அண்மையில் ஜார்ஜ் பிளாயிட் எனும் கறுப்பர் அமெரிக்காவில் சந்தேகத்தின் போலீசாரால் சிலரால் பெயரில் சாலையில் கிடத்தி கழுத்து நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் பலத்த கண்டனத்தை, எதிர்ப்பை அமெரிக்காவில் ஏற்படுத்த, பெருமளவில் ஒடுக்கப்பட்ட மக்களும் சில வெள்ளையர்களும் கூட போலீஸ் ஒடுக்குமுறைக்கும் இனவாத கலாச்சாரத்துக்கும் எதிராக சாலையில் திரண்டு போராடினர். இந்த போராட்டம் ஒரு நெருப்பாற்றைப் போல அமெரிக்கா எங்கும் சுழித்தோடியது. இதை பயன்படுத்தி மக்கள் டிரம்ப் அரசின் மீதான தமது கோபத்தை முழுக்க வெளிப்படுத்தினார்கள் என நினைக்கிறேன். மக்கள் திரளின் எதிர்ப்புணர்வை சமாளிக்கத் தெரியாமல் அரசு நிர்வாகம் திகைத்து நின்று விட்டது. இப்போது காவல்துறை ஒரு புது உத்தியை கையில் எடுத்துள்ளது: நேற்று ஒரு வினோதமான சேதியைப் படித்தேன் - காவலர்களில் பலர், அதிலும் கணிசமான வெள்ளை காவலர்கள், காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் என. இது ஏன்?
இது காவல்துறையின் ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கவே வாய்ப்பதிகம். இப்போது அதிகார வர்க்கம் - ஒடுக்கப்படும் வர்க்கம் எனும் இருமை உடைந்து விடுகிறது. நீங்கள் எதிரியை கண்டித்த்து போராடும் போது எதிரியே வந்து உங்களுடன் கைகோர்த்து நின்றால் போராட்டம் நீர்த்துப் போய் விடுமல்லவா? ஆனால் இந்த ‘எதிரி’ ஒருபோதும் தன் அமைப்பின் சீர்கேடுகளை ஏற்கவோ கண்டிக்கவோ மாட்டான். தன் குற்றங்களை அங்கீகரிக்காமலே அது தனக்கு அப்பாலான ஒரு சமூகக்குற்றம் போல பாசாங்கு பண்ணி அவன் தன் கைகளைக் கழுவிக் கொள்வான். இதை ஏற்கனவே நமது ஓ.பி.எஸ்ஸின் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நுட்பமாக நிகழ்த்தி வெற்றி பெற்றது - ஒரு பக்கம் தொடர்ந்து பல வாரங்கள் போலீசைக் கொண்டு போராட்டத்துக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளித்து விட்டு ஒருநாள் அதே போலீசினால் போராட்டக்காரர்களை அடித்து துரத்தினார்கள். போலீஸ் உங்கள் மத்தியில் வந்து நின்று ஆதரவு தரும் போது உங்கள் போராட்ட நோக்கம் நீர்த்து விடுகிறது. இப்போது - போலீசும் திருடனும் ஒரே ஆள். ஒருநாள் போலீசின் தோளில் கைபோட்டுக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறீர்கள், மாநில அரசு உங்கள் பக்கம் நிற்பதாக நம்புகிறீர்கள், அடுத்த சில தினங்களில் அதே போலிசால் அடுத்து மண்டை உடைக்கப்படும் போது நாம் இதுவரை யாரை எதிர்த்து யாருடன் நின்றோம் எனக் குழம்புகிறீர்கள். ஒரு மக்கள் எழுச்சி அரசின் ஆதர்வுடன் நடந்து ஒரே நாளில் இல்லாமல் செய்யப்படும் போது அம்மக்கள் போராட்டத்தில் நம்பிக்கை இழக்கிறார்கள்.
மோடிஜி இதை ஒரு பெரும் பிரச்சார உத்தியாக மாற்றியவர் - “நந்தா” படத்தில் சூர்யா தன் அம்மா கையால் விஷம் கலக்கப்பட்ட சோற்றை வாங்கி தின்னும் போது இப்படி கொல்லுவதும் தன் அம்மாவின் பாசமே என எண்ணி கலங்குவார். நம்முடைய ஜி எளிய மக்களை கோவணத்தை உருவி தெருவுக்குத் துரத்தினாலும், எவ்வளவுதான் சோற்றில் விஷம் கலந்தாலும் அவர்களுக்கு அது ஜியின் பரிசுத்தமான பாசமாகவே தெரியும்.
பின்நவீன எதிரி இப்படித்தான் இருப்பான் - அவனை எந்த அடையாளத்துக்குள்ளும் சிக்கி வைக்க முடியாது. விரலை சூண்டினால் சாம்பலாகும் வரத்தைத் தந்து அவ்விரலை நம்மை நோக்கியே சூண்ட வைப்பான்.

கருத்துகள்