Skip to main content

ஃபேஸ்புக்: ஏன் நீண்ட பதிவுகளைக் கடந்து செல்கிறோம்?


இதுவே இன்றைய பின்நவீன நுகர்வுக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் நமது உலகை பிரமாண்டமான ஹைப்பர் மார்க்கெட் ஆக்குகிறது. ஹைப்பர் மார்க்கெட்டில் நீங்கள் எல்லாப் பொருட்களையும் வாங்கப்போவதில்லை; ஆனால், அவ்வளவு பொருட்கள் அங்கு உள்ளன எனும் உணர்வே நம்மைப் பூரிக்கவைக்கிறது; கைக்கொள்ளாத உலகம் நம் கையில் வந்தது போன்றும், அது நம் கையில் வந்தாலும் அது நம்மை மீறி பிரம்மாண்டமானது என்றும் சுயமுரணாக உணர்கிறோம்.

ஹைப்பர் மார்க்கெட்டில் இருக்கையில் நம் உலகம் ஏன் இவ்வளவு வாய்ப்புத் தேர்வுகள் அற்றதாய் உள்ளது என ஏங்குகிறோம்; அதே நேரம் ஏன் இதுவும்கூட (ஹைப்பர் மார்க்கெட்) நம் உலகம்தானே என சமாதானம் ஆகிறோம்; அடுத்து மெல்ல மெல்ல நம் நடப்புலகில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பொருளையும் மனிதர்களையும் ஹைப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களைப் போன்று பாவிக்கத் தொடங்குகிறோம். வாங்க வாங்கத் தீராதது போன்றே துய்க்கத் துய்க்கத் தீராததே வாழ்க்கை என நம்பத் தொடங்குகிறோம்.
இப்படித்தான் நாம் ஃபேஸ்புக்கை வந்தடைகிறோம். அது ஒரு மெய்நிகர் ஹைப்பர் மார்க்கெட். அங்கு லட்சோபலட்சம் மனிதர்களின் கோடானுகோடி சிந்தனைகள், உணர்வுகள், மனப்பதிவுகள், தகவல்கள் மத்தியில் இருக்கிறோம்; அவை அனைத்தும் நமதே, ஆனால் நாம் அவற்றை வாங்கி உரிமை கொண்டாடத் தேவையில்லை; எடுத்துப் பார்த்து வைத்துவிடலாம். அப்படிப் பார்த்து முகர்ந்து கீழே வைக்கும்போது நாம் உணரும் சுதந்திரம் நம்மை உலகின் மிகப்பெரிய செல்வந்தனாய் உணர வைக்கிறது. ஃபேஸ்புக் நம்மைக் கோடானுகோடி மனித மனங்களின், மனித இருப்புகளின், உறவுகளின் சொந்தக்காரனாக்குகிறது. ஆனால், அதற்கு ஒரு விலை உண்டு. எல்லாரும் நமக்கானவர்களே, அதற்கு நாம் யாரையும் நிரந்தரமாய் உள்வாங்கக் கூடாது; யார் அனுபவத்துக்குள்ளும் ஆழமாய் இறங்கக் கூடாது. எடுத்துப் பார்த்த்து வைத்துவிட வேண்டும்.
எதுவும் தற்காலிகமானது, உடனடியாய் துய்க்கவும் மறுநொடி மறந்து விடவும் தக்கது என நாம் நம்ப வேண்டும். இதன் பிறகு வாழ்க்கையே ஒரு கேளிக்கைக் கொண்டாட்டமாகிவிடும்.
இத்தகைய மக்கள் பெரிய துயரங்களுக்கு தம்மை ஆட்படுத்திக்கொள்ள மாட்டார்கள். இரண்டு நிமிடக் கண்ணீர், அதை அடுத்து ஒரு புன்னகை, அதை அடுத்து உடனே “ஹையா ஜாலி” என்னும் குதூகலம். இப்படி உணர்ச்சிகளை நொடிக்கு நொடி மாற்றும்படி ஊடகங்களும் இன்றைய நுகர்வு கலாச்சாரமும் நமக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை நல்கியபடி இருக்கும். காந்தியின் மரணத்தை ஒட்டிப் பல மாதங்கள் மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருந்ததாய் படித்திருக்கிறேன். இன்றைய சமூக நினைவுகளில் எதுவும் அவ்வளவு காலம் தங்காது.
இதன் விளைவாகத்தான் அரசியலில் பல குற்றங்களை உடனுக்குடன் மறந்துவிடுகிறோம். தலைவர்களை நீண்ட காலம் விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் உட்படுத்துகிற பண்பாட்டை இன்று கைவிட்டுவிட்டோம். இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனம் குறித்து எவ்வளவோ எழுதப்பட்டது, திரைப்படங்களில் பலமுறை நினைவுகூரப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் மரணமும் அதை ஒட்டிய அரசியல் நாடகங்களையும் பற்றி ஒரு படமோ நாடகமோ குறிப்பிடவில்லை. இன்றைய உடனடி உணர்ச்சி யுகத்தில் அரசியல் சுரணையின்மை ஏற்படுகிறது. சமூக மனசாட்சியைத் தட்டி எழுப்புகிற எழுச்சி இன்று சாத்தியப்படாமல் போகிறது. ஒரு நாளுக்கு மேல் நம்மால் இன்று போராட்டங்களில் கலந்துகொள்ளவோ ஒரு பிரச்சினையைப் பற்றி விவாதிக்கவோ முடியாது. கொள்கைகள், அரசியல் நம்பிக்கைகள் இன்று சுரத்திழந்து அர்த்தமற்றுப் போய்விடுவதும் இதனால்தான்.

