Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சாகித்ய அகாதெமியிடம் (கூடவே அரசிடமும்) வைக்க வேண்டிய கோரிக்கைகள்


1) சாகித்ய அகாதெமி பரிசைப் பற்றி இளங்கோ கிருஷ்ணன் சொல்வதைப் போல வருடத்திற்கு ஒரு பரிசு என்பதை நான்கு அல்லது ஐந்து பரிசுகளாக வகுத்துக் கொள்ளலாம். நாவல், சிறுகதை, கவிதை, உரைநடை, விமர்சனம் என்பதோடு, எதிர்காலத்தில், பதிப்பிக்கப்பட்ட திரைக்கதைக்கும் ஒரு விருதை வழங்கலாம். இது வருங்காலத்தில் தமிழில் திரைக்கதை எனும் துறை ஒரு எழுத்துத் துறையாக மாற உதவும்.
2) நிச்சயமாக பரிசுத்தொகையை அதிகரிக்க வேண்டும். 25 லட்சம் ஒரு நல்ல தொகை. அல்லது வேறு சில மாநில அரசுகள் பண்ணுவதைப் போல பரிசு பெறும் படைப்பாளிக்கு ஒரு புது வீட்டை அளிக்கலாம்.
3) எப்படி யுவ புரஸ்கார் எனும் வகைமை உள்ளதோ அதே போல பெண் படைப்பாளிகள், மாற்றுப்பாலினத்தோர் எழுத்துக்களுக்கென தனி பரிசுகளை அகாதெமி உருவாக்கலாம்.
4) விருதாளர்களை பாராளுமன்றத்தில் வைத்து பிரதமர் கௌரவிக்கலாம். இது தேசம் முழுக்க ஒரு கவனத்தை உண்டு பண்ணும். உலக அளவில் கூட பேசப்படலாம்.

5) விருதுபெற்ற படைப்பாளிகளை மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் வருடத்திற்கு சில மாதங்கள் வருகை தரும் பேராசிரியர்களாக நியமித்து, படைப்பிலக்கியம் சார்ந்து உரைகளை வழங்க செய்யலாம். இதை பல்கலைக்கழக விதிமுறை ஆக்க வேண்டும்.
6) இதைத் தொடர்ந்து இந்த படைப்பாளிகளின் பெயரில் ஆய்வு நல்கைகளை அமைத்து, அவர்களின் எழுத்து குறித்து மாணவர்கள் ஆய்வு செய்து நூல்களை பிரசுரிக்க தூண்டலாம். இந்த பணியை அகாதெமியிடம் இருந்து மத்திய பல்கலைக்கழகங்கள் எடுத்துக் கொள்வதே சிறப்பாக இருக்கும்
7) இதைத் தொடர்ந்து பரிசீலனைக்கு உள்ளான, ஆனால் பரிசு வழங்கப்படாத படைப்பாளிகளின் பட்டியலை எதிர்கால நம்பிக்கையாளர்கள் என அறிவிக்கலாம். மேற்கில் நடப்பது போல இவர்கள் 3-6 மாதங்கள் தங்கி எழுதுவதற்கு அமைதியான ஊர்களில் விடுதிகளை அமைத்துத் தரலாம்.
8) விருது பெற்றவர்களின் படைப்புகளை மொழியாக்கும் பணியில் அகாதெமி தீவிரம் காட்ட வேண்டும். விருது பெற்ற படைப்பு என்றில்லாமல் அன்னாரது அனைத்து படைப்புகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். வருடத்திற்கு இவ்வளவு நூல்களை மொழியாக்கி வெளியிடுவோம் என முன்னமே அகாதெமி அறிவித்து அந்த இலக்கை அடைய முயல வேண்டும். இப்போதைக்கு அகாதெமியின் பதிப்புப் பணியில் உள்ள மெத்தனம் தவிர்க்கப்பட வேண்டும்.
9) பள்ளி துவங்கி கல்லூரி, பல்கலைக்கழகம் வரை எல்லா பாடத்திட்டங்களிலும் அகாதெமி விருதாளர் ஒருவரின் படைப்பையாவது சேர்க்க வேண்டும் என கல்வித்துறை ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். இதில், நிச்சயமாக, மொழியாக்கப்பட்ட அகாதெமி விருது பெற்ற புத்தகங்களையும் கூடுதலாக சேர்க்கலாம். அதாவது மாணவர்கள் ஒரு தமிழ் விருதாளரின் படைப்புடன் மராத்தி, குஜராத்தி, தெலுங்கு போன்ற மற்றொரு மொழியின் படைப்பையும் மொழியாக்கத்தில் படிக்க வேண்டும். இதன் மூலம் கணிசமான இளம்தலைமுறையினர் விருது பெற்ற படைப்பாளியை வாசித்தறிய வழிவகை ஏற்படும்.
10) தேர்வுக்குழுவில் உள்ளவர்கள் தமது அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து முடிவெடுக்க மாட்டோம் என எழுத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை பரிசு அறிவிப்பு வெளியிடும் போது இந்த ஒப்புதலையும் வெளியிட வேண்டும். முழுக்க அரசியல் சார்பற்ற நிலை சாத்தியமில்லை என்றாலும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தவும் இலக்கிய பரிசுகள் அரசியல் சார்பற்றவை எனும் நம்பிக்கையை பரப்பவும் இது உதவும். இப்போதுள்ள நிலை என்ன? தேசிய விருதுகளில் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் வலதுசாரிகள் தம் தரப்பினரை தேர்வுக்குழுவுக்குள் எப்படியாவது அனுப்ப முடியுமா எனப் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். அகாதெமி விருது என்பது இரு அரசியல் முனைப்புகளுக்கு இடையிலான போட்டியாக மாறக் கூடாது.  

