முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும் (2)


Image result for hardik pandya koffee with karan

2) 


   ஜோஹ்ரி மீது விசாரணை நடத்திய கமிஷன் அவரை குற்றமற்றவர் என அறிவித்தது. டயானா இவ்விசயத்தில் முறியடிக்கப்பட்டார். அவர் இதை தனிப்பட்ட முறையில் தன் தோல்வியாக எடுத்துக் கொண்டு காயப்படுகிறார். ஆகையால், மூவர் நிர்வாகக் குழுவின் தலைவர் வினோத் ராய் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட இரு வீரர்களையும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் குழு ஒன்று விசாரிக்கும் என்றார். ஆனால் இதை டயானா ஏற்கவில்லை. ஏனென்றால் விசாரிக்கும் குழுவில் ஜோஹ்ரி இருக்கிறார். ஜோஹ்ரி ஏற்கனவே பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் அவர் அக்குழுவில் இடம்பெறக் கூடாது என்கிறார் டயானா. ஆனால் அக்குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்பதை டயானா ஏற்க மறுக்கிறார். இது பிடிவாதம் அல்ல, ஒருவித மோசமான ஒழுக்கவெறி மனநிலை. காயம்பட்ட அகங்காரத்தின் சீற்றம். ஜோஹ்ரி இடம்பெற மாட்டார் என்றால் நானும் இதில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி உள்ளார் வினோத். மேலும், டயானா இந்த வழக்கை வேண்டுமென்றே நீட்டிப்பதாகவும், அவர் இரு வீரர்களுக்கும் உடனியாய் தண்டனை அளித்து அவர்களை மன்னித்து மீண்டும் அணியில் இணைப்பதை விரும்பாததாகவும் வினோத் குற்றம் சாட்டுகிறார். மத்திய அமைச்சரான பாபுல் சுப்ரியோ இதைப் பற்றி பேசுகையில் டயானாவின் நோக்கம் இரு வீரர்களையும் நிரந்தரமாய் தடை செய்வதே அன்றி நியாயமாய் தண்டிப்பது அல்ல என்று கூறியிருக்கிறார். டயானாவும் இதை மறுக்கவில்லை. ஜோஹ்ரியை தண்டிக்க முடியாத வெறுப்பில் இருக்கும் டயானா பதிலுக்கு ஹர்த்திக்கையும் ராகுலையும் பலியிடத் துடித்தார் என்பது வெளிப்படை. பெண்களுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறேன் என வெளிப்படையாய் சொன்னதற்காக இரு வீரர்களை கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாய் தடை செய்வது என்னவிதமான நீதி சொல்லுங்கள்?

