2)
ஜோஹ்ரி
மீது விசாரணை நடத்திய கமிஷன் அவரை குற்றமற்றவர் என அறிவித்தது. டயானா இவ்விசயத்தில் முறியடிக்கப்பட்டார்.
அவர் இதை தனிப்பட்ட முறையில் தன் தோல்வியாக எடுத்துக் கொண்டு காயப்படுகிறார்.
ஆகையால், மூவர் நிர்வாகக் குழுவின் தலைவர் வினோத்
ராய் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட இரு வீரர்களையும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின்
குழு ஒன்று விசாரிக்கும் என்றார். ஆனால் இதை டயானா ஏற்கவில்லை.
ஏனென்றால் விசாரிக்கும் குழுவில் ஜோஹ்ரி இருக்கிறார். ஜோஹ்ரி ஏற்கனவே பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் அவர் அக்குழுவில்
இடம்பெறக் கூடாது என்கிறார் டயானா. ஆனால் அக்குற்றச்சாட்டில்
இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்பதை டயானா ஏற்க மறுக்கிறார். இது பிடிவாதம் அல்ல, ஒருவித மோசமான ஒழுக்கவெறி மனநிலை.
காயம்பட்ட அகங்காரத்தின் சீற்றம். ஜோஹ்ரி இடம்பெற
மாட்டார் என்றால் நானும் இதில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி உள்ளார் வினோத்.
மேலும், டயானா இந்த வழக்கை வேண்டுமென்றே நீட்டிப்பதாகவும்,
அவர் இரு வீரர்களுக்கும் உடனியாய் தண்டனை அளித்து அவர்களை மன்னித்து
மீண்டும் அணியில் இணைப்பதை விரும்பாததாகவும் வினோத் குற்றம் சாட்டுகிறார். மத்திய அமைச்சரான பாபுல் சுப்ரியோ இதைப் பற்றி பேசுகையில் டயானாவின் நோக்கம்
இரு வீரர்களையும் நிரந்தரமாய் தடை செய்வதே அன்றி நியாயமாய் தண்டிப்பது அல்ல என்று கூறியிருக்கிறார்.
டயானாவும் இதை மறுக்கவில்லை. ஜோஹ்ரியை தண்டிக்க
முடியாத வெறுப்பில் இருக்கும் டயானா பதிலுக்கு ஹர்த்திக்கையும் ராகுலையும் பலியிடத்
துடித்தார் என்பது வெளிப்படை. பெண்களுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறேன்
என வெளிப்படையாய் சொன்னதற்காக இரு வீரர்களை கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாய் தடை
செய்வது என்னவிதமான நீதி சொல்லுங்கள்?
முன்னாள் வீரரும் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தனது வீடியோ
பதிவொன்றில் இதை சொல்கிறார்: ”ஆம் ஹர்த்திக் செய்தது தவறே. ஆனால் அது ஒரு கிரிக்கெட்
குற்றமல்ல. கிரிக்கெட் களத்தில் ஒரு வீரர் செய்யும் தவறுக்கு
மட்டுமே ஒரு வாரியம் அவரை தண்டிக்க வேண்டும்; தனிப்பட்ட வாழ்வில்
அவர் செய்யும் ஒழுக்க குற்றங்களுக்கு அவரைத் தண்டிக்க வேண்டியது அவர் சம்மந்தப்பட்ட
உறவினர்களோ நண்பர்களோ தாம்.”
தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவியுடன் முரளி விஜய்க்கு தகாத உறவு இருந்தது.
இதன் விளைவாக கார்த்திக்கும் அவரது மனைவியும் பிரிந்தார்கள்.