இதையெல்லாம் ஒரு அரசு ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வி எழலாம்:
1) படைப்பாளிகள் வெறுமனே கதை, கவிதை எழுதுபவர்கள் மட்டுமல்ல, அவர்கள் சமூகத்தின் நினைவுகளை பதிவு செய்பவர்கள்; பண்பாட்டை செழுமையாக்குபவர்கள்; மொழியை உயிர்ப்பாக வைத்திருப்பவர்கள். நல்ல தமிழை நாம் எப்போதும் நல்ல கதைகள், கவிதைகள் வாசித்தே கற்றுக் கொள்கிறோம் (நல்ல பேச்சாளர்களையும் கேட்டும் தான்.). 
2) எழுத்தாளன் அறிவைப் பெருக்குகிறான். அறிவுப்பணிக்காக அவன் எப்போதுமே இங்கு அங்கீகரிக்கப்படுவதில்லை.
3) அரசியலில், மேடைப்பேச்சுகளில், கல்விப்புல உரையாடல்களில் தோன்றும் கருத்துக்கள் பெரும்பாலும் இலக்கிய, விமர்சன எழுத்துக்களில் இருந்தே தோன்றுகின்றன. தமிழகத்தை எடுத்து கொண்டால் தமிழ் தேசியம், திராவிடம், சமூக நீதி என்பதெல்லாம் சில அரசியல் தலைவர்கள் கண்டுபிடித்தது அல்ல. இச்சொற்கள், இக்கருத்துக்களை பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே பல சிந்தனையாளர்கள் பல நூறு பக்கங்களில் எழுதி எழுதி மெருகேற்றியவை. திமுக ஆட்சிக்கு வந்த துவக்க காலத்தில் தம்மை வடிவமைத்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. ஆனால் போகப் போக அது இந்த கருத்து பங்களிப்பாளர்களை மறந்து நடைமுறை அரசியலில் அதிக அக்கறை செலுத்தியது. அதிமுகவுக்கு இந்த புரிதல் என்றுமே இருந்ததில்லை என்பதால் ஒரு லும்பன் பண்பாட்டை அவர்கள் இங்கு வளர்த்தார்கள் - அங்கிருந்தே மண்சோறு சாப்பிடுவது, தெர்மோக்கோலை மிதக்க விடுவது போன்றஅறிவுச்செயல்பாடுகள்முன்னிலை பெற்றன. சமூக சீரழிவுக்கும் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் ஒரு நுண்ணிய தொடர்பு உள்ளது
இதே போல சினிமா, இசை, ஓவியம் உள்ளிட்ட பல கலை வடிவங்களுக்கும் எழுத்துக்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. நல்ல இலக்கியம் கொண்டாடப்படும் நாட்டில் சினிமாவும் மேம்பட்டதாக இருக்கும். இசை, ஓவியம் என பல கலைவடிவங்களும் மேம்படும். அனைத்துக்குமான அடித்தளம் எழுத்து தான்.
சமூக பண்பாட்டு அறிவுத்தள சீர்கேட்டை ஏற்பவர்கள் தாம் எழுத்தாளனை வெறுமனே பொழுதுபோக்கு கலைஞனாக, கதை எழுதுபவனாக பார்க்க விரும்புகிறார்கள்


இதனால் தான் ஒரு அரசு, பொறுப்பை உணர்ந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட அரசு, எழுத்தாளர்களை போற்றிப் பாதுகாக்கும். இல்லாவிட்டால் நாம் விளங்க மாட்டோம்.

Comments

நல்ல கட்டுரை சார்

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...