Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா?


நான் ஒரு எழுத்தாளனே. சாரு குறிப்பிடும் அதே தீவிர இலக்கிய மரபை சேர்ந்தவன். ஆனால் நான் ‘தீவிர எழுத்தாளனாக’ ஒரே முகத்தைப் புனைந்து கொண்டிருப்பதை விரும்பவில்லை. எஸ்.பி.பிக்காக மட்டுமல்ல நாளை ஹரிஹரன் காலமானாலும் நான் மனம் உடைந்து போவேன்.



 ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் மூடி மறைத்தார்கள், ஆனால் இன்று அதற்கான தேவையில்லை என நினைக்கிறோம். எந்த வெகுஜனத் தோய்வும் இன்றி ஒரு எழுத்தாளன் இருக்க முடியும் என நான் நம்பவில்லை. 


 என்னைப் போன்றே இன்றைய எழுத்தாளர்களும், இன்றும் எழுதும் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் யோசிக்கிறார்கள். தீவிரமும் வெகுஜன மனப்பான்மையும் அதனளவில் சாராம்சமவற்றவை எனும் எண்ணம் எனக்குள்ளது. ஒன்றை எடுத்து அணிந்து அலுப்பானால் இன்னொன்றை ஏன் சற்று நேரம் அணியக் கூடாது?

அண்மையில் ஒரு நண்பர் உயிர்மை முன்பு ராஜேஷ் குமார் நாவல்களை வெளியிட்டதைக் குறிப்பிட்டது உலகம் கெட்டுப் போய் விட்டது எனப் புலம்பினார். அப்படியெல்லாம் இலக்கியத் தீண்டாமையை, கடும்போக்கை, தூய்மைவாதத்தை ஏன் பின்பற்ற வேண்டும் என எனக்குத் தோன்றியது.


 வெகுமக்கள் மொழிக்கும் அதற்கான விளையாட்டுத்தனமான அழகு உள்ளது - ஒரு குழந்தை அநிச்சையாக மூக்கை உறிஞ்சுவதைப் போல. அதிலிருந்து ஒன்றை எடுத்து இலக்கியப் பிரதியில் பரிசோதனை பண்ணிப் பார்க்கலாமா என நினைப்பேன். சுரேஷ் குமார் இந்திரஜித் ஒரு திரைப்பாடலை டிவியில் பார்த்த போது கிடைத்த தூண்டுதலில் ஒரு நல்ல கதை எழுதியிருக்கிறார். இசை வெகுஜன மரபில் இருந்து கிடைத்த குறிப்புகளைக் கொண்டு சிறப்பான கவிதைகளைப் படைத்திருக்கிறார். மனுஷ்யபுத்திரனும் செய்திருக்கிறார்.

 அதை விடுங்கள் ஒரு நாளிதழில் வரும் மணமகன் தேவை விளம்பரம் கூட படிக்க சுவாரஸ்யமாக, கற்பனையைக் கிளறுவதாக இருக்கிறது. இன்று கூட ஒன்றைப் படித்தேன் - அதில் “30 வயதான ஆதரவற்ற பெண்ணுக்கு” என ஒரு பிரயோகம்; அதன் பொருள் என்ன? ஏழையா? இளமையைக் கடந்து விட்ட என்றா? அடங்கிப் போகிற பெண் என்றா? ஆனால் இந்த பூடகத்தன்மை நிறைய யோசிக்க வைப்பது. 


ஒரு கவிஞனுக்கு இது போதும், ஒரு நல்ல கவிதையை எழுத.


 மொழியை நான் இப்படித்தான் பார்க்கிறேன். மொழிக்குள் வருகிற ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது; அதன் படி செயல்படுகிறார்கள்; ஒரு வாசகன் அனைத்தையும் படித்துக் கடக்க வேண்டும். அப்போதே வாசிப்பு அட்டகாசமாக இருக்கும்.

