Skip to main content

ஒரு தீர்வற்ற தீர்வு

 நம் மனதை மிகவும் அழுத்துகிற துன்பங்களை மறைப்பதோ மனதின் அடியாழத்தில் மேலும் அழுத்தி புதைப்பதோ தவறானது என அறிவேன். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இல்லாத பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் வேறுவழியிருப்பதில்லை. என் வாழ்வில் அப்படி நேர்ந்த ஒரே துயரம் என் மகனைப் பிரிந்ததுதான். எதாவது ஒரு சிறிய நிகழ்வோ தகவலோ காட்சியோ என் நினைவுகளைத் தூண்டிவிட்டால் நான் கட்டுப்படுத்த இயலாத துயர மனநிலைக்குப் போய்விடுவேன். ஒரு எழுத்தாளனாக நான் நாவலை எழுதும் காலங்களில் குறிப்பாக ஒரு கொதிநிலையில் இருப்பேன். நியாயமாக அது தான் என்னை தனிப்பட்ட துக்கங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும், ஆனால் முரணாக அதுவே தான் என்னை சுலபத்தில் உணர்வுரீதியாக தடுமாறக் கூடியவனாகவும் மாற்றுகிறது. அதனாலே நான் கடந்த சில மாதங்களாக இவ்வகையான பிரச்சினைகள் பற்றி முகநூலிலோ பிளாகிலோ எழுதுவதில்லை. தற்செயலாக எழுதினாலும் அழித்துவிடுகிறேன்.


 இன்றிலிருந்து 10 நாட்களுக்கு முன் என் மகனின் பிறந்தநாள் வந்தது. அன்று அதிர்ஷ்டவசமாக நான் தில்லியில் பயணத்தில் இருந்ததால் அதன் நினைவு என் மனதை உருக்குலைப்பதில் இருந்து தப்பித்துவிட்டேன். ஆனால் பயணம் முடிந்து திரும்பும் போது நான் மனதுக்குள் அழுதுகொண்டே தான் இருந்தேன். ஆனால் அது என்னை அன்றிலிருந்து ஒரு கொலைவாளைப் போல என்னை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு என் மகனைப் பற்றி வந்த சேதி இது. வேறெதையோ தேடும் போது தற்செயலாக இது என் கையில் சிக்கியது. உடனே என் மனம் உடைந்துவிட்டது: 


His looks don't give away his condition though. He turns 3.5 years tomorrow. No more a toddler. Talking like there is no end to the world. Top performer at preschool. Adored to bits by teachers.


என் மகன் இடைவிடாமல் பேசுகிறான். ஆனால் அதைக் கேட்க வேண்டிய நான் அங்கு இல்லை. அவனுடைய ஒரு சொல்லைக் கூட நான் இத்தனை ஆண்டுகளாக கேட்கவில்லை. அவனுடைய பள்ளி ஆசிரியர்கள், அண்டை வீட்டார், அவனுடன் இருப்போர் கேட்கிறார்கள், ரோட்டில் போகிறவர்கள் கேட்கிறார்கள், ஆனால் நான் கேட்கவில்லை. அவன் நன்றாகப் படிக்கிறான். அனைவருக்கும் பிரியமானவனாக இருக்கிறான். ஆனால் அதை நான் ஒருமுறை கூட பார்த்ததில்லை.


வீட்டிலிருக்கையில் ஏதாவது ஒரு உரையாடல் என்னை அந்நினைவை நோக்கி நகர்த்திவிடுகிறது. உடனே புலம்ப ஆரம்பித்துவிடுவேன். வழக்கம் போல யாரும் என்னைப் புரிந்துகொள்வதில்லை என்பதைத் தான். இப்போது எனக்கு ரத்த உறவாகவோ நெருங்கிய நட்பாகவோ இருப்பவர்களில் பெண்களால் எனக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைப் பற்றி புலம்புகிறேன். என்னிடம் இருந்து என் மகனைப் பிரித்தது அநியாயமானது என்பதை மட்டும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அது ஏன் என்பது மட்டும் எனக்கும் புரியவில்லை. என்னை விட சிறந்த தகப்பனை நீங்கள் காண முடியாது என்பேன். ஆனால் நான் ஏன் அவனைப் பார்க்கக் கூடாது என்பதை சொல்லாமலே அதெல்லாம் அப்படித்தான், விட்டுவிடு என்பதாக பேசுகிறார்கள், அல்லது பெண்கள் அப்படித்தான், குழந்தையை தன்னுடன் வைத்துதான் அவர்கள் ஆறுதல் பெற முடியும் என்கிறார்கள், அல்லது நான் இதைப் பற்றி பேச்செடுத்தாலே அமைதி கொள்கிறார்கள். ‘ஒரே ஒருமுறை எனக்கு நடந்தது அநீதி என ஒப்புக்கொள்ளுங்கள், ஆறுதல் அடைந்துவிடுவேன்’ என்கிறேன்.


