முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோமதி மாரிமுத்து சர்ச்சை: இரண்டு தேசியவாதங்களின் மோதல் (1)

Image result for gomathi marimuthu gold medalImage result for தெற்கு தேய்கிறது + அண்ணாதுரை
ஆசிய தடகளப் போட்டியில் முதல் தங்கத்தை இந்தியாவுக்காக வென்று கொடுத்த கோமதி மாரிமுத்துவிடம் New 18 அலைவரிசையில் இருந்து பேட்டி கண்டார்கள். பேட்டியாளர் வாழ்த்தி விட்டு ஒரே கேள்வியை பல வடிவங்களில் மீள மீள கேட்டார். அதன் சாராம்சம்: “சாதனை படைத்துள்ள தங்களை இந்திய தேசம் புறக்கணிப்பதாய், மரியாதை செய்ய தவறியதாய் நினைக்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளதே அதன் காரணமா?” கோமதி வக்கணையாக பேசுபவர் அல்ல; ஆக அவர் தனக்குத் தோன்றியதை எளிமையாக உண்மையாக சொல்கிறார். “இன்னும் கூடுதலாய் ஆதரவும் உள்கட்டமைப்பு வசதிகளும் என்னைப் போன்ற பின் தங்கிய ஊர்களில் இருந்து வருகிறவர்களுக்கு அளித்தால், அமைத்துத் தந்தால் நன்றாக இருக்கும்”. 

ஆனால் பேட்டியாளருக்கு தான் எதிர்பார்த்த பதில் வரவில்லையே என கவலை. கேட்டதையே மீசை தாடி விக்கெல்லாம் வைத்து புதுப்புது விதங்களில் கேட்கிறார். கோமதி கண்டுகொள்ளாமல் சுருக்கமாய் தனக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லை என்கிறார். ஆனாலும் கேட்ட பாவத்துக்கு தான் பிய்ந்த பழைய செருப்புடன் ஓடியதாயும் அதை தனது சகவீராங்கனைகள் அனைவரும் அறிவர் என்றும் சொல்கிறார். ஆனால் பாருங்கள் ஊடகங்கள் இதை உடனே பற்றிக் கொள்கின்றன. கோமதியின் தொய்வுற்ற வறிய தோற்றமும் “தெற்கு தேய்கிறது, வடக்கு வளர்கிறது” எனும் கதையாடலுக்கு பொருந்திப் போகிறது. நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் என பல எரியும் பிரச்சனைகளில் மத்திய அரசு காட்டிய சர்வாதிகார மனப்பான்மை ஏற்கனவே மக்களை கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், கோமதி தங்கம் வென்றதுமே அவரை பதாகையாக ஏந்தி மீண்டும் “தெற்கு தேய்கிறது” என கோஷமிட தொடங்குகிறோம். ஆனால் இதன் பின்னால் மற்றொரு அரசியலும் உள்ளது. அதை இறுதியில் சொல்கிறேன்.
கோமதியிடம் படோபமோ இந்த உடனடி வெளிச்சத்தை பயன்படுத்தி பரபரப்புக்கு உள்ளாகும் (சமூகவலைதள மேதைகள் பலரிடம் காணப்படும்) அவசரமோ இல்லை. மேலும் நினைப்பதை எல்லாம் துல்லியமாய் சொல்லும் பேச்சுத்திறனும் அவருக்கு இல்லை எனத் தோன்றுகிறது - அதாவது மீடியாவில் வளைத்து வளைத்து கம்பு சுற்ற அவருக்குத் தெரியாது. அவர் கம்பை லைட்டாக திருப்பினாலே யார் கண்ணிலாவது பட்டு விடுகிறது. ”பிய்ந்த செருப்பு கதையும்” இப்படி பலரையும் காயப்படுத்தி கொந்தளிக்க செய்தது.
சில நாட்கள் சமூகவலைதள நண்பர்கள் பலர் இதைச் சொல்லியே குமுறினர். ஆனால் இப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள கோமதி தான் செருப்பு வாங்க பணமில்லாமல் பிய்ந்த பழைய செருப்புடன் ஓடவில்லை, அச்செருப்பு தனக்கு அதிர்ஷ்டம் தருவது என நம்பியதாலே அவ்வாறு செய்ததாய் கூறுகிறார்.
