முகநூல் நல்ல படைப்பாளர்களை, சிந்தனையாளர்களைக் கூட தடம் மாற்றியிருக்கிறது. முகநூலின் அன்றைய பரபரப்புக்கு நம்மையறியாமல் நாமும் இரையாகி விடுகிறோம் . நமக்கே தெரியாமல் உள்ளுக்குள் ஒரு அன்னியனோ, ரெமோவோ குடியேறி விடுகிறான். (சில தருணங்களில் நானும் கூட)
ஆனால் இப்படிப்பட்ட சுழல்களில் மாட்டிக் கொள்ளாமல் ஒரு நதியுடனான பயணத்தைப் போல முகநூலிலும் தம் எழுத்துப் பயணத்தைத் தொடரும் வெகுசிலரில் முக்கியமானவர் அபிலாஷ்.
ஆழ்ந்த வாசிப்பும் , எதையும் சுவையாகச் சொல்லும் திறனும் வாய்க்கப் பெற்றவர். சினிமா, அரசியல், கிரிக்கெட் ,அன்றாடச் செய்திகள் என்று எதை எழுதினாலும் அந்தக் கட்டுரையில் இவருடைய தனித்துவமாக மனோவியல் பார்வை நம்மை எட்டிப் பார்த்துக் கண்ணடிக்கும் . ( எனக்கும் அதுவே உவப்பானது என்பதால் நான் அபிலாஷை பல தருணங்களில் சஹிருதயராகவே உணர்ந்திருக்கிறேன் )
திராவிடம், மார்க்சியம் , தலித்தியம் , பெண்ணியம் ஆகியவற்றின் மீது கனிவான பார்வை கொண்ட லிபரல் ஜனநாயகவாதியாகவே அபிலாஷை மதிப்பிட முடியும். மெய்ம்மை குறித்த அவருடைய தேடலை எல்லாவிதமான எழுத்திலும் நான் உணர்ந்திருக்கிறேன்.
எந்த பிம்பங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத , தன்னைச் சுற்றியும் ஒரு பிம்பத்தை கட்டமைக்க விரும்பாத அபிலாஷின் குணச்சித்திரம் எப்போதும் எனக்கு ஆச்சர்யமளிக்கும் ஒன்று.
எல்லா உணர்வு மோதல்களையும் அதன் அடியாழம் வரை உணர்ந்தும் அதில் சிக்கிக் கொள்ளாமல் மெல்லிய குரலில் அதுகுறித்து பிறரோடு உரையாடுவதே அபிலாஷின் எழுத்தாக இருக்கிறது. அந்தவகையில் என் எழுத்துக்கு நேர் எதிர் என்றாலும் அபிலாஷ் என்னை அதிகமாகக் கவர்ந்திருக்கிறார் .
ரஜினியின் திரைப்பட பிம்பம் குறித்த அவருடைய அவதானங்கள் , கிரிக்கெட்டை முன் வைத்து மனித ஆளுமைகளை அலசுவது, ஸ்டாலின் குறித்த அவருடைய மதிப்பீடு, இந்துத்துவத்தின் தன்மை குறித்த புதுமையான விமர்சனங்கள், ஆண்களுக்கு இடையிலான மெல்லிய ஈர்ப்பை ( ஹோமோ செக்ஸ் அல்ல ) 2000 க்குப் பிந்தைய திரைப்படங்களை முன்வைத்து கவனப்படுத்தியது என்று பல்வேறு தனித்துவமான சிந்தனைகளை அபிலாஷ் இணையவெளியிலும் , உயிர்மை வழியாகவும் முன் வைத்திருக்கிறார் . அவருடைய 'கால்கள் ' நாவல் மிக முக்கியமான ஒன்று. ( அது குறித்து தனியாக ஒரு பதிவு எழுதுவேன் )
ஜெயமோகனை ஒரு கண்டிப்பான ஆசிரியராக மதிப்பிடும் அபிலாஷ் அவரிடம் கற்றுக் கொண்ட பிறகு ஒரு நல்ல எழுத்தாளன் விலகி விட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார் . ஒருதரப்பினரால் மிகை மதிப்பீடுகளால் போற்றப்பட்டும், ,மறுதரப்பினரால் கடுமையான வசைகள் கொண்டு தூற்றப்பட்டும் தமிழ் இலக்கிய உலகின் புரியாத புதிராக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயமோகனை எப்படி அணுகுவது என்பதை அபிலாஷ் பல இடங்களில் தெளிவாகச் சுட்டியிருக்கிறார். அந்த அணுகுமுறையே எனக்கும் பிடித்தமானது .
புதிதாக எழுதுகிற அல்லது தன்னோடு எழுதிக் கொண்டிருக்கிற பிறரின் படைப்புகளை பாராட்டுவதிலும் , கவனப்படுத்துவதிலும் எப்போதும் முந்தி நிற்பவர் அபிலாஷ். குறைவான ஈகோ கொண்ட இளம் தமிழ் எழுத்தாளர் அவர் மட்டும்தான் . இந்த ஆளுமையை அவர் வலிந்து உருவாக்கிக் கொள்ளவில்லை. அவரது இயல்பே அப்படித்தான். அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் இதே தன்மையோடு வாழ்ந்து பல தடவை டெபாசிட்டை இழந்திருப்பார் .
மனுஷ்யபுத்திரன் அழகான பல கவிதைகளை எழுதியிருக்கிறார் . அவர் கண்டறிந்த அழகான கவிதை அபிலாஷ். அவருடைய வாழ்விலும் கவிதைத் தருணங்கள் நீடித்திருக்க வேண்டும் என்று ஒரு நண்பனாக வேண்டிக் கொள்கிறேன். ஒரே ஒரு தடவை போனில் பேசியிருக்கிறேன். சில தடவை சாட்டிங் செய்திருக்கிறேன். வெறும் முகநூல் தொடர்பே அவரை என் மனதுக்கு நெருக்கமாக உணர வைத்திருக்கிறது . இத்தனைக்கும் அவரும், நானும் வெவ்வேறு தன்மை கொண்டவர்கள் .
அபிலாஷ்க்கு சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்திருந்தாலும் அவரது உயரத்திற்கான போதிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் அது அபிலாஷை வந்தடையும். அப்படி வரவில்லை என்றாலும் அது குறித்த சிறு முணுமுணுப்பைக் கூட அவர் வெளிப்படுத்த மாட்டார். அதனால்தான் அவர் அபிலாஷ் .
லவ் யூ நண்பரே!
இப்போதிருப்பது போலவே மொத்த வாழ்வையும் கடந்து விடுங்கள்.
Abilash Chandranபிறந்த நாள் வாழ்த்துகள்.
Mohammed Rafeek R
கருத்துகள்