2018இல் வைரமுத்துவிடன் மோதிய பிறகு சின்மயி ரஹ்மான், யுவன் என அனேகமாக எல்லா இசை இயக்குநர்களிடமும் பாடியிருக்கிறார். மற்ற பெண் பாடகிகளை விட அதிக வாய்ப்பை 2018இல் இருந்தே பெற்றிருக்கிறார். அடுத்து, மீ டூ விவகாரம் சர்ச்சையான 2018க்கு முன்புள்ள சில வருடங்களாக வைரமுத்து குறைந்த அளவு பாடல்களே, அதுவும் சின்மயி பாடின பாடல்கள், எழுதி இருந்தார். 2017இல் “நல்லை அல்லை” பிரசித்தமான ஒரு பாடல். ஆனால் அதற்கு முன்பு பார்த்தால் 2016இல் தர்மதுரை படத்தில் ஒரு பாடல். இப்படி அவ்வப்போது சில பாடல்களே. ஆனால் இவை பிரசித்தமான பாடல்களாக இருந்தன.
இன்னொரு விசித்திரமான செய்தி: 2002இல் சின்மயி அறிமுகமான பின்னர் வைரமுத்து அவரது காட்பாதராக இருந்தார் என்பது போன்ற ஒரு சித்திரம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் தேசிய விருது பெற்ற பாடல்கள் உட்பட சில பிரசித்தமான பாடல்களை அவரது பாடலுக்கு இவர் பாடியிருக்கிறார் என்பது. ஆனால் எண்ணிக்கையை பார்த்தோமானால் அறிமுகமான முதலிரு ஆண்டுகளில் ஒரு சில பாடல்களை அவர் வைரமுத்துவின் வரிகளுக்கு எழுதியிருந்தாலும் 2005க்குப் பிறகு பரவலாக வேறு பாடலாசிரியர்களின் வரிகளுக்கே அவர் அதிகமாய் பாடியிருக்கிறார். குறிப்பாக 2016க்குப் பிறகு அவர் வைரமுத்துவிற்கு பாடுவது வெகுவாக குறைகிறது. வைரமுத்துவும் திரையிசையில் தன் செல்வாக்கை 2000க்கு பின்பு இழந்து வருகிறார். இன்னும் சொல்லப் போனால், 2002-03க்குப் பிறகு சின்மயி வருடத்திற்கு இரண்டு மூன்று என சொற்பமான பாடல்களையே ஒப்பீட்டளவில் வைரமுத்துவுக்குப் பாடியிருக்கிறார் (மொத்தமாக 22). வெறும் 9.6%. பொதுவாக இயக்குநர்கள், இசையமைப்பாளர்களே இவ்விசயத்தில் முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். உ.தா., மி டூவிற்குப் பிறகு சின்மயி ரஹ்மான் இசையில் பாடுகிறார், ஆனால் ரஹ்மான் இந்த கட்டத்தில் வைரமுத்துவை தள்ளி வைக்கிறார்.
எனில் சின்மயி தன் திரைவாய்ப்புகள் பறிபோகக் கூடாது என்பதற்காக வைரமுத்துவை அதுவரை எதிர்க்காமல் இருந்தார் என்பது பொய் ஆகி விடுகிறது.
தகவல் அடிப்படையில் இதுவே நிஜம். ஆனால் சினிமா துறைக்குள் வேறு எதார்த்தம் உள்ளதா, தான் எழுதாத பாடல்களிலும் யார் பாட வேண்டும் எனத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வைரமுத்து பெற்றிருந்தாரா என சினிமாக்காரர்கள் தாம் சொல்ல வேண்டும். அது உண்மையெனில், வைரமுத்து ஏன் மற்ற புது பாடலாசிரியர்களை அப்பாடல்களை எழுத அனுமதிக்க வேண்டும்?

கருத்துகள்