Skip to main content

‘பார்ப்பனர்கள்’ - சில கேள்வி பதில்கள்


கேள்வி: //பாப்பான் என்பது வசைச் சொல் அன்று. அது தொழிலைக் குறிக்கும் சொல். எனில் பார்ப்பான் என்று அழைப்பதில் என்ன தவறு?//

பதில்: நாம் என்னதான் ஜிலேபி சுற்றினாலும் பார்ப்பனர் என்பதும் வர்ணாசிரம சொல்லே. ஏனென்றால் அதுவும் ஒரு தொழிலைக் குறிக்கிற சொல்லாக கருதப்படுகிறது. தொழிலின் அடிப்படையிலும் சனாதன கொள்கையின் படியும் தானே வர்ணம் உருவாகிறது. ஒரே வித்தியாசம் அது பிராமண எதிர்ப்பு, வைதீக மறுப்பு பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்டு கூர்மை ஏறிப் போன ஒரு சொல். அது ஒரு அரசியல் எதிர்ப்பு சொல்லாகவும், பிராமணர் மீதான கோபத்தை, விமர்சனத்தை காட்டும் சொல்லாகவும் உள்ளது. நான் என் இளவயது முதலே பிராமணர்கள் மீது கோபத்தை காட்டும் போது பிறசாதியினர் பயன்படுத்தும் சொல் அது என கண்டிருக்கிறேன். இன்றும் அதுவே நிலை. எனில் அச்சொல்லை ஒரு பொதுச்சொல்லாக நாம் பயன்படுத்த இயலாது. தமிழகத்தில் வாழும் அத்தனை பிராமணர்களும் பிறரை ஒடுக்கும் நோக்கில் செயல்படவில்லை எனும் போது ஏன் அந்த அரசியல் முனை பொருந்திய சொல்லை அனைவர் மீதும் நாம் ஏவ வேண்டும்? ஆணாக இருப்பதே ஒரு அதிகாரம் என கருதும் பெண்ணியர் உண்டு. அவர்களைப் பொறுத்தமட்டில் எல்லா ஆண்களும் ஆணாதிக்கவாதிகளே. அதைப் போன்ற ஒரு பார்வையே அனைத்து பிராமணரையும் பார்ப்பனர் என அழைப்பதில் செயல்படுகிறது. 

கேள்வி: பார்ப்பனர் என்பது வசைச் சொல்லாக இருக்குமானால், சங்க இலக்கியம் தொடங்கி, பாரதியார் வரையில் அதனைப் பயன்படுத்த்தியிருக்க மாட்டார்கள். எனில் ஒரு தமிழ்ச்சொல்லை பயன்படுத்தினால் என்ன தவறு?

பதில்: அச்சொல் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலான பயன்பாட்டில் மற்றொரு அர்த்தத்தை இன்று பெற்று விட்டதால், அந்த அர்த்தம் எதிர்மறையானது என்பதால், அந்த எதிர்மறையான பொருள் ஒரு சமுதாயத்தை மட்டும் குறிவைப்பது என்பதால், அதை பெரும்பாலான சந்தர்பங்களில் தவிர்ப்பதே நன்று.

கேள்வி: பிராமணர் என அழைப்பது அதன் எதிர்வில் உள்ள சூத்திரர்களை அவமதிப்பதாகாதா? நம் கண்ணைக் கொண்டு நம்மையே குத்துவது ஆகாதா?