 வெகுஜன இசையையும், எஸ்.பி.பியுடனான மனப்பிணைப்பையும் நான் இப்படித்தான் பார்க்கிறேன். அவர் போனதும் என் கண்கள் ஈரமாகின்றன என்றால் ஆகி விட்டுப் போகட்டுமே. அதிலென்ன தவறு? அதை மறைத்தால் தான் தவறு. நான் சினிமாப் பாடல்களைக் கேட்டுக்கொண்டு தான் புனைவெழுதுவேன். நான் கேட்பதற்கும் எழுதுவதற்கும் துளியும் சம்மந்தம் இராது. ஆனால் அந்த இசை தான் - கர்நாடக சங்கீதம் அல்ல - எனக்கு மனக்குவிப்பை வழங்குகிறது. 


இப்படி வெகுஜன ரசனையுடன் இருந்தால் எழுத்தாளனின் தீவிரம் போய் விடுமா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன். சுத்தமாக உலகக் கவிதை பரிச்சயமே இல்லாமல் அதற்கு இணையான அற்புதமான கவிதைகளை தமிழில் எழுதுகிறவர்களை எனக்குத் தெரியும். உலக இலக்கியத்தை கரைத்து குடித்தாலும் தனித்துவமாக,ஆழமாக எழுதத் தெரியாதவர்களையும் தெரியும். நல்ல எழுத்து எந்தவிதமான வாழ்க்கை நிலைபபாடுகள், கொள்கைகள், ரசனை, நுண்ணுணர்வில் இருந்தும் தோன்றலாம் எனத் தோன்றுகிறது.


அதே நேரத்தில் சாருவின் இந்த விமர்சனத்தின் நியாயத்தையும் புரிந்து கொள்கிறேன். மொத்த தமிழ்கூறு நல்லுலகமே ஒரு வெகுஜனப் பாடகனுக்காக அழுகையில் இது அவசியமில்லை, இதை விட மேலான இசையை நோக்கி அவர்கள் ஏன் செல்லக் கூடாது என அவர் கேட்பது ஒரு முக்கியமான கேள்வி. இப்படி இடித்துரைப்பவர்களும் நமக்கு அவசியம் அல்லவா! இந்த வெகுமக்கள் மனப்பான்மையை வரிப்பதை ஒரு விளையாட்டு என்றல்லாமல் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு நாம் மூழ்கி விடவும் வாய்ப்புண்டு. சாரு நமக்கு அப்போது தோளில் தட்டி துயிலெழுப்பும் தயக்கமற்ற குரலாக இருக்கிறார். நாம் ஒரு கத்தி என்றால் அது மழுங்கி விடாதிருக்க உதவுகிறவர் சாரு. ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் நாம் சொல்வது என்றால் மறுபக்கம் அவர் சொல்வது.


சாருவைப் போன்றே ஸ்டிரிக்ட் ஆபீசர் எழுத்தாளராக இருப்பவர் ஜெ.மோ மட்டுமே. அவர் தன்  வீட்டில் டிவியில் சினிமாப் பாடல்களைப் போட மாட்டார், அவை சுத்த அபத்தம் என என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார். மதுக்கொண்டாட்டம், கூத்து, கூப்பாடு எதுவும் அவரது வாழ்வில் இல்லை. ஆனால் சாரு சற்று வித்தியாசமானவர் - அவர் நாளை இப்போது சொல்லியிருப்பதற்கு நேர்மாறாக நடந்து கொள்வார். அவருக்கு என ஒரு நிலையான சிந்தனை, அணுகுமுறை இல்லை. இதை நான் ஒரு நேர்மறையான, அழகான அம்சமாகவே பார்க்கிறேன். சாரு ஒழுகிச் செல்லும் ஒரு நதி. மழைபெய்தால் கலங்கலாகத் தோன்றும், மற்றொரு நாள் தெளிவாக சுழித்தோடும். இரண்டுமே நதி இல்லை. இரண்டுமே சாரு இல்லை.


 இதுவே சாருவுக்கும் ஜெமோவுக்குமான வித்தியாசம். இதனாலே நாம் சாருவை நேசிக்கிறோம்!

Comments

Mahesh said…
உங்கலது பார்வை அருமை.

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்