறை கூட ஒரு படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டதில்லை எனக் கூற வேண்டும். என் கண்களைக் கசியச் செய்ய ஒரு சிறு சொல் போதும், ஒரு வாசனை, ஒரு முகக்குறி, ஏதோ நினைவுக்கு குறுக்கே ஒரு நிழலாய் கடந்தால் போதும் என்று ஆகியது.
இந்த மனநிலை நீண்ட காலவெளியை கோரும் நீள்கட்டுரைகள், நாவல் ஆகிய வடிவங்களில் நான் செயல்படத் தடையாகியது. ஆகையால் நான் கவிதை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை ஆங்கிலமாக்குவதும், பாப்லோ நெருடாவை தமிழாக்குவதும் என்னை இக்கட்டத்தில் பெருமளவு காப்பாற்றின. ஒவ்வொரு கவிதையை மொழியாக்கும் போதும் என் கண்களில் இருந்து நீர் உருண்டோடும். இந்த துன்பத்தின் உச்சத்தில் ஒரு பெரும் மனத்திளைப்பு உண்டென நான் இம்மொழியாக்கத்தில் உணர்ந்தேன். இந்த மொழியாக்கங்கள் என் முந்தைய கராறான கச்சித மொழியாக்க முயற்சிகளில் இருந்து வித்தியாசப்பட்டிருந்தன. நான் என் கொதிக்கும் இதயத்தில் இருந்து நேரடியாய் இவற்றை வாசித்து மொழியாக்கினேன். சில விடுமுறை நாட்களில் நான் இப்படியான ஒரு எழுத்து முயற்சியில் தொடர்ந்து எட்டு-பத்து மணிநேரங்கள் ஈடுபடுவதுண்டு. இவை முடியும் போது நான் அடையும் கசப்பு அளவற்றது. முடியுறாமல் மொழியாக்கியபடியே இந்த தீவிர அனுபவங்களுக்குள், கனவு நிலைக்குள் இருக்க இயலாதா என ஏங்கியதுண்டு.
இந்த மனநிலை என் வகுப்பெடுக்கும் பாணியையும் மாற்றியது. நான் வகுப்பில் மிக உணர்ச்சிகரமாய் பேசுகிறவனாய் மாறினேன். முன்னெப்போதும் இல்லாதபடி மாணவர்களுக்கு இணக்கமானேன். எப்போதும் நிதானம் கைவிடாத ஆசிரியனான அவர்களிடம் அதிகமாய் கோபப்படுகிறவனாகவும் உருமாறினேன். சில வகுப்புகளில் சின்ன விசயங்களுக்கு கோபப்பட்டு ‘இனிமேல் உங்களிடம் பேச மாட்டேன்’ எனக் கூறி விட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவேன். ஆனால் ஆச்சரியமாக இந்த அணுகுமுறை மாணவர்களின் கூடுதல் பிரியத்தை எனக்குப் பெற்றுத் தந்தது. நான் ஒவ்வொரு முறை கோபித்து பின்னேகும் போதும் அவர்கள் என்னை நோக்கி கூடுதலாய் நெருங்கி வந்தார்கள். கடந்த வருட இறுதியில் என் வகுப்பிடம் சென்று இன்னும் இரு வாரங்களுக்கு மேல் நான் வர மாட்டேன்; அதற்குள் பாடங்களை முடித்துக் கொள்வேன் எனக் கூறினேன். இரு வாரங்களில் வாழ்க்கையை முடித்துக் கொள்வதே என் திட்டமாக இருந்தது. ஆனால் மாணவர்களோ நான் அவர்கள் பால் ஏமாற்றம் கொண்டே அவ்வாறு பேசுவதாய் நம்பினார்கள். ஆகையால் என்னை வந்து சமாதானப்படுத்தினார்கள். தாம் ஒழுங்காய் வகுப்பில் இருப்பதாய் உறுதி தந்தார்கள். அப்போது தான் நான் லக்கான் பற்றி மாணவர்களுடன் ஒரு புத்தகம் எழுதலாம் என முடிவெடுத்தேன். இரண்டே வாரங்கள் – ஒரு புத்தகம் வெளியிடுவோம். அதன்பிறகு விடைபெறலாம் என்றே என் ஆழ்மனம் என்னிடம் சொன்னது. ஒரு எழுத்தாளன் போர்முனையிலும் தூக்குமேடையிலும் புத்தகம் எழுதுவது பற்றியே திட்டமிட முடியும் அல்லவா!