பதில்: நாம் இந்து மதத்துக்குள் இருப்பதே தன் கண்ணால் தன்னைக் குத்தும் செயல் தான். பிராமணர் என ஒருவரை அழைப்பதால் மட்டும் அது நேர்வதில்லை. இந்துவாக நீங்கள் உங்களை உணராதவரையில், அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளாத வரையில் ஒருவர் தன்னை பிரம்மனில் இருந்து வருபவர் என்று சொல்லிக் கொள்வதால் உங்களுக்கு எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை. அவருடைய பிரம்மன், அவர் வந்துவிட்டுப் போகிறார், என்னுலகில் பிரம்மனோ விஷ்ணுவோ இல்லை என்று நினைக்கலாம். கத்தோலிக்க மதத்தின் படி கருக்கலைப்பு ஒரு பாவம். அது குறித்த கத்தோலிக்கர் இடையே நிறைய விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் மற்ற மதத்தவர்கள் அந்த மதிப்பீட்டை பொருட்படுத்துவதே இல்லையே. அவர்கள் அதற்கு வெளியே இருக்கிறார்கள். பிராமணன் எனும் சொல்லின் சனாதன தோரணையை எதிர்கொள்ள சிறந்த வழி இந்து மதத்தில் இருந்து வெளியேறுவதே. அன்றி பிராமணனை பார்ப்பான் என்று அழைப்பதல்ல. 
மத்திய சாதிகளில் தம்மை சத்திரியர் என்றும், ஆண்ட சாதி என்று கருதுகிறவர்கள் ஏராளம் (அவர்களுடைய சாதிப் பெயருக்குள்ளேயே அப்பொருள் வருவதுண்டு). ஒருவர் ஆள்பவர், பாதுகாவலர், நாயகன் என்றால் மற்ற சாதிகள் அடிமைகளா என்று கேட்கவா போகிறோம்.
 ஒவ்வொரு சாதியும் இங்கு தம்மை தம்மளவில் உயர்ந்தவராக தனித்துவமானவராக கருதுகிறார்கள். அது சனாதனத்தின் நீட்சியே. ஆக, பிராமணர்களை தம் அதிகார உச்சாணிக்கொம்பில் இருந்து கீழே தள்ளி விடுவதால் பிரச்சனை சரியாகப் போவதில்லை. 

இறுதியாக, இதன் அரசியல் அர்த்த அடுக்குகளுக்குள் செல்லாமல் நேரடியாகவே இப்பிரச்சனையை கையாளலாம். ஒரு சாரார் தம்மை காயப்படுத்துவதாக குறிப்பிடும் ஒன்றை நாம் ஏன் செய்ய வேண்டும்? அவர்கள் தம்மை பிராமணர் என்ன அழைப்பது நம்மை காயப்படுத்தினால், நாம் நம்மை ஒரு குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்துவது நமக்கு கீழுள்ளோரை காயப்படுத்தாதா? எனில் ஒவ்வொருவரும் நமக்கு கீழுள்ள சாதியினர் நம்மை ஒரு மாற்று சாதிப்பெயரால் அழைக்கும் படி சொல்லப் போகிறோமா? இது எங்கே போய் முடியப் போகிறது?

நாம் சொந்த சாதிக்குள் திருமணம் செய்யும் போது, நம் சாதிக்குண்டான தெய்வத்தை வழிபட்டு சடங்குகளை செய்யும் போது இந்த சனாதன அமைப்பை நாம் வலியுறுத்துவதில்லையா? இல்லை என்றால் ஏன் அகமண முறை இவ்வளவு பரவலாக இருக்கிறது? நம்மை யாரும் மாற்றி அழைக்காத போது ஏன் பிராமணரை மட்டும் அவ்வாறு அழைக்க வேண்டும்? ஆம், சனாதன அமைப்பை உருவாக்கியதில் அவர்களுக்கு வரலாற்று பங்கும், இப்போது அதை தக்க வைப்பதில் குறியீட்டுப் பங்கும் உண்டு. ஆனால் அதை ஏற்று அதன் ரத்தமும் சதையுமாக இருப்பவர்கள் அபிராமணர்களே. ஏன் சாதிய பாகுபாட்டை பிராமணர் மட்டுமே பின்பற்றுவது போல நாம் நாம் பாவனை செய்கிறோம்?

