முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாகித்ய அகாதெமியிடம் (கூடவே அரசிடமும்) வைக்க வேண்டிய கோரிக்கைகள்


1) சாகித்ய அகாதெமி பரிசைப் பற்றி இளங்கோ கிருஷ்ணன் சொல்வதைப் போல வருடத்திற்கு ஒரு பரிசு என்பதை நான்கு அல்லது ஐந்து பரிசுகளாக வகுத்துக் கொள்ளலாம். நாவல், சிறுகதை, கவிதை, உரைநடை, விமர்சனம் என்பதோடு, எதிர்காலத்தில், பதிப்பிக்கப்பட்ட திரைக்கதைக்கும் ஒரு விருதை வழங்கலாம். இது வருங்காலத்தில் தமிழில் திரைக்கதை எனும் துறை ஒரு எழுத்துத் துறையாக மாற உதவும்.
2) நிச்சயமாக பரிசுத்தொகையை அதிகரிக்க வேண்டும். 25 லட்சம் ஒரு நல்ல தொகை. அல்லது வேறு சில மாநில அரசுகள் பண்ணுவதைப் போல பரிசு பெறும் படைப்பாளிக்கு ஒரு புது வீட்டை அளிக்கலாம்.
3) எப்படி யுவ புரஸ்கார் எனும் வகைமை உள்ளதோ அதே போல பெண் படைப்பாளிகள், மாற்றுப்பாலினத்தோர் எழுத்துக்களுக்கென தனி பரிசுகளை அகாதெமி உருவாக்கலாம்.
4) விருதாளர்களை பாராளுமன்றத்தில் வைத்து பிரதமர் கௌரவிக்கலாம். இது தேசம் முழுக்க ஒரு கவனத்தை உண்டு பண்ணும். உலக அளவில் கூட பேசப்படலாம்.

5) விருதுபெற்ற படைப்பாளிகளை மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் வருடத்திற்கு சில மாதங்கள் வருகை தரும் பேராசிரியர்களாக நியமித்து, படைப்பிலக்கியம் சார்ந்து உரைகளை வழங்க செய்யலாம். இதை பல்கலைக்கழக விதிமுறை ஆக்க வேண்டும்.
6) இதைத் தொடர்ந்து இந்த படைப்பாளிகளின் பெயரில் ஆய்வு நல்கைகளை அமைத்து, அவர்களின் எழுத்து குறித்து மாணவர்கள் ஆய்வு செய்து நூல்களை பிரசுரிக்க தூண்டலாம். இந்த பணியை அகாதெமியிடம் இருந்து மத்திய பல்கலைக்கழகங்கள் எடுத்துக் கொள்வதே சிறப்பாக இருக்கும்
7) இதைத் தொடர்ந்து பரிசீலனைக்கு உள்ளான, ஆனால் பரிசு வழங்கப்படாத படைப்பாளிகளின் பட்டியலை எதிர்கால நம்பிக்கையாளர்கள் என அறிவிக்கலாம். மேற்கில் நடப்பது போல இவர்கள் 3-6 மாதங்கள் தங்கி எழுதுவதற்கு அமைதியான ஊர்களில் விடுதிகளை அமைத்துத் தரலாம்.
8) விருது பெற்றவர்களின் படைப்புகளை மொழியாக்கும் பணியில் அகாதெமி தீவிரம் காட்ட வேண்டும். விருது பெற்ற படைப்பு என்றில்லாமல் அன்னாரது அனைத்து படைப்புகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். வருடத்திற்கு இவ்வளவு நூல்களை மொழியாக்கி வெளியிடுவோம் என முன்னமே அகாதெமி அறிவித்து அந்த இலக்கை அடைய முயல வேண்டும். இப்போதைக்கு அகாதெமியின் பதிப்புப் பணியில் உள்ள மெத்தனம் தவிர்க்கப்பட வேண்டும்.
9) பள்ளி துவங்கி கல்லூரி, பல்கலைக்கழகம் வரை எல்லா பாடத்திட்டங்களிலும் அகாதெமி விருதாளர் ஒருவரின் படைப்பையாவது சேர்க்க வேண்டும் என கல்வித்துறை ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். இதில், நிச்சயமாக, மொழியாக்கப்பட்ட அகாதெமி விருது பெற்ற புத்தகங்களையும் கூடுதலாக சேர்க்கலாம். அதாவது மாணவர்கள் ஒரு தமிழ் விருதாளரின் படைப்புடன் மராத்தி, குஜராத்தி, தெலுங்கு போன்ற மற்றொரு மொழியின் படைப்பையும் மொழியாக்கத்தில் படிக்க வேண்டும். இதன் மூலம் கணிசமான இளம்தலைமுறையினர் விருது பெற்ற படைப்பாளியை வாசித்தறிய வழிவகை ஏற்படும்.
10) தேர்வுக்குழுவில் உள்ளவர்கள் தமது அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து முடிவெடுக்க மாட்டோம் என எழுத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை பரிசு அறிவிப்பு வெளியிடும் போது இந்த ஒப்புதலையும் வெளியிட வேண்டும். முழுக்க அரசியல் சார்பற்ற நிலை சாத்தியமில்லை என்றாலும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தவும் இலக்கிய பரிசுகள் அரசியல் சார்பற்றவை எனும் நம்பிக்கையை பரப்பவும் இது உதவும். இப்போதுள்ள நிலை என்ன? தேசிய விருதுகளில் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் வலதுசாரிகள் தம் தரப்பினரை தேர்வுக்குழுவுக்குள் எப்படியாவது அனுப்ப முடியுமா எனப் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். அகாதெமி விருது என்பது இரு அரசியல் முனைப்புகளுக்கு இடையிலான போட்டியாக மாறக் கூடாது.  

