புத்தக விற்பனையே / அதிக வாசகர்களை அடைவதே உங்கள் இலக்கு எனில் வெளியீடே அவசியம் இல்லை என நினைக்கிறேன்.
எண்பது, தொண்ணூறுகளில் அவை நடக்கவில்லையே. நல்ல புத்தகங்கள் எப்படியும் வாசகனை அடையும். ஜெ.ஜெ சில குறிப்புகள் நாவல் காஸ்மோபொலிட்டன் கிளப்பில் / தேவநேயப்பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டதா? இல்லையே. இருந்தும் அது இலக்கிய வாசகரிடத்தில் கவனம் பெற்றது. பரவலாக வாசிக்கப்பட்டது.
இன்று வெளியீட்டின் படோடத்தால் உடனடி கவனம் கிடைக்கலாம். ஆனால் அதுவும் அவசியம் அல்ல. இமயத்தின் நாவல்களைப் பாருங்கள். அவை இப்படி வெளியிடப்படாமலே வாசகனை அடைகின்றன.
நான் சில வெளியீடுகளில் ஐநூறு பேருக்கு மேல் வருவதை ஆனால் கூட்டம் முடியும் போது பத்து புத்தகங்களுக்கு மேல் விற்காததைப் பார்த்திருக்கிறேன். இதன் அர்த்தமெல்லாம் என்ன?
எழுத்தாளனுக்கு ஆர்வமும் ஆற்றலும் இருந்தால் தொடர்ந்து தன் நூலை முகநூலில் விளம்பரம் பண்ணலாம், அதனால் கூடுதல் புத்தகங்கள் விற்கும். அதனோடு ஒப்பிடுகையில் பெரிய எழுத்தாளர்களை, பேச்சாளர்களைக் கொணர்ந்து புத்தகத்தைப் பற்றி பேச வைப்பதெல்லாம் வீண்! அவர்களின் பேச்சை எழுதி வாங்கி வெளியிட்டால் கூடுதல் விற்பனையாகும். மற்றொரு நல்ல விளம்பரம் விருதுகள் - காலச்சுவடு, உயிர்மை, விகடன், அகாடெமி என எல்லா விருதுகளும் ஊடகத்தில் கவனப்படுத்தப்பட்டால் விற்பனை பெருகும்.
இவ்வளவும் தெரிந்திருந்தும்
நான் என்னுடைய புத்தகங்களுக்கு வெளியீடுகள் நடத்தி இருக்கிறேன்; அண்மையில் நான் கொணர்ந்த மூன்று ஆங்கில நூல்களுக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளேயே வெளியீடு நடத்தினேன். ஹைடெக்கர் புத்தகத்துக்கு சற்று பிரம்மாண்டமாகவே வெளியீடு நடத்தினேன். ஏன்?
வெளியீடுகள் புத்தக விற்பனைக்கானவை அல்ல; எழுத்தாளன் கவனப்படுவதற்கானவை அவை. அதனால் தான் அவன் மேடையில் ஏற்றப்படுகிறான். அவனுக்கு தன் வெளியில், உள்வட்டத்தில் ஒரு அங்கீகாரம் இதனால் கிடைக்கிறது.
நான் இந்த வெளியீடுகளை மணமேடையுடன் ஒப்புடுவேன்.
கணவன்/மனைவி அங்கீகாரம் போல ஒன்று எழுத்தாளனுக்கும் இங்கு கிடைக்கிறது. பேச்சாளர் அவனுக்குத் தாலி கட்டுகிறார். அவன் குனிந்து பணிவன்புடன் அதை ஏற்கிறான். நன்றி நவிலுகிறான். பார்வையாளர்கள் கைதட்டி பூத்தூவுகிறார்கள். இது முடிந்த பின் விருந்து இல்லை என்பதால் அவர்கள் மொய் எழுதாமல் போய் விடுகிறார்கள். நிகழ்ச்சி முடிந்த பின் எழுத்தாளனும் அவன் புத்தகமும் தனித்து விடப்படுகிறார்கள். அதைத் தழுவியபடி அவன் அன்றிரவு களைப்புடன் உறங்கிப் போகிறான்.
கருத்துகள்