பிக்பாஸ் நிகழ்ச்சி செய்கிற ஒரே நல்ல காரியம் பெண்கள் எல்லாரும் சிறப்பாக சமைக்கிற குடும்பப் பாங்கினிகள் எனும் பிம்பத்தை உடைப்பதுதான் - அனிதா தனக்கு காபி, டீ போட வராது எனச் சொல்வதைப் பார்க்க ‘மகிழ்ச்சியாக’ இருந்தது. குக் வித் கோமாளியில் பங்கேற்ற ரம்யா கூட பிக்பாஸ் வந்த பின் ‘சமையலா? அதைக் கத்துக்க நான் இங்க வரல’ எனச் சொல்லி அம்பலப்பட்டுப் போனார். ஏனென்றால் இதே விஜய் டிவியின் தொடர்களில் குடும்பப் பாங்கினிகள் குறித்த சித்திரம் முழுக்க வேறாக இருக்கும்.
நவீனப் பெண்களில் பத்தில் ஏழு பேருக்கு சமைக்கத் தெரியாது என்பது என் ஊகம். (பிக்பாஸ் பெண் பங்கேற்பாளர்கள் இதை பிரதிநுத்துவம் செய்கிறார்கள்.) சின்ன வயதில் அம்மா சமையல். அதன் பிறகு கல்லூரியில் விடுதி மெஸ், வெளியே தட்டுக்கடை இல்லையென்றால் ஸ்விக்கி, கூடவே இருக்கிறது மேகி நூடுல்ஸ். வேலைக்குப் போக ஆரம்பித்ததும் இப்படி வெளியே வாங்கி சாப்பிட ஒரு நியாயம் கிடைத்து விடும். போகப் போக அதுவே வசதியாக ஜாலியாக இருக்க பழகி விடுவார்கள். திருமணத்துக்குப் பிறகு ஒன்று தட்டுத்தடுமாறி கற்றுக் கொள்வார்கள், அவர்களில் சிலருக்கு இயல்பாகவே சமையலில் ஒரு சிலாக்கியம், கைப்புண்ணியம் இருக்கும். அவர்கள் அதை ரசிக்கத் தொடங்கி நிபுணர்களே ஆகி விடுவார்கள். குறைந்தது சராசரியாகவாவது சமைப்பார்கள். இன்னும் சிலர் இதெல்லாம் சரிப்படாது என கணவனும் மனைவியும் மூன்று வேளையும் வெளியே சாப்பிடுகிற அல்லது துரித உணவுகளை மைக்ரோ வேவில் வைத்து தயார் பண்ணி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். நான் முன்பு வேலை பார்த்த இடங்களில் திருமணமான பெண்கள் கொண்டு வரும் டப்பாவை வாங்கி சுவைத்திருக்கிறேன். பத்தில் ஒருவருக்கு மட்டுமே குறைந்தபட்ச சுவையுடன் சமைக்கக் தெரிந்திருக்கும். இவர்கள் சமைப்பதை கண்ணை மூடித் தின்பவர்கள் வாழ்நாள் சாதனையாளர்கள் என நினைப்பேன். அவர்களுக்கும் சமையலில் அக்கறை இருக்காது. வற்புறுத்தலால் ஏதோ பல் தேய்ப்பது போல சமையலில் ஈடுபடுவார்கள்.
இன்னொரு பக்கம் இன்றைய இளையதலைமுறையில் ஆண்கள் சமையலில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். நான்கைந்து மாணவர்கள் சேர்ந்து வாடகை வீடு எடுத்தாலே முதல் வேலையாக கேஸ் அடுத்து வாங்கி ஒழுங்காக சமைத்து, ரொட்டேஷனில் ஒருவர் காய் நறுக்குவது, ஒருவர் பாத்திரம் கழுவுவது எனப் பார்த்துக் கொள்வதைக் காண்கிறேன். பாலினத்தைப் பொறுத்தமட்டில், இப்படி ஒரு தலைகீழாக்கம் சமையலில் நடப்பதை கவனிக்கிறேன்.
ஆனால் இந்த எதார்த்த வெளிப்படாதபடி ஊடகங்களில் ஒரு தேய்வழக்கு, ஒற்றைபட்டையான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. புகை பிடித்தல் ஒரு உதாரணம்.
மலையாள பிக்பாஸில் பெண் பங்கேற்பாளர்கள் புகைபிடிப்பதைக் காட்டினார்கள். தமிழ் பிக்பாஸைப் பொறுத்தவரையில் பெண்கள் ஸ்மோக்கிங் அறைக்குள் இருந்து பேசும் குரலை மட்டும் ‘காட்டுகிறார்கள்’. அதையும் வெளிப்படையாக காட்ட வேண்டும் எனக் கோருகிறேன் - தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒவ்வாத விசயங்களான பரஸ்பரம் மடியில் படுத்துக் கொள்வது, சதா உரசுவது, தடவுவதைக் காட்டலாம் என்றால் இதையும் காட்டலாம் தானே. கிராமத்து நிலைமை தெரியவில்ல , ஆனால் சிறுநகரங்களில், நகரங்களில் பெண்கள் வாய்ப்பு அமையும் போதெல்லாம் புகைக்கிறார்கள். மது அருந்துகிறார்கள். சென்னையில் இதை சற்று மறைவாக பண்ணினால், பெங்களூரில் சாலையில் நின்று கப்பு கப்பென கண் முன்னாலே பல நூறு பெண்கள் அடிக்கிறார்கள்.
இதில் எந்த ஆச்சரியமும் இல்லை - கடவுள் அவர்களுக்கு ஆண்களுக்கான அதே மூளையைத் தான் கொடுத்திருக்கிறார். நாம் புகை, சாராயத்தை பாலியல் ஒழுக்கத்துடன் ஈடு செய்வதால் அதைப் பற்றி ஊடகங்களில் பேசுவதில்லை. ஒரு “தமிழ்ப் பெண்ணாவது” நமது சினிமாக்களில், சீரியல்களில் இதை செய்கிறார்களா? தமிழ் சமூகம் தன் பாசாங்கில் இருந்து விடுபட்டு ஒவ்வொரு பிம்பமாக உடைக்க வேண்டும். எதார்த்ததை தவிர்க்காமல் பரிசீலிக்க வேண்டும்.


கருத்துகள்