கார்ல் மார்க்ஸ் இன்று பேஸ்புக் நேரலையில் வாசகர்களின் இலக்கியக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது “ஏன் இலக்கிய நூல்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வருவதில்லை?” எனும் கேள்வி வந்தது. அதற்கு கார்ல் அளித்த பதிலுடன் எனக்கு உடன்பாடில்லை. அதைப் பற்றியதே இப்பதிவு.
கார்ல் எதிர்விமர்சனங்கள் பொதுவெளியில் அவசியமில்லை என்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் இரண்டு:
1. ஏற்கனவே வாசகர்கள் குறைவு. எதிர்மறையாய் பேசி அவர்களையும் ஏன் வாசிக்க விடாமல் பண்ணனும்?
2. மேடை நாகரிகம் கருதி ஒரு புத்தக விமர்சன / வெளியீட்டு அரங்கில் எதிர்க்கருத்துகள் சொல்லத் தேவையில்லை. அதுவே மாண்பு, தமிழரின் கலாச்சாரம்.
நான் பொதுவாக எழுத்தாளர்கள் எழுதும் விமர்சனங்களைப் படிப்பதில்லை. முன்பு பத்திரிகைகளில் அதிகமாக கவிதைத்தொகுப்புகளுக்கு விமர்சனம் வரும். இப்போது புனைவு, அபுனைவு நூல்களுக்கு அதிகமும் வருகிறது. ஒன்று பொத்தாம்பொதுவாக அந்நூலின் கருத்துக்களை சுருக்கிச் சொல்லி, எந்த மதிப்பீடும் இல்லாமல் இருக்கும். அல்லது, புத்தகத்தை எழுதியவர் பெண் எனில் விதந்தோம்பி எழுதுவார்கள். பேஸ்புக் வரும் முன்பு மிகப்பெரிய டேட்டிங் வெளியாக விமர்சனப் பக்கங்களே இருந்தது என நினைக்கிறேன். இப்போது அவர்கள் இன்பாக்ஸுக்கு நகர்ந்து விட்டார்கள். ஆண்கள் எழுதிய நூல் எனில் எழுத்தாளரை காயப்படுத்தக் கூடாது எனக் கருதி தடவித் தடவி எழுதுவார்கள். இப்படியாக நமது விமர்சனப் பண்பாட்டு பொய்ப்புரட்டு வெளியாக மாறி விட்டது. கார்லும் இதை ஒப்புக் கொள்கிறார். தனிப்பட்ட உரையாடல்களில் மட்டுமே உண்மையை விமர்சகர்கள் சொல்லுவர்கள், அப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார். என்ன ஒரு அவலமான சூழல்!
இதன் விளைவு என்னவென்றால் ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் ஒரு நல்ல பேச்சாளரோ மூத்த எழுத்தாளரோ ஒரு புத்தகத்தை பாராட்டி மனம் நெகிழ்ந்து பேசி முடிக்கையில் நிறைய பேர் அரங்கம் அதிர கைதட்டுகிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்பு நான்கைந்து பேரே புத்தகத்தை வாங்குவார்கள். கைத்தட்டியவர்களில் பாதி பேர் வாங்க முன்வந்தால் பதிப்பாளர் கைவசம் புத்தகம் இல்லாமல் பதறிப் போவார். வாங்க வேண்டும் என நினைத்து வந்தவர்கள் மட்டுமே வாங்குகிறார்கள். இவர்கள் அவரது வாசகராகவோ, நண்பராகவோ இருக்கலாம். ஏன் மிச்ச பேர் வாங்குவதில்லை என்றால் - கார்ல் சொல்வதைப் போல - அது ஒட்டுமொத்தமாக பொய்களின், மிகைகளின் தொகுப்பு என அவர்கள் அறிவார்கள். பெரும்பாலான வெளியீட்டு உரைகளின் நிலை இதுவே. இவற்றின் ஒரே பயன் ஒரு சிறிய கவனத்தை புத்தகத்தின் மீது ஏற்படுத்துகிறது என்பது தான். நானும் கூட புத்தகங்களை வெளியிட்டு பேசியிருக்கிறேன். “இது தான் உலக இலக்கியத்திலேயே மகத்தான எழுத்து” என எப்போதும் நான் கூவியதில்லை. எதிர்மறைக் கருத்துக்களை தவிர்க்கலாம், ஆனால் அதே நேரம் மிகையான புகழ்ச்சியையும் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒட்டுமொத்தமாக விமர்சனங்கள் மீதே அவநம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துகிறது.
இன்னொரு பிரச்சனை ஏன் புகழ்கிறார்கள் என்பது - மேடை நாகரிகம், தமிழர் பண்பாடு மட்டுமல்ல ஒரு மோசமான அரசியலும் இதன் பின்னால் உள்ளது. நீங்களே அடுத்த முறை கவனியுங்கள்: ஒரு வெளிநாடு வாழ் எழுத்தாளர் புத்தகம் வெளியிட்டால் மூத்த எழுத்தாளர்கள் தவறாது போய் வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளிக் குதித்து பாராட்டுரை வாசிப்பதை காணலாம். எப்படியாவது ஒரு வெளிநாட்டு பயணத்தை அவர் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனும் நோக்கம் இதில் உள்ளது வெளிப்படை. இதை தனிப்பட்ட முறையில் அந்த எழுத்தாளரிடம் இவர்கள் கேட்கலாமே, ஏன் இப்படி ஊருக்கு முன் அம்பலப்பட வேண்டும்?
அடுத்து, இப்படியாக புகழப்படுகிற எழுத்தாளர் மூத்த எழுத்தாளரின் குழுவில் பண பலமும், செயலூக்கமும் மிக்கவராக இருக்கலாம். ‘பாசத்துக்குரிய தம்பியாக’ இருக்கலாம். புரவலர்களுக்கான இந்த தவிப்பு ரொம்ப ஆபாசமாக இருக்கிறது. இந்த இரண்டையும் நாம் தவிர்க்க வேண்டும்.
நான் பொதுவாக பேஸ்புக்கில் எழுத்தாள பாவனை இல்லாத வாசகர்கள் எழுதுகிற நூல் விமர்சனங்களை மட்டுமே நம்பி வாசிக்கிறேன், பெரும்பாலும் இந்த நூல்களை உடனே ஆர்டர் செய்து வாங்கி விடுகிறேன். அந்நூல்கள் என்னை ஏமாற்றினாலும் கவலையில்லை, ஏனென்றால் உள்நோக்கமின்றி அவர்கள் நேர்மையாக தம் கருத்தை சொல்லி இருக்கிறார்கள், என் அழகியல் நோக்குடன், அரசியலுடன் அது உடன்படவில்லை என சமாதானப்பட்டுக் கொள்கிறேன். ஆனால் பெரிய பின்புலம் உள்ள எழுத்தாளர்கள் விமர்சனம் (பாராட்டுரை) எழுதினால் நான் கட்டாயமாக அந்நூலை தவிர்த்து விடுவேன்.
என் கோரிக்கை இது மட்டுமே: விமர்சனத் துறையை பொய் சொல்லாத வாசகர்களிடமே விட்டு விடுங்கள்! பிடிக்காத நூல்களைப் புகழாதீர்கள். தாண்டி சென்று விடுங்கள். பிடித்த நூல்களைப் பற்றி மட்டும் பேசுங்கள், எழுதுங்கள்.
