Skip to main content

ஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை? (2)



ஓஷோ, சத்யசாய் பாபா, அமிர்தானந்த மயி துவங்கி நித்தியானதா, ஜக்கி வாசுதேவ், ஶ்ரீஶ்ரீ வரை இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறிய சாமியார்கள், ஆனால் எந்த பக்தனும் இந்த பணம் எப்படி உங்களிடம் வந்தது, ஒரு துறவிக்கு எதற்கு இவ்வளவு சொத்து என வினவவில்லை. இவர்களுக்கு குடும்பமில்லை, இந்த சொத்து முழுக்க ஒரு ஆன்மீக அமைப்புக்கு சொந்தமானது, இந்த அமைப்பு இந்துமதத்தின் பொது சொத்து, இந்துக்களாக தாம் அனைவருக்கும் பொதுவானது, சாமியார் காலமானதும் அது இந்து மதத்துக்குத் திரும்பி விடும் என பக்தர்கள் கற்பனை பண்ணுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையிலும் இதே மனநிலையைத் தான் வெளிப்படுத்தியிருந்தார்; பெரும்படிப்பாளரான, அறிவாளியான ஜெயமோகனாலே கார்ப்பரேட் மதத்தலைவர்களின் பெருஞ்செல்வம் தனிச்சொத்தே அன்றி சமூகத்துக்குப் பொதுவானதல்ல எனும் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் எளிய பாமர மக்களின் கதியை கற்பனை செய்து பாருங்கள். இந்த மேம்போக்கான மரபான பொது உளவியலே தமது பணத்தை, நகைகளை சாமியார்களின் காலடியில் கொண்டு போய் வைக்க இந்த பக்தர்களைத் தூண்டுகிறது. கங்கையில் அஸ்தியைக் கரைப்பதைப் போல அல்லது மூழ்கி தம் பாவங்களைக் கரைப்பதைப் போல இந்த நன்கொடையை அவர்கள் பார்க்கிறார்கள். இந்திய தொல்மனம் குறியீடுகளால் சிந்திக்கக் கூடியது. சாமியார்களின் சொத்துமதிப்பை பகுத்தறிவாளர்கள் விமர்சிக்கும் போது பக்தர்களுக்கு கொலைவெறி வருவதும் இதனாலே.  


நான் தந்துள்ள பட்டியலில் ஒரு பெயர் பொருந்தாமல் பிதுங்கி நிற்கும். ஏற்கனவே கவனித்திருப்பீர்கள் - நமதுஅத்தனைக்கும் ஆசைப்படுஜக்கி தான். அவர் மணமானவர். நானறிந்து அவரது மகள் (அவரும் மணமானவரே) ஆசிரமத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார். பூஜ்யத்தில் இருந்து இன்று ஜக்கி சொந்தமாய் ஹெலிகாப்டரில் வந்திறங்கும், வெளிநாட்டுக் கார்களில் பறக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 1100 கோடி. ஆனால் பக்தர்கள் (நமது தமிழ் எழுத்தாளர்களில் சிலரையும் சேர்த்தே) இதை ஜக்கியின் பணமாகப் பார்ப்பதில்லை. இத்தனைக்கும் அவர் தன்னை மரபான சாமியாராகக் காட்டிக் கொள்வதில்லை. வாழ்க்கையைக் கொண்டாடினால் தப்பில்லை என்பதே அவரது கொள்கை (ஆனால் அவரது ஆசிமரத்தில் துறவிகள் மணமுடிக்கவோ செல்வச்செழிப்புடன் இருக்கவோ கூடாது). ஜக்கியின் வெற்றி ஒன்றைக் காட்டுகிறது - நீங்கள் சாமியாராக இருக்கும்பட்சத்தில் அனைத்தையும் துறக்காவிடிலும், மலைமலையாக பணத்தைக் குவித்து அதன் உச்சியில் கால்மேல் காலிட்டு அமர்ந்து கொண்டாலும் இந்திய மனம் உங்களை ஒரு துறவியாகவே புரிந்து கொள்ளும். ஜக்கியைப் போன்றே சாமியாருக்கும் லௌகீகவாதிக்கும் இடைப்பட்ட வெளியை ஆக்கிரமிக்கும் மற்றொரு பெருந்தலைவர் நமது ஜி