பிராமணர்களே இல்லாத ஒரு ஊரில் சாதியம் இருக்காதா? முன்பு புலம்பெயர்ந்து அயல் நாட்டுக்கு சென்றவர்கள் தம்முடன் சாதியையும் கொண்டே போனார்கள். அந்த ஊரில் பிராமணர்கள் இல்லை என்றாலும் பிராமணிய சிந்தனையை இம்மக்கள் தம் நெஞ்சில் ஏந்தி இருந்தார்கள், அதை தம் சடங்குகளில், நம்பிக்கைகளில் உருவேற்றி இருந்தார்கள். நிஜ பிராமணன் இல்லாத ஊரில் ஒரு கற்பனை பிராமணன் முளைத்து விடுகிறான். இது ஏனென்றால் பிராமணன் / பிராமணியம் நம் பண்பாட்டில், மொழியில், தொன்மங்களில், கோயிலை மையமிட்ட சடங்குகளில் சூட்சும்மாக இருக்கிறான். நாம் ரூப வடிவிலான பிராமணனை பழித்துக் கொண்டே அரூப வடிவிலான நெஞ்சில் பிராமணனை சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 

 இதற்குப் பதிலாக நாம் இந்து மதத்தில் இருந்து வெளியேறி  நவயான / அல்லது நமக்கு விருப்பமுள்ள வகை பௌத்தத்துக்கு சென்று விடலாமே! நாம் என்றால் ஒட்டுமொத்தமாக இந்தியர் அனைவருமே மாற வேண்டும். மொழியில், பண்பாட்டில், நடப்பில் உள்ள வைதீக இந்து அடையாளங்களை முழுக்க சுத்தமாக துடைத்தெறிய வேண்டும். அப்போதே சாதியமைப்பை உடைத்தெறிய முடியும். ஆனால் இச்சூழலிலும் கூட, பெரும்பகுதி இந்தியர் (சிறுபான்மையினரையும் சேர்த்து) பௌத்தம் தழுவினால் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் வரும்.

கேள்வி: ஒரு பிராமணர் சாதி அமைப்பை விட்டு வெளியேறியவராக இருக்கும்பட்சத்தில் அவர் ஏன் தான் பார்ப்பனன் என அழைக்கப்படும் போது புண்பட வேண்டும்?

பதில்: நம் சமூகத்தில் யாரும் அப்படி முழுமையாக சாதியத்தில் இருந்து வெளியேற முடியாது. சாதியத்தில் இருந்து வெளியேறுவது ஒரு பெரும் போராட்டம். நீங்கள் அவைதீக நோக்கை கைவிட்டு சாதியத்தை எதிர்த்தாலும் உங்களுடன் புழங்கும் கணிசமானோர், உங்கள் உறவினர், குடும்பத்தினர் வைதீக நோக்குடன் சாதியத்துக்குள் இருப்பார்கள். அவர்களுடன் உறவாடும் போது அவர்களுடைய “மொழியையே” நீங்கள் பேச நேரும் போது, தற்காலிகமாக ஏனும் அவர்களுடைய சனாதன தர்க்கத்தை வரித்திட நேரும் போது, மீண்டும் அந்த சகதிக்குள் போய் சிக்கிக் கொள்வீர்கள். ஏனென்றால் நாம் சமூகப் பிராணிகள். 
ஒரு பிராமணர் பூணூலை அறுத்தால் மட்டும் அவர் சாதியத்தில் இருந்து விடுபட முடியாது. ஆயிரமாயிரம் தடைகளை இந்த சமூகம் அவர் முன்பு போட்டுக்கொண்டிருக்கும். அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி, இந்தியாவை, அதன் மொழியை, சிந்தனையை முழுக்க தன் மூளையில் இருந்து துடைத்து அகற்றி, தன் வாழ்வில் பின் ஒருமுறை கூட இந்தியர் ஒருவரைக் கூட சந்திக்காமல், ஒரு இந்திய படத்தைக் கூட பார்க்காமல், இந்தியா குறித்த செய்திகளை கேட்காமல் இருந்தால் மட்டுமே அவரால் முழுமையாக சாதியில் இருந்து வெளியேற முடியும். அதற்கு முதன்மையாக அவர் இந்தியாவே இல்லாத உலகில் வாழ வேண்டும், அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டு நினைவுத்திறனை முழுமையாக இழக்க வேண்டும். அதாவது அவர் புதிதாக ஒரு குழந்தையை போல பிறந்திட வேண்டும். இதெல்லாம் நடக்கிற கதையா சொல்லுங்கள்?
(ஆனால் எதிர்காலத்தில் இந்த இந்தியா வைதீக, சனாதன பண்பாட்டில் இருந்து முழுக்க வெளியேறி சாராம்சமற்ற, கடவுளற்ற, சாதியற்ற, படிநிலையற்ற ஒரு மதத்தை தழுவும் / உருவாக்கும் என நம்புவோம்.)
அதனாலே ஒருவர் முற்போக்கான பிராமணராக இருந்தாலும் தன் சாதியின் பெயரால் விமர்சிக்கப்பட்டால் அச்சாதியுடன் அவர் தன்னை அடையாளப்படுத்த விரும்பாவிடினும் காயப்படுவார்.
அதனாலே நாம் பிராமணியத்தை, வைதீகத்தை எதிர்க்கும் போரில் பிராமணர்களையும் நம்முடன் அழைத்து செல்ல வேண்டும். பழைய வரலாற்றை மறந்து அவர்களை சகோதரத்துவத்துடன் நடத்த வேண்டும்.

