எழுத்தாளன் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவன், அவன் குற்றம் செய்யலாமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும், அவன் யார் என்று போவதற்கு முன் வேறொரு கேள்வி முக்கியம்.
குற்றம் என்றால் என்ன? ஒரு செயல். வெற்றிலை போடுவதும் ஒரு செயல், கொலை செய்வதும் செயல். கையைப் பிடித்துழுப்பதும் ஒரு செயல். சமூக எல்லைக்கோடு ஒன்றை மீறிப் போய் நிகழ்த்தும் செயலே குற்றம். இந்த விளக்கம் மிக முக்கியம். நாம் எல்லாரும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம், யாரோ ஒருவர் இந்த எல்லைக்கோட்டை கடந்து போய் விடுகிறார். அவர் அப்போது குற்றம் செய்கிறார் (அரிஸ்டாட்டில் இதை இப்படித்தான் விளக்குவார்.)
ஆக குற்றம் என ஒரு சாராம்சமான செயலோ குற்றவாளி எனும் சாராம்சமான மனிதனோ இல்லை. அந்த செயல் முடிந்ததும் நீங்கள் மீண்டும் சாமான்யர்களில் ஒருவர் ஆகி விடுகிறீர்கள். அதனாலே போலீஸ்காரர்கள் குற்ற அறிக்கை என ஒன்றை விசாரணை செய்து உருவாக்கி ஒரு ‘கதையை’ / கதையாடலை உருவாக்குகிறார்கள். அவர்கள் ‘வரலாற்றெழுத்தாளர்களாக’ செயல்படுகிறார்கள். ஏனென்றால் குற்றம் நடந்து மறைந்துவிட்டது - இது ஒரு தத்துவார்த்தமான சிக்கல். இப்போது சமூகத்துக்கு அந்த குற்றத்தை தூலமாக நிறுவும் கடமை ஏற்படுகிறது. ஆனால் குற்றம் புலனுலகிலோ காலத்திலோ எங்குமே இல்லை. பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு குற்றத்தை பழிவாங்க வேண்டும். அதற்கு குற்றவாளியைப் பழிவாங்க வேண்டும். ஆனால் குற்றவாளி ‘எங்குமே’ இல்லை. ஒரு மனிதன் தான் இருக்கிறான். அது சமூகத்தில் ஒரு பரவலான பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. குற்றம் குறித்து பல விவாதங்கள் பொதுவாக உடனுக்குடன் நடப்பது இதனாலே. குற்றவாளி கண்ணுக்கு முன் நின்றிருந்தால் அவனை ஒரு குற்றவாளியாக ‘சமைப்பது’ முக்கியம். அதற்கு கடந்த கால நிகழ்வுகளை ஒரு ஒழுங்குவரிசையில் அடுக்கி அவற்றுக்கு சில நோக்கங்களை, காரணங்களை கற்பிக்க வேண்டும். இந்த கடமையை சமூகத்திற்காக ஆற்றுவதற்காகவே நீதிமன்றம், சட்டம், நீதிபதிகள், வக்கீல்கள் இருக்கிறார்கள்.
நோய் என ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் மறுக்க முடியாது. அது உங்கள் உடலில் ஏற்படும் ஒரு சீர்குலைவு. அது எப்போது ஏற்பட்டது என விஞ்ஞான பூர்வமாக நிறுவ முடியும். ஒரு மருத்துவர் தன் நோயாளிகளை நம்ப வைத்து அழைக்க வேண்டியதில்லை. எந்த நோயாளியும் எனக்கு நோயில்லை என்று வாதிடுவதில்லை. ஆனால் குற்றம் என ஒன்று நிஜத்தில் இல்லை. குற்றத்தை பெரும்பாலானோர் ஏற்பதில்லை. அதனாலே ‘குற்றத்தை’ ஒருவர் மீது சுமத்த வேண்டி இருக்கிறது. குற்றம் எப்போது எப்படி நடந்தது என்பதைப் பற்றி குற்றவாளிகளுக்கே நிறைய மனக்குழப்பங்கள் உண்டு. அதனாலே குற்றம் என்பது ஒரு தத்துவப் பிரச்சினை என்கிறேன். அது நடப்புலகில் உள்ள ஒரு புலனுணர்வு சார்ந்த உண்மை அல்ல. அது மனவுலகம் சார்ந்தது.