ஆச்சரியமாக நாங்கள் அந்த குறுகின காலத்தில் அப்புத்தகத்தை முடித்தோம். அதன் பிறகு சுய அழிவு எண்ணம் மறந்து, புத்தகத்தை எடிட் செய்வது, அட்டையை தயாரிப்பது, வேறு பிரசுர வேலைகள் என மனம் தடம் மாறிப் பயணித்தது. குழந்தைப்பேறுக்குப் பிறகு குழந்தையை முலையூட்டுவதிலும் பராமரிப்பதிலும் தன்னை இழக்கும் இளம் தாயைப் போல ஆனேன். அந்த புத்தகத் திட்டமே என் ஆழ்மனத்தின் ஒரு தற்காப்பு வியூகமோ என இப்போது தோன்றுகிறது.
அதன் பிறகு ஒவ்வொரு முறையும் வாழ்வின் விளிம்புக்கு வந்து அதல பாதாளத்தை எட்டி நோக்கும் போது என் வாழ்வில் ஏதாவது ஒரு வினோதமோ அதிசயமோ நிகழும். ஒருவிதத்தில், கிரைஸ்ட் பல்கலைக்கழகத்துக்கு நான் வர நேர்ந்ததே ஒரு அதிர்ஷ்டம் தான் எனத் தோன்றுகிறது. இத்தனை மனிதர்கள், மாணவர்கள், நண்பர்கள் என்னைச் சுற்றி இராவிட்டால் நான் முழுக்க சிதறிப் போயிருப்பேன்.
கடந்த ஆறு மாதங்களாய் தான் நான் மெல்ல மெல்ல இழப்புகளில் இருந்து மீளத் துவங்கி இருக்கிறேன். இறைவன் அருகில் இருந்து என்னை பத்திரமாய் கவனித்துக் கொள்கிற உணர்வு எனக்கு இப்போதெல்லாம் இருக்கிறது. துன்பமே நம்மை இந்த வாழ்வுக்கு, இதை நடத்தும் அவனுக்கு நெருக்கமாய் ஆக்குகிறது. கண்ணீருக்கு ஒரு எல்லை உண்டு – அதைக் கடந்ததும் வானவில்கள் தோன்றும். என் வாழ்விலும் ஒரு வானவில் வந்தது. நான் அதைப் பற்றிக் கொண்டு வெளியே வந்தேன்,
ஆனால் ஒருநாளும் நான் இனி முழுக்க மகிழ்ச்சியான நடுநிலையான அமைதியான நபராய் இருக்க முடியாது எனத் தோன்றுகிறது. ஆனால் இதன் வழி, நான் நிறையவே சிதைந்தவனாய் இருக்கும் போதே ஓரளவு மேம்பட்டவனாயும் மாறி இருக்கிறேன்.
இந்த பிறந்த நாளின் சிறப்பு என்ன?
உருக்குலைக்கும் துயரங்களின் இறுதியில் நான் ஒரு எழுத்தாளனாய் எஞ்சியிருக்கிறேன் என்பது. எனக்கு அது போதும்.
குறுஞ்செய்திகள் வழியாகவும் முகநூலிலும் நேரில் அழைத்தும் வாழ்த்திய, அன்பைப் பகிர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி; உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.
நாம் எப்போதும் இருப்போம், அழிந்தாலும் கூட!

Comments
அன்புடன்
செல்வராஜ்