பெரியார் இதில் தரும் சித்திரம் முக்கியமானது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெள்ளையர் ஆட்சியின் சில நவீன முடிவுகள், நீதி சார்ந்த கண்ணோட்டம், சிறுபான்மையினர், தலித்துகளுக்கு ஆங்கிலேய நிர்வாகிகள் குழுக்களில் பிரதிநிதித்துவம், கல்வி, வேல் வாய்ப்புகள் அளித்தது போன்றவை நமது சமாதன சாதியமைப்பை சிறிது ஆட்டி வைத்தன. இதை ஆங்கிலேயர் அன்று காங்கிரஸுக்குள் கோலோச்சிய பார்ப்பனீய தரப்பினரின் வாலை ஒட்ட நறுக்கவும் தான் செய்தனர். காந்திக்கு செக் வைக்க அம்பேத்கருக்கும் ஜின்னாவுக்கும் ஆதரவளிக்கவும் செய்தனர் இதே ஆங்கிலேயர். எது எப்படியோ, இதனால் பார்ப்பனீயத்தில் இருந்து சிறிது ஆசுவாசம் அப்போது மக்களுக்கு கிட்டியது.
அதுவரை ஆங்கிலேயத்துக்கு ஆதரவாக நின்ற பார்ப்பனியம் இப்போது பத்தி விரித்து தாக்க தயாரானது. ஆங்கிலேய அரசின் இந்த அணுகுமுறையை விரும்பாமல் தான் இந்திய விடுதலைக்கு முன் சுமார் நாற்பதாண்டுகளாக இந்துமத சீர்திருத்தவாதிகள் எனப்படும் மென் வலதுசாரிகள், சனாதனிகள் காங்கிரசுக்குள் இருந்தபடி தேசப்பற்று எனும் பசுத்தோலை போர்த்திக் கொண்டு, வெள்ளையரை இந்துமத விரோத அந்நிய கும்பல், அதனாலே இந்நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என சித்தரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். மக்களிடையே இதை பரவலாக்க தன்னை துறவியாக அறிவித்துக் கொண்ட ஒருவருடைய நாடகீயமான அரசியல், நடவடிக்கைகள் அவர்களுக்கு உதவின. அவரைக் கொண்டு ஆங்கிலேய அரசை பலவீனமாக்கி பின்னர் சரியான சந்தர்ப்பம் அமைந்ததும் ஆட்சியையும் கைப்பற்றினர் இவர்கள். இதையே பெரியார் இங்கு பார்ப்பனீயம் தன் பொய் புரட்டால் மக்களை ஏமாற்றி வெள்ளையரை துரத்தி அதிகாரத்தை மீண்டும் வென்ற வரலாறு என்கிறார்.
நாம் வழக்கமாய் நம்புகிற இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருந்து மாறுபட்ட விளக்கம் இது. விடுதலைப் போராட்ட பார்ப்பனீய அரசியலை இங்கு பெரியார் அம்பலப்படுத்துகிறார்.
பார்ப்பனீயம் அன்று வெற்றிகரமாக ஊரை அடித்து உலையில் போட ஒரு வக்கீலை பயன்படுத்தியது. அவர் இந்திய-பாக் பிரிவினை வரை பார்ப்பனியத்தின் முகமூடியாக இருந்தார். அவருக்கு அதுவரை ஏராளமான நிதியும் ஊடக வெளிச்சமும் கொடுத்து அது வளர்த்து விட்டது. அவரை அவர்கள் மகாத்மா என்று அழைத்தனர். தம்முடைய சோலி முடிந்ததும் அவரையும் அது காலி பண்ணியது.
நான் இணைத்துள்ள பெரியாரின் மேற்கோள் அவரது "நமது ஜனநாயகத்தின் வரலாறு" எனும் தலையங்கத்தில் உள்ளது. 24.3.1967 அன்று "விடுதலையில்" வெளியானது.


கருத்துகள்