மனுநீதி ஒரு காலவதியான பிரதி, அதைப் போய் ஏன் இப்போதும் வைத்து அக்கப்போர் பண்ண வேண்டும் என சிலர் நண்பர்கள் எழுதுவதைப் பார்க்கிறேன். ஆனால் இது உண்மை அல்ல. மனுநீதியினால் மட்டுமே சாதிப் படிநிலை, தீண்டாமை, பெண் ஒடுக்குமுறை சமூகத்தில் இருக்கிறது என நான் சொல்ல மாட்டேன். இன்றும் நம் சமூகத்தில் புழங்கும் நம்பிக்கைகள், நெறிமுறைகள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் ஒரு எழுத்து வடிவம் மனுநீதி. அது ஒரு அடையாளம். ஒரு குறியீடு. அதை எரிப்பதால் சாதியை, அநீதியை எரித்திடலாம் என எரித்தவர்களே நம்ப மாட்டார்கள். குறியீடுகளை அழிப்பது அவற்றை நிகழ்த்தி எதிர்க்கும் செயல். தீபாவளியின் போது ‘அசுரர்களின்’ அழிவை ‘இந்துக்கள்’ கொண்டாடுவதைப் போல. ஆகையால் மனுநீதி துல்லியமாய் அச்சுப்பிசகாமல் பின்பற்றுப்படுகிறதா எனும் கேள்விக்கு பிரசித்தமில்லை. அசுரர்கள் மட்டும் இன்றும் இருக்கிறார்களா என்ன?
இன்றைய நவீன சமூகங்களில் பெண்கள் - அதிலும் பிராமணப் பெண்கள் - முற்போக்காக நடத்தப்படுகிறார்கள், அவர்கள் கல்வி கற்க, சுதந்திரமாய் முடிவெடுக்க எந்த தடையும் இல்லையே, பிறகு ஏன் மனுநீதியில் சொல்லப்பட்டவற்றை இப்போது திருமா இழுக்கணும் எனும் ஒரு வாதத்தையும் இந்நண்பர்கள் வைக்கிறார்கள். அவர்களுக்கான பதில் இது:
1) உடலை வைத்து ஒடுக்குவது என்பது நவீனப் பெண்களில் இருந்து நவீன தாழ்த்தப்பட்ட ஆண்கள், உடற்குறைகள் கொண்ட மனிதர்கள் வரை நடக்கிறது. இதற்கான அடிப்படையை நம் வைதீக மதத்தில் பார்க்கிறோம். தெய்வம், கருவறை, பிராமணன், கோயில் எனும் கட்டுமானமே உடலின் பரிசுத்தம், அப்பழுக்கற்ற தன்மை vs அசுத்தம் எனும் வரையறையின் படி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி பேசும் போது பெண்ணுடல் உட்பட அனைத்து உடல்களின் அரசியலையும் பேச வேண்டி இருக்கிறது.
2) இன்னமும் உடலரசியலின் ஒடுக்குமுறை வைதீகத்தில் இருக்கிறதா? தாராளமாக. பெண்கள் பாதிக்கப்படுகிறார்களா? நிச்சயமாக (ஆனால் பல பெண்ணியவாதிகளே இதை உணர்வதில்லை.)
3) சனாதன சாதி, மதத்தில் இருந்து விடுபடாதவரையில் யாருக்கும் இந்த சுதந்திரம், மாற்றம் சாத்தியமில்லை. ஒரு அடிமைக்கு ஜீன்ஸ் அணிவித்து, வேலைக்கு போக அனுமதித்தால் அடிமை இல்லை என ஆகி விடுமா?
