பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கிய பிரிட்டிஷ் அரசு மற்றொரு அரசியலையும் செய்தது. பழத்துக்குள் ஊசியைப் போல அவர் ஒரு விஷம்பாம்பை உருவாக்கி நம் மத்தியில் உலக விட்டனர். அந்த பாம்பைக் கொண்டு இந்தியர்களின் பன்மைத்துவத்தை ஒழித்து இந்து-முஸ்லீம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தினர். இந்த விஷப்பாம்பு தான் இந்தி. அந்த பாம்பின் தாய் தான் மேற்சொன்ன கில்கிறிஸ்ட்.
கில்கிறிஸ்ட் (1759-1841) ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். அவர் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ மருத்துவராக இந்தியாவுக்கு வந்தார். வந்தவருக்கு ஹிந்துஸ்தானி மொழி வகைமைகளில் ஆர்வம் தோன்ற அவற்றில் ஆய்வு செய்ய 1785இல் ஒரு வருடம் விடுப்புக்கு விண்ணப்பித்து இரு வருடங்களில் அனுமதி பெற்றார். அதன் பிறகு அவர் ராணுவ சேவைக்குத் திரும்பாமல் முழுநேர மொழியியலாளரானார், தீவிர ஹிந்துஸ்தானி ஆய்வாளராகி 1790இல் ஹிந்துஸ்தானி-ஆங்கில அகராதி ஒன்றை பிரசுரித்தார். வெள்ளை ஆட்சியாளர்கள் இடையே அவர் ஹிந்துஸ்தானி குறித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். ஹிந்துஸ்தானியில் சமிஸ்கிருத கலப்புடன் இந்துக்களுக்கு ஒரு தனி மொழியும், பாரசீகக் கலப்புடன் இஸ்லாமியருக்கு உருது மொழியையும் உருவாக்கி நிறுவுவது அவரது நோக்கமாக இருந்தது. இப்படி இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் தனித்தனி மொழிகளை உருவாக்கி அதிகாரபூர்வமாய் கற்பிப்பது இந்த மதத்தவர்கள் இடையில் வேற்றுமையை, பிளவை உண்டு பண்ண உதவும் என அன்றைய பிரிட்டிஷ் தலைமை நிர்வாகிகள் நம்பினர். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் கில்கிறிஸ்துக்கு கொல்கொத்தாவில் இந்தியை உருவாக்குவதற்கு என ஒரு கல்லூரியை நிறுவுவதற்கு நிதியளிக்க முடிவு செய்தனர். இப்படியே Gilchrist Ka Madrasa தோற்றுவிக்கப்பட்டது. இது 1800இல் Fort William College என விரிவடைந்தது. இங்கு கில்கிறிஸ்ட் இந்தியின் இலக்கண விதிகள், சொற்களஞ்சியம், பேச்சு மற்றும் எழுத்து மொழிகளை உருவாக்க பாடுபட்டார். தனக்கு உதவ அறிஞர்களை நியமித்தார். லாலுலால் எனும் எழுத்தாளர் “பிரேம்சாகர்” என்ற பிரபலமான இந்தி நூலை எழுதி பிரசுரிக்கக் காரணமானவரும் கில்கிறிஸ்டே. இவர் போர்ட் வில்லியம் கல்லூரியின் முதல்வராக இருந்த காலகட்டத்தை இந்தி மொழியின் துவக்க பொற்காலம் என்கிறார்கள்.
அடுத்து நூற்றைம்பது வருடங்களில் இந்திய சுதந்திர போராட்டம், காந்தி, நேரு, இந்திய சுதந்திரத்துக்குப் பின்பான வடக்கிந்தியா சார்பான அரசியல் ஆகியவற்றுக்கு கில்கிறிஸ்டின் இந்த கண்டுபிடிப்பு வெகுவாக உதவியது. இந்தி காங்கிரஸ் தலைவர்களுக்கு மொத்த இந்தியாவையும் ஒரு மொழியின் வழி திரட்ட பயன்பட்டது. 1937இல் மகாத்மா காந்தியின் தலைமையில் வார்தா கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் உருதுவும் இந்தியும் கலந்து பேசப்பட்ட ஹிந்துஸ்தானி மொழியை தேசிய அளவில் முன்னெடுக்க வேண்டும், அது தேசத்தின் ஒற்றுமைக்கு உதவும் என காங்கிரஸ் தலைமை தன் முடிவை தெரிவித்தது (இது இந்தி அல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும்). வரப்போகும் பத்தாண்டுகளில் எப்படியும் இந்தியாவுக்கு தன்னாட்சி அமையும், அப்போதே காங்கிரசே ஆளும் என்பது தெரிந்திருந்த நிலையில் இதை எதிர்காலத்துக்கான ஒரு மொழித் திட்ட வரைவு என அவர்கள் கருதி இருக்கலாம். ஆனால் முஸ்லீம் லீக் இதை எதிர்த்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. இது ஹிந்துஸ்தானி ஒரு வாழும் மொழி அல்ல, மாறாக உருதுவை ஏற்றுக் கொள்ளலாம் என்றது. அதாவது காந்தியின் முகாமை