நீ எழுதும் கவிதைகளில்
எப்போதும் மூன்று வரிகள் மீந்து விடுகின்றன
நீ என்னைப் பார்க்கும் போது
எப்போதும் சில நொடிகள்
கூடுதல் உக்கிரமாகி சுடுகின்றன
நீ எனக்கு உணவு விளம்பும் போதும்
ஒரு கவளம் அதிமாக வைப்பதற்கு
உன்னைக் கடிந்து கொள்கிறேன்
நீ என்னைக் கட்டியணைத்து
என் மீதுறங்கும் போது
கனக்கிறது என காதுக்குள் சொல்கிறேன்.
ஒருநாள்
நான் மீந்து போவது பிரச்சனை என்றால்
அதற்கு
என்ன மதிப்பு எனக் கேட்டாய்.
அழகே
மீந்து விடும் இருத்தல்
ஒரு ஏணி
அதன் ஒவ்வொரு படியாய் ஏறி
ஒவ்வொரு படியாக பின்னுக்கு விட்டு விட்டு
உன் முகத்தைப் பற்றி
முத்தமிடும் போது
உன் உதடுகளைத் தாண்டி
உன்னை நான்
ஸ்பரிசிக்கும் போது
உன் முகமும்
உன் உதடுகளும்
மீந்து விடுகின்றன
உன் வாயின் வாசம் உன் உதட்டின் சுவை
உன் உதட்டின் மீதுள்ள சாயத்தின் பிளாஸ்டிக் சுவை
உன் முகக்களிம்பின் நெடி உன் தோலின் மென்மை
என் கண்ணில் விழும் உன் கூந்தல் சுருள்கள்
பின்னுக்குப் போய் விடுகின்றன
உன் அழகு ஓரடி முன்னே வைத்து
என்னை ஊடுருவி சென்று விடுகிறது
நான் ஏணியின் மீது நின்று
உன்னைத் தொடும் போது
மீந்து போனவை அத்தனையும்
பேரழகாக இருக்கிறது.

கருத்துகள்