Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“தான் அழிதல்” எனும் சூனியம்





இதன் முடிவில் வரும் ஹபீபின் பதிவு முக்கியமானது. அதற்கு முன் நான் சொல்வதை ஒருமுறை படித்து விடுங்கள்.


ராதகிருஷ்ணா ஹபீபிடம் எழுப்பும் கேள்வியை இப்படி புரிந்து கொள்ளலாம்: வைதீகம், குறிப்பாக அத்வைதம், சொல்லும் பிரம்மத்துக்கும் நாகார்ஜுனரின் சூனியத்துக்கும் என்ன வித்தியாசம்? அல்லது இரண்டுமே ஒன்றா


அத்வைதத்தை எதிர்கொள்ளும் பலருக்கும் இக்கேள்வி எழும். ஒரு உதாரணத்துக்கு, “பகவத் கீதைஎனும் அந்த அற்புதமான (அதே நேரம் பிற்போக்கான) தத்துவ பிரதியில் கிருஷ்ணர் தான் யாரென அர்ஜுனனுக்கு விளக்குகிறார். நான் இதுதான், இவர் தான் என்று அல்லாமல் அவர் பின்னோக்குவாத அல்லது மறுப்புவாத முறைமையை பயன்படுத்துகிறார். நான் வான் அல்ல, நான் உலகம் அல்ல, நான் மரம் அல்ல, நான் கொடி அல்ல என வரிசையாக இது செல்லும். எந்த இடத்திலும் தான் இதுதான் என கிருஷ்ணர் சொல்ல மாட்டார். இறுதியில் அனைத்தும் மறுக்கப்பட்ட ஒரு இடத்தில் எது தோன்றுகிறதோ அதுவே தான் என்கிறார். வைதீக சிந்தனையில் இந்த பாணியிலான அறிதலைநேதி நேதிஎன்கிறார்கள். வேள்வித்தீயில் ஒவ்வொன்றாக போடும் போது இவ்வாறு இதை காட்சிப்படுத்த முயல்கிறார்கள். இந்த மறுப்புவாதம் வாழ்தலுக்கு எதிராக, துறவாக போய் விடக் கூடாது எனும் அக்கறை அத்வைதிகளுக்கு உண்டு. அதனாலேகீதையில்தன்னை நேரடியாக மறுக்காமல் செயலில் தன்னை இழப்பதை கிருஷ்ணன் பரிந்துரைக்கிறார். போர் உன் வேலையென்றால் சரி-தவறு குறித்த பாகுபாடுகள், இருமைகள், மதிப்பீடுகள் இன்றி தன்னை அதில் கரைத்துக் கொண்டு செயல்படு என்கிறார். இது அறம், நீதி குறித்த கேள்விகளை எழுப்பும் என்பதால் கிருஷ்ணர் அதற்கும் ஒரு தீர்வளிக்கிறார். அறம் என்பது ஒரு சமூகத்துக்கு ஒரு கட்டத்தில் அவசியப்படும் நீதிக்கு ஏற்ப, ஒரு தனிமனிதன் தனக்கு சமூகத்தால் அளிக்கப்பட்டுள்ள கடமைக்கு ஏற்ப, ஒரு சந்தர்பத்தின் அவசியத்துக்கு ஏற்ப முடிவெடுப்பது, ஆனால் அதை விட முக்கியமாய், முடிவு செய்து செயலை ஆரம்பித்த பின் அங்கு செயலே அறம் என்கிறார்


இங்கிருந்து நாம் இவர்கள் சொல்லும் பிரம்மம் என்பதை புரிந்து கொள்ள முயல வேண்டும். அத்வைதம் பிரம்மத்தை ஒரு முதல்முழு இருப்பாக கருதினாலும் அதே வேளை மனிதனால் பிரம்மத்தை தன் செயல்கள் வழி அனுபவித்து வெளிப்படுத்த முடியும் என்கிறது. இதனாலே கிருஷ்ணர் மனிதராகவும் கடவுளாகவும் ஒரே சமயம் இருக்கிறார். இந்துக் கடவுளர் குறித்த பல கதைகளிலும் (“திருவிளையாடல்”) இந்த இரண்டறக் கலந்த கடவுள் நிலையைக் காண முடியும். அதில் ஒருவர் தன் மனித நிலையையும் கடவுள் நிலையையும் ஒரே சமயம் கடக்கும் போது அவர் கடவுளாகிறார். அப்படி கடக்கும் பொருட்டே இறைவனின் இருப்பானது ஒரு விளையாட்டாகிறது. சிவபெருமான், கிருஷ்ணர் இருவருக்கும் இந்த விளையாட்டு எனும் செயல்முறை அளிக்கப்பட்டு அவர்களை அத்வைதிகள் மறுவரை பண்ணினார்கள் என நினைக்கிறேன். இங்கிருந்து மீண்டும் இறைநிலை என்றால், முக்தி என்றால் என்னவென விசாரித்தால் பதில் கிடைக்கும் - தங்குதடையற்ற வாழ்தல் மூலம் இருமையைக் கடத்தல், இருமையற்ற நிலையே அனுபூதியாக, முக்தியாக அத்வைதத்தில் கருதப்படுகிறது