 இது ஒரு பைத்தியக்காரத்தனம் எனப் புரிந்து கொள்கிறேன், ஆனால் என் துயரத்தை யாரும் பகிர்ந்து கொள்வதில்லை என்பது என்னை மிக அதிகமாக அழிக்கிறது. இது நம் சமூகத்தின் பிரச்சினையா அல்லது உலகம் முழுக்க இப்படித்தானா என்று புரியவில்லை. ஒருவர் ஆணாக இருந்தாலே அவரை ‘இருட்டு அறையில்’ இட்டுப் பூட்டிவிடுவார்களோ என்பது புரியவில்லை. ஏனென்றால் ஆண் நண்பர்களிடம் நான் இப்பிரச்சினையைப் பேசினால் அவர்கள் உடனடியாக என் மனநிலையைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் அளவுக்கு சகஹிருதயர்களாக எனக்கு நெருக்கமான பெண்கள் இருப்பதில்லை. உதாரணத்திற்கு நான் என் அம்மாவிடம் இதைச் சொன்னால் அவர் மௌனியாகி விடுகிறார். ஒரு சொல் கூட ஆறுதலுக்கு சொல்வதில்லை. எனில் அவர் மறைமுகமாக எனக்கு நடக்கும் அநியாயத்தை, நான் அனுபவிக்கும் துன்பத்தை ஆதரிக்கிறாரா என யோசிக்கிறேன். ஒருவேளை நான் ஒரு ஆணாகப் பிறக்காமல் பெண்ணாக இருந்து இதே துன்பம் எனக்கு நடந்திருந்தால் இவர்கள் எல்லாரும் எனக்கு ஆறுதலாக இருந்திருப்பார்களோ என யோசிக்கிறேன். ஒருவேளை நான் பெரும்பணக்காரனாக இருந்து என்னை சார்ந்திருக்கும் நிலையில் இருந்திருந்தால் இவர்கள் எனக்கு ஆறுதலாக இருந்திருப்பார்களோ என யோசிக்கிறேன். எனக்கு உண்மையிலே புரியவில்லை. சரி நீங்கள் தான் என்னுடன் இல்லையே, என்னை விட்டுப் போய் விடுங்கள் என்று சொல்லவும் முடியவில்லை. ‘ஆம், உனக்கு நடந்தது ஒரு தவறுதான்’ என்று மட்டும் சொன்னால் போதும், என் மனம் ஆறிவிடும் என்று தோன்றுகிறது.


இப்போது யோசிக்கையில் பிரச்சினை அவர்கள் அல்லர் - எனக்கு நடந்தது ஒரு தற்செயலான அநீதி, அது இந்த உலகம் முழுக்க நடப்பதே, அதற்கு யாரும் எப்போதும் பொறுப்பேற்க மாட்டார்கள், நான் அவர்கள் மூலம் யாராவது இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள விரும்புகிறேன் எனப் புரிகிறது. ஆனால் இதை என் அறிவு மனம் ஏற்றுக்கொள்வதைப் போல என் உணர்வுமனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இப்படி இது ஒரு தீர்வற்ற தீர்வாகி விட்டது.


பி.கு: எனக்குள்ள ஒரே தீர்வு என் துயரத்தை பொதுவெளியில் வைப்பதுதான், உணர்வளவில் கடந்து போவதுதான். ஒரு எழுத்தாளனாக என் மனம் அப்படித்தான் செயல்படுகிறது - எழுதி முடித்ததும் அதை தற்காலிகமாக மறந்துவிடுவேன். புனைவாக மாற்றினால் அனேகமாக முழுமையாக கடந்துவிடுவேன். அதனால் தான் இங்கு எழுதுகிறேன். இம்முறையும் இது எனக்கு உதவும் என நம்புகிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...