முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோமதி மாரிமுத்து சர்ச்சை: இரண்டு தேசியவாதங்களின் மோதல் (1)

Image result for gomathi marimuthu gold medalImage result for தெற்கு தேய்கிறது + அண்ணாதுரை
ஆசிய தடகளப் போட்டியில் முதல் தங்கத்தை இந்தியாவுக்காக வென்று கொடுத்த கோமதி மாரிமுத்துவிடம் New 18 அலைவரிசையில் இருந்து பேட்டி கண்டார்கள். பேட்டியாளர் வாழ்த்தி விட்டு ஒரே கேள்வியை பல வடிவங்களில் மீள மீள கேட்டார். அதன் சாராம்சம்: “சாதனை படைத்துள்ள தங்களை இந்திய தேசம் புறக்கணிப்பதாய், மரியாதை செய்ய தவறியதாய் நினைக்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளதே அதன் காரணமா?” கோமதி வக்கணையாக பேசுபவர் அல்ல; ஆக அவர் தனக்குத் தோன்றியதை எளிமையாக உண்மையாக சொல்கிறார். “இன்னும் கூடுதலாய் ஆதரவும் உள்கட்டமைப்பு வசதிகளும் என்னைப் போன்ற பின் தங்கிய ஊர்களில் இருந்து வருகிறவர்களுக்கு அளித்தால், அமைத்துத் தந்தால் நன்றாக இருக்கும்”. 

ஆனால் பேட்டியாளருக்கு தான் எதிர்பார்த்த பதில் வரவில்லையே என கவலை. கேட்டதையே மீசை தாடி விக்கெல்லாம் வைத்து புதுப்புது விதங்களில் கேட்கிறார். கோமதி கண்டுகொள்ளாமல் சுருக்கமாய் தனக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லை என்கிறார். ஆனாலும் கேட்ட பாவத்துக்கு தான் பிய்ந்த பழைய செருப்புடன் ஓடியதாயும் அதை தனது சகவீராங்கனைகள் அனைவரும் அறிவர் என்றும் சொல்கிறார். ஆனால் பாருங்கள் ஊடகங்கள் இதை உடனே பற்றிக் கொள்கின்றன. கோமதியின் தொய்வுற்ற வறிய தோற்றமும் “தெற்கு தேய்கிறது, வடக்கு வளர்கிறது” எனும் கதையாடலுக்கு பொருந்திப் போகிறது. நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் என பல எரியும் பிரச்சனைகளில் மத்திய அரசு காட்டிய சர்வாதிகார மனப்பான்மை ஏற்கனவே மக்களை கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், கோமதி தங்கம் வென்றதுமே அவரை பதாகையாக ஏந்தி மீண்டும் “தெற்கு தேய்கிறது” என கோஷமிட தொடங்குகிறோம். ஆனால் இதன் பின்னால் மற்றொரு அரசியலும் உள்ளது. அதை இறுதியில் சொல்கிறேன்.
கோமதியிடம் படோபமோ இந்த உடனடி வெளிச்சத்தை பயன்படுத்தி பரபரப்புக்கு உள்ளாகும் (சமூகவலைதள மேதைகள் பலரிடம் காணப்படும்) அவசரமோ இல்லை. மேலும் நினைப்பதை எல்லாம் துல்லியமாய் சொல்லும் பேச்சுத்திறனும் அவருக்கு இல்லை எனத் தோன்றுகிறது - அதாவது மீடியாவில் வளைத்து வளைத்து கம்பு சுற்ற அவருக்குத் தெரியாது. அவர் கம்பை லைட்டாக திருப்பினாலே யார் கண்ணிலாவது பட்டு விடுகிறது. ”பிய்ந்த செருப்பு கதையும்” இப்படி பலரையும் காயப்படுத்தி கொந்தளிக்க செய்தது.
சில நாட்கள் சமூகவலைதள நண்பர்கள் பலர் இதைச் சொல்லியே குமுறினர். ஆனால் இப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள கோமதி தான் செருப்பு வாங்க பணமில்லாமல் பிய்ந்த பழைய செருப்புடன் ஓடவில்லை, அச்செருப்பு தனக்கு அதிர்ஷ்டம் தருவது என நம்பியதாலே அவ்வாறு செய்ததாய் கூறுகிறார்.