நாகார்ஜுனரை வாசிப்போர் இதன் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். இது ஒருசமரசப் புள்ளிமட்டுமே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது ஏன் சமரசம் ஆகிறது? இருமை - இருமையின்மை என்பதே ஒரு இருமை தானே. அதுவே ஒரு சாராம்சப்படுத்தல் தானே. அதுவே ஒரு லட்சியவாதம் தானே.


நேற்று நானும் நண்பர்களும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் Limits of Knowledge எனும் நூலைப் படித்துக் கொண்டிருந்தோம். இந்நூலானது கிருஷ்ணமூர்த்திக்கும் டேவிட் புரோம் எனும் விஞ்ஞானிக்கும் இடையிலான உரையாடலின் பதிவு. இதில் ஜெ.கெ இந்த உலகமானது, பிரபஞ்சமானது அதனளவில் ஒரு பூரணமான ஒழுங்கை, இருமையற்ற ஒரு ஒழுக்கை கொண்டது, மனித சுயத்தின் இடையூறு இதில் ஒரு ஒழுங்கின்மையை, குழப்பத்தை, சிக்கலை உண்டு பண்ணுகிறது. இது ஆத்திரத்துக்கு, ஏமாற்றங்கள், பதற்றத்துக்கு வழிவகுக்கிறது. நாம் மதம் அளிக்கிற பயிற்சிகளை, முறைமைகளை பின்பற்றி ஒரு ஒழுங்கைக் கொண்டு வரும் போது அங்கு மேலும் ஒழுங்கின்மை தோன்றி சுயத்தின் இருப்பு வலுப்படுகிறது என்கிறது. இதுவும் அத்வைத நோக்கே. இந்த நோக்கை ஒருவித கடப்புநிலைவாதம் (transcendentalism) எனலாம். ஆசிய தத்துவத்தின் தாக்கம் பெற்ற ஜெர்மானிய (continental) தத்துவ மரபிலும், ஆதி கிரேக்க மரபிலும் இதை நாம் அதிகமாகப் பார்க்கிறோம் (நீட்சே, சாக்ரடீஸ், காண்ட்). சமகால பின்நவீன சிந்தனையிலும் இது ஓரளவுக்கு தாக்கம் செலுத்துகிறது

இந்த கடப்புவாதத்தின் சிக்கல் என்னவென்றால் அது ஒரு லட்சியவாதத்துக்கு, கருத்துமுதல்வாதத்துக்கு இட்டு செல்கிறது. என்னதான்கீதையில்கிருஷ்ணர் தன்னை இழந்து, வாழ்தல் ஈடுபடக் கூறினாலும் அந்த அதி உன்னத நிலை ஒரு கருத்தாகவே நிலைப்பெறுகிறது. அந்த நிலை ஒரு கடவுளாகி ஒரு புதிய கட்டமைப்பை தோற்றுவிக்கிறது. நுட்பமாக நோக்கினால் இது ஆபத்தானது எனப் புரியும். ஏனென்றால் தன்னை இழக்கிற இடத்தில்தன்னை இழந்த ஒரு பிரக்ஞைதோன்றி விடுகிறது. இதை பிரம்மமாக்குகிறார்கள். இது ஒரு சாராம்சமானது என்பதால் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது


நாகார்ஜுனர் இங்கு தான் முக்கியமாகிறார் - “மூலமத்யமகாகாரிகையில்ஒரு முக்கியமான அத்தியாயம்ததாகதர் [புத்தர்] குறித்த விசாரணை”. இதில் ததாதகர் எனும் சூனிய நிலையே (அதாவது வைதீகத்தின் முக்தி நிலை, பிரம்மம்) சூனியமானது தான் என நாகார்ஜுனர் நிறுவுகிறார். அதாவது புத்தரையே மறுக்கிறார். எந்த இடத்திலும் நாம் ஒரு நிலையை உன்னதமாக்கி, சாராம்சமாக்கி, தெய்வமாக்கி விடக் கூடாது (reification) என்று நாகார்ஜுனர் மிகுந்த அக்கறை காட்டுகிறார். புத்தரையே சாராம்சமற்ற, சார்புநிலைகளால் தோன்றுகிற ஒரு இருப்பு என அவர் காட்டுகிறார்


அத்வைதத்தினால் இப்படியான முழுமையான சாராம்ச மறுப்புக்கு செல்ல முடியாது, [மகாயான] பௌத்ததால் முடியும். அதுவே நாகார்ஜுனரின் சிறப்பு.


