Skip to main content

ஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா?


நான் ஒரு எழுத்தாளனே. சாரு குறிப்பிடும் அதே தீவிர இலக்கிய மரபை சேர்ந்தவன். ஆனால் நான் ‘தீவிர எழுத்தாளனாக’ ஒரே முகத்தைப் புனைந்து கொண்டிருப்பதை விரும்பவில்லை. எஸ்.பி.பிக்காக மட்டுமல்ல நாளை ஹரிஹரன் காலமானாலும் நான் மனம் உடைந்து போவேன்.



 ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் மூடி மறைத்தார்கள், ஆனால் இன்று அதற்கான தேவையில்லை என நினைக்கிறோம். எந்த வெகுஜனத் தோய்வும் இன்றி ஒரு எழுத்தாளன் இருக்க முடியும் என நான் நம்பவில்லை. 


 என்னைப் போன்றே இன்றைய எழுத்தாளர்களும், இன்றும் எழுதும் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் யோசிக்கிறார்கள். தீவிரமும் வெகுஜன மனப்பான்மையும் அதனளவில் சாராம்சமவற்றவை எனும் எண்ணம் எனக்குள்ளது. ஒன்றை எடுத்து அணிந்து அலுப்பானால் இன்னொன்றை ஏன் சற்று நேரம் அணியக் கூடாது?

அண்மையில் ஒரு நண்பர் உயிர்மை முன்பு ராஜேஷ் குமார் நாவல்களை வெளியிட்டதைக் குறிப்பிட்டது உலகம் கெட்டுப் போய் விட்டது எனப் புலம்பினார். அப்படியெல்லாம் இலக்கியத் தீண்டாமையை, கடும்போக்கை, தூய்மைவாதத்தை ஏன் பின்பற்ற வேண்டும் என எனக்குத் தோன்றியது.


 வெகுமக்கள் மொழிக்கும் அதற்கான விளையாட்டுத்தனமான அழகு உள்ளது - ஒரு குழந்தை அநிச்சையாக மூக்கை உறிஞ்சுவதைப் போல. அதிலிருந்து ஒன்றை எடுத்து இலக்கியப் பிரதியில் பரிசோதனை பண்ணிப் பார்க்கலாமா என நினைப்பேன். சுரேஷ் குமார் இந்திரஜித் ஒரு திரைப்பாடலை டிவியில் பார்த்த போது கிடைத்த தூண்டுதலில் ஒரு நல்ல கதை எழுதியிருக்கிறார். இசை வெகுஜன மரபில் இருந்து கிடைத்த குறிப்புகளைக் கொண்டு சிறப்பான கவிதைகளைப் படைத்திருக்கிறார். மனுஷ்யபுத்திரனும் செய்திருக்கிறார்.

 அதை விடுங்கள் ஒரு நாளிதழில் வரும் மணமகன் தேவை விளம்பரம் கூட படிக்க சுவாரஸ்யமாக, கற்பனையைக் கிளறுவதாக இருக்கிறது. இன்று கூட ஒன்றைப் படித்தேன் - அதில் “30 வயதான ஆதரவற்ற பெண்ணுக்கு” என ஒரு பிரயோகம்; அதன் பொருள் என்ன? ஏழையா? இளமையைக் கடந்து விட்ட என்றா? அடங்கிப் போகிற பெண் என்றா? ஆனால் இந்த பூடகத்தன்மை நிறைய யோசிக்க வைப்பது. 


ஒரு கவிஞனுக்கு இது போதும், ஒரு நல்ல கவிதையை எழுத.


 மொழியை நான் இப்படித்தான் பார்க்கிறேன். மொழிக்குள் வருகிற ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது; அதன் படி செயல்படுகிறார்கள்; ஒரு வாசகன் அனைத்தையும் படித்துக் கடக்க வேண்டும். அப்போதே வாசிப்பு அட்டகாசமாக இருக்கும்.