ஜிக்கும் அதானிக்கும் உள்ள பினாமி தொடர்பு வெளிப்படையானது, ஆனால் மக்கள் (1) அவர் திருமணமானாலும் பிரம்மச்சாரி (ஜக்கியைப் போன்றே) என்பதால் அவரது பினாமி சொத்துக்களை, அவரது செல்வசெழிப்பான தோற்றத்தை அவருடைய ஊழலாகப் பார்ப்பதில்லை. (2) அடுத்து ஜக்கியைப் போன்றே ஜி ஒரு இடைநிலை துறவியாகத் தோன்றுகிறார் - அவர் வசம் கோடானுகோடிக்கு சொத்தும் இந்தியாவை நினைத்த போது திகைக்க வைக்கும் சர்வாதிகாரமும் உள்ளது, ஆனால் அவரது பிம்பத்தில் இந்த வளமும் அதிகாரமும் ஒட்டுவதில்லை; அதே போலத்தான், தாமரை இலை நீர்த்துளிகளாக, வழக்கமான அரசியல்வாதி / தலைவர் / பிரதமர் பிம்பம் அவர் மீது ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறது. நான் அவரது பினாமி சொத்துக்குவிப்பு பற்றி பேசும் போதே அதை சுலபத்தில் நிரூபிக்க முடியாது என்றும் புரிந்து கொள்கிறேன் - அவர் தனக்கென மாடமாளிகளைகளை எழுப்புவதில்லை, அவர் தன் நண்பர்களின் மாடமாளிகளைகளில் குடியிருப்பார் (காந்தியைப் போன்று); அவர் சொந்தமாக ஜெட் விமானம் வைத்துக் கொள்வதில்லை, தன் நண்பர்களில் ஜெட் விமானங்களை பயன்படுத்துவார். அவரது மனைவி, சகோதர சகோதரியருடன் அவர் தன் சொத்து, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில்லை. அவரது தாய் இன்னமும் ஒரு எளிய இல்லத்தில்தான் வசிக்கிறார். இது சற்று வினோதம் ஆனால் உண்மை - ஒரு கலைஞனோ, நடிகனோ, ஏன் ஒரு அரசியல் தலைவரோ கூட ஜி செய்ததைப் போல தன் மனைவியை விலக்கி வைத்து அதற்கு தகுந்த காரணத்தை வழங்காமல் இப்படி தனித்து அனாதையாக வாழ விட்டிருந்தால் அதை மக்கள் மன்னித்திருக்க மாட்டார்கள். ஆனால் ஜி மனைவியை தான் விட்டு விலகி வாழ்ந்த காலம் முழுக்க தான் ஒரு துறவியாகதவம்புரிந்து வந்ததாகக் கூறுவதால் மக்கள் உடனே மனம் கனிந்து, நெகிழ்ந்து அவரை வணங்குகிறார்கள். இதுவே ஒருவர் கணவராகவும் சாமியாராகவும் ஒரே சமயம் இருப்பதன் சிறப்பு - நீங்கள் இரண்டிலுமே சீரியஸாக இருக்க வேண்டாம், அவப்பெயர் வராது. ஒரு படத்தில் கவுண்டமணி இப்படி சாமியார் வேடத்தில் ஊர் திரும்பும் ஒரு குடும்பஸ்தன் பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தக் காட்சியைப் பார்த்தால் சிரித்து சிரித்து புரையேறும். நிஜவாழ்வில் இது வேடிக்கை அல்ல மிக சீரியஸான ஒரு விசயம். ஊரில் நான் இத்தகையை மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் - மக்கள் இவர்களை விழுந்து வணங்குவார்கள். ஒரு பணக்காரன் தனது தாயை குடிசையில் வாழ விடுகிறான் என்றால் மக்களை அதை மிகப்பெரிய குரூரம் என நினைப்பார்கள். ஆனால் ஜி அதை செய்யும் போதுஎவ்வளவு அற்புதமான மக்கள் தலைவர் இவர்என நாம் பெருமிதம் கொள்கிறோம், வாழ்த்துகிறோம்

ஆனால் ஜி இதை திட்டமிட்டு செய்வதாய் நான் நம்பவில்லை. இயல்பிலேயே அவருக்கு இது அமைந்து விட்டது. ஜி பிற இந்தியர்களைப் போல அன்றி தன் குடும்ப உறவினர்களுடன் ஒட்டி உறவாடுவதில் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை; ஆரம்பத்தில் தன்னை கரசேவக்காகக் காட்டிக் கொண்டார், பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பு கிடைத்ததும் அதுவாக மட்டுமே தன்னை காட்டிக் கொண்டார். மேடையில் தன் குடும்பத்தினர் அலங்கரிக்கத் தோன்றுவது அவர் வாழ்வில் என்றுமே இருந்ததில்லை. அவர் குஜராத் முதல்வர் ஆன பின்னர், இந்திய பிரதமர் ஆன பின்னர் இதை தன் லௌகீகத் துறவி பிம்பத்தை வளர்க்க மிக சாமர்த்தியமாக பயன்படுத்தினார்; கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் அவர் பதின்வயதிலேயே துறவு மேற்கொண்டு இமயமலையில் ஞானம் தேடித் திரிந்து பின்னர் தேசப்பற்றின் காரணமாக அரசியல் எனும் மற்றொரு துறவுக்கு வந்த கதையை சொல்லாமல் விடுவதில்லை. ஆரம்பத்தில் இருந்தே குடும்பத்துடன், உறவுகளுடன் அவருக்கு உளவியல் ரீதியாக ஒரு ஒவ்வாமை இருந்துள்ளது என நினைக்கிறேன். திருமணமான நிலையில் அவர் தன் மனைவியை கைவிட்டது, எங்குமே அவரைக் குறிப்பிடாமல் இருப்பது ஒருவிதத்தில் அநியாயமே. ஆனால் இந்த அநீதி கூட அவருக்கு அனுகூலமாக மாறியுள்ளது.


இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. என்னுடைய இந்த விளக்கத்துடன் பொருந்திப் போகாத ஒரு அரசியல் ஆளுமை, தலைவர் இருக்கிறார் - மாயாவதி? ஏன் மாயாவதிக்கு தன் படோபமான, சுயமுன்னெடுப்பு அரசியலுக்கு, சொத்து சேர்ப்புக்கு மாயாவதிக்குக் கிடைத்த அவப்பெயர், எதிர்மறை விமர்சனம் ஜிக்கு கிடைப்பதில்லை? ஜெயலலிதாவுக்கும் சசிகலா குடும்பத்துக்குமான தொடர்பே அவர் மீது ஏற்பட்ட மக்கள் கோபத்துக்குக் காரணம் என்றோம். மாயாவதிக்குத் தான் குடும்பமே இல்லையே. ஏன் அவரும் ஜியைப் போல மக்களால் கொஞ்சி சீராட்டப்படுவதில்லை? இங்கு தான் ஜி வெறுமனே ஒரு பிரம்மச்சாரி அல்ல அவர் கிட்டத்தட்ட ஒரு சாமியாராக பார்க்கப்படுகிற மதத்தலைவர் என்பதை கவனிக்க வேண்டும். மாயாவதி ஒருவேளை தன்னை அமிர்தானந்த மயியைப் போல வடிவமைத்திருந்தால் அவர் தன்னுடைய ஆயிரம் சிலைகளை .பி எங்கும் நிறுவினாலும், வைர மாலைகள் கழுத்தெங்கும் அணிந்து கொண்டாலும் மக்கள் அதை கேள்வின்றி, விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (என்ன, அது தலித் அரசியலை சாக்கடையில் தள்ளியிருக்கும்!)


இதிலிருந்து எதிர்கால அரசியல் தலைவர்கள் பெற்றுக் கொள்ள ஒரு முக்கிய பாடம் உள்ளது

1) ஊழல் செய்வது, அதிகாரத்தைக் குவிப்பது, பல்வேறு குற்றங்களுக்குத் துணை போவது இன்றைய கார்ப்பரேட்மய அரசியல் களத்தில் தவிர்க்க முடியாதது; ஆனால் திருமணம் செய்யாதீர்கள். கட்சிகள் தமது எதிர்காலத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் பிரம்மச்சாரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

2) மணமானவர் என்றால் குடும்பத்துடன் பொதுவெளியில் காட்சி அளிப்பது, தான் பெருக்கின சொத்தை, தனது செல்வாக்கை அவர்கள் பகிங்கரமாய் பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள் (நேருவில் இருந்து மன்மோகன் சிங், கேஜ்ரிவால் வரை பல உதாரணங்கள்).

3) அப்படியே ஒரு குடும்ப வாரிசாக நீங்கள் இருந்தால் நேரடி அரசியல் களத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் ஆட்சியில் இருக்க விரும்பும் காலம் வரை உங்கள் சொந்த நிறுவனங்கள், சொத்துக்களை வெளிப்படையாக நிர்வகிக்க உங்கள் மனைவி, குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்

4) ஒரு கார்ப்பரேட் சாமியாருடன் கைகோர்த்து உங்களை ஒரு கடவுள் அவதாரமாக கட்டமையுங்கள். அதன் பின் நீங்கள் என்ன செய்தாலும் மக்கள் கைகொட்டி / கைவணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.


நம் மக்களுக்கு ஊழல் ஒரு பிரச்சனையே அல்ல, குடும்பம் மட்டுமே! கண்ணதாசன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார் - “மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்!” அவ்வாக்கை பின்பற்றி நீங்கள் தெய்வமாகி விட்டால் முறையற்ற சொத்து, தவறான நிர்வாகம், குடும்ப அரசியல் கூட மக்களுக்கு பொருட்டாக இருக்காது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...