தத்துவார்த்தமாக நோக்கினால் குற்றம் என்பது காலம் குறித்த ஒரு உள்முரணைக் கொண்டிருக்கிறது எனத் தெரிய வரும்: 7:59க்கு ஒருவர் ஒரு குற்றத்தைப் பண்ணுகிறார் என வைப்போம். அவருக்கு ‘அ’ என பெயரிடுவோம். கவனியுங்கள் அவர் 7:59இல் இரு செயலைப் புரிந்த ‘அ’. 8 மணிக்கும் அவர் ‘அ’ தான். ஆனால் அவர் செய்ததாக சொன்ன அந்த செயல் அப்போது இல்லை, அவர் மட்டுமே இருக்கிறார். செயல் காணாமல் போய்விட்டது. அல்லது காலம் மறைந்துவிட்டது. மனிதனுக்கு காலம் பொருண்மையாக உள்ளதாக நம்ப வேண்டும். அவன் அதற்காக மொழியில் நினைவுத்திறனில் சில வேலைப்பாடுகளை செய்து 7:59 மணி ‘அ’ தான் 8 மணி ‘அ’ என நம்பத் தேவையிருக்கிறது. 7:59இல் இருந்து துவங்கி அவன் 8 மணிக்கு வந்து சேர்ந்திருக்கிறான் என நினைவுபடுத்த தேவையிருக்கிறது (எந்த குற்ற அறிக்கையிலும் கால ஒழுங்கு மிக முக்கியமாக இருப்பது இதனாலே.) ஆனால் நிஜத்தில் காலம் எங்குமே இல்லை, பருவுடல் மட்டுமே இருக்கிறது. காலத்தை எடுத்து பருவுடல் மீது ஒட்டி வைத்து ‘நீ தான் அது’ என நம்ப வைப்பதே குற்ற விசாரணையும், தீர்ப்பும். அச்செயலே வரலாறு. அச்செயலே தன்வரலாறு. அச்செயலே தன்னிலை கட்டமைப்பு. நமது ஆவணங்கள் அனைத்தும் நம்மை இந்த கற்பனையை நிச்சயமாக்க தோற்றுவிக்கப்பட்டவை.
குற்றத்தைப் பொறுத்தவரையில் நமக்கு திரும்பத் திரும்ப காலத்தினுள் ஒரு மனிதனைப் பொருத்தி நீ அது மட்டுமே என உறைய வைப்பது அவசியமாகிறது. அதனாலே கோணங்கி ஒரு படைப்பாளி அல்ல, குற்றவாளி தான் என்றும், அவர் ஒரு படைப்பாளி-குற்றவாளி என்றும், அவர் படைப்பாளி என்பதால் குற்றவாளி என்றும், அவர் குற்றவாளி என்றாலும் படைப்பாளியே, அதனால் மன்னியுங்கள் என்றும் பலவிதங்களில் நாம் குற்றத்தைச் சுற்றி ஜாங்கிரி சுற்றுகிறோம். என்னிடம் கேட்டால் அவர் இந்நேரம் சிறுநீர் கழிக்கிறார் என்றால் அவர் சிறுநீர் கழிக்கும் ஒரு மனிதன். பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தால் பேஸ்புக் பார்க்கும் ஒரு மனிதன். அதைத் தாண்டி அவர் ஒன்றுமில்லை. ஆனால் நான் சொல்வதை நீங்கள் ஏற்க மாட்டீர்கள்.
