Skip to main content

மாலனைச் சுற்றியுள்ள வெறுப்பரசியல்



ஒரு எழுத்தாளனுக்கு பல முகங்கள் இருக்கும். அவை அனைத்தும் அவனுடைய எழுத்துடன் தொடர்புள்ளவை அல்ல. ஒரு எழுத்தாளன் தொண்டு செய்பவனாகவோ பொறுக்கியாகவோ பலாத்காரம் பண்ணுகிறவனாகவோ கட்சிக்காரனாகவோ போராளியாகவோ ஆன்மீகவாதியாகவோ இருக்கலாம். வியாபாரியாக கூலி வேலை செய்பவனாக குமாஸ்தாவாக ஆணாக பெண்ணாக இயல்பான உடல்பெற்றவனாக ஊனனாக இருக்கலாம் - இவை எவையும் அவனுடைய எழுத்துடன் சம்மந்தம் கொண்டவை அல்ல. எதனாலும் அவனுக்கு சலுகைகள் தரப்படவோ அவன் பழிக்கப்படவோ அவசியம் இல்லை. அவனுடைய அடையாளங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கலாம். அது அவனுடைய இலக்கிய தகுதியை பாதிக்காது. அப்படி பாதிக்குமெனில் அது இலக்கிய அரசியல், அல்லது இலக்கியம் எனும் அரசியல் மட்டுமே, இலக்கியம் அல்ல.

 மீண்டும் சொல்கிறேன் - இலக்கியத்தில் அரசியல் இல்லை என்பது என் பார்வை அல்ல; இலக்கிய பிரதிக்குள் பல அரசியல் ஊடுபாவல்கள், கதையாடல்கள் இருக்கலாம், ஆனால் அவை நடைமுறை அரசியல் அல்ல. இரண்டுக்கும் பாரித்த வேறுபாடுகள் உள்ளன. ஒரு பிரதிக்குள் ஒலிக்கும் படைப்பாளனின் குரலே அவனுடைய தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் உருவானது எனும் ஒரு பார்வை வெகுமக்கள் தரப்பில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் நான் விஷ்ணுபுரம் கூட்டத்திற்கு சென்றிருந்த போது அங்கு சிலர் இதன் அடிப்படையில் மட்டுமே ஒரு பிரதியை படிக்க வேன்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் - ஒரு கதையோ நாவலோ ஒரு எழுத்தாளனின் அனுபவம், கருத்து மட்டுமே என அவர்கள் வலுவாக நம்பினார்கள். இன்னொரு பக்கம், இடதுசாரி கருத்தியல் கொண்டோர் சிலரிடமும் இப்பார்வை உள்ளது - “சாணிக் காயிதம்எடுத்த அருண் மாதேஸ்வரனிடம்தமி ஸ்டுடியோயூடியூப் சேனலில் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்கள். அதில் பேட்டியாளர்கள் இருவரும் திரும்பத் திரும்ப அருணிடம்வன்முறை சார்ந்து உங்கள் அனுபவத்தைத் தான் படமாக எடுக்கிறீர்களா?” எனக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரும் சலிக்க சலிக்கஅதுக்கு அவசியம் இல்லீங்க, நான் வெளியே பார்ப்பதற்குத் தான் வேறு விதமாக எதிர்வினையாற்றுகிறேன், என் பாத்திரம் நான் அல்லஎனச் சொல்லிக் கொண்டிருந்தார். இது எப்படியான வன்முறை!

 இப்படி படைப்பாளனும் தனிமனிதனும் ஒன்றே என சிந்திப்பது ஒரு மோசமான ஒழுக்கவியல் அரசியலுக்கு நம்மை இட்டுச் செல்லும். ஒரு படைப்பாளி பேசுவது, சித்தரிப்பது அத்தனையையும் அவனுடைய சொந்த ஆளுமை, அடையாளத்துடன் பிணைப்பது அவனை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான முயற்சியே அன்றி அப்பாவித்தனமோ அறிவீனமோ அல்ல.