4) மனுவின் சட்டதிட்டங்கள் இன்று ஒரு பளபளப்பான, லகுவான வடிவை எடுத்திருக்கின்றன. நம்பிக்கை இல்லையெனில் கீழ்வரும் ஸ்லோகங்களைப் பாருங்கள்:
“ஒரு பிராமண ஆண் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்களை கூட மணக்கலாம், ஆனால் ஒரு சூத்திரன் சூத்திரப் பெண்களை மட்டுமே மணம் புரிய வேண்டும்.” (3-12)
“பிராமணர், சத்திரியர், வைசியர்கள் தமக்குள் பெண்ணெடுத்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டாலும், பெரும் நெருக்கடிக் காலத்திலும் அவர்கள் சூத்திரர்களை மணக்கக் கூடாது.” (3-14)
5) ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் மேல்சாதிப் பெண்ணுடன் உறவு கொண்டால் அவனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். (8-365); தாழ்த்தப்பட்ட ஆண்களுடன் உறவுகொள்ளும் மேல்சாதிப் பெண்களை தண்டித்து தனிமைப்படுத்த வேண்டும். (8-364)
6) தம் கன்னித்திரையை கிழிக்கும் பெண்களை மொட்டையடித்து அல்லது விரல்களை வெட்டி கழுதை மீது அமர்த்தி ஊர்வலமாய் கொண்டு செல்லப்பட வேண்டும். (8-369) - (இங்கு கன்னித்திரையை கிழிப்பது எந்த செயலைக் குறிக்கிறது? ஏன் விரலை வெட்ட வேண்டும்?)
7)குடிக்கிற, கெட்டவர்களுடன் தொடர்பில் இருக்கிற, கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்கிற, உளறித் திரிகிற, பகலில் தூங்குகிற பெண்கள் தம் கணவனுக்கு துரோகம் செய்பவர்கள்; அவர்கள் தம் வயதை பொருட்படுத்தாமல் மற்ற ஆண்களுடன் கள்ள உறவு கொள்கிறவர்கள். (9-13; 9-14)
8 ) பெண்கள் வேதம் ஓதக் கூடாது. (9-18)
9) விதவையுடன் உறவு கொள்ளும் ஒரு ஆண் இரவில் மட்டுமே அவளை சந்திக்க வேண்டும்; ஒரு குழந்தைக்கு மேல் அவளுடன் பெற்றுக் கொள்ளக் கூடாது. (9-60)
10) குழந்தையில்லாத பெண்களை 8வது ஆண்டிலும், குழந்தை இறந்து போன பெண்ணை 10வது அண்டிலும் விவாகரத்துக்கு பண்ணலாம். அடிக்கடி சண்டை போடும் பெண்ணை ஒரு ஆண் உடனடியாய் கைவிடலாம்.
11) தாம் செய்கிற மதச்சடங்குகளை தொடர்ந்து செய்வதில் சிக்கல் வரும் போது, 24-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் 8-12 வயதுள்ள சிறுமிகளை மணந்து கொள்ளலாம். (9-93) (திருமணத்திற்கு இணை கிடைக்காத வயதான பிராமணர்கள் சிறுமியரை மணம் புரியலாம் என இதைப் புரிந்து கொள்கிறேன்.)
12) ஒரு பிராமணனுக்கு சூத்திரப் பெண் மூலமாகப் பிறந்த குழந்தையை சூத்திரமாகவே அடையாளப்படுத்த வேண்டும். ஏனென்றால் சூத்திரனின் சமூக இருப்பானது ஒரு பிணத்துக்கு இணையானது.
விதவை மறுமணத்தை மனு கண்டிக்கிறார், தடை செய்கிறார் என திருமா சொல்வது உண்மையே.
மனுநீதி முழுக்க காலாவதியாகவில்லை என்பதற்கு இந்த உதாரணங்களே போதுமானவை.
அதே சமயம், மனுநீதியில் உள்ள பல பிற்போக்கான, ஆபத்தான கருத்துக்களை, சட்டவிதிகளை நாம் ஒரு சமூகமாக கடந்து வந்து விட்டோம் என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால் முழுக்க பிற்போக்குவாதத்தை அழிக்கும் வரை தொடர்ந்து மனுநீதியைப் பற்றி பேசுவதும், அதை எரிப்பது அவசியம்.


கருத்துகள்