முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்- பெண்களை தமிழர் கூடுதலாய் மதிக்கிறோமா? (1)

ஆண்-பெண் உறவு பிக்பாஸ் வீட்டில் (மலையாளம் மற்றும் தமிழில்) எப்படி உள்ளது, இது நமது சமகால பண்பாட்டை, பாலினங்களின் அதிகார படிநிலைகளை பிரதிபலிப்பதாக உள்ளதா என சமீபத்தில் நான் எழுதிய பிக்பாஸ் கட்டுரைகளில் கேட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இப்போது பெண்கள் ஆண்களை எதிர்கொள்வதில் தமிழில் இருந்து மலையாளத்துக்கு உள்ள ஒரு முக்கியமான வித்தியாசத்தைப் பற்றி இப்போது பேசப் போகிறோம். இந்தி பிக்பாஸில் பெண்களின் நிலையையும் மேலோட்டமாய் ஒப்பிடுவோம்
.

தமிழ் பிக்பாஸின் இரண்டு பருவங்களிலும் ஆண்-பெண் சமத்துவம் வீட்டின் பங்கேற்பாளர்களின் நடவடிக்கைகளில் தெரிகிறது என ஒரு தோழி ஒருமுறை குறிப்பிட்டார். அவர் அப்படி சொல்லக் காரணம் மலையாள பிக்பாஸின் முதல் பருவத்தின் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் சினிமா நடிகர் அனூப் சந்திரன் வீட்டின் காரணவர் (தலைவர்) ஆன போது நடந்த சில விசயங்களே. வீட்டின் உறுப்பினர்களுக்கு பணிகளை ஒதுக்கும் போது அவர் சமையல் வேலைகளை மொத்தமாய் பெண்களிடமும் ஒப்படைத்து விட்டார். இது சமத்துவத்துக்கு எதிரானது அல்லவா என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மோகன்லால் மறைமுகமாய் கேள்வி கேட்டார். பெண்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என வீட்டின் பெண் பங்கேற்பாளர்களிடமும் கேள்வியை முன்வைத்தார். ஆனால் அவர்களில் ரஞ்சினி சற்று வெளிப்படையாய் இதை கண்டிக்க முயன்றார். ஆனால் பிற பெண்கள் ஆவேசமாய் இதை எதிர்க்காததால் அவரது சொற்கள் வெறும் முனகலாய் அமுங்கிப் போயின. அனூப் இதற்கு விளக்கமளிக்கையில் தான் பெண்களை மதிப்பதாகவும் அவர்களாலே மிகுந்த அக்கறையுடன் சமைலறையின் காரியங்களை கவனிக்க முடியும் என்பதாலே, ஒருவித அங்கீகாரமாய் மட்டுமே அப்பணியை முழுக்க அவர்களிடம் தான் ஒப்படைத்ததாய் சொன்னார். இதற்கும் பெண்களிடம் இருந்து எதிர்வினைகள் இல்லை. சமையல் வேலையை எடுத்துக் கொண்டு நூறாண்டுகளுக்கு முன்பான இல்லாள்களைப் போல செயல்பட அவர்கள் உற்சாகம் காட்டுவதாகவே தென்பட்டது. இத்தனைக்கும் மலையாள பிக்பாஸில் அரசியல் மொழி நன்கு பரிச்சயமான, போராடவும் மறுத்துரைக்கவும் தயங்காத பெண்கள் அதிகம். அவர்கள் ஏன் தம் மீது திணிக்கப்படும் பாலின கட்டமைப்பை எதிர்க்கவில்லை?

இதைப் பற்றி உரையாடுகையில் தான் தோழி கேட்டார்: இதுவே தமிழ் பிக்பாஸில் என்றால் ஒரு பருவத்தில் நமீதாவும் காயத்ரியும் ஜூலியும் அடுத்த பருவத்தில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா போன்றோரும் கடுமையாய் எதிர்த்திருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த முடிவை எடுத்தமைக்காக கமல்ஹாசன் அந்த வீட்டுத் தலைவரை அரைமணிநேரம் குழப்பி குழப்பி கண்டித்து மூளை கொதிக்க வைத்து தெறிக்க விட்டிருப்பார். ஆனால் மோகன்லால், ஒப்பிடுகையில், பெண் என்பவள் என்ன சமையலறைக் கைதியா என்றெல்லாம் கொதிக்கவில்லை. கேரளா மிக முற்போக்கான மாநிலம் என்கிறோம். அங்கு தாய்வழி சமூகங்கள் தழைத்தன என்றும், அங்குள்ள பெண்கள் துணிச்சலானவர்கள் என்றும் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால் ஏன் இப்படி சில விசயங்களில் அவர்கள் மிகப்பிற்போக்காய் இருக்கிறார்கள்?

இந்த கேள்வியுடன் தமிழ் பிக்பாஸுக்கு வந்த தோழி அங்கு பெண்கள் கூடுதல் சுயமரியாதையுடன் இருப்பதாய் கூறினார்

சரி, இது உண்மையெனில், தமிழகம் மற்றும் கேரளாவில் ஆண்-பெண் உறவு இப்படித் தான் மிகவும் முரணாக உள்ளதா என நான் என்னையே கேட்டுக் கொண்டேன். ஒரு முற்போக்கான மாநிலம் ஆண்-பெண் விசயத்தில் பிற்போக்காய் நடந்து கொள்கிறது. ஒரு பிற்போக்கான மாநிலமாய் காணப்படும் தமிழகமோ பெண்களை கண்ணியமாய் சுயமரியாதைக்கு இடமளித்து நடத்துகிறது. ஏன் இப்படி?

