முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்கொரு கவலை இல்லே!



என்னுடைய சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பவர்களிடம் சில நேரங்களில் மரியாதை நிமித்தமாக காலில் விழுந்துவிடுவார்கள். இன்னும் சிலர் திட்டமிட்டே செய்வார்கள். இரண்டையும் நான் புரிந்து கொள்கிறேன். ஒன்று உளவியல் தேவை, இன்னொன்று பொருளியல் / அதிகாரத் தேவை. ஒரு பெட்டிக்கடைக்குப் போய் பத்து ரூபாய்க்கு வாழைப் பழம் வாங்கித் தின்பதைப் போன்றதுதான் இது. ஆகையால் ரஜினி யோகி காலில் விழுந்ததை வைத்து முற்போக்காளர்களும் ரசிகர்களும் கொந்தளித்து ஏன் நேரத்தை வீணடிக்கிறார்கள் எனப் புரியவில்லை. அவர் உடல், இன்னொருவர் கால், அவர் காலில் பணிகிறார். அதை ஏன் குறியீடாகப் பார்த்து அர்த்தப்படுத்தி மனம் நோக வேண்டும்? ஒருவேளை இந்த செயலை நீங்கள் பார்க்கும்விதமாக காணொளி, புகைப்படம் கிடைக்கவில்லை எனில் அது குறியீடாகாதா? இது பின்நவீன ஊடக கலாச்சாரத்தின் சாபக்கேடு.
யோகி அடுத்த பிரதமர் என அறியப்படுகிறவர். ரஜினிக்கும் அவரும், அவருக்கு ரஜினியும் தேவைப்படுகிறார்கள். கூடவே அதிகாரத்தின் முன் சட்டென பணிகிற சுபாவம். நாம் இதை மட்டமாக எடை போடுகிறோம். ரஜினியிடம் அதிகாரத்திடம் பணியும் இயல்பு ஆரம்பத்திலேயே உண்டு. அதை நான் ஒரு மோசமான குணமாக கருதவில்லை. அதுவே அவரது 'நல்லியல்பு'. (ரஜினி எதிர்கொண்ட அதிகாரம் என்பதை முதலீட்டியம், ஊடகம், வெகுஜன மனநிலை, கடைசியாக வலதுசாரி அரசியல் எனப் புரிந்து கொள்ளலாம்.) இந்த நல்லியல்பைக் கொண்டே அவர் அவர் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்து சேர்ந்து அதை தக்க வைத்துக் கொள்ளவும் செய்கிறார்.
ரஜினியின் 'உறுதியற்ற அரசியல்', ரஜினியின் 'சந்தர்ப்பவாதம்' நம்மை ஏன் எரிச்சல்படுத்துகிறதென்றால் அது நமது பலவீனத்தை அம்பலப்படுத்துகிறது என்பதால் தான். நம்மில் சித்தாந்த உறுதியுடன், கொள்கையுடன் இருப்பவர்களாக நினைப்பவர்கள் பலரும் சின்னச்சின்ன மத்திய வர்க்க வளைகளுக்குள் ஏகப்பட்ட சமரசங்கள், அவமானங்கள் மத்தியில் வாழ்பவர்கள். அந்த தாழ்வுணர்வை இம்மாதிரியான அரசியல் சரித்தன்மை, கொள்கைக் குன்று மனப்பான்மையைக் கொண்டு சரிசெய்ய நினைக்கிறோம். இன்னொரு பக்கம் நமது நம்பிக்கைகளும் விழுமியங்களும் வாழ்க்கையில் 'எதிரொலிக்க' வேண்டும் என ஆசைப்பட்டுக் கொண்டே அது நிகழாத போது முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்கிறோம். ஊடகங்களில் நமது ஏமாற்றத்துக்கான வடிகாலாக இது போன்ற செய்திகளை பயன்படுத்திக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்து போவதோ அல்லது வெற்றி பெற்றவர்களின் இத்தகைய சாகசங்களின் நோக்கம், பலன் என்னவென கவனித்துப் புரிந்து கொள்வதோ, முடிந்தால் அதை வைத்து நம் வாழ்வில் முன்னேறுவதோ, நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதுவோ தான் சாலச்சிறந்தது.
உலகின் தலைசிறந்த நலம் சுயநலம். உலகம் சுயநலவாதிகளையே நேசிக்கிறது. அவர்களையே சுற்றியே மக்கள் திரள்கிறார்கள். அது மட்டுமல்ல, நம்மைத் தாண்டி இந்த உலகில் நிகழும் எந்தவொரு பிரச்சினைக்கும் நம்மால் ஒன்றுமே செய்யவியலாது. நம்முடைய பிரச்சினைகளை கவனித்து சரிசெய்வது மட்டுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்தவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதால் அவர்களுக்கும் பிரயோஜனமில்லை. நம் பிரச்சினைகளை அடுத்தவர்கள் வந்து சரிசெய்யவும் போவதில்லை. சமூக ஊடகங்கள் வந்ததும் இந்த எளிய உண்மை, தெருவில் வடை சுட்டு விற்கும் பாட்டிக்குத் தெரிந்த இந்த எளிய உண்மை பெரிய படிப்பு படித்தவர்களுக்கு தெரியாமல் போகிறது.
இன்னொருவரின் சுயநலத்தை தர்மாவேசம் கொண்டு விமர்சிப்பதும் கிண்டலடிப்பதும் வெறும் சுயஏமாற்று மட்டுமே. நமது காலம் அப்படியான சுயஏமாற்றுதலின் பெரும் கேளிக்கையாக இருக்கிறது. ரஜினி யோகியின் காலில் விழுவதை விட இதுவே பெரிய அவலம்.
என் உலகில் ரஜினியோ, யோகியோ, காலில் விழும், காலைக் கழுவும், காலை சொறியும், காலால் மிதிக்கும், காலை மிதிக்கும், காலை முத்தமிடும் யாரும் இல்லை. எனக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...