Comments

பிரம்மனிலிருந்து உருவானவர்கள் பிராமணர்கள் என்று பொய்க்கதைகளை புனைந்து கொண்டு அந்தப் பெயரிலேயே தாம் அழைக்கப் படுவதைப் பெருமிதமாக நினைத்துக் கொண்டிருப்பவர்களை, அந்தக் கற்பனைக் கதையை நம்பாதவர்கள் ஏன் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைத்து அவர்களின் பொய் நம்பிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். பார்ப்பான் என்பது தொழில் சார்ந்த பெயர். சோதிடம் பார்ப்பான்; நாள் நட்சத்திரம் பார்ப்பான் என்று இன்னும் பலவற்றைப் பார்ப்பவர்களாக அந்தக் காலத்தில் அதைத் தொழிலாக செய்து கொண்டிருந்ததால் தான் அவர்கள் பார்ப்பான் என்று அழைக்கப் படுகிறார்கள். பார்ப்பான் என்பது ஒன்றும் வசைச்சொல் அல்ல. அதுவும் அவர்கள் பார்ப்பனர் என்று மரியாதையாகத் தான் அழைக்கப் படுகிறார்கள். இதில் என்ன பிரச்னை? கால ஓட்டத்தில் எத்தணையோ சொற்கள் சமூகத்தில் அது தொடர்ந்து குறிப்பிட்ட சமயங்களில் பாவிக்கப் பட்டதால் அது அர்த்தம் திரிந்து போயிருக்கலாம். அந்தச் சொற்களுக்கெல்லாம் புதிய சொற்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா என்ன? சர்வ சாதாரணமாக அந்தச் சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது பார்ப்பான் என்கிற சொல்லை மட்டும் ஏன் புழங்கக் கூடாது? உதாரனத்திற்கு சண்டாளன் என்பது ஒரு சாதியைக் குறிக்கும் சொல் தான். அதை பாவிக்காமல் இருக்கிறோமா? அந்த சாதியினர் தான் அதை பாவிக்கக் கூடாது என்று முறையிடுகிறார்களா? பார்ப்பனர்களுக்கு மட்டும் இதில் எதற்கு சலுகை. அவரவர் வழியில் சொற்களை பயன்படுத்திவிட்டுப் போகட்டுமே....! இதை எல்லாம் பிரச்னை ஆக்கி பார்ப்பனர்களை கரிசனத்துடன் அணுகுவதே அரசியல் அல்லவா? பார்ப்பனர்களுக்கு அவர்களை இழிவு படுத்தாத பிராமணர்கள் என்ற சொல் இருப்பது போல் சண்டாளன், சக்கிலியன், பறையன் என்று பலதரப்பட்ட தலித் ஜாதிகளுக்கும் அவர்களை இழிவு படுத்தாத சொற்களை உருவாக்கி விட்டோமா? தலித் என்ற சொல்லைக் குறிப்பிடாதீர்கள். அது எல்லோரையும் உள்ளடக்கிய பொதுச் சொல். தனித்தனி சாதிகளுக்கான இழிவு படுத்தாத சொற்கள் எதுவும் இன்னும் உருவாக்கப்பட்டதாக தெரியவில்லையே....!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...