முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“சத்யா” - ஒரு படம், பல உருவல்கள்







நேற்று அஜயன் பாலாவின் பதிவால் தூண்டப்பட்ட ராம்கோபால் வர்மாவின் சத்யா (1998) படத்தை மூன்றாவது முறையாகப் பார்த்தேன். அப்போது தான் ஒன்று புரிந்தது - தமிழில் மணிரத்னமும் பாலாவும் இப்படத்தில் இருந்து நிறைய காட்சிகளை உருவி இருக்கிறார்கள். குறிப்பாக சொல்வதானால், “ஆயுத எழுத்தில்” வரும் அரசியல்வாதியான செல்வநாயகம் (பாரதி ராஜா) இப்படத்தின் வில்லனான தாக்கூர் தாஸ் பாவின் மறு உருவாக்கம் தான். பிக்கு மாத்ரேயின் (மனோஜ் பாஜ்பாய்) இன்னொரு வடிவம் தான் இன்ப சேகர் (மாதவன்). பிக்கு  மாத்ரேயின் அந்த உணர்ச்சிகரமான, உலகமே தன்னாலானது என நம்பும் இயல்பு, எதையும் உதைத்துத் தள்ளி முன்னேறும் ஆசையின் தான் இன்ப சேகரின் செலுத்துவிசை. அவனை தன் போக்குக்கு இழுத்து சென்று பயன்படுத்தி, தேர்தலில் வென்று விட்டு, இறுதியில் இறுதி விடும் அரசியல்வாதியே இரு படங்களில் வரும் வில்லன்கள். ஒரே வித்தியாசம் “சத்யாவில்” வில்லன் கொல்லப்படுகிறான், “ஆயுத எழுத்தில்” வில்லனுடன் நாயகன் இணக்கிப் போகிறான். அதே போல, “ஆயுத எழுத்தில்” வில்லனுடன் சமரசம் செய்யும் நாயகன் இறுதியில் சிறை செல்கிறான், வில்லன் ஜெயித்து சட்டமன்றத்துக்கு செல்கிறான்.


பிக்கு மாத்ரே தன் மனைவியுடன் ஓட்டலுக்கு சென்று ஆர்ப்பாட்டமாக பேசிக்கொண்டு சாப்பிடும் அந்த காட்சியை அப்படியே சற்று மாற்றி “ஆயுத எழுத்தில்” மணி பயன்படுத்தி இருக்கிறார். பிக்குவுக்கும் அவன் மனைவிக்குமான அந்த முரட்டுத்தனமான காதலும் இன்னும் விரிவாக கவித்துவமாக “ஆயுத எழுத்தில்” மாதவன்-மீரா ஜாஸ்மின் உறவாகிறது.


பிக்கு மாத்ரேவுக்கும் சத்யாவுக்குமான (சக்கரவர்த்தி) உறவு சிறைச்சாலையில் ஆரம்பிக்கிறது. ஒரு துளி கருணை அதன் துவக்கப் புள்ளி. சத்யாவை முதன்முதலாக எந்த கேள்வியுமின்றி அரவணைத்து ஏற்கும் முதல் நபர் பிக்கு தான்; அவன் அவனை முழுமையான விசுவாசத்துடன் நண்பனுக்கும் மேலான ஒரு உறவாக கருதுகிறான். ஒரு சின்ன மோதலில் ஆரம்பித்து உணர்ச்சிகரமான ஒரு bromanceஆக இருவரின் நட்பும் பரிணமிக்கிறது. இறுதியில் தன் நண்பனை துரோகத்தினால் கொன்ற வில்லனை சத்யா கொன்று பழிவாங்குகிறான். சத்யாவின் பாத்திரம் ஊரோடு ஒத்துப்போகத் தெரியாத, உணர்ச்சிகளை காட்டத் தெரியாத, உள்ளொடுங்கிய அனாதையுடையது. இதில் தன்னை ஒருவன் மிருகமாக கருதுகிற ஒரு இழையை சேர்த்து விட்டால் “பிதா மகனின்” சித்தன் (விக்ரம்) வந்து விடுவான் (இதை BOFTA பேட்டியில் பாலாவே ஒத்துக் கொள்கிறார்.). சக்தியும் சித்தனும் சிறைச்சாலையில் நட்பாகிற இடங்கள் பாலாவின் பார்வையில் உருமாற்றம் பெற்றிருந்தாலும் படைப்பூக்கத்தை இங்கிருந்தே பெற்றிருக்கிறார். வில்லனை வெறியுடன் கொல்லும் காட்சியை நிச்சயமாக சுட்டிருக்கிறார். சத்யா வில்லனைக் குத்திவிட்டு அவன் உயிர்த்துடிப்பு போகும் வரை தன்னுடன் இறுக்கிப் பிடித்தபடி நிற்பான். சித்தனோ தொண்டைக் குழியை அப்படி ஆர்வமாக பார்த்தபடி ரசனையாக வேட்டையாடிக் கொல்வான். இரண்டிலும் பழிவாங்கும் வெறியின் தடையற்ற உன்மத்தம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 


