கவின் உண்மையில் என்ன பாவம் பண்ணினார் எனத் தெரியவில்லை. (இதற்கு முன்பு ஆரவ் ஓவியா விசயத்தில் என்ன தப்பு பண்ணினார் என்பதும் தான் புரியவில்லை.) கவின் ஆரம்பத்தில் இருந்தே வீட்டிலுள்ள பெண்களுடன் நட்பாக சற்று ஜாலியாக பழகுகிறார். ஆனால் அவர் யாருடனும் நிரந்தரமாக ஒரு காதல் உறவை ஏற்படுத்த விரும்பவில்லை. இது ஒரு பக்கம் பிக்பாஸ் விட்டுப் பெண்களுக்கு பிடித்திருந்தது; இன்னொரு பக்கம் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் கவினுக்கு ஒரு ரோமியோ பிம்பம் ஏற்பட இது காரணமாகியது. சதா பெண்களுடனே ஒட்டிக் கொண்டு எல்லாரிடமும் விளையாட்டுத்தனமாக இருந்ததால் அவரால் தொடர்ந்து கேமராவுக்கு தீனி அளிக்கவும் பார்வையாளர் கவனத்தில் இருக்கவும் முடிந்தது. வெளியே பேட்டியளித்த கவினின் நண்பர்கள் இது கவினின் நிஜமான இயல்பு அல்லவே அல்ல - அவர் இயல்பில் மிக கூச்சமானவர், இப்படி இடைவிடாமல் பெண்களுடன் ஜல்லியடிப்பவர் அல்ல எனக் கூறினர். ஒருவேளை கவின் பிக்பாஸ் விளையாட்டில் தன்னை காதலனாக சித்தரித்து நடிக்கிறாரோ என ஐயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கவின் சீரியஸான காதலனாக முடிவெடுத்து லோஸ்லியாவிடம் நெருங்கினார். இந்த உறவும் எந்தளவுக்கு நிஜமானது எனத் தெரியவில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு இதில் ஏதோ ஒரு அவநம்பிக்கையும் கசப்பும் ஏற்பட்டது.
ஏன்?
துவக்கத்தில் இருந்தே கவின் மற்றும் லோஸ்லியாவிடம் ஒருவித ஒட்டாமை, தயக்கம், நிலையின்மை தென்பட்டன. ஓவியா வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஆரவ் தான் எனும் உறுதியாக இருக்க லோஸ்லியாவோ ஏதோ உலக சினிமாவில் வரும் பாத்திரங்களைப் போல பட்டும் படாமல் காதலித்துக் கொண்டிருந்தார். சேரனை அவர் அப்பா அப்பா என அழைத்து பாசமாக நடந்து கொண்டாலும் இன்னொரு பக்கம் அவரை சுலபத்தில் விட்டுக் கொடுத்து செல்பவராக இருந்தார். கவினும் லோஸ்லியாவும் இணைந்திருக்கும் காட்சிகளில் நாம் எந்த ஒரு அன்னியோன்யத்தையும் பார்க்க வில்லை. மாறாக அன்னியோன்யமாக தெரியக் கூடாது எனும் பதற்றம் தான் தெரிந்தது. ஒருவேளை அவர்களிடையே ஈர்ப்பு இருந்திருந்தாலும் அது உறுதியான உறவாக இல்லை. அது இயல்பு தான். நம்மிடையே எத்தனையோ ஆண்-பெண் உறவுகள் தெளிவாக முடிவெடுக்க இயலாமல் தத்தளிப்பவை தான். அல்லது ஒருவேளை இருவரும் சமயோஜிதமாக பிக்பாஸில் நீடிக்கும் பொருட்டு காதலை அரங்கேற்றியிருக்கலாம்.