முன்னாள் வீரரும் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தனது வீடியோ பதிவொன்றில் இதை சொல்கிறார்: ”ஆம் ஹர்த்திக் செய்தது தவறே. ஆனால் அது ஒரு கிரிக்கெட் குற்றமல்ல. கிரிக்கெட் களத்தில் ஒரு வீரர் செய்யும் தவறுக்கு மட்டுமே ஒரு வாரியம் அவரை தண்டிக்க வேண்டும்; தனிப்பட்ட வாழ்வில் அவர் செய்யும் ஒழுக்க குற்றங்களுக்கு அவரைத் தண்டிக்க வேண்டியது அவர் சம்மந்தப்பட்ட உறவினர்களோ நண்பர்களோ தாம்.”
 தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவியுடன் முரளி விஜய்க்கு தகாத உறவு இருந்தது. இதன் விளைவாக கார்த்திக்கும் அவரது மனைவியும் பிரிந்தார்கள். இது பெரிய அளவில் மீடியா கவனம் பெற்று சர்ச்சை ஆகவில்லை. ஒருவேளை இது சர்ச்சையாகி, விஜய்யும் கார்த்திக்கும் வெளிப்படையாக மோதும் நிலை ஏற்பட்டிருந்தால், கலாச்சார காவலர்களும் பெண்ணியவாதிகளும் கோதாவில் குதித்து ஆளுக்கு ஒரு பக்கம் எடுத்து கார்த்திக்கை ஆதரிக்கும் கார்த்திக்கின் மனைவியை எதிர்த்தும் மறுத்தும் விமர்சித்தும் பேசியிருந்தால் அங்கு இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பண்ணி இருக்க வேண்டும்? நியாயமாக, இதில் வாரியம் தலையிடவே கூடாது. ஆனால், ஒருவேளை ஒரு டிவி நிகழ்ச்சியில் இருவரில் ஒருவர் இப்பிரச்சனையை பேசி அது சர்ச்சை ஆகியிருந்தால் நிச்சயமாய் வாரியம் தலையிட்டு இருவரையும் தண்டித்திருக்கும்! ஏன் இதை சொல்கிறேன் என்றால், ஹர்த்திக்கும் ராகுலும் செய்தது தவறா அல்லது அதை ஒரு பொது நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியது தவறா எனபதில் பலருக்கும் - இதை விசாரிப்பவர்கள், விமர்சிப்பவர்கள் உள்ளிட்டு - குழப்பம் உள்ளது. அவர்கள் தண்டிக்கப்படுவது அவர்களின் நடத்தைக்காகவா, கருத்துக்காகவா அல்லது கருத்தை ஊடகத்தில் சொன்னமைக்காகவா? ஜோஹ்ரிக்கு எதிராக ஏன் விசாரணை நடத்தினார்கள்? அவர் செய்த நிர்வாகத் தவறுக்காகவா? அவர் பணம் களவாடினார் என்பதற்காகவா? இல்லையே! அவரது முந்தைய நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு குற்றத்துக்கும் (அது உண்மையெனும் பட்சத்தில்) கிரிக்கெட்டும் என்ன சம்மந்தம்? இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது நீதிமன்றமா? இல்லை தானே? நாளை ஜோஹ்ரி ஒரு வரதட்சணை வழக்கில் மாட்டிக் கொண்டு அது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அதை வாரியம் விசாரிக்குமா?
ஹர்த்திக் மற்றும் ராகுலின் குற்றம் தான் என்ன? அத்தோடு முன்பு நடந்த விசாரணையில் ஜோஹ்ரியின் குற்றம் தான் என்ன? தன் நிர்வாக வளையத்துக்குள் வராத ஒரு பிரச்சனையில் வாரியம் ஏன் தலையிடுகிறது?
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு ஹர்த்திக் மற்றும் ராகுலுக்கு ஒரு காரணம் கேட்கும் குறிப்பாணை (ஷோ காஸ் நோட்டீஸ்) அனுப்பியது. அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் எனப் பார்த்தால் ஒரு தெளிவு கிடைக்கும். “நீங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அரசியலமைப்பு 41 (6) படி ஒழுக்கக்கேடு மற்றும் தவறான நடத்தை ஆகிய குற்றங்களை இழைத்திருக்கிறீர்கள். இது குறித்த உங்கள் விளக்கத்தை வாரியம் கோருகிறது. இதன் அடிப்படையில் உங்கள் மீது விசாரணை நடத்தப்படும். அதுவரை நீங்கள் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.” டெலிகிராப் பத்திரிகை கிரிக்கெட் வாரியத்தின் இந்த குறிப்பாணையைப் பற்றி பேசும் போது வாரிய அரசியலமைப்பில்தவறான நடத்தைசரியாக விளக்கப்படவில்லை என்கிறது. ஆனால் கிரிக்கெட் வீரர்கள் வாரியத்துடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையில் நடத்தை விதிகளை குறிப்பிடும் போதுதவறான நடத்தையைஇவ்வாறு விளக்குகிறார்கள்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிம்பத்தை களங்கப்படுத்தும் விதம் ஒரு வீரர் எத்தகையை நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அது தவறான நடத்தை ஆகும். இதன் படி நீங்கள் ஒரு வீரராக அணித்தேர்வை விமர்சித்தாலோ வாரியத்தின் நடவடிக்கை பற்றி ஊடகத்தில் விவாதித்தாலும் கூட அது தவறான நடத்தையே.