உடனடி எதிர்வினைகள் தரும் பரவசம்

மைக்ரோ - மினி நிலைத்தகவல்களின் மேல் மட்டும் பார்வையைச் செலுத்தும் மனநிலையின் பாதகங்கள் இவை என்றால் அவற்றின் சாதகங்கள் சுதந்திர மனநிலை, எல்லையற்ற அனுபவப் பரப்பு, ஜாலி மனநிலை ஆகியவை.
ஃபேஸ்புக்கில் செய்தி ஓடையில் சரம் சரமாய் நிலைத்தகவல்கள், படங்கள், மீம்கள், லைவ் வீடியோக்கள், விளம்பரங்கள் வருகின்றன. தெருவில் நின்று கடைகளை, வாடிக்கையாளர்களை, வழிப்போக்கர்களை, பெண்களை, ஆண்களை, குழந்தைகளை வேடிக்கை பார்த்து, அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கும் மனநிலை இது. இதே கடைவீதியில் ஒரு ஸ்டிரைக் நாளன்று அது வெறிச்சோடிக் கிடக்கும்போது நாம் கவனிக்கையில் நமக்கு ஒரு சின்ன இடத்தில், கால - இட எல்லைகளுக்கு உட்பட்ட இடமொன்றில், மாட்டிக்கொண்ட உணர்வு கிடைக்கும். ஃபேஸ்புக்கில் நாம் இதே கடைவீதியில் இன்னும் நெருக்கமாய் ஜனங்களுடன் பயணிக்கிறோம்; ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பயணங்களையும் இன்னும் அணுக்கமாய் அறிகிறோம், அல்லது அவ்வாறு கற்பனை பண்ணிக்கொள்கிறோம். இதுவே நம்மை விடாமல் ஸ்க்ரோல் பண்ணத் தூண்டுகிறது; படிக்காமல் சும்மா பார்த்துவிட்டு நகர்வதில் சுகமும் பறக்கும் உணர்வும் ஏற்படுகின்றன.
இப்போது ஒருவர் நீண்ட பதிவொன்றைப் போட்டிருப்பதைப் பார்க்கிறோம். “தொடர்ந்து படியுங்கள்” எனும் இடம் வந்ததும் நாம் ஒரு நொடி திகைக்கிறோம். படிக்காமலே அடுத்த பதிவுக்கு நகர்கிறோம். ஒருவேளை இப்பதிவை ஒருவர் சிரத்தை எடுத்துப் படித்தால் என்னவாகும்? அவரது காலம் உறையும். அவர் ஒன்றுக்குள் மாட்டிக்கொள்வார். அந்த ஒன்றுடன் மட்டுமே அவர் காலத்தில் பயணித்தாக வேண்டும். இந்த ஒன்று அவரது கழுத்தில் ஒரு கல்லைப் போலத் தொங்குகிறது. விருப்பமில்லாத உறவுக்குள் மாட்டிக்கொண்டவரைப் போல அவர் உணர்கிறார்.

மேலும் படிக்க: https://www.minnambalam.com/k/2019/05/21/19

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...