எப்படியோ அவர்களின் உறவாடலில் எந்த தப்பும் இல்லை. கவின் லோஸ்லியாவிடம் அத்துமீறவோ அவரது விருப்பத்தை மீறி துன்புறுத்தவோ இல்லை. லோஸ்லியாவும் எந்த குற்றமும் இழைக்கவில்லை. ஒருவேளை அவர்களின் காதலில் ஒரு செயற்கைத்தனம் தென்பட்டால் அது அவர்களின் தவறு அல்ல - யாரும் அந்த நிகழ்ச்சியை நிஜம் என நம்பி பார்ப்பதில்லை. அது ரியாலிட்டி ஷோவே அன்றி ரியாலிட்டி அல்ல. இங்கு தான் அவர்கள் செய்த தவறு என்ன என நாம் சிந்திக்க வேண்டும்.
கவினுக்கு ரோமியோ, காதலன் ஆகிய பாத்திரங்களை விடுத்தால் அங்கே செய்வதற்கு என்று ஒரு தனித்த வேலையோ எடுத்துக் கொள்ள அடையாளமோ இல்லை. லோஸ்லியாவுக்கோ ஆரம்பத்தில் அவர் சித்தரித்த சுட்டியான சுயபிம்பம், குழந்தைமை மெல்ல மெல்ல இப்போது மங்கி விட்டது. அவர் ஓவியாயைப் போன்றே காதலில் ஈடுபட்டு ஒருவேளை இறுதியில் கவின் தன்னை கைவிட்டதாக ஒரு நாடகம் போட்டு பிரசித்தமாக, அதிக வாக்குகளைப் பெற உத்தேசித்திருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் அவர்களின் காதலுக்கு கவனம் குறைய பிக்பாஸ் நிர்வாகத்தினர் ஏதேதோ உள்ளுக்குள் முடிவெடுத்து இருவருக்கும் இடையே கோடு கிழிக்க முயன்றனர்.
பிக்பாஸ் கமலஹாசன் வழி லோஸ்லியா மற்றும் கவினுக்கு காதலை மட்டுப்படுத்தும்படி அறிவுரை கூறினார். ஆனால் காதலிப்பதை விட்டு விட்டு எதைத் தான் பண்ணுவது எனப் புரியாமல் அவர்கள் காதலையே தொடர்ந்தனர்.
இதை அடுத்து குடும்ப உறவுகளும் நண்பர்களும் வீட்டின் பங்கேற்பாளர்களைப் பார்க்க வந்தனர். லோஸ்லியாவின் அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் வந்து பழையபடி “கேம்” ஆடி நல்ல பெயர் வாங்கும்படியும், கவினுடன் உள்ள உறவை துண்டிக்கும்படியும் வற்புறுத்தினார்கள். லோஸ்லியாவின் அப்பா நடந்து கொண்ட விதம் தான் இருப்பதிலேயே அபத்தமாக இருந்தது. அவர் வந்ததும் தன் மகளை கண்டித்தார். “பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் வாழலாம், மானமில்லாமல் வாழக் கூடாது” என்றார். ஆனால் லோஸ்லியாவின் மானங்கெட்ட செயல் தான் என்ன? காதலிப்பதா? சரி அதுவே தவறு என்றால் அவர், எந்த அப்பாவையும் போல, கோபத்தை தன் மகளின் காதலனின் பால் தான் காண்பித்திருக்க வேண்டும். பளாரென கன்னத்தில் ஒரு அறை விட்டிருக்கலாம். (அது சரி என நான் கூறவில்லை, ஆனால் இதுவே உலக நடைமுறை.) சேரனுக்கு கவின் மீது ஏற்படும் கோபமும் பொறாமையும் கூட லோஸ்லியாவின் அப்பாவுக்கு ஏற்படவில்லை என்பது விசித்திரமே. அவர் கவினை அணைத்து பாசமாக பேசி விட்டு, தனக்கு கவின் மீது எந்த வருத்தமும் இல்லை என சொல்லி விட்டு சென்றார். ஒருவேளை அவரது நண்பர்கள் லோஸ்லியாவின் நடவடிக்கைகளை டிவியில் கண்டு அவரை கேலி பண்ணியதாக அவர் சொன்னது உண்மையெனில் அவரால் அப்படி கவினை சுல்பத்தில் மன்னித்திருக்க முடியாது. அந்த காதலும் பாதி பாசாங்கு, தன் மகள் அங்கு நிலைக்க அது தேவைப்பட்டது என அவர் புரிந்து கொண்டுள்ளார் என்பதையே இது காட்டுகிறது.
