கவிதை, நாவலுக்கு மட்டுமல்ல கட்டுரை எழுதுவது, சமூக வலைதளங்களில் சந்தைப்படுத்துவது துவங்கி சும்மா கதை சொல்வதற்கு வரை உலகம் முழுக்க பல்கலைக்கழகங்களில் 1970களில் இருந்தே வகுப்புகள் நடந்து வருகின்றன. இவற்றில் சேர்ந்து எழுத்து முறைமையின் அடிப்படைகளை கற்றுக் கொள்கிறார்கள். விழுந்து அடிபட்டு நீண்ட காலமாக அனுபவத்தின் வழி அறிவதை சுலபத்தில் குறுகின காலத்தில் அறிகிறார்கள். இது நல்லது தானே! ரேமண்ட் கார்வர், கெர்ட் வொனெகட், பிலிப் ராத், ஜான் இர்விங், ஜெ.டி சாலிங்கர், லோர்க்கா, ஜேக் கெரவக், லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ், ஆலன் கின்ஸ்பெர்க், ஆன் சாக்ஸ்டன், சில்வியா பிளாத், ராபர்ட் லாவல், ஹா ஜின், ஸேடி ஸ்மித் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகங்களில் MFA Creative Writing பாடங்களை கற்றுக்கொடுக்கும், கற்றுக்கொடுத்த மகத்தான படைப்பாளிகள். சமகாலத்து படைப்பாளிகள் பலரும் அங்கு படைப்பாக்க கலை ஆசிரியர்களாக பணியாற்றுகிறார்கள். நான் அண்மையில் இங்கிலாந்தை சேர்ந்த படைப்பிலக்கிய பேராசிரியர்கள் சிலரை சந்தித்த போது அங்கு இலக்கியத்தை விட எழுத்துக் கலையை கற்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு எழுத்துக் கலையை கற்று அதன் வழியாக பிரசுரமாகி அங்கீகாரமும் விருதுகளும் பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இப்போது தான் அந்த போக்கு கல்விப்புலத்தில் தோன்றி உள்ளது - நான் இதை ஆங்கிலம் வழி ஒரு தனிப்பாடமாக கடந்த ஐந்தாண்டுகளாக கற்றுக்கொடுக்கிறேன். குமரகுரு கல்லூரியிலும் இத்தகைய பாடத்தை தமிழில் அ.ராமசாமி உருவாக்கி உள்ளார். வரும் ஆண்டுகளில் பல படைப்பாளுமைகள் இப்படி பயிற்சி பெற்று வருவார்கள்.
நான் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தால் வெளிநாட்டுக்கு சென்று MFA in Creative Writing தான் கற்றிருப்பேன். இலக்கியம் அல்ல. ஏனென்றால் இலக்கியம் வாசிப்புக்கானது, கற்பதற்கானது அல்ல என நம்புகிறேன். நான் இப்போது பிறந்திருந்தாலும் எழுத்துக் கலையை ஒரு கல்லூரிக்கு சென்றோ பயிலரங்குகள் வழியாகவோ முறையாக கற்றிருப்பேன். எனக்கு கிடைக்காதது இன்றைய இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
தமிழில் எப்போதுமே புதிய முயற்சிகளுக்கு ஒரு பக்கம் பெரும் ஆதரவு இருப்பதைப் போன்றே அபத்தமான எதிர்ப்பும் இன்னொரு பக்கம் இருக்கும். இப்போது கூட 'படைப்புக் கலையை வெளியில் இருந்து ஒருவர் கற்றுத் தர முடியாது, அது தானே வர வேண்டும், அல்லது அதை புத்தகங்களை வாசித்து கற்க வேண்டும்' என கூறி சிலர் இம்முயற்சிகளை எதிர்க்கிறார்கள். அவர்களுடையது ஒரு தவறான பார்வையாகும்.
வாசிப்பின் மூலம் நீங்கள் எழுத்தைக் கற்க முடியாது. வாசிப்பின் மூலம் நீங்கள் ஒரு வாசகராகவே முடியும். எழுத்தாளராக எழுத்துக் கலையை கற்க வேண்டும். எழுதி எழுதி தானே பல பிழைகள் செய்து அதில் இருந்து கற்க வேண்டும். அதற்கு சில நேரம் பல ஆண்டுகள் ஆகலாம் அல்லது நீங்கள் சோர்ந்து வெளியேறவும் செய்யலாம். ஒரு எழுத்தாளனாக அனுபவம் உதவும் என்றாலும் அடிப்படைகளை சொல்லித் தரும் கல்வியே ஆரம்ப கட்ட தடைகளை கடக்கவும், விரைவில் எழுதி நிலைப்பெறவும் உதவும். ஒவ்வொரு ஆண்டும் இங்கு பத்து நல்ல புதிய எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள் என்றால் முறையான பயிற்சி இருந்தால் அந்த பத்து ஐம்பதோ நூறோ ஆகும். அது தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும். உலக அளவில் இலக்கியத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியாத எழுத்தாளர்கள் மட்டுமே இதையெல்லாம் எதிர்ப்பார்கள்.
இவர்கள் எதிர்த்தாலும் இல்லாவிடினும் சில விதைகள் முளைத்தே ஆகும்!