சேர்ந்தவர்கள் காலனியவாதிகளின் குழந்தையான இந்தி-உருதுவை விடுத்து, அதற்கு முன்பே இருந்த ஹிந்துஸ்தானிக்கு ஆதரவு திரட்ட முயல, காங்கிசாரின் இந்துப் பெரும்பான்மைவாதத்தை நம்பாத முஸ்லீம் லீகினர் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த உருதுவே தமக்கான மொழி எனும் இடத்தை எடுத்துக் கொண்டனர். இப்படி இந்த மோதல் காலனிய எதிர்ப்பு-சார்பு எனும் வினோதமான எதிரிணையை வந்தடைந்தது. ஆனால் தேசப்பிரிவினை நடந்து பாகிஸ்தான் தோன்றிய பின்னர் காங்கிரஸ் தன் மீதுள்ள இந்துப்பெரும்பான்மைவாத குற்றச்சாட்டைப் பற்றி கவலைப்படாமல் மூச்சு விடும் நிலையை எட்டியது. இப்போது வேறொரு சிக்கல் தேசிய மொழி சர்ச்சையில் தோன்றியது. பிரிவினை வன்முறையின் விளைவாக வடக்கிந்திய மாநிலங்களில் குறிப்பாக இஸ்லாமிய எதிர்ப்பு அலை வீசியது. ஹிந்துஸ்தானி என்பது இந்து-முஸ்லீம் இருமை இல்லாத ஒரு கலவை மொழி, அதை அனைத்துத் தரப்பினரும் வடக்கே ஒரு காலத்தில் பேசினர் என்பதால், அதன் உருதுக்கலப்பை விரும்பாத காங்கிஸில் உள்ள மென்-இந்துத்துவர்கள் ஹிந்துஸ்தானியை இப்போது எதிர்த்தனர். அதற்குப் பதிலாக இந்துக்களின் மொழியாக பிரிட்டீஷார் உருவாக்கி முன்வைத்த இந்தியை தூக்கிப் பிடிக்க ஆரம்பித்தனர் காங்கிரஸின் மென்-இந்துத்துவ முகாமினர். வரலாற்றாசிரியர் கிரான்வில் ஆஸ்டினின் கருத்துப்படி தேசப்பிரிவினையும் அதன் விளைவான இஸ்லாமிய வெறுப்பலையும் நேர்ந்திராவிடில் இந்தியாவின் தேசிய மொழியாக ஹிந்துத்ஸ்தானியே திகழ்ந்திருக்கும்.
1921இல் காங்கிஸில் இந்த கேள்வி மீண்டும் விவாதிக்கப்பட்டது: மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்படலாம், ஆனால் மாநிலங்களை இணைத்தும் தேசிய மொழி எதுவாக இருக்க வேண்டும்? ஆட்சி மொழி எதுவாக இருக்க வேண்டும்? மாநிலங்களின் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்க வேண்டும்? வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் ‘மென்-இந்துத்துவ’ தலைவர்கள் இந்தியே ஆட்சி மற்றும் தேசிய மொழியாக இருக்க வேண்டும், ஏனெனில் அதுவே தன்னளவில் பிற பிராந்திய மொழிகளை விட உயர்வானது எனக் கூறினர். இது ஒரு வினோதமான வாதம் - இவர் இதைச் சொல்லும் போது இந்தி தோன்றி நூறு வருடங்களே இருந்திருக்கும், மாறாக தமிழைப் போன்ற பிராந்திய மொழிகள் ரெண்டாயிரம் வருடங்களுக்கும் மேலான மரபும், செழிப்பான இலக்கிய, தத்துவச் செல்வங்களையும் கொண்டவை. ஒப்பிடுகையில் இந்தி விரல் சூப்பிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை. வெள்ளையர் உருவாக்கிய சோதனைக் குழாய் குழந்தை. ஆனால் இம்மாதிரி வாதங்களை முன்னெடுத்த வடக்கத்திய தலைவர்களுக்கு இந்திய மொழிகளின் பண்பாட்டு வளங்களைப் பற்றியோ மரபைப் பற்றியோ ஏதும் தெரியாது என்பதே உண்மை. 1) இந்தி மட்டுமே இந்துக்களின் மொழி, 2) இந்தியைக் கற்றாலே பிற மாநிலங்களில் வாழும் மக்கள் தம்மை இந்துக்களாக, இந்தியர்களாக உணர்வர் என அவர்கள் நம்பியிருக்கலாம். இந்த தலைவர்கள் மிக விரைவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்தி இரண்டாம் நிலை மொழியாக ஆங்கிலத்தின் இடத்தில் கொண்டு வரப்பட வேண்டும் எனக் கோரினர். ஆனால் இந்த கூட்டத்தில் கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலத் தலைவர்கள் இந்தியை ஆட்சி / தேசிய மொழியாக ஏற்க முடியாது என வலியுறுத்தி வாதிட்டனர். மற்றொரு பக்கம் நேரு உள்ளிட்ட சில தலைவர்கள் இந்தியர்கள் அனைவரும் இந்தியை ஏற்பதற்கு சற்று காலம் எடுக்கும், அதுவரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம் என அபிப்ராயப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் 15 வருடங்கள் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ



கருத்துகள்