மனிதர்கள் அடிப்படையில் சுயபிரதாபிகளே, தற்பெருமை மிக்கவர்களே என்பது என் நம்பிக்கை. என்ன நமக்கு அதற்கு அவகாசமோ தன்னம்பிக்கையோ இருக்காது. அல்லது துணிச்சல் இருக்காது. அடுத்தவர்களுக்கு அருவருப்பாக இருக்குமே என எண்ணி தவிர்த்துவிடுவோம். ஆனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் பெரும்பாலானவர்கள் தம் பெருமைகளை எடுத்து அள்ளிவிட தவற மாட்டார்கள். அதிலும் கலைஞர்களை சொல்லவே வேண்டாம். தாமாகவே சுயதம்பட்டம் அடிக்க முடியாத போதே அவர்கள் அடுத்தவர்கள் தம்மைப் புகழ மாட்டார்களோ என ஏங்கத் துவங்குவார்கள். இதை செய்ய விரும்பாதவர்கள் ஒரு போலியான பணிவுக்காகவே பின்னுக்கு நகர்ந்து கொள்ளுகிறார்கள். நான் என்னையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்வேன்.
இப்படி அல்லாமல் மனம் திறந்து தம்மைப் பாராட்டிக்கொள்ளுவோரை எனக்குப் பிடிக்கும். இலக்கிய உலகில் அவ்வாறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை சொன்னால் பிரச்சினை வருமென்பதால் தவிர்க்கிறேன். சினிமா உலகில் பலரும் இருக்கிறார்கள் என்றாலும் பல சமயங்களில் நான் ரொம்ப எளிமைங்க, வண்ணமுங்க, ஆமாங்க, போமாங்க என நாடகம் போடுவார்கள். நான் இதை ஒரு ரஜினி பிம்பம் என்பேன். ரஜினி இதை ஆரம்பித்த பின்னர் பலரும் அவரை பின்பற்றி நடிக்கிறார்கள். இந்த போலித்தனம் இல்லாதவர் என்பதாலே எனக்கு இளையராஜாவை பிடிக்கும். தன் மனதில் உள்ளதை பூசி மொழுகாமல் சொல்ல ஒரு துணிச்சல் வேண்டும். அண்மையில் அவர் மனோபாலா பற்றி பேசும் போது சற்று சுயதம்பட்டம் அடிக்கிறார். ஆனால் அதில் தப்பென்ன? சுயகட்டுப்பாட்டுடன் இருப்பவர் அந்த "காரில் போகும் என்னைப் பார்க்க கோடம்பாக்கம் பாலத்தின் இரு பக்கமும் பலரும் காத்து நிற்பார்கள்" என்பதை தவிர்த்திருப்பார்கள். ஆனால் ராஜா செய்யவில்லை. அதுதான் சரியும் கூட. கேட்பவர்களுக்கு ஒரு கழிவிரக்கம், பாதுகாப்பின்மை உண்டென்றால் அது ராஜாவின் பிரச்சினை அல்ல. "எனக்கு கேட்க கஷ்டமா இருக்கில்ல, கொஞ்சம் பணிவா இருங்களேன்" எனக் கேட்பது கேட்பவர்களின் பிரச்சினை, அது ராஜாவின் பிரச்சினை அல்ல.
இத்தனைக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால் தாழ்வுணர்ச்சி கொண்ட சிலர் இப்படி தம் குறையை மறைப்பதற்காக சுயதம்பட்டம் அடிப்பார்கள். ஆனால் ராஜா தன்னுடைய நிறையைக் காட்டுவதற்காகவே அதை செய்கிறார். இரண்டுக்கும் பாரித்த வேறுபாடு உண்டு. அவர் இந்த மத்திய வர்க்க பாதுகாப்பின்மை, கூச்சம், போலி பணிவு ஆகியவற்றை ரொம்ப முன்னரே கடந்துவிட்டார். நம்மால் செய்ய முடிந்தது அவரிடம் இருந்து இதைக் கற்பதே.
நான் என் நாவல் எழுதும் வகுப்புகளில் மாணவர்களை தம்மைப் பற்றி உயர்வாக பேசி சுய அறிமுகம் செய்ய பயிற்சி கொடுக்கிறேன். தினமும் கண்ணாடி முன் நின்று அவ்வாறு பேசிக்கொள்ள சொல்கிறேன். கலைஞனுக்கு அது மிகவும் அவசியம். தன்னை உயர்வாக நினைப்பதே மனிதனின் உச்சபட்ச இயல்புநிலை. தன்னை தாழ்த்திக் கொள்வது அடிமைகளின் மனநிலை என்றார் நீட்சே. ஒரு கலைஞன் முதலில் மனிதனாக இருக்க வேண்டும். ராஜாவிடம் எனக்கு இவ்விசயம் மிகவும் பிடிக்கும்.

கருத்துகள்