இது பெரிய அளவில் மீடியா கவனம் பெற்று சர்ச்சை ஆகவில்லை. ஒருவேளை இது சர்ச்சையாகி, விஜய்யும் கார்த்திக்கும் வெளிப்படையாக
மோதும் நிலை ஏற்பட்டிருந்தால், கலாச்சார காவலர்களும் பெண்ணியவாதிகளும்
கோதாவில் குதித்து ஆளுக்கு ஒரு பக்கம் எடுத்து கார்த்திக்கை ஆதரிக்கும் கார்த்திக்கின்
மனைவியை எதிர்த்தும் மறுத்தும் விமர்சித்தும் பேசியிருந்தால் அங்கு இந்திய கிரிக்கெட்
வாரியம் என்ன பண்ணி இருக்க வேண்டும்? நியாயமாக, இதில் வாரியம் தலையிடவே கூடாது. ஆனால், ஒருவேளை ஒரு டிவி நிகழ்ச்சியில் இருவரில் ஒருவர் இப்பிரச்சனையை பேசி அது சர்ச்சை
ஆகியிருந்தால் நிச்சயமாய் வாரியம் தலையிட்டு இருவரையும் தண்டித்திருக்கும்!
ஏன் இதை சொல்கிறேன் என்றால், ஹர்த்திக்கும் ராகுலும்
செய்தது தவறா அல்லது அதை ஒரு பொது நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியது தவறா எனபதில் பலருக்கும்
- இதை விசாரிப்பவர்கள், விமர்சிப்பவர்கள் உள்ளிட்டு
- குழப்பம் உள்ளது. அவர்கள் தண்டிக்கப்படுவது அவர்களின்
நடத்தைக்காகவா, கருத்துக்காகவா அல்லது கருத்தை ஊடகத்தில் சொன்னமைக்காகவா?
ஜோஹ்ரிக்கு எதிராக ஏன் விசாரணை நடத்தினார்கள்? அவர் செய்த நிர்வாகத் தவறுக்காகவா? அவர் பணம் களவாடினார்
என்பதற்காகவா? இல்லையே! அவரது முந்தைய நிறுவனத்தில்
ஏற்பட்ட ஒரு குற்றத்துக்கும் (அது உண்மையெனும் பட்சத்தில்)
கிரிக்கெட்டும் என்ன சம்மந்தம்? இந்திய கிரிக்கெட்
வாரியம் என்பது நீதிமன்றமா? இல்லை தானே? நாளை ஜோஹ்ரி ஒரு வரதட்சணை வழக்கில் மாட்டிக் கொண்டு அது சர்ச்சையை ஏற்படுத்தினாலும்
அதை வாரியம் விசாரிக்குமா?
ஹர்த்திக் மற்றும் ராகுலின் குற்றம் தான் என்ன? அத்தோடு முன்பு நடந்த விசாரணையில்
ஜோஹ்ரியின் குற்றம் தான் என்ன? தன் நிர்வாக வளையத்துக்குள் வராத
ஒரு பிரச்சனையில் வாரியம் ஏன் தலையிடுகிறது?
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு ஹர்த்திக்
மற்றும் ராகுலுக்கு ஒரு காரணம் கேட்கும் குறிப்பாணை (ஷோ காஸ் நோட்டீஸ்) அனுப்பியது.
அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் எனப் பார்த்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.
“நீங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அரசியலமைப்பு 41 (6)
படி ஒழுக்கக்கேடு மற்றும் தவறான நடத்தை ஆகிய குற்றங்களை இழைத்திருக்கிறீர்கள்.
இது குறித்த உங்கள் விளக்கத்தை வாரியம் கோருகிறது. இதன் அடிப்படையில் உங்கள் மீது விசாரணை நடத்தப்படும். அதுவரை நீங்கள் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.” டெலிகிராப் பத்திரிகை கிரிக்கெட் வாரியத்தின் இந்த குறிப்பாணையைப் பற்றி பேசும்
போது வாரிய அரசியலமைப்பில் “தவறான நடத்தை” சரியாக விளக்கப்படவில்லை என்கிறது. ஆனால் கிரிக்கெட்
வீரர்கள் வாரியத்துடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையில் நடத்தை விதிகளை குறிப்பிடும்
போது “தவறான நடத்தையை” இவ்வாறு விளக்குகிறார்கள்:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிம்பத்தை களங்கப்படுத்தும் விதம் ஒரு
வீரர் எத்தகையை நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அது தவறான நடத்தை ஆகும். இதன் படி நீங்கள் ஒரு வீரராக அணித்தேர்வை விமர்சித்தாலோ வாரியத்தின் நடவடிக்கை
பற்றி ஊடகத்தில் விவாதித்தாலும் கூட அது தவறான நடத்தையே.
