முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தி திணிப்பு எனும் இந்துத்துவ புரோஜெக்டை எதிர்க்கும் சு. வெங்கடேசன்


வாழ்த்துக்கள் சு.வெங்கடேசன். 





இந்த இந்தித் திணிப்பு பிரச்சனையை, இதன் வரலாற்றை நான் எனது “நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?” நூலில் பேசி உள்ளேன்.


 இந்த விசயத்தில் காங்கிரஸ், பாஜக அரசுகள் ஒரே மாதிரியே இருந்துள்ளன என வரலாறு காட்டுகிறது. காங்கிரஸாவது கொஞ்சமாவது மாற்றுக்குரல்களை காதுகொடுத்து கேட்கும் மாண்பு கொண்டது, அவ்வப்போது சமரசம் பண்ணிக்கொள்வது. ஆனால் பாஜக ஒரு ரௌடி அரசு. “சொல், கேட்காவிட்டால் அடித்து பணிய வை” என்பதே அவர்களின் அணுகுமுறை. இந்த முரட்டுத்தனத்தின் விளைவாகவே மாநில உரிமை குறித்த விவாதங்கள் அண்மையில் அதிகமாகி உள்ளன. அதன் நீட்சியே சு.வெங்கடேசன் இப்போது மத்திய அரசுடன் எழுப்பி உள்ள பிரச்சனையும் அவரது எதிர்ப்பு அரசியலும். 


இன்னொரு விசயம்: இந்தி மையமான இந்துக்களின் இந்தியா எனும் கருத்தாக்கம் நமது தமிழ் தேசிய வரலாற்றை விட நெடியது தான். அது ஜெர்மானிய, பிரஞ்சு, ஆங்கிலேய Indology ஆய்வாளர்கள் ஆசியா, அதன் மதம், கலாச்சாரம், மொழி வரலாறு குறித்து ஆய்வு செய்த காலத்திலேயே துவங்கி விட்டது. சிலர் இந்த வரலாறு யுவான் சுவாங் இந்தியாவுக்கு பயணம் வந்து குறிப்புகள் எழுதிய காலத்திலேயே துவங்கி விட்டது என்கிறார்கள். வெளிநாட்டவர்களுக்கு தமது பண்பாட்டுக்கு, மத நம்பிக்கைகளுக்கு இணக்கமான ஒற்றை அடையாளம் கொண்ட ஒரு பண்பாடாக, மக்கள் தொகையாக இந்தியாவை வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தது. அப்படியே சமஸ்கிருத அடிப்படையிலான வைதீக மதம் அவர்களுக்கு அணுக்கமாகத் தோன்றியது. சமஸ்கிருதம், ஆரியவாதம் ஆகியவை ஐரோப்பியர்களுக்கு உடனடியான ஒரு இனவாத நெருக்கத்தை அளித்தது என நினைக்கிறேன். சமஸ்கிருதத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்குமான ஒற்றுமை, ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தது, கிறித்துவத்தைப் போன்றே இந்தியாவுக்கும் ஒற்றைக் கடவுள், ஒற்றை மதத்தின் அடிப்படையிலான ஒரு நிறுவனத்தை இந்தியாவுக்கு அளிக்கும் விழைவும் போன்றவை மற்ற காரணங்களாக இருக்கலாம். இன்னொரு முக்கிய காரணம் பதினாலாவது நூற்றாண்டில் இருந்தே கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சிலுவைப் போர்கள் இஸ்லாமியர் குறித்த ஏற்படுத்திய ஒரு கசப்பான நினைவுச்சரடு. விளைவாக, இஸ்லாமிய வெறுப்பு, ஆரிய சார்பு சித்திரம் ஒன்றை இந்த இந்தியவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து விவாதித்து உருவாக்கினார்கள். இதைக் கொண்டு, இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து இந்துக்களை காப்பாற்றும் பாதுகாவலர்களாக காலனிய அரசுகள் தம்மை நினைத்துக் கொள்வது சுலபமாக இருந்தது.

 இப்படித்தான் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவை மையமிட்டு கிறித்துவத்தின் அடிப்படையில் இந்து மதத்தை உருவாக்கி, இஸ்லாமிய விரோத தேசமாக நம்மை உருமாற்றும் ஒரு முயற்சி சுதேசி அரசியல்வாதிகளிடம், இந்திய வலதுசாரிகளிடம் தோன்றியது. அதற்கு அவர்கள் கையில் எடுத்தது தான் இந்தி எனும் உருது கலப்பில்லாத, சமஸ்கிருத சார்பு கொண்ட புதிய மொழி. இந்தி மொழியின் கண்டுபிடிப்பை, வளர்ச்சியை கில்கிறிஸ்ட் எனும் வெள்ளைக்காரர் ஒருவர் நேரடியாகவே ஒருங்கிணைத்தார். அதற்கு பிரித்தானிய அரசு நிறைய நிதியளித்தது. இன்னொரு பக்கம் வெள்ளையர்கள் உருது பேசும் இஸ்லாமிய மக்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கும் மறைமுக ஆதரவு அளித்து பிரித்தாளும் அரசியலை முன்னெடுத்தது. (விளைவாக இந்தியா-பால் பிரிவினை ஏற்பட்டு, கொடுமையான, ரத்தக்களறியான கலவரங்களில் பல லட்சம் பேர் மரித்த வரலாற்றை அறிவீர்கள்.)


 இந்த இந்தி-வைதீக இந்தியா கதையாடலில் சுவாமி தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், சாவார்க்கர், காந்தி, நேரு துவங்கி பலரும் மயங்கிப் போயினர். அதனாலே இந்தியா தன்னாட்சி பெற்றதும் இந்தியை அரசு மொழியாக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று பரவலாக வட இந்தியா எங்கு ஏற்கப்பட்டது. தென்னிந்தியாவில் தமிழர்கள் மட்டுமே வெளிப்படையாக இதை எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்பு பின்னாளில் வலுக்க நேரு ஒரு சமரசத்துக்கு முன்வந்தார் - ஆட்சி மொழியாக ஆங்கிலம் தொடரும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் போகப் போக காங்கிரஸ் அரசு தனது இந்தி முன்னெடுப்பு, சமஸ்கிருத ஆதிக்க அரசியலை தீவிரமாக தொடர்ந்தது. ஏகப்பட்ட பணத்தை இதற்கு செலவு செய்தது. 2014இல் காங்கிரஸின் இந்த சமஸ்கிருத சார்பு அரசியலே பாம்பாக மாறி அதைக் கொத்தியது, பாஜக அதை பயன்படுத்தி இந்தியாவை முழுக்க முழுங்கியது என்பது வேறு கதை. அதை ஓரளவுக்கு உணர்ந்து கொண்டதே “தென்னிந்தியர்கள் மேம்பட்ட அரசியல் உணர்வு கொண்டவர்கள்” என ராகுல் காந்தி அண்மையில் கேரளாவில் பேசியது காட்டுகிறது. ஆனால் இப்போது ரொம்பவே தாமதமாகி விட்டது. 

இப்போதும் வெளிப்படையாக சு.வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்ற தமிழக எம்.பிக்களே பிரித்தானிய காலனிய அரசு ஆரம்பித்த இந்துத்துவ புரோஜெக்டை எதிர்த்து நிற்கிறார்கள். இது வெறுமனே ஒரு மொழிப்பற்று அரசியல் அல்ல. இது ஒரு காலனிய, நவகாலனிய எதிர்ப்பரசியல்! சு.வெங்கடேசனுக்கு நமது ஆதரவை, அன்பை தெரிவிப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...