பிக்பாஸில் காதல் என்பது உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல - அது இடைப்பட்ட ஒன்று. இது தான் லோஸ்லியா அப்பாவின் நடவடிக்கையின் ரகசியம்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் விடாமல் அங்குள்ளோர் உச்சரிக்கும் சொல் “கேம்”. அந்த வீடும் அங்குள்ள உறவுகளும் நிஜம் எனத் தோன்றி, உடனே தமது நிலையாமை நினைவுக்கு வந்து மனம் பதறும் போது அவர்கள் தமக்குத் தாமே “இது ஒரு கேம், இதை உணர்வுவயப்படாமலே ஆட வேண்டும்” என சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி அவர்கள் ஆடத் தொடங்கும் போதே பிக்பாஸ் அவர்கள் போலியாக ஆடக் கூடாது, மனத்தில் பட்டதை சொல்ல வேண்டும், பாவனையின்றி நடந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துவார். அப்படியே அவர்கள் பாவனையின்றி காதலித்தாலும் பிக்பாஸ் “கேம்” ஆடுங்கள், உங்கள் காரியத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு போட்டி போடுங்கள் என வற்புறுத்துகிறார். இப்போது என்னதான் பண்ணுவது - நடிக்கணுமா நிஜமாக நடந்துக்கணுமா?
இங்கு தான் நாம் ஒரு நுணுக்கத்தை கவனிக்க வேண்டும். பிக்பாஸ் என்பது ஒரு கேம் ஷோ மட்டும் அல்ல. விளையாட்டு என்பது ஆட்டக்காரர்கள் கருத்தூக்கத்துடன் ஆடுவது. விளையாட்டில் நிஜம் இல்லை என்பதால் பார்வையாளர்களுக்கு அந்தரங்கத்த எட்டிப் பார்க்கும் சுவாரஸ்யம் இராது. பிக்பாஸ் என்பது வெறும் ரியாலிட்டி மட்டுமே என்றால் அலுப்பாகி விடும் - நிஜத்தை தான் அவர்கள் அனுதினமும் தம் வீட்டுக்குள்ளே பார்க்கிறார்கள். பிக்பாஸின் நிஜமான சுவாரஸ்யம் அது ஒரு வதைக்கூடம் என்பதில் உள்ளது. இந்த வதை என்பது நேரடியாக துன்புறுத்துவது அல்ல - பல்வேறு அபத்தமான கட்டுப்பாடுகளை விதித்து பங்கேற்பாளர்களை மெல்ல மெல்ல துன்புறுத்துவது; சொந்த பந்தங்கள், கணவன், மனைவி, (முக்கியமாக) குழந்தையுடன் இருந்து அவர்களை பிரித்து, அவர்களை தம் உற்றார், குடும்பத்தினர் பற்றி புலம்ப செய்து, Freeze சொல்லி குடும்பத்தினரை உள்ளே விட்டு பங்கேற்பாளர்களை அழுது துடிக்க வைப்பது. சிறையில் தள்ளி, கடுமையான டாஸ்குகளில் வதைபட்டு, நீச்சல் குளத்தில் தள்ளப்பட்டு, தலையில் குப்பை கொட்டப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டு, கண்டவர்களால் வசைபாடப்பட்டு அவர்கள் தவிப்பதை பார்ப்பதே பிக்பாஸின் சாடிஸ கிளர்ச்சி.
இதனால் தான் பிக்பாஸில் இருவர் லேசாக நெருங்கும் போதே அவர்களை இணையும் வரை காத்திருந்து மெல்ல மெல்ல அவர்களை பிரித்து வைத்து அல்லது அவர்களின் காதலுக்கு பல்வேறு இடர்களை அளித்து, அதைக் காணும் பார்வையாளர்களுக்கு ஒரு செயற்கையான திகிலை, பரபரப்பை கொடுப்பது. ஓவியாவில் இருந்து லோஸ்லியா வரை பிக்பாஸ் பின்பற்றும் திரைக்கதை உத்தி இது.

கருத்துகள்