ஆக ஹர்த்திக் மற்றும் ராகுலின் குற்றம் என்பது வாரியத்தின்
பிம்பத்தை களங்கப்படுத்தியே அன்றி பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியதோ “நினைத்ததோ” அல்ல.
சமீபத்தில் மனோஜ் திவாரி தேர்வாளர்களை விமர்சித்தார். சில வருடங்களுக்கு முன்பு கவுதம் கம்பீர் தோனியின் தலைமையை விமர்சித்தார்.
தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள ஹர்மன் ப்ரீத்
கவுர் போலியான கல்விச் சான்றிதழை வாரியத்துக்கு சமர்ப்பித்தார். இது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. இவை வாரியத்தின்
பிம்பத்தை களங்கப்படுத்திய செயல்பகளே. ஆனால் மூவருக்கு எதிராகவும்
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காரணம் கேட்கும் குறிப்பாணையும்
அனுப்பப்படவில்லை.
இதே போன்ற ஒரு பெரிய சர்ச்சை வேகவீச்சாளர் முகமது ஷமிக்கு
எதிராக வெடித்தது. அவரது மனைவி ஜஹான் ஊடகங்கள் முன் தோன்றி கணவரின் பாலியல் நடத்தை குறித்து குற்றம்
சாட்டினார். ஷமி பல பெண்களுடன் காதல் அரட்டைகளில் ஈடுபட்டுள்ளதாய்
கூறினார். இதை அடுத்து அவர் ஷமி, அவரது
பெற்றோர், சகோதரர் ஆகியோர் தன்னை தாக்கியதாய், தன்னை கொலை மிரட்டல் செய்வதாய் எதிராய் வழக்குகள் பல தொடுத்தார். ஆனால் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே ஜஹான் மற்றொரு
குற்றச்சாட்டை வைத்தார். ஒரு பாகிஸ்தானிய பெண்ணுடன் ஷமிக்கு உறவு
உண்டென்றும் அப்பெண் வழியாக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சூதாட்ட முகவர் ஷமிக்கு நிறைய
பணம் அளித்ததாகவும் அதைக் கொண்டு ஷமி பல ஆட்டங்களை fix செய்ததாய்
சொன்னார் ஜஹான். இப்போது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து
ஷமியை தற்காலிக நீக்கம் செய்தது. அவரது ஒப்பந்த வீரர்கள் பட்டியலில்
இருந்து நீக்கியது. ஷஹான் எதிர்பார்த்தது இப்போது நடந்தது.
இதை அடுத்து வாரியம் நியமித்த ஒரு குழு ஷமியை விசாரித்து அவர் குற்றமற்றவர்
என நிரூபித்தது. இங்கு இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும்.
