முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தக வெளியீடும் மணமேடையும்



புத்தக விற்பனையே / அதிக வாசகர்களை அடைவதே உங்கள் இலக்கு எனில் வெளியீடே அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

 எண்பது, தொண்ணூறுகளில் அவை நடக்கவில்லையே. நல்ல புத்தகங்கள் எப்படியும் வாசகனை அடையும். ஜெ.ஜெ சில குறிப்புகள் நாவல் காஸ்மோபொலிட்டன் கிளப்பில் / தேவநேயப்பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டதா?  இல்லையே. இருந்தும் அது இலக்கிய வாசகரிடத்தில் கவனம் பெற்றது. பரவலாக வாசிக்கப்பட்டது.
இன்று வெளியீட்டின் படோடத்தால் உடனடி கவனம் கிடைக்கலாம். ஆனால் அதுவும் அவசியம் அல்ல. இமயத்தின் நாவல்களைப் பாருங்கள். அவை இப்படி வெளியிடப்படாமலே வாசகனை அடைகின்றன. 
நான் சில வெளியீடுகளில் ஐநூறு பேருக்கு மேல் வருவதை ஆனால் கூட்டம் முடியும் போது பத்து புத்தகங்களுக்கு மேல் விற்காததைப் பார்த்திருக்கிறேன். இதன் அர்த்தமெல்லாம் என்ன? 
எழுத்தாளனுக்கு ஆர்வமும் ஆற்றலும் இருந்தால் தொடர்ந்து தன் நூலை முகநூலில் விளம்பரம் பண்ணலாம், அதனால் கூடுதல் புத்தகங்கள் விற்கும். அதனோடு ஒப்பிடுகையில் பெரிய எழுத்தாளர்களை, பேச்சாளர்களைக் கொணர்ந்து புத்தகத்தைப் பற்றி பேச வைப்பதெல்லாம் வீண்! அவர்களின் பேச்சை எழுதி வாங்கி வெளியிட்டால் கூடுதல் விற்பனையாகும். மற்றொரு நல்ல விளம்பரம் விருதுகள் - காலச்சுவடு, உயிர்மை, விகடன், அகாடெமி என எல்லா விருதுகளும் ஊடகத்தில் கவனப்படுத்தப்பட்டால் விற்பனை பெருகும்.
இவ்வளவும் தெரிந்திருந்தும்
நான் என்னுடைய புத்தகங்களுக்கு வெளியீடுகள் நடத்தி இருக்கிறேன்; அண்மையில் நான் கொணர்ந்த மூன்று ஆங்கில நூல்களுக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளேயே வெளியீடு நடத்தினேன். ஹைடெக்கர் புத்தகத்துக்கு சற்று பிரம்மாண்டமாகவே வெளியீடு நடத்தினேன். ஏன்?
வெளியீடுகள் புத்தக விற்பனைக்கானவை அல்ல; எழுத்தாளன் கவனப்படுவதற்கானவை அவை. அதனால் தான் அவன் மேடையில் ஏற்றப்படுகிறான். அவனுக்கு தன் வெளியில், உள்வட்டத்தில் ஒரு அங்கீகாரம் இதனால் கிடைக்கிறது.

 நான் இந்த வெளியீடுகளை மணமேடையுடன் ஒப்புடுவேன்.
 கணவன்/மனைவி அங்கீகாரம் போல ஒன்று எழுத்தாளனுக்கும் இங்கு கிடைக்கிறது. பேச்சாளர் அவனுக்குத் தாலி கட்டுகிறார். அவன் குனிந்து பணிவன்புடன் அதை ஏற்கிறான். நன்றி நவிலுகிறான். பார்வையாளர்கள் கைதட்டி பூத்தூவுகிறார்கள். இது முடிந்த பின் விருந்து இல்லை என்பதால் அவர்கள் மொய் எழுதாமல் போய் விடுகிறார்கள். நிகழ்ச்சி முடிந்த பின் எழுத்தாளனும் அவன் புத்தகமும் தனித்து விடப்படுகிறார்கள். அதைத் தழுவியபடி அவன் அன்றிரவு களைப்புடன் உறங்கிப் போகிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...