நம் ஊரில் சிலருக்கு பட்டவர்த்தமாக ஒரு கள்ள உறவில் இருக்க சிறந்த வழி கணவன் மீது குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை என பொய் வழக்குகள் போட்டு அவனை சிறை, நீதிமன்றம், காவல்துறை என அலையவிட்டு கவனத்தை திருப்பிவிடுவதே. ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது யாரும் எதைப்பற்றியும் கேள்வி எழுப்ப முடியாதல்லவா! அதிலும், பல கணவர்களுக்கு தமக்கு நிகழ்ந்த துரோகங்கள் பற்றி வெளியே பேச தயக்கம் உள்ளது. அதை தன் ஆண்மைக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று நினைப்பதால் அதை மறைக்கவே ஒரு ஆண் விரும்புகிறான். அவர்கள் என்னிடம் பேசும் போது தயங்கித் தயங்கி, கிட்டத்தட்ட நா குழற, அரைகுறையாக தம் மனைவியர் பற்றி குறிப்புணர்த்துவதைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதே நேரம், பொய்க் குற்றச்சாட்டுகளை மனைவி மீது சுமத்தும் கணவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தெருமுனையில் நின்று கத்தி சொல்வார்கள். ஒரு ஆண் எவ்வளவு சத்தமாக ஒரு அந்தரங்க விசயத்தை சொல்கிறாரோ அதை வைத்து அவருடைய நாணயத்தை தலைகீழ் விகிதிமாக கணித்துவிடலாம் என நினைக்கிறேன்.
இன்னொரு பக்கம், மனைவியால் கைவிடப்பட்ட, அவமதிக்கப்பட்ட, துரோகம் இழைக்கப்பட்ட கணவர்களுக்கு ஒரு தாழ்வுணர்வு வந்துவிடுகிறது. இது சில நேரம் அவர்களுடைய கோபத்தை அல்லாமல் ஒருவித மன்றாடல் குணத்தை தூண்டுகிறது. தம் மனைவியருக்கு உளவியல் அடிமைகளாக மாறிப் போகிறார்கள். தம் மனைவியர் எப்படியாவது தம்மை ஏற்றுக்கொண்டால் போதும் என ஏங்குகிறார்கள். சிலர் இதனாலே அவர்களைப் பழிக்காமல் விடுகிறார்கள், விட்டுப்போனால் போதும் என நினைக்கிறார்கள், வேறு சிலர் உறவினர்கள், பொது நண்பர்கள் மூலமாக தொடர்ந்து இப்பெண்களிடம் கெஞ்சுகிறார்கள்: “அவன் உன் கூட இருக்கட்டும், பரவாயில்லை, இதுவரை நடந்ததை மறக்கிறேன், ஆனால் என்னை விட்டுவிடாதே!” பொய் வழக்கில் சிறையில் தள்ளப்பட்டவர்கள், வருடக்கணக்கில் அலைகழிக்கப்படுகிறவர்களை விட இப்படி "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி" எனப் போகும் ஆண்களைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. காதல் தாழ்வுணர்வைத் தூண்டினால் அது விஷமாக மாறி நம்மை சிறுக சிறுக கொன்றுவிடும்.
என்னுடன் தினம் தினம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் இத்தகைய கண்ணீர் கதைகளைக் கேட்கும் போது என் இழப்பு, துயரம் எல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. ஒரு தோழி "நான் எந்த தப்புமே பண்ணல, என் மேலயும் என் பையன் மேலயும் பொய் வழக்கு போட்டிருக்காங்க, நான் பெட்ரோல் கேனுடன் காவல் நிலையத்துக்கு போகப் போறேன்" என சொல்கிறார். ஒருநாள் இதையெல்லாம் கடந்துவிடுவீர்கள், இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டாம் என சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண்ணைப் போல இவ்வளவு எளிதாக நேரடியாக ஆவேசமாக ஒரு பொய்க்குற்றச்சாட்டை, துரோகத்தை எதிர்கொள்ள ஒரு பெரும்பாலான ஆண்களுக்குத் தெரிவதில்லை. ஏன் ஆணை பெண்ணை விட பலசாலி என்று சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் பெண்ணைவிட பல மடங்கு பலவீனமானவன் ஆணே. ஆணே முதலில் உடைந்து போகிறான், அவனே முதலில் தாழ்வுணர்வு கொள்கிறான், முதலில் மண்டியிடுகிறான், முதலில் தன்னை அழிக்கிறான். எதிர்த்து அடிப்பது, கடந்து போவது, தன்னைப் புத்துருவாக்கம் செய்வது பெண்ணின் சமூக உளவியலில், ஆளுமையிலே இருக்கிறது, ஆனால் ஆணுக்கு இத்திறன்கள் மிக மிக குறைவு.
சட்டத்தின், சமத்துவத்தின் பெயரில் எவ்வளவு துரோகங்கள், சுரண்டல்கள், உளவியல் வதைகள், பகற்கொள்ளைகள். ஒரு பக்கம் இதையெல்லாம் கேட்க கஷ்டமாக இருந்தாலும் இவர்களுடைய கதைகளால் எனக்கு இந்த பாரபட்சமான சூழல், அநீதி ஏற்படுத்தும் நிர்கதியுணர்வு, தனிப்பட்ட கோபம் வெகுவாக குறைந்து வருகிறது. தப்பித்து ஓடுவதை விட நம்மைப் போன்று அல்லல்படுகிறவர்களின் துயரத்தில் பங்கு கொள்வதே நம் மனத்தின் காயங்களை ஆற்றுப்படுத்த சிறந்த வழி என்று ஏன் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்!
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி,
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
- கண்ணதாசன்
கருத்துகள்