சின்மயி தன்னை வைரமுத்து 2002இல் இருந்து தொடர்ந்து பாலியல் தொந்தரவு பண்ணி வந்தார் என புகார் தெரிவித்த போது அவர் ஏன் அதை இத்தனைக் காலமும் பொறுத்துக் கொண்டார் எனக் கேள்வி வந்தது. அதற்கு அவர் பதிலளிக்கும் போது ஒரு இளம் பாடகியாக தான் சினிமாத் துறைக்கு வந்த போது வைரமுத்து மரியாதைக்குரிய, அதிகாரமிக்க மூத்த பாடலாசிரியராக இருந்தார், அவரை எப்படி தன்னால் அந்த சமயத்தில் பகைத்துக் கொண்டிருக்க முடியும் என பதிலுக்குக் கேட்டார். இதைக் கேட்கையில் நமக்கு உருவாகும் சித்திரம் வைரமுத்து ஒரு அசைக்க முடியாத திரை அதிகார மையம், அவரைப் பகைத்துக் கொண்டு சின்மயியால் பாடகராக முன்வந்திருக்க முடியாது என்பதே. ஆனால் எதார்த்தம் தலைகீழானது. சின்மயி பாடிய படங்களில் 90% படங்களில் வைரமுத்துவுக்கு எந்த பங்கும் இல்லை. அவர் இரு பாடலைக் கூட சேர்த்து அப்படங்களில் எழுதியதில்லை. சின்மயி முன்னுக்கு வரும் காலகட்டம் வைரமுத்துவின் இடம் மெல்ல மெல்ல சினிமாவில் காலியாகி வந்த கட்டம்; முத்துக்குமார், கபிலன், பா.விஜய், யுகபாரதி ஆகியோர் அதிக பாடல் வாய்ப்புகளை பெற்ற இரு பத்தாண்டுகள் அவை. இவர்களிடையே முடிசூடா மன்னனாக முத்துக்குமாரே இருந்தார். சின்மயி பாடிய கணிசமான பாடல்களை எழுதியவர்களில் முதன்மையானவர் முத்துக்குமாரே. அடுத்து பா.விஜய், அதற்கு அடுத்து கபிலன், யுகபாரதி வருகிறார்கள். பாடலாசிரியர்களுக்கு பாடகர்களை தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளதாக நான் கருதவில்லை. அப்படி இருந்தாலும் வைரமுத்துவுக்கு உள்ளே கால் வைக்க கூட வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம்.
2002இல் தன் பாடல் வாழ்க்கையை ஆரம்பிக்கிற சின்மயி 2018இல் வைரமுத்து மீது மீ டூ குற்றச்சாட்டுகளை எழுப்பிய 2018ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகளில் 228 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவற்றில் வைரமுத்து எழுதிய பாடல்கள் மொத்தமே 22 தாம். அதாவது சின்மயியின் தொழில் வாழ்வில் 9.6% பாடல்களை மட்டுமே வைரமுத்து எழுதி உள்ளார். 16 வருடங்களில் அவர் வருடத்திற்கு சராசரியாக ஒன்று அல்லது இரண்டு வைரமுத்து பாடல்களுக்குத் தான் பாடியுள்ளார்.
யோசித்துப் பாருங்கள்: சின்மயியின் திரைவாழ்க்கையை காலி பண்ணும் அதிகாரம் படைத்தவராக வைரமுத்து அப்போது இருந்திருந்தால் அவர் ஏன் இவ்வளவு குறைவாக பாடல்களை எழுதியிருக்க வேண்டும்? அவர் ஏன் அந்த அதிகாரத்தைக் கொண்டு முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதியை காலி பண்ணி விட்டு எல்லா பாடல்களையும் தானே எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது?
இந்த புள்ளிவிபரம் வைரமுத்து தன் திரைப்பாடல் அந்தஸ்து, அதிகாரத்தை பயன்படுத்தி சின்மயியை அச்சுறுத்தி தன்னை புகழவும் காலில் விழவும் அவரால் செய்திருக்க முடிந்தது எனும் குற்றச்சாட்டை பொய்யென்று ஆக்குகிறது. சின்மயி பாடிய படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பைக் கூட பெற முடியாத வைரமுத்துவால் அவரது திரைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் அதிகாரத்தை மட்டும் எப்படி கொண்டிருந்திருக்க முடியும்?
சின்மயிக்கு பாலியல் தொல்லை தர முயலவில்லை என நான் கூறவில்லை. ஆனால் அதற்கு முகாந்திரம் வைரமுத்து அதிகார துஷ்பிரயோகம் பண்ணினது அல்ல என்கிறேன். அந்த காலகட்டத்தில் வைரமுத்துவை விட அதிக புகழும் அதிகாரமும் கவனமும் பெற்றவர்களாக மேற்சொன்ன பாடலாசிரியர்களே இருந்தனர். இன்னொரு விசயம் 2010க்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் தான் வைரமுத்துவும் சின்மயியும் அதிகமாக இணைந்து பணியாற்றுகிறார்கள். ஆனால் அதிலும் வைரமுத்துவிடம் இருந்து ஏ.ஆர் ரஹ்மான் விலகி வேறு பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க ஆரம்பிக்கிறார். தொடர்ந்து வைரமுத்து பாடல்களை சின்மயிக்கு கொடுக்காமல் இருந்தார். அதாவது வைரமுத்துவை ஒதுக்கி விட்டு சின்மயிக்கு அவர் தொடர் வாய்ப்புகளைக் கொடுத்தார். (ஆனால் நமக்கு சின்மயி சொல்வது கேட்க வைரமுத்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் சின்மயிக்கு பாடல் வாய்ப்புகள் பறிபோயிருக்கும் எனத் தோன்றும். ஆனால் உண்மை நேர்மாறானது.) ஒரு கட்டத்தில் வைரமுத்து அனைத்து பாடல்களையும் தானே எழுதுவேன் எனும் பிடிவாதத்தை விட்டு இளைய இசையமைப்பாளர்களின் படங்களில் ஒன்றிரண்டு பாடல் கிடைத்தாலே பெரிது எனும் நிலைக்கு வந்து சேர்கிறார். அப்போது சின்மயி தன் புகழின் உச்சத்தில் இருக்கிறார்.
மீண்டும் சொல்கிறேன்: வைரமுத்து தப்பு செய்திருக்கலாம், ஆனால் சின்மயியை தன்னிச்சைப்படி ஆட்டி வைக்கும் அதிகாரம் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்த அளவில் இல்லை. அவர் தன் பாடல் எழுதும் திறனை வைத்து சின்மயியை ஒடுக்கினார் எனும் வாதத்தில் எந்த முகாந்திரமும் இல்லை என்பது நிரூபணமாகிறது.
அதே நேரம் மற்ற பெண்கள் விசயத்தில் ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியர் எனும் அளவில் அவருக்கு இருந்த பிம்பத்தைக் கொண்டு அவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்ய அவர் முனைந்திருக்கலாம். அவருக்கிருந்த ஊடக பலம், தொடர்புகள் அப்பெண்களை வலுவாக எதிர்க்க முடியாதபடி, தமக்குள் புழுங்கும்படி பண்ணி இருக்கலாம்.
இப்பெண்களுக்கு அடையாளம் வெளிப்படுத்த தேவையிராதபடி சட்ட விசாரணைகள் நடத்தி உண்மையென நிரூபணமானால், வைரமுத்துவை நீதிமன்றம் தண்டிக்கலாம். அப்பொறுப்பு அரசுக்கானது.


Comments