முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னைக் குறித்து மானசீகன்!



முகநூல் நல்ல படைப்பாளர்களை, சிந்தனையாளர்களைக் கூட தடம் மாற்றியிருக்கிறது. முகநூலின் அன்றைய பரபரப்புக்கு நம்மையறியாமல் நாமும் இரையாகி விடுகிறோம் . நமக்கே தெரியாமல் உள்ளுக்குள் ஒரு அன்னியனோ, ரெமோவோ குடியேறி விடுகிறான். (சில தருணங்களில் நானும் கூட)


ஆனால் இப்படிப்பட்ட சுழல்களில் மாட்டிக் கொள்ளாமல் ஒரு நதியுடனான பயணத்தைப் போல முகநூலிலும் தம் எழுத்துப் பயணத்தைத் தொடரும் வெகுசிலரில் முக்கியமானவர் அபிலாஷ்.

ஆழ்ந்த வாசிப்பும் , எதையும் சுவையாகச் சொல்லும் திறனும் வாய்க்கப் பெற்றவர். சினிமா, அரசியல், கிரிக்கெட் ,அன்றாடச் செய்திகள் என்று எதை எழுதினாலும் அந்தக் கட்டுரையில் இவருடைய தனித்துவமாக மனோவியல் பார்வை நம்மை எட்டிப் பார்த்துக் கண்ணடிக்கும் . ( எனக்கும் அதுவே உவப்பானது என்பதால் நான் அபிலாஷை பல தருணங்களில் சஹிருதயராகவே உணர்ந்திருக்கிறேன் )

திராவிடம், மார்க்சியம் , தலித்தியம் , பெண்ணியம் ஆகியவற்றின் மீது கனிவான பார்வை கொண்ட லிபரல் ஜனநாயகவாதியாகவே அபிலாஷை மதிப்பிட முடியும். மெய்ம்மை குறித்த அவருடைய தேடலை எல்லாவிதமான எழுத்திலும் நான் உணர்ந்திருக்கிறேன்.

எந்த பிம்பங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத , தன்னைச் சுற்றியும் ஒரு பிம்பத்தை கட்டமைக்க விரும்பாத அபிலாஷின் குணச்சித்திரம் எப்போதும் எனக்கு ஆச்சர்யமளிக்கும் ஒன்று.

எல்லா உணர்வு மோதல்களையும் அதன் அடியாழம் வரை உணர்ந்தும் அதில் சிக்கிக் கொள்ளாமல் மெல்லிய குரலில் அதுகுறித்து பிறரோடு உரையாடுவதே அபிலாஷின் எழுத்தாக இருக்கிறது. அந்தவகையில் என் எழுத்துக்கு நேர் எதிர் என்றாலும் அபிலாஷ் என்னை அதிகமாகக் கவர்ந்திருக்கிறார் .

ரஜினியின் திரைப்பட பிம்பம் குறித்த அவருடைய அவதானங்கள் , கிரிக்கெட்டை முன் வைத்து மனித ஆளுமைகளை அலசுவது, ஸ்டாலின் குறித்த அவருடைய மதிப்பீடு, இந்துத்துவத்தின் தன்மை குறித்த புதுமையான விமர்சனங்கள், ஆண்களுக்கு இடையிலான மெல்லிய ஈர்ப்பை ( ஹோமோ செக்ஸ் அல்ல ) 2000 க்குப் பிந்தைய திரைப்படங்களை முன்வைத்து கவனப்படுத்தியது என்று பல்வேறு தனித்துவமான சிந்தனைகளை அபிலாஷ் இணையவெளியிலும் , உயிர்மை வழியாகவும் முன் வைத்திருக்கிறார் . அவருடைய 'கால்கள் ' நாவல் மிக முக்கியமான ஒன்று. ( அது குறித்து தனியாக ஒரு பதிவு எழுதுவேன் )

ஜெயமோகனை ஒரு கண்டிப்பான ஆசிரியராக மதிப்பிடும் அபிலாஷ் அவரிடம் கற்றுக் கொண்ட பிறகு ஒரு நல்ல எழுத்தாளன் விலகி விட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார் . ஒருதரப்பினரால் மிகை மதிப்பீடுகளால் போற்றப்பட்டும், ,மறுதரப்பினரால் கடுமையான வசைகள் கொண்டு தூற்றப்பட்டும் தமிழ் இலக்கிய உலகின் புரியாத புதிராக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயமோகனை எப்படி அணுகுவது என்பதை அபிலாஷ் பல இடங்களில் தெளிவாகச் சுட்டியிருக்கிறார். அந்த அணுகுமுறையே எனக்கும் பிடித்தமானது .

புதிதாக எழுதுகிற அல்லது தன்னோடு எழுதிக் கொண்டிருக்கிற பிறரின் படைப்புகளை பாராட்டுவதிலும் , கவனப்படுத்துவதிலும் எப்போதும் முந்தி நிற்பவர் அபிலாஷ். குறைவான ஈகோ கொண்ட இளம் தமிழ் எழுத்தாளர் அவர் மட்டும்தான் . இந்த ஆளுமையை அவர் வலிந்து உருவாக்கிக் கொள்ளவில்லை. அவரது இயல்பே அப்படித்தான். அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் இதே தன்மையோடு வாழ்ந்து பல தடவை டெபாசிட்டை இழந்திருப்பார் .

மனுஷ்யபுத்திரன் அழகான பல கவிதைகளை எழுதியிருக்கிறார் . அவர் கண்டறிந்த அழகான கவிதை அபிலாஷ். அவருடைய வாழ்விலும் கவிதைத் தருணங்கள் நீடித்திருக்க வேண்டும் என்று ஒரு நண்பனாக வேண்டிக் கொள்கிறேன். ஒரே ஒரு தடவை போனில் பேசியிருக்கிறேன். சில தடவை சாட்டிங் செய்திருக்கிறேன். வெறும் முகநூல் தொடர்பே அவரை என் மனதுக்கு நெருக்கமாக உணர வைத்திருக்கிறது . இத்தனைக்கும் அவரும், நானும் வெவ்வேறு தன்மை கொண்டவர்கள் .

அபிலாஷ்க்கு சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்திருந்தாலும் அவரது உயரத்திற்கான போதிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் அது அபிலாஷை வந்தடையும். அப்படி வரவில்லை என்றாலும் அது குறித்த சிறு முணுமுணுப்பைக் கூட அவர் வெளிப்படுத்த மாட்டார். அதனால்தான் அவர் அபிலாஷ் .

லவ் யூ நண்பரே!
இப்போதிருப்பது போலவே மொத்த வாழ்வையும் கடந்து விடுங்கள்.

Abilash Chandranபிறந்த நாள் வாழ்த்துகள்.
Mohammed Rafeek R

கருத்துகள்

சச்சின் இவ்வாறு கூறியுள்ளார்…
100% உண்மை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...