இங்கு ரு விசயத்தை கவனிக்க வேண்டும் நாம். பேஸ்புக்கில் சிலர் எழுதியது போல கோமதி ஊட்டச்சத்து மிக்க உணவின்றி வெறும் வயிற்றில் ஓடி ஜெயிக்கவெல்லாம் இல்லை. அந்தளவுக்கு கடும் வறுமையில் அவர் இப்போது இருப்பதாய் தெரியவில்லை. யாராவது கறுப்பாய் ஒல்லியாய் கன்னம் ஒட்டித் தென்பட்டால் அவர் வறுமையில் உணவின்றி அல்லாடுகிறார் என நாம் கற்பனை பண்ண வேண்டியதில்லை. ஒரு ஓட்ட வீராங்கனைக்கான சரியான உடலமைப்புடன் அவர் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. மேலும் அவர் அந்த பேட்டியில் ஆசிய போட்டிகளில் பங்கேற்க சொந்த செலவில் விமானத்தில் பயணித்து வந்ததாய் சொல்லுகிறார். விமானக் கட்டணம் செலுத்த முடிந்தவருக்கு சத்தான உணவு வாங்கி சாப்பிட வசதி இருக்காதா? மேலும் அவர் ஊர்க்காட்டில் தற்போது வாழவில்லை. பெங்களூரில் வாழ்கிறார். மத்திய அரசு வேலையில் (வருமான வரித்துறை) இருக்கிறார். விளையாட்டு ஒதுக்கீட்டில் அவ்வேலையை பெற்றார் என்பதால் அவர் 9-4 மற்றவர்களைப் போல வேலை செய்ய வேண்டி இருக்காது. வாரம் ஒருநாள் போனால் போதும். ஆனால் நம்மில் பலரோ அவர் ஏதோ இன்னமும் வயக்காட்டில் வேலை செய்யும் அபலை என கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறோம்.
ஆம், கிரிக்கெட் அளவுக்கு பிற விளையாட்டுகளுக்கு போதுமான ஆதரவு தரப்படுவதில்லை தான். ஆனால் மற்ற கலைஞர்கள், படைப்பாளிகளுடன் ஒப்பிடுகையில் விளையாட்டு வீரர்கள் நன்றாகவே கவனித்துக் கொள்ளவே படுகிறார்கள். விளையாட்டுத் துறையில் நீங்கள் இருந்தால் பள்ளியில் குறைவாய் மதிப்பெண் பெற்றிருந்தாலே கூட கல்லூரியில் இடம் கிடைத்து விடும், கல்லூரியில் தினமும் வகுப்புக்கு போக வேண்டியதில்லை, அது முடித்து ஓரளவு சாதனை படைத்தாலே அரசு வேலை கிடைத்து விடும், அதிலும் நீங்கள் தொடர்ந்து ஆடி வந்தால் தினமும் அலுவலகம் போகும் அவசியம் இராது. இந்த சலுகைகளுக்காவே விளையாட்டுத் துறையில் ஈடுபடும் நண்பர்களை நான் மாணாக்க பருவத்தில் இருந்து இன்று ஆசிரியனாய் என் பணிக்காலம் வரை கண்டு வருகிறேன். கோமதி அப்படியானவர் அல்ல என்றாலும் விளையாட்டு வீரர்கள் பிச்சைக்காரர்களாய் நடத்தப்படுகிறார்கள் என்பது ஒரு மிகையான கூற்றே.
மிகவும் பின் தங்கிய ஊர்களில் விளையாட்டு வசதிகள் இல்லை தான். ஒரு வீரராய் நீங்கள் சாதிக்கும் வரையில் அரசு உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாது தான். ஆனால் ஒரு பாடகனுக்கோ எழுத்தாளனுக்கோ ஒரு ஓவியனுக்கோ சிற்பிக்கோ இந்தளவுக்கேனும் கட்டமைப்பு வசதிகளோ ஊக்கத்தொகைகளோ அரசு தருவதுண்டா? விளையாட்டுக்கு தேவைப்படும் அதே அளவுக்கு தயாரிப்பும் உழைப்பும் தியாகமும் போராட்டமும் அனைத்து கலைத்துறைகளில் ஈடுபடுகிறவர்களுக்கும் தேவை தான். நான் எழுத மட்டுமே செய்வேன், வேலை செய்ய மாட்டேன் என்று ஒரு எழுத்தாளன் கோரினால் அவன் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான். ஆனால் ஒரு விளையாட்டு வீரருக்கு அந்நிலைமை ஏற்படாது. ஏன் என சொல்கிறேன்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அனுமானத்தில் கோமதியின் வசதிபற்றி நஎழுதுவதை விட விசாரித்து ஆதாரத்துடன் எழுதுங்கள் உங்க மீது எங்களுக்கு நம்பிக்கை வரும்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.