சமகால தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! வெகு அரிதாகத் தான் ரஞ்சித்தைப் போல தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றக் கூடியராக ஒரு இயக்குநர் தோன்றுவார்.
2010இல் சுசீந்திரனின் "நான் மகான் அல்ல" படம் குறித்த ஒரு விவாதம் கருந்தேள் ராஜேஷின் பிளாகில் நடக்கிறது. தமிழ் சினிமாவில் தலித்துகள் குறித்த பதிவுகள் எவ்வளவு அபத்தமாக உள்ளது என ரஞ்சித் ராஜேஷுக்கு அனுப்பிய மின்னஞ்சலை அவர் பதிவிடுகிறார். அதை ஒட்டி பின்னூட்டங்களில் ஒரு நீண்ட விவாதம். அப்போது ரஞ்சித் ஒரு இயக்குநர் அல்ல. தன்னை ஒரு உதவி இயக்குநர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவருடைய தரப்பை பின்னூட்டங்களில் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சினிமாவில் உள்ள பாத்திரங்களின் சாதியைப் பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் கொந்தளிக்கிறார்கள். ஆனால் ஏன் தாழ்த்தப்பட்டோர் மட்டும் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என ரஞ்சித் கேள்வி எழுப்ப யாரும் அதைப் பொருட்படுத்தி யோசிக்கவில்லை. அதன் பின்னர் "அட்டகத்தி" எனும் தனது முதல் படத்தின் மூலம் வளர்ந்து "மெட்ராஸ்" மூலம் வெகுஜன தளத்தில் கால் பாவி நின்ற ரஞ்சித் "கபாலி" மூலம் தலித் அழகியல் என்பதை தமிழ் திரைமொழிக்குள் வலுவாக நிறுவினார். "கபாலிடா" எனும் ஒற்றைச்சொல் பெரிய மாற்றங்களை மக்களின் பார்வையில் கொண்டு வந்தது. அங்கிருந்து பௌத்தத்தை வெகுஜன மாபியா / அரசியல் கதைமொழிக்குள் கொண்டு வந்து "காலா" எனும் இந்திய சினிமாவின் தலைசிறந்த படமொன்றை எடுத்தார். அதன் பிறகு "சார்பட்டா பரம்பரையை" எடுத்து பாத்திர அமைப்பில், பின்னணியின் சமூக வரலாற்று நுட்பங்களை சித்தரிப்பதில் தான் எவ்வளவு பெரிய கலைஞன் எனக் காட்டினார்.
நான் அடிக்கடி ரஞ்சித்தின் வளர்ச்சியைப் பற்றி யோசிக்கையில் அவதானிப்பது கலையின் தாக்கம் அளப்பரியது, அதுவும் வெகுஜன வடிவங்களின் வீச்சு கற்பனைக்கு அப்பாலானது என்பதே. ஒரு கருத்தை நீங்கள் நேரடியாக சொல்லும் போது மதிக்காதவர்கள் அதை ஒரு படைப்பாக்கி சொல்லித் தரும் போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். "கபாலிக்குப்" பிறகு சினிமாவில் ஏன் சார் சாதி அரசியலைப் பேசுறீங்க என யாரும் கேட்க முடியாது. ரஞ்சித் அவர்களையும் தன் பக்கம் கொண்டு வந்து விட்டார். சினிமா கதையாடலை "நிறப்பிரிகை" விவாதங்களுக்கு பக்கத்தில் அழைத்து வந்து விட்டார். அரசியல் என்பதன் பொருளை மாற்றி விட்டார். அது தான் ரஞ்சித்தின் மற்றொரு சாதனை.
மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்களுக்கு படைப்பூக்கமும் உழைக்கும் மனமும் இருந்தால் தம் கருத்துக்களை எப்படி மக்களின் கருத்துக்களாக்குவது என்பதற்கு ரஞ்சித் ஒரு வழிகாட்டியாக, ஒளியாக இருக்கிறார்.
கருத்துகள்