அதே போல “சேது” படத்தில் இறுதிக்காட்சியானது “சத்யாவில்” இருந்து சிறிது மாற்றப்பட்டு உருவானதே - “சத்யாவின்” அந்த பிரசித்தமான கிளாசிக்கான காட்சியில் சத்யாவின் காதலி அவனை கைவிட்டு விடுவாள். அவன் அவள் அறைக்கு வெளியே நின்று கதவைத் தட்டி மன்றாடிக் கொண்டே இருப்பான். தான் ஒரு சாமான்யமானவன் என நினைத்திருந்த காதலன் உண்மையில் ஒரு மாபியா ஆள் எனத் தெரிந்ததும் நொறுங்கிப் போகும் அவள் அச்சத்தால் பீடிக்கப்படுகிறாள். சத்யாயோ தன்னை அவள் எந்த நிலைமையிலும் மறுக்க மாட்டாள் என நம்பிக் கொண்டிருக்கிறான். அவளுடைய அச்சத்தை அவன் அந்த கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் நுழையும் போது தான் முதன்முதலில் காண்கிறான். (அவன் அவளிடம் தன் தரப்பைக் கூற முயலும் போது போலிசால் சுட்டுக் கொல்லப்படுவான்.) இரு மனநிலைகளின் இந்த நாடகீயமான மோதல் இந்த காட்சியில் சிறப்பாக வந்திருக்கும் - காதலின் பரிபூரண ஏற்பு கூட சந்தர்ப்பவசத்தால் தற்காலிகமாக உருவாவதே என இயக்குநர் காட்டி இருப்பார். யோசித்துப் பார்த்தால் “சேதுவின்” கிளைமேக்ஸும் அதன் கதைக்கருவும் இது தான். இந்த காட்சியையும் ஜெயகாந்தனின் சிறுகதையையும் மட்டும் வைத்தே ஒரு மொத்த திரைக்கதையையும் உருவாக்கி விட்டார் பாலா.

இன்னொரு படத்தின் கிளைமேக்ஸும் நினைவு வந்தது -  அது சசிகுமாரின் “சுப்பிரமணியம்புரம்”.


“சத்யா” எக்கதைகளை நினைவுபடுத்துகிறது என்றும் யோசித்துப் பார்த்தேன். உடனடியாகத் தோன்றியவை மகாபாரத கர்ணன்-துரியோதனன் உறவு. அதில் இருந்து பாண்டவர்களை அகற்றி விட்டு முழுக்க தீமையால் ஆளப்படும் உலகை கற்பனை செய்தால் அதுவே “சத்யாவின்” மும்பை நிழலுலகம். அடுத்து “காட்பாதர்”.

கருத்துகள்

Ram இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ், இயக்குனர்கள் சுடுவதில் தவறில்லை.... ஆனால் நாம் அதை அறிந்து கொள்ள இவ்வளவு நாள் ஆகிறது... அதுவும் ஊடகங்களும் இதை பற்றி அப்போதே கிழித்து தள்ளினால் நன்று

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...