1) ருத்துராஜின் அபாரமான துவக்க ஆட்டம். சென்னை அணியின் மத்திய வரிசைக்கு சுழல் பந்தை அடித்தாடுவதில் ஒரு பிரச்சனை இருந்தது. சுழலுக்கு எதிராக ருத்துராஜின் சராசரிக்கு 60க்கு மேல், ஸ்டிரைக் ரேட்டும் சிறப்பு. அவர் மத்திய ஓவர்களில் சுழலர்களை நாசம் செய்தது வெகுவாக உதவியது. டூப்பிளஸி வேகப்பந்துகளை விளாசினால் ருத்துராஜ் சுழலர்களை கவனித்துக் கொண்டார்.
2) சுழல் பந்தை அடித்து சிதற விட்டதில் 3வது எண்ணில் வந்தாடிய மோயின் அலியும் முக்கியமானவர். இந்தியாவில் இங்கிலாந்து அணி சென்னையில் டெஸ்ட் ஆடிய போது ஐ.பி.எல் ஏலத்துக்கு சில நாட்களே இருந்தது. அதற்கு டிரையல் போல அவர் சிக்ஸர்களாக கடைசி நாளில் விளாசினார். அவரை ஐ.பி.எல்லில் சென்னை அணி தூக்கியது ஒரு மாஸ்டர் ஸ்டுரோக்.
3) ரெய்னாவை சமாதானம் பண்ணி அணிக்குள் அழைத்து வந்தார்கள். அவரும் கிடைத்த ஆட்டங்களில் நன்றாக சுதந்திரமாக அடித்தாடினார். ஓரளவுக்கு தொப்பை குறைந்து, கொஞ்சம் ஒல்லியாகி நல்ல ஆட்டநிலையிலும் இருந்தார்.
4) ருத்துராஜும் மோயின் அலியும் பிரமாதமாக ஆடி ஒரு ஆற்றலைக் கொடுத்த பின் ரெய்னாவுடன் அம்பத்தி ராயுடுவும் நல்ல ஆட்டநிலைக்கு வந்தார்.
5) ஜடேஜா அனேகமாக இந்த சமயத்தில் தான் இந்தியாவுக்காக நல்ல மட்டை ஆட்டநிலைக்கு வந்தார். அவருடைய கீழ்வரிசை சிக்ஸர்களும் சில போட்டிகளில் உதவியதுடன் எதிரணிக்கு எப்போதும் ஒரு அச்சத்தையும் மிச்சம் வைத்தது.
6) மட்டையாட்டம் இப்படி கிளிக் ஆன பின் பந்து வீச்சு பழையபடி நன்றாக தடுத்தாடும் பணியை செய்தது. குறிப்பாக பிராவோ, தாகூரின் மெதுவான பந்துகள் மத்திய ஓவர்களில் வேகமற்ற ஆடுதளங்களில் பல விக்கெட்டுகளை வீழ்த்தின.
7) ரெய்னாவுக்கு காயம்பட்ட பின் அவரிடத்தில் ஆட வந்த உத்தப்பா முதல் பத்து ஓவர்களில் அணியின் ரன் ரேட் உயர வெகுவாக உதவினார். அவர் எந்தளவுக்கு நன்றாக ஆடினார் என்றால் ரெய்னாவுக்கு திரும்ப வர வாய்ப்பே கிடைக்கவில்லை.
8. இப்போதும் வயதானவர்கள் சென்னை அணியில் இருக்கிறார்கள் - ஆனால் முன்பு இருந்தது போல் அதிக எண்ணிக்கையில் இல்லை. ருத்துராஜ், மோயின் அலி, ஜடேஜா, தாகூர், ஹேஸில்வுட், சாஹர் ஆகியோர் இளைஞர்களே. டூப்பிளஸி, தோனி, பிராவோ போன்றோர் வயதானவர்கள் என்றாலும் இப்போதும் சிறந்த களத்தடுப்பாளர்களே. மோசமான உடற்தகுதி கொண்ட, சுமாரான களத்தடுப்பாளர்களான வயதான வீரர்கள் உத்தப்பாவும், ராயுடுவுமே. ஆக போன முறை இந்த உடற்தகுதி, வயோதிகம் எனும் சிக்கலை கவனமாக இம்முறை சரி செய்திருக்கிறார்கள். உள்ளே வந்த வீரர்கள் களத்தில் கொண்டு வந்த துடிப்பு, கவனம், கூர்மை சென்னையை இந்த ஐ.பி.எல்லில் சிறந்த களத்தடுப்பாட்ட அணிகளில் ஒன்றாக்கியது.
9) ஐக்கிய அரபு அமீரகத்திலும் சரி, அதற்கு முன்பு சென்னையிலும் சரி ஆடுதளங்கள் பெரும்பாலும் மெத்தனமானவை. சென்னையின் பந்து வீச்சு இத்தளங்களுக்கென்றே ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டதைப் போன்று கச்சிதமானது. சென்னையின் மிதவேக வீச்சாளர்களும் சுழலர்களும் ஷார்ட்டாக வைடாக வீச மாட்டார்கள். விக்கெட் எடுப்பதை விட நேராக வீசி ரன்களைக் கட்டுப்படுத்தவும், மெது பந்துகளை அதிகம் வீசவுமே விரும்புவார்கள். மோயின் அலியின் தேர்வு இரண்டாவது சுழல் ஆல்ரவுண்டரை, ஆறாவது பந்து வீச்சாளரை அவர்களுக்கு அளித்தது. இதுவும் அவர்கள் ரொம்ப சமநிலையான அணியாக தோன்ற முக்கிய காரணம்.
10) தோனியின் நிதானமான நடைமுறை அணுகுமுறை, புத்திசாலித்தனம், ஆளுமை ஒரு மிகப்பெரிய சமநிலையை, தன்னம்பிக்கையை இந்த அணிக்கு அளிக்கிறது. சென்னை அணி பாதி என்றால் தோனி மீதி. சென்னை அணி நிர்வாகத்தம் பாராட்ட வேண்டும் - அணி சொதப்பிய போது அவர்கள் பதறாமல் குறைகளை கண்டறிந்து சரி செய்தார்கள். அணியின் மையம் மாறாமல் பார்த்துக் கொண்டார்கள். அது நிர்வாகம் இப்போதும் மூத்த வீரர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது எனும் பிம்பத்தையும் தக்க வைத்தது.
வாழ்த்துகள்!


கருத்துகள்