பிராமணர்-பார்ப்பனர் சொற் தேர்வில் எது சரியானது என்பதில் நான் சாருவின் பக்கமே நிற்கிறேன்.
நான் முடிந்த வரையில் பிராமணர் என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறேன். வரலாற்று மனிதர்களை குறிக்கும் மட்டும் பார்ப்பனர் என எழுதுகிறேன். ஆனால் அது ஒரு வசைச்சொல் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பிராமணர் என்ற சொல்லில் ஒரு அதிகாரம் உள்ளது, அதை பார்ப்பனர் என்று சொல் வழியாகவே மட்டுப்படுத்த வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை.
பிராமணியம் / பார்ப்பனியம் பிராமண சமூகத்தின் பிரச்சனை அல்ல. நாகார்ஜுனர் கூட பிராமணராக பிறந்தவரே. ஆனால் அவரளவுக்கு வைதீகத்துக்கு வேட்டு வைத்தவர் மற்றொருவர் இல்லை. அவருடைய தத்துவத்தை, தர்க்கங்களை வைத்து சனாதன சிந்தனையை சில்லுசில்லாக நொறுக்க முடியும். அதே போலவே, சாதிக்கு எதிராக செயல்படுகிற எத்தனையோ பிராமணர்களை நான் அறிவேன். எனக்கு பிராமணர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்ததால் சில மோசமான அனுபவங்களும் கிடைத்தன. ஆனால் நான் மற்றொரு சாதியில் பிறந்திருந்தால் அப்போது நான் இருக்கும் சூழலில் உள்ள மேல்சாதியினரால் நான் ஒடுக்கப்பட்டிருப்பேன். ஆக பிரச்சனை இந்த சாராம்சமான சிந்தனை முறையே (அதில் இருந்தே சனாதனம், சாதியமைப்பு, பிராமணியம் எல்லாம் பிறக்கிறது) என்பதில் இப்போது தெளிவாக இருக்கிறேன்.
ஏதோ ஒரு அரசியல் நியாயத்துக்காக நம்முடன் செயல்படும் நண்பர்களை, தோழர்களை காயப்படுத்தும் நோக்கில் ஒரு சொல்லை எடுத்து வீசக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்போது நடைபெறும் அன்புமணி vs சூர்யா பிரச்சனையில் கூட நாம் வன்னிய சமுதாயத்தினரை காயப்படுத்தும் விதத்தில் பேசவோ மீம்களை பகிரவோ கூடாது என நினைக்கிறேன்.
பெரியாரும் தன் காலத்தில் பார்ப்பனர் என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தவறு தான். ஆனால் பெரியார் மீதுள்ள மட்டற்ற அன்பினால், மரியாதையால், இந்த சொற்தேர்வையும் மீறி, நாம் அவரை என்றும் கொண்டாடத் தான் போகிறோம்.
கருத்துகள்