நாவலின் பெண் பாத்திரங்களில் குறிப்பாக அம்மாவின் பாத்திரம் எவ்வளவு வலிமையானது, வன்மம் மிக்கது எனப் பார்த்தால் நமக்கு இந்த வெறிகொண்ட அம்மன் யாரென புரிந்து போகும். அதாவது பூமணியின் நோக்கில், அடக்கப்பட்ட வன்மம் ஒவ்வொருவரின் நரம்பிலும் ஓடுகிறது. ஆனால் இது (சிக்மண்ட் பிராயிட் சொல்லுகிற) அடக்கப்பட்ட காமம் ஏற்படுத்தும் வன்மம் அல்ல. இது பெண்ணின் வன்மம். இது திரௌபதி மகாபாரதத்தில் காட்டும் வன்மம். மகாபாரத்தின் நாட்டார் கிளைகதைகளில் ஒன்றை தேவ்தத் பட்டாநாயக் தனது “ஜெயா” நூலில் பேசுகிறார் - இதில் திரௌபதி சக்தி வாய்ந்த பராசக்தியின் வடிவம். மனித வடிவில் உலவும் பெண் நெருப்பு. அவள் போரை நடத்தி பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு மட்டுமே பாண்டவர்க்ளின் பொது மனைவியாக உள்ளாள். ஒருநாள் இரவில் பாண்டவர்களை தனியாக அழைத்து செல்லும் கிருஷ்ணர் பராசக்தி வடிவில் திரௌபதி ஒரு மரத்தின் கீழ் இருக்க பல நூறு சிறுதெய்வங்கள் ஏவல் புரிவதை காட்டுகிறார். நீங்கள் இவளுக்காக பழிவாங்க போர் புரியவில்லை; இவள் தான் உங்களை நடத்துகிறாள்; இவள் தனியாகவே உலகை எரித்து பஸ்மமாக்குவாள்; நீங்கள் வெறும் அற்ப மானிடர்கள் என கிருஷ்ணர் புரியவைக்கிறார். திரௌபதியின் கோபத்தைக் கண்டு எரிச்சலடைவதை பாண்டவர்கள் அத்தோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
நமது தொல்கதைகளில் பெண்வடிவம் இப்படித் தான் இயற்கையின் அடங்காத ஆங்காரத்தின் புறத்தோற்றமாக காணப்பட்டது. பூமணியின் நாவலிலும் பெண்கள் இப்படித் தான் ஆண்களின் அக்னியை வளர்க்கிறவள். தன் மகனுக்காக பழிவாங்க முதலில் புறப்படுகிறவள் அம்மா தான். அவளை அமைதிப்படுத்தவே அவளது அண்ணனும் கணவனும் புறப்படுகிறார்கள். அவர்களால் முடியாத போது எதிர்பாராத சந்தர்பத்தில் சிதம்பரம் பழிவாங்கத் தயாராகிறான். அவன் குண்டு தயாரிக்கும் போது அதற்காக பசைகாய்ச்சி கொடுப்பவள் அம்மா தான். நிலத்துக்கான, அடக்கப்பட்ட செக்ஸ் உணர்ச்சிக்கான முதிராத மனங்களின் போர்வெறி என பூமணி வன்முறை விழைவை பார்ப்பதில்லை.
நிலத்தை பாதுகாப்பது என்பது இங்கு ஒரு பொருட்டு மட்டுமே. சாதி ஒடுக்குமுறையையும் வன்முறைக்கான காரணமாக பூமணி இங்கு துல்லியமாக ஐயமேயின்றி முன்வைப்பதில்லை. (ஆனால் வெற்றிமாறன் தன் படத்தில், கதையை எளிதாக்கும் பொருட்டு சாதி, குடும்பச்சண்டை, வில்லனின் கொடூரம் ஆகியவறை பிரதானப்படுத்துகிறார்.) பூமணி சித்தரிப்பது நோக்கம் கொண்ட வன்முறை அல்ல - நோக்கம் இருப்பதாக நம்பு, வன்முறைக்கான வன்முறை. ஒரு சம்சாரியாக தான் பிழைக்க ஆரம்பத்தில் கொலை செய்து ஜெயிலுக்குப் போக சிவசாமி கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறான் என்றாலும் ஒரு கட்டத்தில் மகனும் அப்பாவும் தாம் செய்த கொலைகளை, செய்யவிருக்கும் கொலைகளை ஒரு தர்மயுத்தமாக காணத் தொடங்குகிறார்கள். திரும்பத் திரும்ப அவர்கள் கேட்பது ஏன் நீதி மற்றும் சட்ட அமைப்புகள் பணம் படைத்தவர்களை தட்டிக் கேட்பதில்லை, ஆகையால் வீரமுள்ளவர்கள் தட்டிக் கேட்க வேண்டும், அதற்காக ஏன் கொலை செய்யக் கூடாது என்பது. பூமணி இதை நியாயப்படுத்துவது இல்லை - அவர் சிதம்பரத்தின் தரப்பை, அவன் தரப்பின் வழி அவனது அப்பாவின் மனநிலையை காட்டுகிறார். ஆகையால் கவனமாக சாதி, சமூக நிலை தனது பார்வையை பூமணி எங்குமே பதிவு செய்வதில்லை. குழப்பங்களும் சுயமுரண்களுமே இலக்கிய படைப்புகளை ஆழமாக்கும். ஆகையால் கதாபாத்திரத்தின் நிலையற்ற மனப்போக்கை கதையாக்கி, எந்த ஒரு பிரச்சாரத்தையும் முன்னெடுக்காமல், பூமணி இதை “பெட்ரோ பரோமோவுக்கு” அருகில் வரத்தக்க ஒரு நாவலாக்குகிறார். (ஆனால் சினிமா எப்போதும் எளிய சிக்கலற்ற கதைகூறலை வழங்க வேண்டும் என்பதால் வெற்றிமாறன் இந்த முன்னுக்குப்பின் முரணான போக்குகளை தவிர்த்து விடுகிறார்.)