ஆக ஹர்த்திக் மற்றும் ராகுலின் குற்றம் என்பது வாரியத்தின் பிம்பத்தை களங்கப்படுத்தியே அன்றி பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியதோநினைத்ததோஅல்ல. சமீபத்தில் மனோஜ் திவாரி தேர்வாளர்களை விமர்சித்தார். சில வருடங்களுக்கு முன்பு கவுதம் கம்பீர் தோனியின் தலைமையை விமர்சித்தார். தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள ஹர்மன் ப்ரீத் கவுர் போலியான கல்விச் சான்றிதழை வாரியத்துக்கு சமர்ப்பித்தார். இது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. இவை வாரியத்தின் பிம்பத்தை களங்கப்படுத்திய செயல்பகளே. ஆனால் மூவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காரணம் கேட்கும் குறிப்பாணையும் அனுப்பப்படவில்லை.
இதே போன்ற ஒரு பெரிய சர்ச்சை வேகவீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக வெடித்தது. அவரது மனைவி ஜஹான் ஊடகங்கள் முன் தோன்றி கணவரின் பாலியல் நடத்தை குறித்து குற்றம் சாட்டினார். ஷமி பல பெண்களுடன் காதல் அரட்டைகளில் ஈடுபட்டுள்ளதாய் கூறினார். இதை அடுத்து அவர் ஷமி, அவரது பெற்றோர், சகோதரர் ஆகியோர் தன்னை தாக்கியதாய், தன்னை கொலை மிரட்டல் செய்வதாய் எதிராய் வழக்குகள் பல தொடுத்தார். ஆனால் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே ஜஹான் மற்றொரு குற்றச்சாட்டை வைத்தார். ஒரு பாகிஸ்தானிய பெண்ணுடன் ஷமிக்கு உறவு உண்டென்றும் அப்பெண் வழியாக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சூதாட்ட முகவர் ஷமிக்கு நிறைய பணம் அளித்ததாகவும் அதைக் கொண்டு ஷமி பல ஆட்டங்களை fix செய்ததாய் சொன்னார் ஜஹான். இப்போது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து ஷமியை தற்காலிக நீக்கம் செய்தது. அவரது ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. ஷஹான் எதிர்பார்த்தது இப்போது நடந்தது. இதை அடுத்து வாரியம் நியமித்த ஒரு குழு ஷமியை விசாரித்து அவர் குற்றமற்றவர் என நிரூபித்தது. இங்கு இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும். ஒன்று, ஹர்த்திக், ராகுல், ஜோஹ்ரி வழக்குகளில் போல பாலியல் காரணத்துக்காக ஷமிக்கு எதிராய் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏனென்றால் வாரியத்துக்கு வீரர்களின் பாலியல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதில் அக்கறை இல்லை. ஆனால் ஹர்த்திக் உள்ளிட்டோர் விசயத்தில் எந்தகுற்றமும்நடக்கவில்லை என்றாலும், ஊடகங்கள் வழியாக கடும் நெருக்கடிக்கு வாரியம் தள்ளப்பட்டது. ஹர்த்திக் உள்ளிட்டோரை தண்டித்தது வாரியம் அல்ல, (மறைமுகமாய்) நமது பாலியல் ஒழுக்க போராளிகள் தாம் என்பதை இது காட்டுகிறது. இதே கலாச்சார காவலர்கள் ஷமி விசயத்தில் ஏன் களமிறங்கவில்லை என்பது சுவாரஸ்யமான கேள்வி. ஷமி ஒரு இஸ்லாமியர் என்பதால் அவர்இந்தியபாரம்பரியத்தை பிரதிநுத்துவப்படுத்தவில்லை, ஆகையால் அவரை கண்டிக்க வேண்டியதில்லை என நினைத்தார்களா? அவரை ஒருவெளியாளாக”, மற்றமையாக பார்த்தார்களா? ஒருவேளை ஷமிக்கு நடந்தது தோனிக்கு நடந்திருந்தால் நம் கலாச்சார காவலர்கள்பொங்கிஎழுந்திருப்பார்களா? சுலபத்தில் நாம் விடை காண முடியாத ஒரு குழப்பமான சிக்கலான கேள்வி இது.
இரண்டாவதாக, இதே சூதாட்ட குற்றச்சாட்டை ஷமியின் மனைவி முன்வைக்காமல் வேறு ஒருவர் வைத்திருந்தால் வாரியத்தின் எதிர்வினை வேறாக இருந்திருக்கும் என்பது. ஒரு உதாரணத்துக்கு அல் ஹஸீரா சேனல் முன்வைத்த சூதாட்ட குற்றச்சாட்டை பார்ப்போம். முனாவர் எனும் சூதாட்ட முகவரும் அவரது உதவியாளர்களும் 2012இல் நடந்த T20 உலகக்கோப்பை ஆட்டங்களின் போது இந்தியாவின் தற்போதைய அணித்தலைவர் கோலி மற்றும் துணைத் தலைவர் ரோஹித் ஷர்மா பக்கத்தில் நிற்கும் புகைப்படங்கள் தம் வசம் உள்ளதாய் ஒரு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை அல் ஜசீரா சமீபத்தில் வைத்தது. அக்குற்றச்சாட்டைப் பார்க்கையில் தம்மிடம் ஆதாரம் உள்ளதாய் அல் ஜசீரா கூறுவதாயே புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதை கண்டுகொள்ளவே இல்லை மட்டுமல்ல ஆதாரங்களையும் கோரவில்லை. ஊடகங்களூம் பொருட்படுத்தவில்லை. ஆனால் இதையே கோலியின் முன்னாள் தோழியோ காதலியோ அல்லது கோலியுடன் நெருக்கம் உள்ளதாய் கோரும் ஏதாவது ஒரு பெண்ணோ முன்வைத்திருந்தால் நிலைமையே வேறு. மிகப்பெரும் சர்ச்சையாக மாறி இருக்கும். கோலியை நீக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்திருக்கும்.

இவை ஒன்றைக் காட்டுகிறது: எந்த குற்றச்சாட்டிலும் ஒரு பெண் நுழையும் போது தான் நமது சமூக வலைதள போராளிகள், கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுவினர் கச்சை கட்டி களமிறங்குவார்கள்; தடை, அணியில் இருந்து நீக்கம் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு வீரர் வாரியத்தை விமர்சித்தாலோ வாரியத்தின் அரசியலமைப்பு 41 (6)ஐ மீறினால் கூட வாரியம் பொருட்படுத்தாது என்பதை இதுவரையிலான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. ”ஒழுக்கக்கேடு”, ”தவறான நடத்தைஆகிய சொற்களின் பொருளும் இவ்வ்வாறே புரிந்து கொள்ளப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...