ஏனென்றால் குற்றம் அல்ல, குற்றத்திற்கான நீதி எனும் வேட்கையே உங்களை அலைகழிக்கிறது. இந்த ‘நீதி வேட்கை’ நிஜத்தில் ஒரு பழிவாங்கும் உணர்வு மட்டுமே. உங்களுக்கு கோணங்கியை பழிவாங்க வேண்டாம். அது ரொம்ப சுலபம். பஸ் ஏறி இப்போது கிளம்பினால் காலையில் அவரைப் போய் சந்தித்து பழிவாங்கி விடலாம். ஆனால் உங்களில் எவரும் அதை செய்ய மாட்டீர்கள். அது மற்றொரு குற்றமாகும் என்பதால் அல்ல. (நான் ஏற்கனவே சொன்னதைப் போல நம்மில் பலரும் குற்றங்களை அன்றாடம் இழைப்பவர்களே.) நாம் கோணங்கியை அல்ல, அவர் செய்த குற்றத்தையே பழிவாங்க விரும்புகிறோம். இது நவீன மனிதனின் ‘கோணங்கித்தனம்’. எப்படி கடவுளைத் தேடி, சுயத்தைத் தேடி, அன்பைத் தேடி, நிம்மதியைத் தேடி நாம் அலைகிறோமோ அப்படியே ‘குற்றத்தைத் தேடியும்’அலைகிறோம். அந்த அரூப சங்கதி உலகில் எங்குமே இல்லை என்றறிந்தால் நாம் மனமுடைந்து போவோம். இதனாலே நான் சொல்வதெல்லாம் பித்துக்குளித்தனம் என்றும் குற்றவாளி என ஒருவர் இருக்கிறார் என்றும் நீங்கள் தொடர்ந்து நம்புவீர்கள்.
இந்த அபத்த உலகில் தொடர்ந்து நிலைத்திருக்க உங்களுக்கு அந்த நம்பிக்கை அவசியம். ஆனால் நான் இந்த உலகில் குற்றமே இல்லை என உறுதியாக சொல்வேன். காலம் என்பது சார்புநிலையில் தோன்றும் ஒரு சங்கதி, மனிதன் தொடர்ந்து ஒழுகிக் கொண்டிருக்கும் ஒரு நதி என நான் நம்புகிறேன். இதை நான் கோணங்கியைக் காப்பாற்ற சொல்லவில்லை. நான் எல்லா குற்றவாளிகளுக்கும் இதையே சொல்வேன். நான் இந்த நாட்டை ஆண்டால் முதலில் இந்த நீதிமன்றம், சிறைச்சாலைகளை ஒழித்துவிடுவேன். நவீன சமூகத்தின் மிகப்பெரிய அபத்தங்கள் இவைதாம். ஆனால் பழிவாங்கும் உணர்வை வெளிப்படுத்த தெரியாத வரையில் நம்மால் சிறைசாலையையும் ஒழிக்க முடியாது என அறிவேன். இது உண்மையில் ஒரு குற்ற பிரச்சினை அல்ல, இது ஒரு தத்துவ பிரச்சினையே என்று அதனாலே கூறுகிறேன். என்னை நீங்கள் ஒரு சிறைச்சாலையில் தள்ளினால் நான் அங்குள்ள மனிதர்களுடன் மிக இயல்பாக இருந்து விடுவேன். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல, சாதாரண மனிதர்களே.