ஒன்று, ஹர்த்திக், ராகுல்,
ஜோஹ்ரி வழக்குகளில் போல பாலியல் காரணத்துக்காக ஷமிக்கு எதிராய் நடவடிக்கை
எடுக்கப்படவில்லை. ஏனென்றால் வாரியத்துக்கு வீரர்களின் பாலியல்
விவகாரங்களில் மூக்கை நுழைப்பதில் அக்கறை இல்லை. ஆனால் ஹர்த்திக்
உள்ளிட்டோர் விசயத்தில் எந்த “குற்றமும்” நடக்கவில்லை என்றாலும், ஊடகங்கள் வழியாக கடும் நெருக்கடிக்கு
வாரியம் தள்ளப்பட்டது. ஹர்த்திக் உள்ளிட்டோரை தண்டித்தது வாரியம்
அல்ல, (மறைமுகமாய்) நமது பாலியல் ஒழுக்க
போராளிகள் தாம் என்பதை இது காட்டுகிறது. இதே கலாச்சார காவலர்கள்
ஷமி விசயத்தில் ஏன் களமிறங்கவில்லை என்பது சுவாரஸ்யமான கேள்வி. ஷமி ஒரு இஸ்லாமியர் என்பதால் அவர் “இந்திய” பாரம்பரியத்தை பிரதிநுத்துவப்படுத்தவில்லை, ஆகையால் அவரை
கண்டிக்க வேண்டியதில்லை என நினைத்தார்களா? அவரை ஒரு “வெளியாளாக”, மற்றமையாக பார்த்தார்களா? ஒருவேளை ஷமிக்கு நடந்தது தோனிக்கு நடந்திருந்தால் நம் கலாச்சார காவலர்கள்
“பொங்கி” எழுந்திருப்பார்களா? சுலபத்தில் நாம் விடை காண முடியாத ஒரு குழப்பமான சிக்கலான கேள்வி இது.
இரண்டாவதாக,
இதே சூதாட்ட குற்றச்சாட்டை ஷமியின் மனைவி முன்வைக்காமல் வேறு ஒருவர்
வைத்திருந்தால் வாரியத்தின் எதிர்வினை வேறாக இருந்திருக்கும் என்பது. ஒரு உதாரணத்துக்கு அல் ஹஸீரா சேனல் முன்வைத்த சூதாட்ட குற்றச்சாட்டை பார்ப்போம்.
முனாவர் எனும் சூதாட்ட முகவரும் அவரது உதவியாளர்களும் 2012இல் நடந்த T20 உலகக்கோப்பை ஆட்டங்களின் போது இந்தியாவின்
தற்போதைய அணித்தலைவர் கோலி மற்றும் துணைத் தலைவர் ரோஹித் ஷர்மா பக்கத்தில் நிற்கும்
புகைப்படங்கள் தம் வசம் உள்ளதாய் ஒரு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை அல் ஜசீரா சமீபத்தில்
வைத்தது. அக்குற்றச்சாட்டைப் பார்க்கையில் தம்மிடம் ஆதாரம் உள்ளதாய்
அல் ஜசீரா கூறுவதாயே புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் இந்திய
கிரிக்கெட் வாரியம் இதை கண்டுகொள்ளவே இல்லை மட்டுமல்ல ஆதாரங்களையும் கோரவில்லை.
ஊடகங்களூம் பொருட்படுத்தவில்லை. ஆனால் இதையே கோலியின்
முன்னாள் தோழியோ காதலியோ அல்லது கோலியுடன் நெருக்கம் உள்ளதாய் கோரும் ஏதாவது ஒரு பெண்ணோ
முன்வைத்திருந்தால் நிலைமையே வேறு. மிகப்பெரும் சர்ச்சையாக மாறி
இருக்கும். கோலியை நீக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்திருக்கும்.
இவை ஒன்றைக் காட்டுகிறது: எந்த குற்றச்சாட்டிலும் ஒரு பெண் நுழையும்
போது தான் நமது சமூக வலைதள போராளிகள், கிரிக்கெட் வாரிய நிர்வாகக்
குழுவினர் கச்சை கட்டி களமிறங்குவார்கள்; தடை, அணியில் இருந்து நீக்கம் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு வீரர் வாரியத்தை விமர்சித்தாலோ வாரியத்தின் அரசியலமைப்பு 41
(6)ஐ மீறினால் கூட வாரியம் பொருட்படுத்தாது என்பதை இதுவரையிலான நிகழ்ச்சிகள்
காட்டுகின்றன. ”ஒழுக்கக்கேடு”, ”தவறான நடத்தை”
ஆகிய சொற்களின் பொருளும் இவ்வ்வாறே புரிந்து கொள்ளப்படும்.
கருத்துகள்