இந்த கேள்வியுடன் எங்கள் உரையாடல் முடிந்து போனாலும் நான் மேற்கொண்டு இதைப் பற்றி யோசித்தேன். இரண்டு பதில்கள் எனக்குத் தோன்றின.
ஒன்று, எல்லா சமூகங்களும் இப்படி முரண்பாட்டு முடிச்சுகளாகவே இருக்க முடியும். ஒரு பெண் முற்போக்காக வெளிப்பட அவளது இருப்பில் ஒரு பிற்போக்குத் தன்மை இருந்தே ஆக வேண்டும்

அடுத்து, கேரள சமூகம் முற்போக்கின், கல்வியின், இடதுசாரி அறிவியக்கங்களின், சமூக நிதியில் கலைகளின் பாதையில் நடந்து அரைநூற்றாண்டு கடந்து விட்டதென்றாலும், அங்கு பெண் ஆணுக்கு ஒரு அங்குலம்உயரத்தில்குறைவு தான். அங்கு பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதும் அதிகம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ் சமூகம் நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கட்டமைப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என்றாலும் பெண்கள் இங்கு கூடுதல் சுதந்திரத்துடன், தன்னியல்புடன், தன்னிறைவுடன் உள்ளார்கள் என்பதே உண்மை. இன்னொரு பக்கம், இங்கு பெண்களின் சுயமுனைப்பும் துணிச்சலும் ஆண்களை பின்னுக்குத் தள்ளி அவர்களின் அதிகாரத்தை அச்சுறுத்துகிறது. தாம் குடும்ப வெளிக்குள், உறவு வெளிக்குள் இடமற்று புறந்தள்ளப்படுவோம் எனும் அச்சம் இங்கு ஆண்களுக்கு மிகுதி. வடிவேலுவை கோவை சரளா துவைத்தெடுக்கும் நகைச்சுவைக் காட்சி நினைவுள்ளதா? அது போல மலையாளத்தில் ஒரு காட்சி கூட இல்லை. “மொழிபடத்தில் ஜோதிகா குடித்து விட்டு தன் மனைவியை துன்புறுத்தும் கணவனை துணிச்சலாய் அடித்து திருத்துவார். இதைக் கண்டு தான் ப்ரித்விராஜ் அவர் மீது மையல் கொள்வார். பெண்ணுக்காய் மறுகி உருகி பாட்டோ பாட்டென்று பாடி பின்னே திரியும் சோக நாயகன்கள் தமிழில் தொண்ணூறுகள் வரை பிரசித்தம். முரளி இதற்கென்றே தனிமுத்திரை பெற்றார். ஆனால் கேரளாவிலோ பெண்ணால் நிராகரிக்கப்பட்டு அந்த துயரம் தாளாமல் நெஞ்சம் உருக காதலில் சிக்கி அழியும் காதலன் எனும் தொன்மமே இல்லை எனலாம். அப்படியான நாயகர்கள் தோன்றும் போதும் (“அன்னயும் ரசூலும்போல) அவர்கள் தமிழ்ப் படங்களின் நேரடி தாக்கத்தினாலே உருவாகிறார்கள். “பிரேமத்தில்நிவின் பாலி தன்னிரக்கம் தொனிக்க தோன்ற வேண்டிய பாத்திரம். ஆனால் அவர் மாறாக தொடர்ந்து பெண்களால் நிராகரிக்கப்பட்டாலும்ஸ்படிகம்மோகன்லால் போல திமிறும் ஆண்மையுடன் தான் தெரிகிறார். இந்த நிவின் பாலியைகாதல்படத்தின் பரத்துடன் ஒப்பிட்டால் வித்தியாசம் புரியும். தமிழக ஆண் தொன்மத்தில் தோன்றும் நாயகன் சற்று பலவீனப்பட்ட, பாவப்பட்ட பிறவியாக ஒரு புறமும்சிங்கம்சூர்யா போல மிகையான ஆற்றல் கொண்டவனாக இன்னொரு பக்கமும் இருக்கிறான். ஆனால் மலையாள சினிமாவில் இத்தகைய சித்தரிப்புகள் மிக மிக அரிது

இது தமிழக, கேரள சமூக நிலையை நேரடியாக பிரதிபலிப்பதன் நான் கூற முயலவில்லை; இது அம்மாநில மக்களின் உள்ளார்ந்த விழைவுகளை சித்தரிப்பதாக கூறுகிறேன்.

கருத்துகள்

சோம. சிவ சங்கரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெயலலிதா மறைவை ஒட்டி போகன் சங்கர் அவர்களின் ஒரு முகநூல் பதிவு ஒன்றில் கேரளத்தில் ஒரு பெண்ணை முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதாக எழுதியிருந்தார். ஒழிமுறி திரைப்படத்தை பார்த்த பின் இவ்வாறு தோன்றும். கேரளத்து ஆண்கள் அடி பட்டு மீண்ட பின் மிகுந்த முன்னெச்செரிக்கையுடன் இருப்பதாக கருதுகிறேன். ஒரு வேளை தாய் வழி சமூக அமைப்பு வழக்கொழிந்து பின் வரும் தலைமுறைகளில் ஆண்கள் மிகுந்த விசையுடன் இருப்பது தான் பொது போக்கு போலும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...