இதையெல்லாம் ஒரு அரசு ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வி எழலாம்:
1) படைப்பாளிகள் வெறுமனே கதை, கவிதை எழுதுபவர்கள் மட்டுமல்ல, அவர்கள் சமூகத்தின் நினைவுகளை பதிவு செய்பவர்கள்; பண்பாட்டை செழுமையாக்குபவர்கள்; மொழியை உயிர்ப்பாக வைத்திருப்பவர்கள். நல்ல தமிழை நாம் எப்போதும் நல்ல கதைகள், கவிதைகள் வாசித்தே கற்றுக் கொள்கிறோம் (நல்ல பேச்சாளர்களையும் கேட்டும் தான்.). 
2) எழுத்தாளன் அறிவைப் பெருக்குகிறான். அறிவுப்பணிக்காக அவன் எப்போதுமே இங்கு அங்கீகரிக்கப்படுவதில்லை.
3) அரசியலில், மேடைப்பேச்சுகளில், கல்விப்புல உரையாடல்களில் தோன்றும் கருத்துக்கள் பெரும்பாலும் இலக்கிய, விமர்சன எழுத்துக்களில் இருந்தே தோன்றுகின்றன. தமிழகத்தை எடுத்து கொண்டால் தமிழ் தேசியம், திராவிடம், சமூக நீதி என்பதெல்லாம் சில அரசியல் தலைவர்கள் கண்டுபிடித்தது அல்ல. இச்சொற்கள், இக்கருத்துக்களை பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே பல சிந்தனையாளர்கள் பல நூறு பக்கங்களில் எழுதி எழுதி மெருகேற்றியவை. திமுக ஆட்சிக்கு வந்த துவக்க காலத்தில் தம்மை வடிவமைத்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. ஆனால் போகப் போக அது இந்த கருத்து பங்களிப்பாளர்களை மறந்து நடைமுறை அரசியலில் அதிக அக்கறை செலுத்தியது. அதிமுகவுக்கு இந்த புரிதல் என்றுமே இருந்ததில்லை என்பதால் ஒரு லும்பன் பண்பாட்டை அவர்கள் இங்கு வளர்த்தார்கள் - அங்கிருந்தே மண்சோறு சாப்பிடுவது, தெர்மோக்கோலை மிதக்க விடுவது போன்றஅறிவுச்செயல்பாடுகள்முன்னிலை பெற்றன. சமூக சீரழிவுக்கும் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் ஒரு நுண்ணிய தொடர்பு உள்ளது
இதே போல சினிமா, இசை, ஓவியம் உள்ளிட்ட பல கலை வடிவங்களுக்கும் எழுத்துக்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. நல்ல இலக்கியம் கொண்டாடப்படும் நாட்டில் சினிமாவும் மேம்பட்டதாக இருக்கும். இசை, ஓவியம் என பல கலைவடிவங்களும் மேம்படும். அனைத்துக்குமான அடித்தளம் எழுத்து தான்.
சமூக பண்பாட்டு அறிவுத்தள சீர்கேட்டை ஏற்பவர்கள் தாம் எழுத்தாளனை வெறுமனே பொழுதுபோக்கு கலைஞனாக, கதை எழுதுபவனாக பார்க்க விரும்புகிறார்கள்


இதனால் தான் ஒரு அரசு, பொறுப்பை உணர்ந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட அரசு, எழுத்தாளர்களை போற்றிப் பாதுகாக்கும். இல்லாவிட்டால் நாம் விளங்க மாட்டோம்.

கருத்துகள்

sathish9597@gmail.com இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கட்டுரை சார்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...