சில எழுத்தாளர்கள் எழுதுவதை பாதியில் நிறுத்தி விடுவதைப் பற்றி மூத்த கவிஞரான ஒரு நண்பரிடம் உரையாடும் போது அவர் ஒரு சுவாரஸ்யமான அவதானத்தை வைத்தார் - “நாம் அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதால் எழுதுவதை நிறுத்துவதில்லை, எழுதுவதை நிறுத்துவதற்காக இந்த பிரச்சனைகளை ஒரு சாக்காக பயன்படுத்துகிறோம்.” எனக்கு ஊரில் ஒரு நண்பர் இருந்தார். நாகர்கோயிலில் இருந்து தக்கலைக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அவருடன் அடிக்கடி பேருந்தில் பயணிப்பேன். இலக்கியம், கலை, அரசியல் என பேசிக் கொண்டு செல்வோம். ஒரே பிரச்சனை டிக்கெட் எடுத்த நிறுத்தத்தில் ஒருநாளும் இறங்க மாட்டார் - ஏதாவது ஒரு இடத்தில் திடீரென இறங்கி விட்டு அங்கு யாரையாவது பார்க்கலாம் என்பார். பிறகு அங்கிருந்து ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டிருந்த இடத்துக்கு செல்வோம். “ஏண்ணெ இப்படி பண்றிங்க?” என ஒவ்வொரு முறையும் கேட்பேன். அவரது பதில் “நினைச்ச எடத்துக்கு போறதில என்ன ஒரு இது இருக்கிடே. எதிர்பார்க்காத மாரி ஏதாவது நடக்கணும். தினமும் டக்குன்னு ஒரு புது விசயத்தை பண்ணனும். நாம என்ன பண்ணுவோமுன்னு யாருக்கும் பிடிபடக் கூடாது கேட்டியா?” தினமும் ஒன்றையே திரும்பத் திரும்ப பண்ணுவது ரொம்ப அலுப்பானது என்பதை பின்னர் மத்திய வயதில் தான் நான் புரிந்து கொண்டேன்.
எழுத்தாளனான பிறகு என் சக எழுத்தாளர்களில் பலருக்கு எழுதுவது பற்றி கனவு காண்பதில் உள்ள விருப்பம் எழுதுவதில் இல்லை என்பதை, சில நேரம் கனவைக் கூட துறந்து விட்டு சம்மந்தமில்லாத புது சாகசங்களை நாடிச் செல்லும் அதீத கோணங்கித் தனங்களை அவர்கள் கொள்வதை கவனித்திருக்கிறேன். அற்ப விசயங்களுக்காக பெரிய சண்டைகளை இட்டு மூர்க்கமாகிறவர்களை, அதை வருடகணக்காய் நினைவில் வைத்திருப்பவர்களைக் கண்டிருக்கிறேன். பேஸ்புக் வந்த பிறகு பலர் எழுதுவதும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாய் அபுனைவு எழுதும் தயக்கம் பலருக்கும் உடைபட்டிருக்கிறது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மனம் குவித்து அதையே தொடர்ந்து செய்யும் திறனை பலரும் இழந்திருக்கிறார்கள். பேஸ்புக்கில் எழுதியபடியே தாம் ஒரு எழுத்தாளனாய் இயங்க முடியவில்லை என நினைக்கிற பலரையும் கவனிக்கிறேன். அன்றில் இருந்து இன்று வரை நமக்கு ஒரே பிரச்சனை தான் எனத் தோன்றுகிறது - எழுத்து கட்டற்ற ஒன்றுக்கான பாய்ச்சல், ஆனால் இலக்குக்குறி என ஒன்று தெரிந்து போனால் கட்டுண்டு போகிறோம். கட்டை அறுக்க முடியாமல் நாம் அந்த செயலில் இருந்தே பாதியில் இறங்கி செல்கிறோம்.