இங்கு ரு விசயத்தை கவனிக்க வேண்டும் நாம். பேஸ்புக்கில் சிலர் எழுதியது போல கோமதி ஊட்டச்சத்து மிக்க உணவின்றி வெறும் வயிற்றில் ஓடி ஜெயிக்கவெல்லாம் இல்லை. அந்தளவுக்கு கடும் வறுமையில் அவர் இப்போது இருப்பதாய் தெரியவில்லை. யாராவது கறுப்பாய் ஒல்லியாய் கன்னம் ஒட்டித் தென்பட்டால் அவர் வறுமையில் உணவின்றி அல்லாடுகிறார் என நாம் கற்பனை பண்ண வேண்டியதில்லை. ஒரு ஓட்ட வீராங்கனைக்கான சரியான உடலமைப்புடன் அவர் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. மேலும் அவர் அந்த பேட்டியில் ஆசிய போட்டிகளில் பங்கேற்க சொந்த செலவில் விமானத்தில் பயணித்து வந்ததாய் சொல்லுகிறார். விமானக் கட்டணம் செலுத்த முடிந்தவருக்கு சத்தான உணவு வாங்கி சாப்பிட வசதி இருக்காதா? மேலும் அவர் ஊர்க்காட்டில் தற்போது வாழவில்லை. பெங்களூரில் வாழ்கிறார். மத்திய அரசு வேலையில் (வருமான வரித்துறை) இருக்கிறார். விளையாட்டு ஒதுக்கீட்டில் அவ்வேலையை பெற்றார் என்பதால் அவர் 9-4 மற்றவர்களைப் போல வேலை செய்ய வேண்டி இருக்காது. வாரம் ஒருநாள் போனால் போதும். ஆனால் நம்மில் பலரோ அவர் ஏதோ இன்னமும் வயக்காட்டில் வேலை செய்யும் அபலை என கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறோம்.
ஆம், கிரிக்கெட் அளவுக்கு பிற விளையாட்டுகளுக்கு போதுமான ஆதரவு தரப்படுவதில்லை தான். ஆனால் மற்ற கலைஞர்கள், படைப்பாளிகளுடன் ஒப்பிடுகையில் விளையாட்டு வீரர்கள் நன்றாகவே கவனித்துக் கொள்ளவே படுகிறார்கள். விளையாட்டுத் துறையில் நீங்கள் இருந்தால் பள்ளியில் குறைவாய் மதிப்பெண் பெற்றிருந்தாலே கூட கல்லூரியில் இடம் கிடைத்து விடும், கல்லூரியில் தினமும் வகுப்புக்கு போக வேண்டியதில்லை, அது முடித்து ஓரளவு சாதனை படைத்தாலே அரசு வேலை கிடைத்து விடும், அதிலும் நீங்கள் தொடர்ந்து ஆடி வந்தால் தினமும் அலுவலகம் போகும் அவசியம் இராது. இந்த சலுகைகளுக்காவே விளையாட்டுத் துறையில் ஈடுபடும் நண்பர்களை நான் மாணாக்க பருவத்தில் இருந்து இன்று ஆசிரியனாய் என் பணிக்காலம் வரை கண்டு வருகிறேன். கோமதி அப்படியானவர் அல்ல என்றாலும் விளையாட்டு வீரர்கள் பிச்சைக்காரர்களாய் நடத்தப்படுகிறார்கள் என்பது ஒரு மிகையான கூற்றே.
மிகவும் பின் தங்கிய ஊர்களில் விளையாட்டு வசதிகள் இல்லை தான். ஒரு வீரராய் நீங்கள் சாதிக்கும் வரையில் அரசு உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாது தான். ஆனால் ஒரு பாடகனுக்கோ எழுத்தாளனுக்கோ ஒரு ஓவியனுக்கோ சிற்பிக்கோ இந்தளவுக்கேனும் கட்டமைப்பு வசதிகளோ ஊக்கத்தொகைகளோ அரசு தருவதுண்டா? விளையாட்டுக்கு தேவைப்படும் அதே அளவுக்கு தயாரிப்பும் உழைப்பும் தியாகமும் போராட்டமும் அனைத்து கலைத்துறைகளில் ஈடுபடுகிறவர்களுக்கும் தேவை தான். நான் எழுத மட்டுமே செய்வேன், வேலை செய்ய மாட்டேன் என்று ஒரு எழுத்தாளன் கோரினால் அவன் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான். ஆனால் ஒரு விளையாட்டு வீரருக்கு அந்நிலைமை ஏற்படாது. ஏன் என சொல்கிறேன்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அனுமானத்தில் கோமதியின் வசதிபற்றி நஎழுதுவதை விட விசாரித்து ஆதாரத்துடன் எழுதுங்கள் உங்க மீது எங்களுக்கு நம்பிக்கை வரும்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...