அண்மையில் இதைக் குறித்த ஒரு எழுத்தாளரின் பதிவை நான் பகிர்ந்து கொண்ட போது அவர் பாலியல் சீண்டலில் முன்பு ஈடுபட்டவர், அவருக்கு இதை சொல்லும் தகுதி இல்லை என சிலர் கூறினார்கள். ஒரு தோழி என்னிடம் மெஸஞ்சரில் வந்து வாதிட்டார். நான் அவரிடம் கேட்டேன், ஒருவர் உண்மை சொல்வதால் அவர் உண்மை விளம்பியும், ஒருவர் பொய் சொல்வதால் அவர் பொய்யரும் ஆவாரா என்று. ‘உண்மை விளம்பி நாளை பொய்யே சொல்ல மாட்டாரா, பொய்யர் நாளை உண்மையே சொல்ல மாட்டாரா?’ ‘சொல்லக் கூடும்’ என்றார் தோழி. ‘கூடும் எனில் அவர் எப்படி உண்மை சொன்னவரோ, பொய் விளம்பியவரோ ஆனார்? ஒருவரை உண்மையும் பொய்யும் சொன்னார் என்று தானே நாம் சொல்ல வேண்டும்?’ என நான் கேட்டேன். சம்பவம் ‘அ’ 7:59க்கு நடக்கிறது. சம்பவம் ‘ஆ’ 8 மணிக்கு நடக்கிறது. சம்பவம் ‘அ’வை செய்தரே ‘ஆ’வையும் செய்கிறார் என்றால் நாம் ஏன் அவரை ‘அ-ஆவை’ செய்தவர் என்றல்லாமல் ஒரே ஒரு சம்பவத்துடன் மட்டும் அடையாளப்படுத்துகிறோம்? இது ஒரு அபத்தம் இல்லையா என்று கேட்டால் அத்தோழி ‘நீங்க சொல்றதை எல்லாம் ஒத்துக்க முடியாது’ என்று கிளம்பி விட்டார். அவரிடமும் செயல்படுவது செயல்படுத்த முடியாத பழிவாங்கும் உணர்வு தரும் நெருக்கடியே, அவருடைய பிரச்சினை குற்றம் சம்மந்தப்பட்டதல்ல.
சரி குற்றமே இல்லையென்றால் சமூகத்தின் நிலை என்னவாகும்? ஆளாளுக்கு கொலை, கொள்ளை அடித்துக் கொண்டு இருப்பார்களே என்று கேட்டால் அப்படி ஆகாது என்று கூறுவேன். தண்டனைகளோ அப்பயமோ குற்றங்களைக் குறைப்பதாக யாரும் இதுவரை நிரூபிக்கவில்லை. குற்றங்களில் ஈடுபடுவதை தண்டனை இருந்தாலும் இல்லாவிடிலும் ஒரு சமூகம் அனுமதிக்காது. அதனால் சமூகத்துடன் இயைந்து போகிறவர்கள் குற்றங்களைத் தவிர்க்கவே செய்வார்கள். குற்ற விசாரணை, அதற்கான அமைப்புகள், தண்டனைக்கான ஏற்பாடுகள் இந்த சமூக அமைப்பின் மீது செயற்கையாக அமர்ந்திருப்பவை. ஒரு அட்டைப்பூச்சியைப் போல இவை நம் சமூகத்தை உறிஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றால் யாருக்கும் பயனில்லை. குற்றங்கள் அலையலையாகத் தோன்றித்தோன்றி அடங்குவதே சமூக எதார்த்தம். நாம் நம் பாட்டுக்கு வாழ்ந்து கொண்டும் இருப்போம். இயல்பான சமூக அழுத்தங்களால் குற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்டு ஒரு சமநிலை தோன்றும். அச்செயலை நாங்களே ஆற்றுகிறோம் என காவல்துறையும் நீதித்துறையும் சிறைத்துறையும் கோருவது பணத்துக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டே ஒழிய அது நிஜம் அல்ல. நீதிமன்றத்தில் அலைந்தவர்களும் சிறை சென்று வந்தவர்களும், இந்த அமைப்புக்குள் ஒண்டி வாழ்கிறவர்களும் இதை நன்றாகவே அறிவார்கள் என நினைக்கிறேன்.
அதனால் குற்றங்களைப் பற்றி யோசித்து அவதிப்படாமல், அங்கலாய்க்காமல் வாழ்க்கையை அதன் போக்குக்கு வாழ்ந்துவிட்டுப் போவதே சிறப்பு. பழிவாங்குவதற்கு பதில் ஒரு காரையோ சில தங்க காசுகளையோ வாங்கலாம்.
Comments
ஆனால் நடைமுறையில், ஆழ்பவர்களை காக்க சட்டமும் காவல் துறையும் அவசியமாகிறது.
எனவே, எவர் ஆழ்பவராக மாறினாலும், குற்றத்தை தண்டிக்கும் அமைப்பை மாற்ற இயலாது.