நேற்று டிரம்புக்கு ஆதரவாக வாஷிங்டனில் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இந்திய கொடியை உயர்த்தியபடி ஜோராக நிற்கிறார். அவர் பெரும்பாலும் ஒரு இந்து / இந்திய தேசியவாதியாக, நமது ஜியின் ஆதரவாளராகவே இருப்பார். வலதுசாரிகள் தேசவர்த்தமான எல்லைகளைக் கடந்து, இப்படியான ஒரு கலவரத்தின் போதும், எப்படி தவறாமல் ஒரே புள்ளியில் இணைகிறார்கள் பாருங்கள்!
இன்னொரு பக்கம் இதன் பின்னுள்ள நுண் உளவியல் முரணானது மற்றும் சுவாரஸ்யமானது - கறுப்பர்கள், ஸ்பேனியர்கள், அடுத்த தலைமுறை இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை, வேலை வாய்ப்பை பெறுவதை விரும்பாத முந்தின தலைமுறை இந்திய வம்சாவளியினர் டிரம்பின் ஆதரவாளர்கள், ஆனால் டிரம்ப் வெள்ளை இனம் மட்டுமே அமெரிக்காவில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் என்பதை கவனியுங்கள்.
இந்த சுயநல புத்தி நம்மவர்களுக்கு நமது சாதி அமைப்பில் இருந்து ஏற்படுகிறதென்றால் வெள்ளையர்களுக்கு அது இனவாத மேலாதிக்க எண்ணத்தில் இருந்து வருகிறது. மற்றோரு முரண் (இந்துத்துவர்களைப் போன்றே) அதிக எண்ணிக்கையுடன், கூடுதல் அதிகாரமும் பணபலமும் கொண்டு இருந்தாலும் இவர்கள் சதா தம்மை 'பாதிக்கப்பட்டவர்களாக' கற்பனை செய்ய, முன்வைக்க விரும்புவார்கள்.
இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள்-பனியா பார்ப்பன கும்பல் கூட்டணிதைப் போன்றது இது. இங்கு கீழ்மத்திய வர்க்க, கீழ்த்தட்டு மக்களும் சிறுபான்மையினரும் அவர்களுக்கு பொது எதிரி. அதாவது பொருளாதார எதிரிகள். ஆகையால் மதத்தின் பெயரால் ஒன்றிணைகிறார்கள். நாளை இந்த பொது எதிரி இல்லையெனில் முன்னவரை பின்னவர் நேரடியாகவே அடிமையாக்குவார். அமெரிக்காவில் மாற்று இன குடியேறிகளும், புதிய இந்திய குடியேறிகளும் பொது எதிரிகள். அத்தரப்பு பலவீனமாகி வெள்ளை இனவாத கட்சியினரால் அதிகாரத்தை தொடர்ந்து கைப்பற்ற முடிந்தால் அவர்கள் முதல் வேலையாக அமெரிக்க குடியுரிமையைப் பெற்ற தமது இந்திய தோஸ்துகளுக்கு எதிராகவே திரும்புவார்கள்.
இனவாத மதவாத கூட்டணிகள் எப்போதுமே ஒரு இருமுனைக் பரஸ்பரம் தாராளவாத முதலாளித்துவ அமைப்பு இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் வரையிலே ஒன்றாக இருப்பார்கள். பெருமுதலாளிகள் அந்த பக்கம் திரும்பினால் நண்டுகள் பரஸ்பரம் பிடித்திழுத்து கீழே தள்ள ஆரம்பித்து விடும். எந்த மக்களும் இனவாத சுயநலத்தால் பயன்பெற்றதாய் வரலாறில்லை.
Comments