இனி ராதாகிருஷ்ணா மற்றும் ஹபீபின் வாதங்களைப் பாருங்கள்!



“THE KNOWLEDGE OF "I" IS SOUL


The ultimate knowledge of all Vedas and scriptures is, "I am the Soul". When the ego is destroyed, what remains? It is the Soul. It is Vacuum. Who will know the Vacuum? The understanding of the Vacuum is Soul. "I”, Soul and the Universe are all one and the same. This is what all scriptures say as a final statement.


வணக்கம், ஹபீப். மேலுள்ள மேற்கோளில், ரமண மஹரிஷி, Vacuum என்று சொல்கிறார். இது நாகார்ஜுனர் சொல்லியுள்ள சூன்யம் எனக் கொள்ளலாமா? நன்றி.”


Radhakrishna


நாகார்ஜுனர் எதிர்க்கும் சூன்யம் என்று சொல்லலாம். ஏனென்றால், நான் வாசித்தவரை நாகர்ஜுனர் வைதீகத்தின் த்வைத, அத்வைத தத்துவத்தை எதிர்த்த பார்வை தான் இருந்திருக்கிறது. அதைத்தான் இந்திய தத்துவம் பிரம்மம் என்று சொல்கிறது. அந்நிலையை யோகத்தின் மூலம் அடையமுடியும் என்பது கருத்து. ரமண மகரிஷி ஓர் ஞானயோகி. நான் ரமண மகரிஷி அவர்கள் சொன்ன கருத்துக்கள் அதிகம் படித்ததில்லை. அவர் ஞானயோகத்தின் அக்ரம முக்தி(an unexpected happening) நிலையடைந்ததாக படித்திருக்கிறேன். மரண நிலை அனுபவம் பெற்றிருக்கிறார். அப்போது அவருக்குள் ஆவேசமான மின்சாரம் போன்றதொரு ஆற்றலை உணர்ந்ததாகவும் தானே அதுவாக இருப்பதாக உணர்ந்திருக்கிறார். அவருடைய உபதேசங்கள் அத்வைத்தை மையமாக கொண்டது. WHO AM I? என்ற கேள்வி தான் அவரின் சாரமான உபதேசம். மேலும் நீங்கள் அனுப்பிய ஆங்கில மேற்கோளை அத்வைத கருத்தின் பொருளோடு தான் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த vacuum concept நவீன அறிவியலிலும் உள்ளது. Vacuum energy, Zero point energy என்று சொல்வார்கள். இதனை சாராம்சப்படுத்துவதால் ஒன்றிமில்லாதலிருந்து உருவானது என்ற கருத்து உருவாகிறது. இதைத்தான் நாகர்ஜுனர் எதிர்க்கிறார். அவர் முக்கியமாக எதிர்ப்பது essentialityயே. பொருளோடு தொடர்புடைய Substantiality யும் நாகர்ஜுனரின் "சூன்யதா" மறுக்கிறது. அடிப்படை துகள் (fundamental Particle) தான் காரணம் என்ற கருத்து கூட அர்த்தமற்று போகிறது. எதுவானாலும் அது இயல்பாகவே இருக்கிறது. மேலும் அவை சொல்லப்பட்ட நான்கு நிலைகளில் செயல்படுகிறது என்பது கருத்து. "ஸ்வபவ" என்று சொல்கிறார். அதேபோல், விவாதம், கருத்துப்பரிமாற்றம் என்று வரும்போது சூன்யம் என்ற கருத்தாக்கத்தை ஆன்மீக ரீதியாக அணுகும்போது ஏற்படும் புரிதலும், மெய்யியல் ரீதியாக ஏற்படும் புரிதலும் வெவ்வேறானவை.


நகர்ஜுனரின் வரிகளைப் பகிர்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்


All is possible when emptiness is possible.

Nothing is possible when emptiness is impossible.


எனக்கும் புரியவில்லை.”


- ஹபீப் ஹாதி

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...