உயிர்மையின் 200வது இதழின் சிறுகதைகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன் (நான் சற்று தாமதமாகத் தான் படிக்க ஆரம்பிப்பேன்.)
இப்போதைக்கு படித்த மூன்று கதைகளில் இமையம் மற்றும் யுவன் சந்திரசேகரின் கதைகளே என்னை கவர்ந்தன.
1) ஜெயமோகனின் “கேளாச்சங்கீதம்” துல்லியமான விவரணைகள், மாந்திரிக தகவல்கள், நாஞ்சில் பேச்சுவழக்கு, உளவியல் என்று களைகட்டினாலும் அது ஒரு குறுநாவலுக்கான கதை என்று தோன்றியது. அதை சிறுகதையாக்க ஜெ.மோவால் முடியவில்லை.
2) இமையத்தின் “மயானத்தில் பயமில்லை” அவர் முன்பு எழுதியுள்ள நாட்டார் சடங்கு, தெய்வங்கள், சாமி ஏறுவது ஆகிய விசயங்களைப் பேசும் கதைகளைப் போன்றது. இக்கதைகள் கூர்மையான ஒரு முடிவை நோக்கி விர்ரென பயணிக்கும் அவருடைய கச்சிதமான சிறுகதைகளில் இருந்து வேறுபட்டவை. சற்றே தஸ்தாவஸ்கியின் கதை பாணியை ஒத்தவை. தஸ்தாவஸ்கியின் நாவல் உலகில் மாறுபட்ட தனித்துவமான குணாதசியங்கள் கொண்ட மனிதர்கள் வருவார்கள். அவர்கள் தமக்கே உரித்த தனிமையால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பரஸ்பரம் சந்தித்து உரையாடும் போது, ஒரு நெருக்கடியில் இருவரும் பின்னிப்பிணையும் போது அவர்கள் மத்தியில் ஒரு உடைவு ஏற்படும். அப்போது அவர்களுடைய தன்னிலைகளின் எல்லைக்கோடுகள் கரையும். அவர்கள் தாம் இருவேறு உடல்களில் இருக்கும் ஒருவரே என அறிவார்கள்.
இந்த போக்கை நாம் இமையத்தின் சில சிறுகதைகளிலும் காண முடியும் - வெளி, மனிதர்கள், அவர்களுடைய மிகுகற்பனை நம்பிக்கைகள், சடங்குகளில் வெளிப்படும் ஆளுமைகள் எல்லாம் கலந்து ஒன்றாகிட ஒருவித விடுதலை பெறுவார்கள். “மயானத்தில் பயமில்லை” கதையில் மயானத்தில் கொத்தனாருக்கு உதவியாக சாந்து தூக்க வரும் பெண்ணுக்கும் அங்கு பிணங்களை புதைக்கிற பணியை செய்கிற ஒரு பெண்ணுக்குமான உரையாடலில் இன்னதென்று கண்டறிய முடியாத ஒரு மாயம் நிகழ்கிறது. அவர்கள் பரஸ்பரம் அறிகிறார்கள், அப்போது தாம் ஒருவரன்றி வேறில்லை என்று உணர்கிறார்கள், அவ்வளவு தான், அதைத் தாண்டி கதையில் வேறெதுவும் நடப்பதில்லை. ஆனால் அதுவே ஒரு ஆசுவாசமான உணர்வை நமக்கு அளிக்கிறது.
3) யுவனின் “திகைப்பு” சற்று சிக்கலான, படிக்க சிரமமான கதை, ஆனால் அபாரமான தொழில்நுட்ப லாவகம் கொண்டது, ஒரு கவிதைக்கே உரித்த மீஎதார்த்த தாவல்களைக் கொண்டது, வாசித்த பிறகு நினைத்து நினைத்து சிலாகிக்க வைக்கும் அழகு பொதிந்தது. இதன் கதைக்கருவும் இமையத்தின் கதையினுடையதே. இமையம் உணர்ச்சிகரமாக நாடகீயமாக சித்தரிப்பதை யுவன் புறவயமான விலகலுடன், மாய எதார்த்த ஸ்டைலுடன் செய்திருக்கிறார். கதைக்குள் கதைக்குள் கதை என்பது போல ஒரு மனிதனின் நினைவுக்குள் தோன்றும் ஒரு மனிதனுக்குள் தோன்றும் ஒருவன், இவர்களின் தோற்றத்தின் துவக்கப்புள்ளி அல்சைமைர்ஸ் நோயால் மன ஒழுங்கு குலைந்த ஒருவர் என்று கதையை வடிவமைத்திருக்கிறார் யுவன்.
கருத்துகள்