நேற்று அஜயன் பாலாவின் பதிவால் தூண்டப்பட்ட ராம்கோபால் வர்மாவின் சத்யா (1998) படத்தை மூன்றாவது முறையாகப் பார்த்தேன். அப்போது தான் ஒன்று புரிந்தது - தமிழில் மணிரத்னமும் பாலாவும் இப்படத்தில் இருந்து நிறைய காட்சிகளை உருவி இருக்கிறார்கள். குறிப்பாக சொல்வதானால், “ஆயுத எழுத்தில்” வரும் அரசியல்வாதியான செல்வநாயகம் (பாரதி ராஜா) இப்படத்தின் வில்லனான தாக்கூர் தாஸ் பாவின் மறு உருவாக்கம் தான். பிக்கு மாத்ரேயின் (மனோஜ் பாஜ்பாய்) இன்னொரு வடிவம் தான் இன்ப சேகர் (மாதவன்). பிக்கு மாத்ரேயின் அந்த உணர்ச்சிகரமான, உலகமே தன்னாலானது என நம்பும் இயல்பு, எதையும் உதைத்துத் தள்ளி முன்னேறும் ஆசையின் தான் இன்ப சேகரின் செலுத்துவிசை. அவனை தன் போக்குக்கு இழுத்து சென்று பயன்படுத்தி, தேர்தலில் வென்று விட்டு, இறுதியில் இறுதி விடும் அரசியல்வாதியே இரு படங்களில் வரும் வில்லன்கள். ஒரே வித்தியாசம் “சத்யாவில்” வில்லன் கொல்லப்படுகிறான், “ஆயுத எழுத்தில்” வில்லனுடன் நாயகன் இணக்கிப் போகிறான். அதே போல, “ஆயுத எழுத்தில்” வில்லனுடன் சமரசம் செய்யும் நாயகன் இறுதியில் சிறை செல்கிறான், வில்லன் ஜெயித்து சட்டமன்றத்துக்கு செல்கிறான்.
பிக்கு மாத்ரே தன் மனைவியுடன் ஓட்டலுக்கு சென்று ஆர்ப்பாட்டமாக பேசிக்கொண்டு சாப்பிடும் அந்த காட்சியை அப்படியே சற்று மாற்றி “ஆயுத எழுத்தில்” மணி பயன்படுத்தி இருக்கிறார். பிக்குவுக்கும் அவன் மனைவிக்குமான அந்த முரட்டுத்தனமான காதலும் இன்னும் விரிவாக கவித்துவமாக “ஆயுத எழுத்தில்” மாதவன்-மீரா ஜாஸ்மின் உறவாகிறது.
பிக்கு மாத்ரேவுக்கும் சத்யாவுக்குமான (சக்கரவர்த்தி) உறவு சிறைச்சாலையில் ஆரம்பிக்கிறது. ஒரு துளி கருணை அதன் துவக்கப் புள்ளி. சத்யாவை முதன்முதலாக எந்த கேள்வியுமின்றி அரவணைத்து ஏற்கும் முதல் நபர் பிக்கு தான்; அவன் அவனை முழுமையான விசுவாசத்துடன் நண்பனுக்கும் மேலான ஒரு உறவாக கருதுகிறான். ஒரு சின்ன மோதலில் ஆரம்பித்து உணர்ச்சிகரமான ஒரு bromanceஆக இருவரின் நட்பும் பரிணமிக்கிறது. இறுதியில் தன் நண்பனை துரோகத்தினால் கொன்ற வில்லனை சத்யா கொன்று பழிவாங்குகிறான். சத்யாவின் பாத்திரம் ஊரோடு ஒத்துப்போகத் தெரியாத, உணர்ச்சிகளை காட்டத் தெரியாத, உள்ளொடுங்கிய அனாதையுடையது. இதில் தன்னை ஒருவன் மிருகமாக கருதுகிற ஒரு இழையை சேர்த்து விட்டால் “பிதா மகனின்” சித்தன் (விக்ரம்) வந்து விடுவான் (இதை BOFTA பேட்டியில் பாலாவே ஒத்துக் கொள்கிறார்.). சக்தியும் சித்தனும் சிறைச்சாலையில் நட்பாகிற இடங்கள் பாலாவின் பார்வையில் உருமாற்றம் பெற்றிருந்தாலும் படைப்பூக்கத்தை இங்கிருந்தே பெற்றிருக்கிறார். வில்லனை வெறியுடன் கொல்லும் காட்சியை நிச்சயமாக சுட்டிருக்கிறார். சத்யா வில்லனைக் குத்திவிட்டு அவன் உயிர்த்துடிப்பு போகும் வரை தன்னுடன் இறுக்கிப் பிடித்தபடி நிற்பான். சித்தனோ தொண்டைக் குழியை அப்படி ஆர்வமாக பார்த்தபடி ரசனையாக வேட்டையாடிக் கொல்வான். இரண்டிலும் பழிவாங்கும் வெறியின் தடையற்ற உன்மத்தம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அதே போல “சேது” படத்தில் இறுதிக்காட்சியானது “சத்யாவில்” இருந்து சிறிது மாற்றப்பட்டு உருவானதே - “சத்யாவின்” அந்த பிரசித்தமான கிளாசிக்கான காட்சியில் சத்யாவின் காதலி அவனை கைவிட்டு விடுவாள். அவன் அவள் அறைக்கு வெளியே நின்று கதவைத் தட்டி மன்றாடிக் கொண்டே இருப்பான். தான் ஒரு சாமான்யமானவன் என நினைத்திருந்த காதலன் உண்மையில் ஒரு மாபியா ஆள் எனத் தெரிந்ததும் நொறுங்கிப் போகும் அவள் அச்சத்தால் பீடிக்கப்படுகிறாள். சத்யாயோ தன்னை அவள் எந்த நிலைமையிலும் மறுக்க மாட்டாள் என நம்பிக் கொண்டிருக்கிறான். அவளுடைய அச்சத்தை அவன் அந்த கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் நுழையும் போது தான் முதன்முதலில் காண்கிறான். (அவன் அவளிடம் தன் தரப்பைக் கூற முயலும் போது போலிசால் சுட்டுக் கொல்லப்படுவான்.) இரு மனநிலைகளின் இந்த நாடகீயமான மோதல் இந்த காட்சியில் சிறப்பாக வந்திருக்கும் - காதலின் பரிபூரண ஏற்பு கூட சந்தர்ப்பவசத்தால் தற்காலிகமாக உருவாவதே என இயக்குநர் காட்டி இருப்பார். யோசித்துப் பார்த்தால் “சேதுவின்” கிளைமேக்ஸும் அதன் கதைக்கருவும் இது தான். இந்த காட்சியையும் ஜெயகாந்தனின் சிறுகதையையும் மட்டும் வைத்தே ஒரு மொத்த திரைக்கதையையும் உருவாக்கி விட்டார் பாலா.
இன்னொரு படத்தின் கிளைமேக்ஸும் நினைவு வந்தது - அது சசிகுமாரின் “சுப்பிரமணியம்புரம்”.
“சத்யா” எக்கதைகளை நினைவுபடுத்துகிறது என்றும் யோசித்துப் பார்த்தேன். உடனடியாகத் தோன்றியவை மகாபாரத கர்ணன்-துரியோதனன் உறவு. அதில் இருந்து பாண்டவர்களை அகற்றி விட்டு முழுக்க தீமையால் ஆளப்படும் உலகை கற்பனை செய்தால் அதுவே “சத்யாவின்” மும்பை நிழலுலகம். அடுத்து “காட்பாதர்”.





Comments