கோட்பாட்டு ரீதியாகவும் இங்கு என் தரப்பை இவ்வாறு விளக்குகிறேன்: தனிமனிதனுக்கு என எந்த ஒரு அடையாளமோ முகமோ இல்லை. அரிஸ்டாட்டில் தனதுகவிதையியல்நூலில் இதை அற்புதமாக விளக்குகிறார். அவர் ஒருவருடைய செயலே அவரது அடையாளம், அவருடைய சொல்லோ சிந்தனையோ அல்ல என்கிறார். அதாவது சொல்லும் சிந்தனையும் கூட ஒரு செயலாகும் போதே அது அடையாளமாகிறது; ஆனால் செயலானது தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பது. நீங்கள் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது போராளி. நீங்கள் வாழைப்பழத்தை உரித்து தின்னும் போது? நீங்கள் சாலையில் போகும் பெண்ணின் மாரைப் பார்க்கும் போது? நீங்கள் யாரையாவது வன்மத்தில் திட்டும் போது? நீங்கள் சுயமைதுனம் செய்யும் போது? வேலையிடத்தில் தலையாட்டிக் கொண்டு ஒரு அவமானத்தை சகித்துக் கொள்கையில்? ஒரு அநீதியை அனுமதிக்கையில்? இதனால் தான் ஒரு மனிதனின் அடையாளத்தை நிறுவுவதில் அடுத்தவர்களுக்கு எப்போதுமே ஒரு நெருக்கடி, ஒரு தவிப்பு இருக்கிறது, அதனாலே அவர்கள் அவன் மீது ஏதாவது ஒரு முகமூடியை திணித்து விட வேண்டும் எனத் திணிக்கிறார்கள் அவர்கள். ஆனால் அடிப்படையில் மனிதன் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டே, எந்த அடையாளத்துக்குள்ளும் நிற்க முடியாதவனே. நியாயமாக நாம் அவனை ஒவ்வொரு சமயமும், ஒரு சந்தர்பத்தில் எப்படி வெளிப்படுகிறானோ அவனை அந்தந்த நேரம், சூழலுக்கு ஏற்ப மட்டுமே மதிப்பிட வேண்டும்  என்கிறார் அரிஸ்டாட்டில். இல்லாவிடில் நாம் கண்காணிப்பு அரசியல் ஈடுபட்டு முத்திரை குத்தி தண்டிக்க விரும்பும் லும்பன் கும்பலாகிறோம். இதுவே பின்நவீனப் பார்வையும் கூட.


நான் இந்த இடத்தில் இருந்தே எந்த இலக்கியவாதியையும் மதிப்பிட விரும்புகிறேன். அவன் இடதுசாரியோ வலதுசாரியோ, நான் அவனை நேசிக்கிறேனோ வெறுக்கிறேனோ அந்த அடிப்படையில் அவனது இலக்கிய தகுதியை முடிவு செய்ய மாட்டேன். இலக்கியம் முழுக்க வேறொரு தளம். அங்கு அவன் இலக்கிய அரசியலாக வெளிப்படுத்தும் கருத்தியலுக்கு நான் உடன்படாவிடினும் அவன் ஏதோ ஒரு விதத்தில் இலக்கியத்துக்கு பங்களித்திருந்தால் நான் அவனை ஏற்கிறேன், மதிக்கிறேன், அல்லது மௌனமாக அங்கீகரிக்கிறேன். இந்த நிலைப்பாட்டில் நின்று தான் நான் சாகித்ய அகாடெமி விருதைப் பெறும் மாலனுக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்


அவர் என் மொழிக்கும் பண்பாட்டுக்கும் பங்களித்தவர். நீண்ட காலமாக இங்கு எங்களுடன் நிற்பவர். அவரது நடைமுறை அரசியலை விமர்சித்தாலும் அவரை நாங்கள் இலக்கியவாதிகள் புழுதி வாரித்தூற்றி இகழ மாட்டோம். அவர் எங்களில் ஒருவர். அவரை நான் நேரில் பார்த்தாலும் ஒரு சகமனிதனாகத் தான் நடத்துவேன். துவேஷத்துடன் ஒதுங்கிப் போக மாட்டேன். இந்த நிலைப்பாட்டையே ஜெயமோகன் மீது புளிச்ச மாவு அவமதிப்புகளை நமது சமூகம் முன்னெடுத்த போது நான் முன்வைத்தேன். அவ்வப்போது எஸ்.ரா தூற்றப்படும் போதும் இதையே சொன்னேன் - எல்லாரையும் நடைமுறை அரசியல் சட்டகத்துக்குள் வைக்காதீர்கள். அது உங்களை பாஸிஸ்டுகளாக்கும். இன்று மாலன் சரமாரியாக தாக்குதலுக்கு உள்ளாவதைப் பார்க்கும் போது என் மனம் கசந்து போகிறது. இந்த சமூகவலைதளத்தில் தரம் தாழ்ந்து போவது, உயர்ந்த இடத்தில் நிற்பதில் முழுக்க உங்கள் கையில் தான் இருக்கிறது.


 எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - நான் பதின்வயதினனாக கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களுக்கு செல்லும் போது எங்களுடன் அரசியல் ரீதியாக முழுக்க எதிர்நிலையில் இருப்பவர்களும் எங்கள் கூட்டங்களுக்கு பேச்சாளர்களாக அழைக்கப்படுவார்கள். அவர்களுடன் நாங்கள் கண்ணியமாக, மரியாதையுடன் உரையாடுவோம், முரண்படுவோம், தேநீர் அருந்தி கைகுலுக்கி கலைந்து விடுவோம். அப்படித்தான் கலை இலக்கிய பெருமன்ற களத்தில் தான் நான் முதன்முதலாக ஜெயமோகனை சந்தித்தேன்; மன்றத்தில் உள்ள எவருமே அவருடைய அரசியலை ஏற்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் அவரை மதித்தார்கள். அவர்களில் ஒருவனான நான் ஜெயமோகனின் வாசகன் ஆனேன். அவர்களுடனான உரையாடலின் வழி தான் நான் சு.ராவை அறிந்து அவரிடம் தொடர்ந்து ஒரு நல்லுறவை பேணினேன், நிறைய கற்றுக் கொண்டேன். என்றுமே என் தோழர்கள் அது குறித்து என்னை விமர்சித்ததில்லை, அவர்கள் மாறாக என்னை ஊக்கப்படுத்தினார்கள். லஷ்மி மணிவண்ணன் எங்கள் மன்றத்தில் இருந்தே சு.ராவிடம் சென்று, இன்று ஜெ.மோவுடன் இருக்கிறார்; அதனால் ஒரு எழுத்தாளனாக லஷ்மி மணிவண்ணனை நாங்கள் ஒதுக்குவதோ வெறுப்பதோ இல்லை. என் அரசியல் இன்று வரை உறுதியாக இருக்கிறது, அதே நேரம் என் தோழர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கண்ணியத்தையே நான் இன்று எதிர்தரப்பிடமும் பின்பற்றுகிறேன், ஆனால் எங்களுக்கு அடுத்த தலைமுறைகளுக்கு, பழைய தலைமுறையில் இருந்து திடீரென சமூகவலைதளத்துக்குள் வந்தவர்களுக்கு இந்த பண்பாடு இல்லை.   


இந்த வெறுப்பரசியலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.


பி.கு: அகாடெமியின் ஆலோசனைக் குழுவில் உள்ளவர் பரிசைப் பெறலாமா என்பதில் அவர்களுக்கு என நிச்சயமாக ஒரு வழிமுறை, நெறிகள் இருக்கும், அதன்படியே மாலனையும் தேர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். பாஜக ஆதரவுக்காக அவர் விருதைப் பெற்றார் எனில் வெளிப்படையாக திமுகவை ஆதரிக்கும் இமையம் எப்படி வென்றார்? இமையம் நம் காலத்தின் தலைசிறந்த புனைவெழுத்தாளர் என்பதால் பரிசு பெற்றார். அவரது அரசியலை அகாடெமி ஒரு வரைமுறையாக வைக்கவில்லை. இதையே மாலன் விஷயத்திலும் கடைபிடித்திருக்கும் என நம்புகிறேன். மேலும் மாலன் மொழியாக்கியுள்ள நூலானஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்ஒரு முக்கியமான புத்தகம். எதையும் பரிசீலிக்காமல் நம்மைப் போல சாகித்ய அகாடெமியினர் கும்மியடிப்பதில்லை.

Comments

/எதையும் பரிசீலிக்காமல் நம்மைப் போல சாகித்ய அகாடெமியினர் கும்மியடிப்பதில்லை./ அப்படியெனில் இதுவரை சாகித்திய அகாடெமி விருது பெற்றிருக்கும் எல்லோருமே நியாயமாகவும் அவர்களின் படைப்பின் தரத்திற்காகவும் மட்டுமே விருது பெற்றிருக்கிறார்கள்; அதில் பாரபட்சம் அரசியல் எதுவும் இல்லை என்கிறீர்களா? அப்படி நீங்கள் நம்பினால் மிக்க சந்தோஷமே.....!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...