 வெகுஜன இசையையும், எஸ்.பி.பியுடனான மனப்பிணைப்பையும் நான் இப்படித்தான் பார்க்கிறேன். அவர் போனதும் என் கண்கள் ஈரமாகின்றன என்றால் ஆகி விட்டுப் போகட்டுமே. அதிலென்ன தவறு? அதை மறைத்தால் தான் தவறு. நான் சினிமாப் பாடல்களைக் கேட்டுக்கொண்டு தான் புனைவெழுதுவேன். நான் கேட்பதற்கும் எழுதுவதற்கும் துளியும் சம்மந்தம் இராது. ஆனால் அந்த இசை தான் - கர்நாடக சங்கீதம் அல்ல - எனக்கு மனக்குவிப்பை வழங்குகிறது. 


இப்படி வெகுஜன ரசனையுடன் இருந்தால் எழுத்தாளனின் தீவிரம் போய் விடுமா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன். சுத்தமாக உலகக் கவிதை பரிச்சயமே இல்லாமல் அதற்கு இணையான அற்புதமான கவிதைகளை தமிழில் எழுதுகிறவர்களை எனக்குத் தெரியும். உலக இலக்கியத்தை கரைத்து குடித்தாலும் தனித்துவமாக,ஆழமாக எழுதத் தெரியாதவர்களையும் தெரியும். நல்ல எழுத்து எந்தவிதமான வாழ்க்கை நிலைபபாடுகள், கொள்கைகள், ரசனை, நுண்ணுணர்வில் இருந்தும் தோன்றலாம் எனத் தோன்றுகிறது.


அதே நேரத்தில் சாருவின் இந்த விமர்சனத்தின் நியாயத்தையும் புரிந்து கொள்கிறேன். மொத்த தமிழ்கூறு நல்லுலகமே ஒரு வெகுஜனப் பாடகனுக்காக அழுகையில் இது அவசியமில்லை, இதை விட மேலான இசையை நோக்கி அவர்கள் ஏன் செல்லக் கூடாது என அவர் கேட்பது ஒரு முக்கியமான கேள்வி. இப்படி இடித்துரைப்பவர்களும் நமக்கு அவசியம் அல்லவா! இந்த வெகுமக்கள் மனப்பான்மையை வரிப்பதை ஒரு விளையாட்டு என்றல்லாமல் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு நாம் மூழ்கி விடவும் வாய்ப்புண்டு. சாரு நமக்கு அப்போது தோளில் தட்டி துயிலெழுப்பும் தயக்கமற்ற குரலாக இருக்கிறார். நாம் ஒரு கத்தி என்றால் அது மழுங்கி விடாதிருக்க உதவுகிறவர் சாரு. ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் நாம் சொல்வது என்றால் மறுபக்கம் அவர் சொல்வது.


சாருவைப் போன்றே ஸ்டிரிக்ட் ஆபீசர் எழுத்தாளராக இருப்பவர் ஜெ.மோ மட்டுமே. அவர் தன்  வீட்டில் டிவியில் சினிமாப் பாடல்களைப் போட மாட்டார், அவை சுத்த அபத்தம் என என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார். மதுக்கொண்டாட்டம், கூத்து, கூப்பாடு எதுவும் அவரது வாழ்வில் இல்லை. ஆனால் சாரு சற்று வித்தியாசமானவர் - அவர் நாளை இப்போது சொல்லியிருப்பதற்கு நேர்மாறாக நடந்து கொள்வார். அவருக்கு என ஒரு நிலையான சிந்தனை, அணுகுமுறை இல்லை. இதை நான் ஒரு நேர்மறையான, அழகான அம்சமாகவே பார்க்கிறேன். சாரு ஒழுகிச் செல்லும் ஒரு நதி. மழைபெய்தால் கலங்கலாகத் தோன்றும், மற்றொரு நாள் தெளிவாக சுழித்தோடும். இரண்டுமே நதி இல்லை. இரண்டுமே சாரு இல்லை.


 இதுவே சாருவுக்கும் ஜெமோவுக்குமான வித்தியாசம். இதனாலே நாம் சாருவை நேசிக்கிறோம்!

Comments

உங்கலது பார்வை அருமை.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...