இருவிதமான இருப்புகள் - Being vs being:
Being என்பதை தமிழில் நாம் இருப்பு என மொழியாக்கினாலும் ஹைடெக்கரின் தத்துவத்தில் ஒரு சிக்கல் வருகிறது. அவர் தனது கட்டுரைகளில் இரண்டு விதமான beings பற்றிப் பேசுகிறார்: ஒன்று சிறிய b வருகிற being, மற்றொன்று பெரிய B. 1) being - பல்வேறு பொருட்களின் இருப்புகள், பல்வேறு இடங்களில் காலங்களில் நமது இருப்புகள். 2) Being - இதையெல்லாம் மொத்தமாய் வைத்து உலகில் நமது இருப்பு என ஒரு இருப்பை வகைப்படுத்துகிறார். இது Being. ஆனால் இது ஒரு தனித்த மீபொருண்மை நிலை அல்ல (நமது ‘பரம்பொருளைப்’ போல), மாறாக உலகு, அதிலுள்ள பொருட்கள் மற்றும் உயிர்கள், அவை இருக்கும் காலம் ஆகியவற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத இருப்பே இந்த Being.
ஹைடெக்கர்: மரணத்தின் இருப்பு
மரணம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அதுவரையில் யாருமே கற்பனை செய்திராதவை. “மரணம் என்பது முடிவல்ல, அதுவே இருப்பு” என அவர் கருதியதை எப்படிப் புரிந்து கொள்வது? மரணத்தில் இருந்தே வாழ்வு துவங்க முடியும் என அவர் ஏன் சொன்னார்?
ஒரு குழந்தை பிறக்கும் போதே மரணத்தை நோக்கித் தான் பிறக்கிறது - அதாவது குழந்தை + எனும் குறியிடும் அல்ல — எனும் குறியுடனே பிறக்கிறது. அது வளர வளர அதற்கான காலம் குறைந்தபடியே போகிறது. அதாவது ஒரு இடத்துக்குப் பயணிக்கும் போது துவக்கத்திலேயே பாதி பணத்தை செலவழித்து விடுகிறோம். இனி பாதி பணத்தைக் கொண்டு சிக்கனமாகவே வாழ வேண்டும். ஆனால் இந்த பணம் எவ்வளவு நாட்கள் வரும் எனத் தெரியவில்லை, தினம் தினம் அந்த பயத்துடனே வாழ நேர்கிறது. இதை outstanding being என ஹைடெக்கர் குறிப்பிடுகிறார். அதாவது கடனாகப் பெற்ற இருப்பு. முழுமையற்ற நமது இருப்பு நமது பெரும் சுமையாக இருக்கிறது. மரணத்துடனாவது அது முழுமை பெறுமா?
ஆம் முழுமை பெறும், ஆனால் அப்போது நம் வாழ்க்கை, நமது இருப்பு முடிந்து போகும், நமது முழுமையை அனுபவிக்க, அதன் இருப்பில் இருக்க நாம் இருக்க மாட்டோம். இந்த முரணை ஹைடெக்கர் தனது The Possibility of Experiencing the Death of Others and the Possibility of Grasping Da-stein as a Whole எனும் கட்டுரையில் அற்புதமாக விளக்குகிறார்.
இந்த கட்டுரையின் இறுதிப் பகுதியில் அவர் மனிதன் தன் மரணத்தின் முழுமையின்மையை உணர்ந்து அதனால் தொந்தரவுக்கு உள்ளாவதாலே ஈமச்சடங்குகளுக்கு இவ்வளவு இடமளிக்கிறான் எனச் சொல்கிறார் - தன்னால் அனுபவிக்க முடியாத மரணத்தின் பயணத்தை அவன் நாடகமாக்கி, ஒரு சடங்காக்கி நிகழ்த்துகிறான், அதில் பங்கேற்று தன் வாழ்க்கைக்கு ஒரு முழுமையை உண்டு பண்ண முயல்கிறான்.
ஹைடெக்கர் காலத்தை எப்படிப் பார்க்கிறார்?
காலம் என்பதை பிளேட்டோவுக்குப் பின்பு, பிளேட்டோவுக்கு முன்பு என ஹைடெக்கர் பிரித்துக் கொள்கிறார். காலத்துக்கு ஒரு சாரத்தை, ஒரு முற்றுமுழுமையை, தொடர்ச்சியை அளிக்கும் போது பிற்கால கிரேக்க தத்துவத்திலே துவங்குகிறது. ஆனால் ஆரம்ப கால கிரேக்கர்கள் காலத்தை தமது இருப்பின் ஒரு பகுதியாக (தமக்கு வெளியே அல்ல) பார்த்தார்கள். மேலும் ஆதி கிரேக்க மொழியில் முற்காலம், சமகாலம், எதிர்காலம் எனும் பகுப்பு இல்லை, அவர்கள் அதிகமும் தொடர்வினையைக் (continuous tense) கொண்டே பேசினார்கள் என ஹைடெக்கர் ஒரு இடத்தில் சொல்கிறார். பழங்கால கிரேக்கத்தில் ஒருவர் நடக்க மாட்டார், நடந்தபடியே இருப்பார், சிரிக்க மாட்டார், சிரித்தபடியே இருப்பார். இது கேட்க விளையாட்டுத்தனமாக இருந்தாலும் இதில் பொருள் உண்டு - சிறு தருணங்களிலே நமது இருப்பு உள்ளது, அப்போது நான் இருந்து கொண்டிருக்கிறோமே ஒழிய ‘இருப்பது’ இல்லை. ஹெராக்ளிடஸின் மேற்கோளான “நீங்கள் ஒரே நதியில் திரும்ப கால் வைப்பதில்லை” என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
காலம் இப்படி ஒவ்வொரு கணத்துக்கும் முழுமையானதாக இருப்பதாலே நம்மால் அதைக் கடந்து இருப்பை அறிய முடிவதில்லை என ஹைடெக்கர் சொல்கிறார் - இதை ஹைடெக்கர் நோக்குக்கு நாம் எப்படி சிரிக்கிறோம் என்பதை வைத்து விளக்குகிறார். ஒரு ஜோக்கைக் கேட்டு அதைப் பரிசீலிக்க “நேரம்” இல்லாததாலே சிரிக்கிறோம், யோசிக்க நேரமிருந்தால் சிரிக்க மாட்டோம்.
Comments