அதாவது “வெக்கை” ஒரு தலித் நாவலோ, சமூக விமர்சன (போராளி) நாவலோ அல்ல - சமூக ஒடுக்குமுறைகளை தனது சிக்கல்களில் ஒன்றாக பாவிக்கும் ஒரு உளவியல் நாவல் இது. (ஆனால் வெற்றிமாறன் தன் கதையில் சாதிப்போராட்டம், சமூக விமர்சனம் ஆகியவற்றை பிரதானமாக்கி மக்களுக்கு இதை நுகர சுலபமாக்குகிறார்.)
இந்நாவலில் வன்மம் என்பது ஒரு நதியாக எங்கிருந்தோ தோன்றி முடிவுறாமல் பாய்ந்தபடி இருக்கிறது; அதில் சில நீச்சலடிக்கிறார்கள். சிலர் அதில் மூழ்கி சாகிறார்கள். சிலர் அதில் இருந்து ரத்த சகதியுடன் வெளியேறுகிறார்கள். பூமணி இந்த ரத்த ஆறு எங்கிருந்து ஏன் தோன்றுகிறது எனும் ஒழுக்கவியல் கேள்விகளை எழுப்புவதில்லை. (ஆனால் வெற்றிமாறன் படம் முழுக்க வன்முறையை கொண்டாடி விட்டு “தேவர் மகன்” பாணியில் வீரம் அல்ல படிப்பே முக்கியம் என திடீரென சிவசாமி வழியாக அறிவுரைக்கிறார்; ஆனால் படத்தில் வேறெங்கும் சிவசாமி தன் மகனை படிக்க தூண்டுவதில்லை; அவன் படிப்பை பாதியில் நிறுத்திய போதும் அவர் கண்டிப்பதில்லை. இது திரைக்கதையில் ஒரு லாஜிக் பிழை.)
நாவலில் ஒரு சின்னப்பையனான சிதம்பரம் தன் அண்ணனின் கொலையை (படத்தில் வருவது போல) நேரில் பார்ப்பதில்லை. ஆனால் அண்ணனின் சிதைந்த பிணம் அவனுக்குள் ஒரு பொறியை கிளப்புகிறது; அவன் பள்ளிக்குப் போவதை நிறுத்தி ஆடுமேய்ப்பது, பழிவாங்குவது குறித்து கற்பனை பண்ணுவது என மற்றொரு மனிதனாக மாறுகிறான். அவனுக்கான ஆன்ம பலமாக அவன் தாய் இருக்கிறாள். (அதாவது தாய் திரௌபதியாகவும், அண்ணன் முருகன் சிதைக்கப்பட்டு கொல்லப்படுவது அபிமன்யுவின் படுகொலையாகவும் வருகிறது).
நாவலின் முடிவில் சிதம்பரம் தான் ஜெயிலில் இருந்து திரும்பிய பின் தன் பகைவர்களை முழுக்க அழிக்கப் போவதாக சூளுரைக்கிறான்:
“உள்ளருந்து வெளிய வந்துக்கிறேன். ஒவ்வொருத்தன் தலையையும் கோயிலுக்கு முன்னால் உருளும்.” (பக்கம் 203)
அதன் பிறகு அவர்களுக்கு ஆயுதங்களை (அருவாள் மற்றும் கைவெடிகுண்டுகள்) தாம் திரும்ப வரும் வரை எங்கே மறைத்து வைப்பது என கேள்வி எழுகிறது.
“அவன் ஐயாவை நெருங்கினான்.
‘ஆயுதங்களை எங்க வைக்கிறது.’
‘மாமாகிட்ட குடுத்துறணும். கொண்டு போயிருவாரு.’
‘அருவாள நல்லா தொவஞ்சு பதம்புடிச்சு வச்சிருக்கச் சொல்லணும்.’” (பக்கங்கள் 203-204)
அதன் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைய ஒரு காரில் ஏறுவதற்காக ஓடுகிறார்கள்.
(நாவலின் இந்த முடிவு முக்கியமானது. ஏனென்றால் இது நமக்கு மகாபாரத்தில் ஓரிடத்தை நினைவுபடுத்துகிறது. பாண்டவர்கள் வனத்தில் பதுங்கி இருந்த பின்னர் நாட்டில் மாறுவேடமிட்டு மறைந்து வாழப் போகும் முன் ஒரு மரத்தின் கீழே தம் ஆயுதங்களை பதுக்கி வைப்பார்கள். திரும்ப வந்து அதே ஆயுதங்களைக் கொண்டு தான் கௌரவர்களை கொல்லப் போகிறார்கள். இங்கிருந்து நாம் ஒட்டுமொத்த கதையையும் மகாபாரதக்கதையாக, ஒரு நவீன தொன்ம மீளுருவாக்கமாக வாசிக்க முடியும். ஆனால் வெற்றிமாறன் இந்த இதிகாச கோணத்தையும் நாவலின் துவக்கத்தில் சுடலையில் எலும்பு பொறுக்கும் சுடலைமாடனை சிதம்பரம் காணும் இடத்தில் வரும் தொன்மம் தரும் சாத்தியங்களையும் உதாசீனித்து விடுகிறார்.)

கருத்துகள்