நீங்கள் ஒரு அபாரமான கவிதையை ஒரு மின்னல் வரியுடன் துவங்குகிறீர்கள், ஆனால் அடுத்தடுத்து இருள் வந்து கவிகிறது. ஒரு பிரமாதமான கதைக்கரு கதையாக வளரும் போது மூட்டமாகி விடக் கூடும்; அல்லது அதை எழுதும் நிகழ்முறை (process) அலுப்பாக சிரமமாக ஒரு கட்டம் வரை இருக்கலாம். நீங்கள் ஒரு நாவல் குறித்து கனவு காண்பதை விட அதை ஒன்றிரண்டு வருடங்கள் சுமப்பது ஆயிரம் மடங்கு அவநம்பிக்கையும் குழப்பங்களும் கூடிய அனுபவம். அது மட்டுமல்ல சுயமதிப்பீடு சார்ந்த நெருக்கடி எழுத்தாள வாழ்க்கையை கொடுமையாக்குகிறது. தன் காதலை வெளிப்படுத்தினால் அதன் அழகு பாழாகி விடும் என எண்ணும் ஒரு பெண்ணைப் போல இருக்கிறான் ஒரு எழுத்தாளன். சிலரோ சில வருடங்கள் தொடர்ந்து நாவல், கதைகள் என உச்சம் தொட்டு விட்டு “கண்டெக்டர் நிப்பாட்டுங்க, ஆள் இறங்கணும்” என கூவி குதித்து இறங்கி ஓடுவிடுவார்கள். அதன் பிறகு அவர்கள் திரும்ப எழுத வந்தாலும் பழைய மும்முரத்துடன் இயங்குவது மிகவும் சிரமம். சிலருக்கு குடும்ப பிரச்சனைகள் இடையூறாகும்.
மற்றொரு காரணமும் உண்டு - எழுத்து அவர்களுடைய ஆர்வங்களில் ஒன்றாக இருக்கும், அது அவர்களை செலுத்தும் ஒற்றை லட்சியமாக இராது. நன்றாகப் பாடுவார்கள், வேலையில் சிறப்பார்கள், ஊர் சுற்றுவார்கள், விளையாடுவார்கள், அதோடு கொஞ்சம் எழுதவும் செய்வார்கள். என்ன பிரச்சனை என்றால் எழுதுவதும் நன்றாகவே இருக்கும். இவர்களிடம் “தினமும் எழுதுங்க, தொடர்ந்து புத்தகங்கள் கொண்டு வாங்க” என்றால் அவர்களுக்கு அது பாரமாக இருக்கும். இத்தகையோர் கொஞ்ச நாள் எழுதி விட்டு வேறேதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கி விட்டு திரும்பவும் பழைய இடத்துக்கே வந்து சேர்வார்கள். இலக்கியத்தோடே இருந்த படி அதில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவிப்பார்கள். நாவல் எழுதும் கலையை கற்பிக்கும் போது நான் இத்தகையோரை மாணவர்களிடம் அதிகமும் காண்கிறேன் - எழுதுவதும் எழுத்தாளனாய் இருப்பதும் இருவேறு விசயங்கள் என அந்த மூத்த எழுத்தாள நண்பர் என்னிடம் குறிப்பிட்டார்.
எழுத்து ஒரு துன்பம் என ஏற்ற பின் அது இன்பமாகிறது. ஆனால் அப்படி ஏற்பது மனித இயல்பல்ல; உடனடி இன்பமளிக்கும் காரியங்களுக்காக செயலாற்றியே நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்படியோ ஏற்றுக் கொண்டு விட்டால் அது நம்மை கட்டற்ற இருப்பாக்குகிறது. ஆனால் கட்டற்றுப் போக ஒவ்வொரு முறையும் நாம் நமது கைகால்களை சங்கிலியால் கட்டிக் கொண்டு எழுத்துக்குள் முடங்கி கிடக்க வேண்டி இருக்கிறது. எழுத்தாளனாய் இருப்பதன் மிகப்பெரிய உள்முரண் இது.
