![]() |
| திபெத்திய பௌத்த எமன் |
நான் சொல்லப் போவது ஒரு பிரபலமான கருத்தாக இருக்கப் போவதில்லை எனத் தெரியும். ஆனால் இவ்விசயத்தில் இது தான் என் பார்வை. ஒருவர் காலமாவது அத்தனை கொடூரமான விசயம் இல்லை. எங்கிருந்தோ, சில ‘சார்புநிலைகளால்’ ஆன சூழல்களால் பூமியில் தோன்றியவர் அதே போல போய் விட்டார். காலமின்மையில் இருந்து வந்தவர் காலமின்மைக்குள்ளே போய் விட்டார் என்றே புரிந்து கொள்கிறேன். வாழும் போதும் நாம் அந்த காலமின்மையை உணர தத்தளித்தபடியே இருக்கிறோம், நீருக்குள் மீன் காற்றுக்காக தன் செவுள்களைத் திறந்து திறந்து மூடுவதைப் போல. காலமானவர் நாம் அனுதினமும், ஒவ்வொரு நொடியும் திறந்து திறந்து பார்க்கும் காலம் எனும் ஜன்னலை முழுக்கத் திறந்து அதன் வழி குதித்து விடுகிறார். அல்லது அவர் (ஹைடெக்கர் சொல்வதைப் போல) நம் பார்வையில் படும்படி எங்குமே போகவில்லை. அவர் எங்கு போனார் என்றே கண்டறிய முடியாது போவதே மரணம். எங்கு போனார் என்றறியாத போது ஏன் அழ வேண்டும்? அவரே தான் போவதைக் காண முடியாது, வாழும் எவருமே வாழ்கையில் மரணிக்க முடியாது, சாவின் கணத்தில் இந்த உலகத்தை அவர் தன் உடலால் அறிய முடியாது என்கிறார் ஹைடெக்கர். காலமாகிறவருக்கே முடியாத ஒன்றைப் பற்றி நாம் ஏன் கலங்க வேண்டும், அந்த அபூர்வத்தை கையெடுத்து வணங்காமல்?
சாகக் கூடாது எனும் உயிர்த்துடிப்பு நம்மில் அனைவரிடம் உள்ளது. ஆனால் அதே நேரும் ஒவ்வொரு நொடியும் நாம் சாகத் துடிக்கிறோம். பேச்சில், எழுத்தில், சாப்பிடுவதில், அசைகையில், இயற்கையை ரசிக்கையில், சிரிக்கையில், வெறுமனே எங்கோ அமர்ந்திருக்கையில். இரண்டுமே சேர்ந்தது தான் மனிதனின் இருத்தல், அவனது வாழ்க்கை. அதன் நீட்சி மட்டுமே மரணம். நாம் மரணத்தை ஒரு ‘இழப்பாக’ மட்டும் காண்பது வாழ்வையும் இழப்பாகக் காண்பதாகும். இது ஒவ்வொரு நிமிடத்தையும் உற்பத்திக்கான உழைப்பாகக் காணும் மேற்கத்திய முதலீட்டிய பார்வையில் இருந்து வருவதென நினைக்கிறேன். அது மட்டுமே வாழ்க்கை அல்ல. பொருளியலைத் தாண்டி தான் நமது இருத்தல் உள்ளது.
அதனால் தான் பௌத்தத்தில் காலமாதல் ஒரு ஞானமடைதலாகிறது. அதாவது இருத்தலின் இன்மையை அறிவது. அறிவது என்று கூட சொல்லக் கூடாது. அது இது தான் என்று காண்பது. அது ஒன்றுமில்லை என்று பார்க்க முடிவது. அதனாலே எமனை ஒரு தர்மபாலனாக பௌத்தம் கண்டது. பின்னர் பௌத்தத்தை எதிர்த்து உருவான மதங்கள் எமனை ஒரு தீய கடவுளாக, மக்கள் அஞ்சக் கூடிய கரிய உருவமாக, பாசக்கயிறுடன் எருமையில் ஏறி வருகிறவனாக மாற்றியது. ஆனால் நிஜத்தில் எமன் ஒரு அற்புதமான தெய்வம். அந்த கருமை கூட நிஜத்தில் அருமையான நிறமே. கருமையில், இருட்டில் ஒன்றுமே இருப்பதில்லை. நாம் இருட்டில் தோன்றி இருட்டுக்குள் செல்கிறோம்.
நமது பண்பாட்டில் மரணத்தைக் கொண்டாடும் போக்கு உள்ளது. அதை நாம் நகரமயமாக்கலால் இழந்து வருகிறோம். எப்போதும் மௌனமாக கண்ணீர் வடிக்கிறோம். சத்தமாக அழுவதோ சிரிப்பதோ இல்லை. இரங்கல் குறிப்புகளில் மௌனமாக விசும்புகிறோம். இதுவும் நமது தன்னலம் மட்டுமே. அவர் இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக அவரால் அடைந்திருக்கலாமே எனும் தன்னலம். நானும் தன்னலத்தால் ஒருவரது மரணத்திற்காக அழுதிருக்கிறேன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நான் அப்படி இருப்பதில்லை.
ஒருவரை உணர்வுவயப்பட்டு பற்றிக் கொண்டிருப்பது ஒரு நோய்மை. இந்த சமூக வாழ்க்கையில் நம்மால் அதைத் தவிர்க்க இயல்வதில்லை. ஆனால அப்படி தீவிர பற்றுதல் இல்லாத போது நாம் மகிழ்ச்சியுடன் ஒருவரது ‘காலமற்று ஆதலைக்’ கொண்டாட வேண்டும்.
மேலே உள்ள கிளையில் தொக்கி நிற்கும் தேன்கூட்டில் இருந்து சொட்டும் தேனை நாம் கீழே நின்றும் துளித்துளியாகப் பருகிக் கொண்டிருந்தோம். இப்போது நம்மில் ஒருவர் அந்த தேன்கூட்டையே நேராகப் போய் அடைந்து விட்டார். நாம் இன்மையாகத் தவிக்கையில் அவர் ஒரு முழுமையைப் பெற்று விட்டாரே? அது எவ்வளவு அழகானது! அது ஒரு சாதனை அல்லவா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒருவரது பாடையைத் தூக்கிச் செல்வது எவ்வளவு அற்புதமான ஒரு பண்பாடு. நாம் அதை ஒரு பெரும் சமூக நிகழ்வாக மீட்க வேண்டும். அது முடியாவிட்டாலும் தனித்தனியாக ஒரு புன்னகையுடன், இனிப்புடன், அன்பான சொற்களுடன் நாம் காலமாதலைக் கொண்டாடலாம். அழுவது காலத்திற்கு நாம் செய்யும் அவமரியாதை அல்லவா?

கருத்துகள்